குறளின் கதிர்களாய்…(225)
நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
-திருக்குறள் -715(அவையறிதல்)
புதுக் கவிதையில்…
அறிவுமிக்கோர் அவையில்
அவர் பேசுமுன்பு
முந்திச்சென்று பேசாமை,
அடக்கம்..
அது
நற்குணமென்று
சொல்லப்படுவனவற்றிலெல்லாம்
தலைசிறந்த
நல்ல குணமாகும்…!
குறும்பாவில்…
அறிவுமிக்கோரிடம் முந்திச்சென்று
பேசாத அடக்கம்,
நற்குணங்களிலெல்லாம் மிகநல்லதே…!
மரபுக் கவிதையில்…
அறிவு மிக்க சான்றோர்தம்
அவையில் சென்றே பேசமுந்தா
பொறுமை காக்கும் குணமதுதான்,
பூமி தன்னில் உயர்வான
நெறிகளி லெல்லாம் மேலான
நல்ல குணமது யென்றேதான்
அறியப் படுவ தென்பதாலே
அவைய டக்கம் கொள்வீரே…!
லிமரைக்கூ..
பேசாதே அறிவுமிக்கோரை முந்தி,
அடக்கமிதுதான் நற்குணங்களிலெல்லாம் நல்லது
என்பதை நீயும் சிந்தி…!
கிராமிய பாணியில்…
பேசுபேசு தெரிஞ்சிபேசு
பேசுற சபய தெரிஞ்சிபேசு..
அறிவுநெறஞ்சவர் சபயினிலே
அவரமுந்தி பேசாத
அடக்ககொணந்தான் நல்லகொணம்..
அது
ஒலகத்தில ஒயர்ந்த கொணமுண்ணு
சொல்லுற நல்லகொணத்திலெல்லாம்
ரெம்ப ஒயர்ந்த கொணமாவும்..
அதால
பேசுபேசு தெரிஞ்சிபேசு
பேசுற சபய தெரிஞ்சிபேசு..!
செண்பக ஜெகதீசன்…
