வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-13

0

தி. இரா. மீனா      

காட்டகூட்டய்யாவின் மனைவி ரேச்சவ்வே:

ரேச்சவ்வே என்ற பெண் வசனகாரரான இவரின் கணவர் பெயர் காட்டகூட்டய்யா. “நிஜசாந்தேஸ்வரன் “ இவரது முத்திரையாகும்.

“மலடான பசு பால் கறக்குமா?
விரதம் கடைப்பிடிக்காதவரோடு இணையலாமா?
விரும்பினால் நீ சேர்ந்து கொள் ;நான் சேரேன்
நிஜசாந்தேஸ்வரனே”

காடசித்தேஸ்வரா:

சித்தகிரி மடத்தின் தலைமைப் பொறுப்பு இவரது காயகம். ”காடனொளகாத சங்கரப்பிரிய சென்ன கதம்பலிங்க நிர்மாயப் பிரபு“ இவரது முத்திரையாகும்.

1. “இன்று கவலையுள்ளோர் பன்றிகள்
நாளைய கவலையுள்ளோர் நாய்கள்
தன் கவலையுள்ளோர் துறவிகள்
உன் கவலையிலிருப்போர் சரணர்கள்
காடனொளகாத சங்கரப்பிரிய சென்ன கதம்பலிங்க
நிர்மாயப் பிரபுவே”

2. “ஜங்கமரைக் கண்டால் கோபிப்பர்
துறவிகளைக் கண்டால் வணங்குவர்
இலிங்கம் கண்டால் ஒதுங்குவர்
சிவவழிபாடெனில் திட்டுவர்
நரபூசையெனில் மகிழ்வர்
குரு தந்த இலிங்கம் நம்பமாட்டார்
அந்தணன் உயர்வு பறையன் தாழ்வென
நூற்றியோரு  சாதிகள் கூடியிருக்க
கள்வனொருவன் இலிங்கமென நட்டு வைத்த ஒன்றிற்கு
நோன்பிருந்து நியமம் காப்பர்
இது போன்ற பக்தர்களுக்கு  எப்படி அருள்வான்
காடனொளகாத சங்கரப்பிரிய சென்ன கதம்பலிங்க
நிர்மாயப் பிரபுவே”

காலகண்ணிய காமம்மா:

கயிறு திரிக்கும் காயகம் இவருடையது. “நிர்பீத்த நிஜலிங்கம்” இவரது முத்திரையாகும்.

“இலிங்கத்தில் என் புலன்களை இணைப்பேன்
குருலிங்க சரணரின் பாதம் வணங்குவேன்
இழிவான விரதத்தவரை அழிப்பேன்
நிர்பீதி நிஜலிங்கத்தில்”

கின்னரி பிரம்மய்யா:

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்தவரை பொற்கொல்லனாக காயகம். கல்யாண் நகருக்கு வந்தபிறகு கின்னரி என்னும் இசைக்கருவியை வாசிக்கத் தொதங்கி அதையே காயகமாகக் கொண்டதால் கின்னரி பிரம்மய்யா ஆனார்.அக்கமாதேவியின் மீது உயர்ந்த மரியாதையுடையவர். “மகாலிங்கத் திரிபுராந்தகா” இவரது முத்திரையாகும்

“ஆடை பாலை பொன் பாத்திரத்தில் பருகுவது பெருமையெனில்
மண் பாத்திரத்தில் பருகுவது பெருமையற்றதா?
சிவவழிபாடு செய்கிற உடல் புனிதமின்றிப் போகுமோ
மகாலிங்க திரிபுராந்தலிங்கமே? “

கீலாரத பீமண்ணா:

பசுமாடு வளர்க்கும் காயகம் இவருடையது. “ஹரிபுர திரிபுராந்தகாலிங்கா “என்பது இவரது முத்திரையாகும்.

1. ’கற்பூர விளக்கில் திரி வைத்து எரிக்க முடியுமா?
புல்லும் தழையும் கொண்டு நெருப்பெரியுமா?
தன்னுடலில் குத்தி வாளின் கூர்மையை நிரூபிக்கலாமா?
அந்தந்த குணங்கள் பொருந்தும் அததற்கு
மெய்லிங்கமறிந்தவனுக்கு வேறுபாடு புரியும்
திரிபுராந்தகலிங்கமறிந்தவன் செயலிது”

2. “வேட்டைக்காரன்,மீனவன் ,பொற்கொல்லன் போல
வெறும் சொல்லில் பிரம்மம் பேசி சம்சார வாழ்வில்
மூழ்கியும் வெந்தும் போகிறவர் பிரம்மத்தில் எப்படிச் சுகம்
பெறுவர்?அறிவோடு வேற்றுமைகளைக் களைவோரே
திரிபுராந்தகலிங்கனை வழிபடுவதற்குரியர்”

குஷ்டகி கரிபசவேஸ்வரா :

குஷ்டகி நகரிலுள்ள கல் மடத்தின் தலைமைப் பொறுப்பு இவரது காயகம். ”அகண்ட பரிபூர்ண கனகலிங்க குரு சென்ன பசவேஸ்வரா“ இவரது முத்திரையாகும். இயல்பான நிலையிலான சொற்கள் வசனங்களில் இடம் பெற்றுள்ளன.

1. “இடுப்பின் இலிங்கம் மறந்து
கோயிலின் இலிங்கம் முன்னால் நின்று
சொற்களை வாரியிறைக்கும்
திருடர் புலையர் முகம் காணக் கூடாது
அகண்ட பரிபூரண கனகலிங்க குரு
சென்ன பசவேஸ்வரன் சாட்சியாக”

2. “ஒழுக்கம் என்பதென்ன? அது சூலமா?
பளிங்கு நீரை சட்டியில் எடுத்து வருவது ஒழுக்கமா?
பரவுகின்ற மனதை கட்டுக்குள் வைப்பதே ஒழுக்கம்
பெண்ணின் வண்ணம் கண்டு மயங்காததுவே ஒழுக்கம்
பருவத்தின் கர்மம் வெல்வதே ஒழுக்கம்
அகண்ட பரிபூரண கனகலிங்க குரு
சென்ன பசவேஸ்வரன் சாட்சியாக”

3. “பல்லக்கில் அமர்ந்தால் பன்றி மன்னனாக முடியுமா?
சேணம் போட்டால் நாய் குதிரையாக முடியுமா?
சிறு பெண்ணொருத்தி வேசியாவாளோ?
பொன் இரும்பாக முடியுமா?
பக்தியில் பிழை செய்கிறவன் பார்ப்பதற்கு உகந்தவனில்லை
அகண்ட பரிபூரண கனகலிங்க குரு
சென்ன பசவேஸ்வரன் சாட்சியாக”

கூகின மாரய்யா:

கல்யாணில் புரட்சி நடக்கும் காலகட்டத்தில் சரணர்களைப் பாதுகாக்கும் பணியைக் கொண்டவர். பிஜ்ஜளன் படை வரும்போது அதையறியும் மாரய்யா கூவிக் குரல் கொடுத்து மக்களுக்கு எச்சரிக்கை செய்ததால் எச்சரிக்கை இவரது காயகமாகும். பிஜ்ஜளன்-சரணர் போராட்டத்தில் இறந்தவர்.”மக மகிம மாரேஸ்வரா” இவரது முத்திரையாகும்.

“போலியான கல்லை மெருகிடுவாரேயன்றி
அசலான கல்லுக்கு ஒளிதர முயல்வாரோ?
சம்சாரத்திலிருப்பவனுக்கு ஆசையும் கோபமுமுண்டு
உயர் குணம் கொண்ட சரணருக்கு இரண்டும் ஒன்றே.
வேறுபாடற்ற இவ்வியல்பான இலிங்கம் தரித்தவன்
மகாமகிமா மாரேஸ்வரனின் சரணராம்”

கொட்டணத சோமம்மா:

நெல் குத்துவது இவரது காயகமாகும்.சரணர்களின் வீடுகளுக்குச் சென்று நெல் குத்தி அரிசியாக்கித் தருவது. இந்த காயகத்தால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு குருலிங்க ஜங்கம பணி செய்தவர். ”நிர்லஜ்ஜ சாந்தேஸ்வரா“ இவரது முத்திரையாகும். காயகம் சார்ந்த சொற்களே வசனத்தில் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளது.

“பதமறியாமல் குத்தினால் கிடைப்பதுநொய்யேயன்றி அரிசியில்லை
ஈனரோடு சேர்ந்தால் நரகமல்லாது சுவர்க்கமில்லை
அறியாமல் பிழை செய்தால் போகட்டும் ,அறிந்தே செய்யின்
சுடுகத்தியால் செவியறுப்பார் அறிந்தும் தவறேன்
ஆணை நிர்லஜ்ஜேஸ்வரனே “

                             [தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *