சாமிநாதன் ராம்பிரகாஷ்
சவுரவ் கங்குலி! கிட்டத்தட்ட 2008ஆம் ஆண்டே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். ஆனால் இன்றளவும் அவரை மறக்காத ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.
“சச்சினின் சுயசரிதம் அவரின் வளர்ச்சியைப் பேசும். தோனியின் சுயசரிதம் அவரின் முன்னேற்றத்தை மட்டுமே பேசும். ஆனால் கங்குலியின் சரிதமோ, ஒட்டுமொத்த இந்திய அணியின் முன்னேற்றத்தையும் பேசும்“ – வீரேந்திர சேவாக்.
“கங்குலி என்பது சாதாரண பெயர் அல்ல, அது ஒரு சென்சேஷன்! “ – கபில்தேவ்.
“கங்குலி போன்ற ஓர், உயிர்ப்பான வெற்றியை மட்டுமே தேடும் கேப்டன் உங்கள் எதிரணியில் இருந்தால் அவரை மதித்தே ஆவதைத் தவிர வேறு வழியில்லை” – ஸ்டீவ் வாக்.
“இங்கு இன்னொரு சச்சின் கூட வரலாம் ஆனால் ஒரே ஒரு கங்குலி தான்” – சச்சின் டெண்டுல்கர்.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 1992ஆம் ஆண்டிலேயே இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றார். ஆனால் கங்குலிக்கு வாய்ப்பு குறைவாகவே அமைந்தது. அதையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இந்திய அணியும் தோல்வியுற்றது. கங்குலி அணியில் இருந்து நீக்கப்பெற்றார் .
அதன் பிறகு 1996ஆம் ஆண்டு தான் இங்கிலாந்துத் தொடரில் மீண்டும் அணியில் இடம் பெற்றார் . அந்த இடைப்பட்ட ஆண்டுகளை அவர் விவரித்த விதம், நேர்மறையான அணுகுமுறை, சாவல்களை எதிர்கொண்டது, ஏமாற்றம் அடைந்தது என அனைத்துமே வாழ்க்கைப் பாடமாக அமைந்துள்ளது.
சாதாரணமாகவே கங்குலி எதற்கும் அஞ்சாமல் பேசுபவர், அதுவும் அவருடைய சுய சரிதம்… அவருக்கே உரிய தொனியில், கம்பீரத்துடன் அவரே நமக்கு அருகில் அமர்ந்து பேசுவது போல அமைந்துள்ளது. மைதானங்களை வர்ணிப்பது, வீரர்களுடனான உரையாடல், சொற்போர்கள் எனப் புத்தகம் மிகவும் சுவாரஸ்யமாக நகர்கிறது.
இங்கிலாந்துத் தொடரில் சதங்களை அடித்தாலும், இந்திய அணியில் அவரின் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவர் பட்ட பாடுகள், பந்துவீச்சால் தப்பிய தருணங்கள், விமர்சனங்கள், நெருக்கடிகள் என அவரே கூறி இருப்பது ஒரு புது வித அனுபவம்.
“நான் விளையாடும் போது, எனது இடம் நிரந்தரமா என்கிற கேள்வி ஓடிக்கொண்டே இருக்கும். அது சில நேரங்களில் எனது ஆட்டத்தையும் பாதித்தது. எனவே நான் கேப்டன் ஆனவுடன் எனது அணியின் புதிய வீரர்களுக்கு அத்தகைய உறுதியை அளித்தேன். அதன் விளைவாக, எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் வெற்றியும் பெற்றனர் “ – கங்குலி.
இதைப் போன்ற எண்ணற்ற சுவாரசிய தகவல்களை இப்புத்தகத்தில் அடுக்கியுள்ளார். தசரா துர்கா பூஜை சமயத்தில் அவரின் ஓய்வு அறிவிப்பு வெளிவந்தது. அதை அவர் விவரித்த விதம் கவித்துவம்.
கிரிக்கெட் பிடித்தால் கங்குலியை ரசிக்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை!
இப்புத்தகத்தை எனது பிறந்த நாள் பரிசாக அளித்த என் மனைவிக்கும் தம்பிக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை! மட்டற்ற மகிழ்ச்சி!!


Leave a Reply