மனது மொழிவழி நிரலாக்கம்

0

மனது மொழிவழி நிரலாக்கம் NLP (Neuro Linguistic Programming) 
எழுதியவர் : மோ.வெங்கட்ராம்வாசி PMP.
வாசிஸ் கோச்சிங் பார் எக்சலன்ஸ், சென்னை http://www.vc4u.in/ 

அறிமுகம்

மனது மொழிவழி நிரலாக்கம் என்பது மனிதரின் எண்ணங்களை, நடத்தைகளை மாற்றி அவர்கள் விரும்பிய விளைவுகளை அவர்களின் வாழ்வில் உண்டாக்குவது.  மனது – மனதின் மற்றும் உடலின் நிலைகள், தகவல்தொடர்பு மற்றும் நடத்தையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தது. மொழிவழி – நமது மனம் மற்றும் உடல் நிலைகள் நம் மொழியிலும் வாய்மொழி அல்லாத தகவல்தொடர்புகளிலும் வெளிப்படுகின்றன. தெளிவற்றதாகவும் அறியப்படாமலும் புதைந்து இருக்கும் உள்மன தகவல்களை அணுக மொழி ஒரு கருவி. வாழ்த்துச்சொல்வதும், வசைபாடுவதும்  மொழியின் மூலம்  தான் நடக்கின்றன. நிரலாக்கம் – இது நம் மனதையும் உடல் நிலைகளையும் மாற்றும் திறனைக் குறிக்கிறது. இது பழக்கவழக்கம், எண்ணங்கள், உணர்வுகள், எதிர்வினைகள், நம்பிக்கைகள் மற்றும் மரபுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மனதில் உள்ள நிரல்களை மொழிவழியே உரையாடி மாற்றலாம். பழக்கவழக்கங்களை மாற்றுவது அவ்வளவு எளிதானதா? உதாரணத்திற்கு புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதை பற்றி ஒரு அறிஞர் சொன்னார் ‘புகை பிடித்தலை நிறுத்துவது எனக்கு மிகவும் எளிதாயிருந்ததால் நான் அதனை நூறு முறை செய்திருக்கிறேன்.’ மனது மொழிவழி நிரலாக்கத்தை  உருவாக்கியர்கள் ரிச்சர்ட் பேண்ட்லெர் & ஜான் கிரிண்டர். அவர்கள் இருவரும் விர்ஜினியா சடிர், மில்டன் எரிக்சன், ஃபிரிட்ஜ் பேர்ல்ஸ் போன்ற மனநல சிகிச்சையாளர்களை மாதிரியாக்கம் செய்து மனது மொழிவழி நிரலாக்கத்தை உருவாக்கினார்கள். மனது மொழிவழி நிரலாக்கத்தில் காட்சிப்படுத்தலும், கற்பனையும் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. மனது மொழிவழி நிரலாக்கம் உள்ளடக்கமற்றது. அதாவது சிகிச்சையாளர் சிக்கலைப் பற்றி விரிவாக அறியாமல் திறம்பட செயல்பட முடியும்.

மனம் 2 வகைப்படும். வெளிமனம் மற்றும் ஆழ்மனம். வெளிமனம் – திட்டமிடுதல், மனஉறுதி, நுண்சிந்தனை திறன், குறுகிய கால நினைவு, முடிவுகள் போன்றவைகளை செய்கின்றது. ஆழ்மனம் – உணர்ச்சி, படைப்பாற்றல், தானியங்கி உடல்செயல்பாடு (இதயத்துடிப்பு, மூச்சுவிடுதல்), நீண்ட கால நினைவு, பழக்கவழக்கங்கள், உள்ளுணர்வு போன்றவைகளை செய்கின்றது.  5 புலன்களின் வாயிலாக நாம் உணர்பவை நம் மனதில் பதிவாகிறது காட்சியாக, ஒலியாக, உணர்வாக, வாசனையாக மற்றும் சுவையாக. மனது மொழிவழி நிரலாக்கம் மூளையின் பயனர் கையேடு போன்றது. அது உலகை மாற்றாது. அது உலகத்தை நீங்கள் பார்க்கும் பார்வையை மாற்ற உதவுகிறது. நாம் ஒருவருக்குக்  கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பரிசு, தனக்குள்ளேயே உள்ள புதையல்களை அவர்களின் உள்மனதில் கண்டுபிடிக்க உதவுவதாகும்.

மனது மொழிவழி நிரலாக்கத்தின் பயன்கள்

மனித மேன்மையை மாதிரியாக்குதல், மனது மாற்றல், கல்வி, பயிற்சி, விற்பனை, தலைமைத்துவம், சந்தைப்படுத்தல், சிகிச்சை (பயம், பழக்க அடிமைத்தனம், மனச்சோர்வு, அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு (PTSD), பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (OCD).

மனது மொழிவழி நிரலாக்கத்தின் 4 தூண்கள்

ஒத்துணர்வு – நன்கு தொடர்பு கொள்ளும் நெருக்கமான மற்றும் இணக்கமான உறவு. புலன் உணர்வாற்றல் – 5 புலன்களைப் பயன்படுத்துதல் மற்றும் உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள சூழலுக்கும் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருத்தல். எது வேலை செய்கிறது, எது வேலை செய்யவில்லை என்பது குறித்து விழிப்புடன் இருப்பது முக்கியம். விளைவு சிந்தனை – எதைச் செய்தாலும் நமக்கு ஒரு தெளிவான குறிக்கோள் இருக்க வேண்டும். நெகிழ்வான நடத்தை – ஒரு வேலையை முடிக்கப்பல வழிகளை உருவாக்கும் திறமை உங்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது.

RAS (ரெட்டிகுலர் ஆக்டிவேசன் சிஸ்டம்)

நம் மூளையில் சுண்டு விரல் அளவில் உள்ள இந்த பாகம், ஒரு வடிகட்டி போன்று செயல்பட்டு, நமக்குத் தேவையான தகவல்களை மட்டும், தானாகவே, நம் கவனம் தேவைப்படாமல், உள்ளே அனுப்புகிறது. நம் நம்பிக்கைகளின்படி இந்த வடிகட்டுதல் நடக்கிறது. இதற்குத்தான் எண்ணமே வாழ்வு என்றார்கள். என் பெரிய பையனுக்கு நான் விஷால் என்று பெயரிட முடிவு செய்திருந்தபோது, நான் சில வருடங்களாக அலுவலகம் சென்று வந்த சாலையில், பல கடைகளில் இருந்த விஷால் என்ற பெயர் என் கண்ணில் பட்டது. அப்பெயர்களை அதற்கு முன்பு நான் கவனிக்கவில்லை. அப்போது RAS என்னைப் பார்க்கவைத்தது. உங்கள் வாழ்க்கை இலக்கை, உங்கள் RASக்கு தெரிய வையுங்கள்.

விலகிய நிலை நுட்பம்

ஒரு நுட்பத்தைப் பயன்படுத்துவோம். நீங்கள் ஒரு வாகனம் ஓட்டுவது மாதிரி கற்பனை செய்யுங்கள். இது தொடர்புடைய நிலை. நீங்கள் ஒரு வாகனம் ஓட்டுவதை நீங்களே பார்ப்பதுபோல் கற்பனை செய்யுங்கள். இது விலகிய நிலை. உங்கள் மனதை வலிக்கச்செய்த  ஒரு சம்பவத்தைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் தொடர்புடைய நிலையில் இருந்து விலகிய நிலைக்குச் செல்லுங்கள். அதாவது அந்த மன வருத்த சூழ்நிலையில் நீங்கள் இருப்பதை, தூரத்திலிருந்து நீங்களே பார்ப்பது போல சில நொடிகள் நினையுங்கள். அந்த மனவருத்த நிகழ்வை  மீண்டும் சிந்தியுங்கள், இப்போது அது தரும் மன அழுத்தம் குறைந்திருப்பதை உணருவீர்கள். இந்த நுட்பம் வேலை செய்வது விலகிய நிலையை எவ்வளவு ஆழ்ந்து கற்பனை செய்தீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். கடைசியில், எது வேலை செய்கிறதோ அது தான் மனது மொழிவழி நிரலாக்கம் .

குறிப்பு; இந்தக் கட்டுரை, ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் 2019ஆம் ஆண்டுத் தீபாவளி மலரில் வெளிவந்தது

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *