-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 10 – இனியவை கூறல்

குறள் 91:

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

ஒருத்தங்க வாய்லேந்து வருத சொல்லு நேசத்தோடயும் வஞ்சகமில்லாததாவும், உண்மையாவும் இருந்துச்சுன்னா அதத் தான் இன்சொல் னு சொல்லுதோம்.

குறள் 92:

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

சிரிச்ச மொகத்தோட இனிய சொல் பேசுதது மனசு குளிந்து மத்தவங்களுக்கு  ஒரு பொருள கொடுக்குதத விட ஒசந்தது.

குறள் 93:

முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்

சிரிச்ச மொகத்தோட பாத்து மனசார இனிமையா பேசுததே அறம் னு சொல்லுதோம்.

குறள் 94:

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

இனிய சொல்ல பேசி நயமா பழகுதவங்களுக்கு துன்பம் ங்குத வறும அண்டாது.

குறள் 95:

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

தன்னையவிட குறச்சலான தகுதி உள்ளவங்ககிட்டயும் அடக்க ஒடுக்கமா இனிமையா பேசுதது தான் ஒருத்தனுக்கு நக நட்டு மாதிரி. மத்தது இல்ல.

குறள் 96:

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

பொறத்தியாருக்கு நல்லது செய்யுத இனிய சொல்ல மனசார சொன்னாம்னா அவனுக்குள்ளாரயும் நாட்டிலயும் தர்மம் வளந்து நிக்கும்.. பாவம் கொறைஞ்சு போவும்.

குறள் 97:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

நல்ல பயனத் தருத நல்ல பண்புலேந்து நீங்காத சொல்ல சொல்லுதவனுக்கு அது மகிழ்ச்சியகொடுத்து நல்லது செய்யும்.

குறள் 98:

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

பொறத்தியாருக்கு துன்பம் கொடுக்குததுங்குத கெட்ட கொணம் இல்லாத நல்ல இனிய சொல்லு அவன் வாழுத காலத்துலயும் , செத்த பெறகும் அவனுக்கு புகழ கொடுக்கும்.

குறள் 99:

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

இனிய சொல்லு மகிழ்ச்சிய கொடுக்கும்னு தெரிஞ்சிக்கிட்ட ஒருத்தன் மத்தவங்க மனசு நோவ கடுமையா பேசுதது எத எதிர்பாத்து?

குறள் 100:

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

இனியமையா பேசுததுக்கு சொல் இருக்கும் போது  அத விட்டுபோட்டு கடுமையா பேசுதது பழத்த ஒதுக்கி வச்சி காய பறிச்சு திங்குததுக்கு சமானம்.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *