நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 10
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 10 – இனியவை கூறல்
குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
ஒருத்தங்க வாய்லேந்து வருத சொல்லு நேசத்தோடயும் வஞ்சகமில்லாததாவும், உண்மையாவும் இருந்துச்சுன்னா அதத் தான் இன்சொல் னு சொல்லுதோம்.
குறள் 92:
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
சிரிச்ச மொகத்தோட இனிய சொல் பேசுதது மனசு குளிந்து மத்தவங்களுக்கு ஒரு பொருள கொடுக்குதத விட ஒசந்தது.
குறள் 93:
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்
சிரிச்ச மொகத்தோட பாத்து மனசார இனிமையா பேசுததே அறம் னு சொல்லுதோம்.
குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
இனிய சொல்ல பேசி நயமா பழகுதவங்களுக்கு துன்பம் ங்குத வறும அண்டாது.
குறள் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
தன்னையவிட குறச்சலான தகுதி உள்ளவங்ககிட்டயும் அடக்க ஒடுக்கமா இனிமையா பேசுதது தான் ஒருத்தனுக்கு நக நட்டு மாதிரி. மத்தது இல்ல.
குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
பொறத்தியாருக்கு நல்லது செய்யுத இனிய சொல்ல மனசார சொன்னாம்னா அவனுக்குள்ளாரயும் நாட்டிலயும் தர்மம் வளந்து நிக்கும்.. பாவம் கொறைஞ்சு போவும்.
குறள் 97:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
நல்ல பயனத் தருத நல்ல பண்புலேந்து நீங்காத சொல்ல சொல்லுதவனுக்கு அது மகிழ்ச்சியகொடுத்து நல்லது செய்யும்.
குறள் 98:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
பொறத்தியாருக்கு துன்பம் கொடுக்குததுங்குத கெட்ட கொணம் இல்லாத நல்ல இனிய சொல்லு அவன் வாழுத காலத்துலயும் , செத்த பெறகும் அவனுக்கு புகழ கொடுக்கும்.
குறள் 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
இனிய சொல்லு மகிழ்ச்சிய கொடுக்கும்னு தெரிஞ்சிக்கிட்ட ஒருத்தன் மத்தவங்க மனசு நோவ கடுமையா பேசுதது எத எதிர்பாத்து?
குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இனியமையா பேசுததுக்கு சொல் இருக்கும் போது அத விட்டுபோட்டு கடுமையா பேசுதது பழத்த ஒதுக்கி வச்சி காய பறிச்சு திங்குததுக்கு சமானம்.
______________________________________
கட்டுரையாளரைப் பற்றி
இயற்பெயர் – பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்