நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 23

அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித்
திறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம்
புறஞ்செய்யச் செல்வம் பெருகும்; ‘அறஞ்செய்ய
அல்லவை நீங்கி விடும்‘.

பழமொழி – அறஞ்செய்ய அல்லவை நீங்கி விடும்‘.

பட்டணத்து வேலை. நல்ல சம்பளம். வெளியில் இறங்கினால் கார். சொகுசு வாழ்க்கைதான். ஆனாலும் இந்தப் பட்டிக்காட்டில் கழித்த பத்து நாட்களும் வித்தியாச அனுபவம்  பாசமான பாட்டியின் கோரிக்கையை மறுக்கமுடியாமல் வந்த எனக்கு இந்த பத்து நாட்களில் இவ்வூரின் வாழ்க்கை பழகிவிட்டது.

காலையில் எழுந்தவுடன்முதல் காட்சி. அனைவரும் வாசலில் சாணம்தெளித்துக் கோலம் போடுவது. அடுத்தது வீட்டின் உள்ளே க்ளீனிங். பின் கிணற்றடிக்குளியல். அல்லது வயக்காட்டுக்குநடந்து சென்று பம்புசெட்டுக்குளியல். மாடு வளர்ப்பவர்கள் காலையில் மாட்டைக் குளத்தில் குளிப்பாட்டி பருத்திக்கொட்டையும் புண்ணாக்கையும் காலை உணவாகக் கொடுத்து மேய்ச்சலுக்குப் பத்திச்செல்கிறார்கள். வீட்டிலுள்ள அரசிகள் காலை சிற்றுண்டிக்குப் பின் கையோடு சமையல் செய்துவிட்டு வாசல்திண்ணை அரட்டைக்கச்சேரி ஆரம்பிக்கிறார்கள். அதிலும் பெரிசா ஒரு டாபிக்கும் கிடையாது. செஞ்சசெய்யப்போற சமையலைப் பத்தியும். அக்கம்பக்கத்து வீட்டு விசேசங்கள், வம்புகள் இவ்வளவுதான்.  அதையும் தாண்டி இளவட்டங்கள் புடவை நகை கம்பேரிசன்.

இருக்கும் வேத பாடசாலை மாணவர்களுக்கு தெருமுக்கு அரச மரத்திலிருந்து விழும் குச்சிகளைச் சேகரிப்பதுதான் டாஸ்க். அதை ஹோமத்திற்குப் பயன் படுத்துவார்களாம். கடவுள்நம்பிக்கை, சொத்து சேர்ப்பது, சாப்பாடு இதைத்தாண்டி இந்த ஊரில் எதுவும் இல்லையென்றாலும் மக்கள் பரபரப்பில்லாமல் சந்தோசமாகத்தான் வாழ்கிறார்கள். நகரத்தில்மட்டும் நாம் எதைத் தேடி ஓடுகிறோம். என்ன சாதித்து விட்டோம். இன்னும் மன அமைதியை விலை கொடுத்து வாங்கமுடியவில்லையே. அங்குள்ள மனநலமருத்துவர்கள் அது உன்னிடத்திலேயே உள்ளது வெளியில் தேடாதே என்று சொல்வதற்கு நான்கு முறை அழைத்து புத்தி சொல்லி பணம் வாங்குகிறார்கள். வெக்கமில்லாமல் நாமும்கொடுக்கிறோம்.

ஏதோ எண்ண ஓட்டம். சட்டென்று தடைபட்டது பாட்டியின் வருகையால். இந்தாடா இத வாங்கி அந்தப் பிச்சக்காரனோட பாத்திரத்துல கொட்டு.

மறுக்காமல் கையில் வாங்கி தண்ணீரில் நொதித்துப் போயிருந்த பழையதை பிச்சைக்காரன் நீட்டிய அதுங்கிய அலுமினியப் பாத்திரத்தில் கொட்டினேன். எல்லார் வீட்டுச் சாப்பாடும் கலந்து அவன் பாத்திரத்திலிருந்து ஒரு அதீத நெடி.

பாட்டி இட்லி சாப்பிட அழைத்தும் என்னமோ என் மனம் ஒட்டவில்லை. பாவம் இந்தப் பிச்சைக்காரன். இவன் யாரோ என்னமோ? யோசித்துக்கொண்டே அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவன் பாழடைந்த எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்கிறான். பக்கத்தில் உடல் மெலிந்த ஒரு கருப்பு நாய் அவனையே பார்த்துக்கொண்டு நிற்கிறது.

வந்துட்டுயா. உன்னயத்தான் தேடினேன். இந்தா சாப்புடு. அவன் நாய்க்கு சாப்பாடு வைத்துவிட்டு தான் சாப்பிட ஆரம்பிக்கிறான்.

என்னடா. எவ்வளவு நேரம் கூப்பிடறேன். இட்லி ஆறிப்போகுது. இங்க என்ன வாயப் பொளந்துட்டு பாத்துட்டிருக்க.

ஓ அவனப் பாக்கறயா. அவனால முடிஞ்சது அந்த நாய்க்கு சாப்பாடு வைக்கறது. அந்த தருமத்துக்காகவாவது கடவுள் அவன் பசியப்போக்கட்டும். போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே பாட்டி உள்ளே போய்விட்டாள்.

எவ்வளவு பெரிய தத்துவம்.   ‘அறம் செய்யப் பாவம் நீங்கும்‘ ங்கறது இதுதானோ. பட்டணத்துல சேமிக்கறதயே குறியா வச்சு ஓடிஓடி பணம் சம்பாதிக்கறாங்க. இங்க பாவத்தத் தொலைக்கறதுலயே குறியா தானம் செய்யறாங்க. நினைத்துக்கொண்டே எழுந்து நடந்தேன்.

பாடல் 24

தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்(து), அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
நெறியல்ல சொல்லல்நீ, பாண! – அறிதுயில்
யார்க்கும் எழுப்பல் அரிது.

பழமொழி -‘அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது

கிரிஷாங் குப்தா… பெயர் வாசிக்கப்பட்டவுடன் மனதுள் பெரும் எதிர்பார்ப்பு. அவன் வந்திருக்கக் கூடாது. ஒருநொடிக்குள் பல எண்ணங்கள். மும்பையில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையான நான் காலை என் வகுப்பின் வருகைப்பதிவேட்டிலிருந்து பெயர்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

அவன் வந்தாலென்ன வராவிட்டாலென்ன என நீங்கள் யோசிக்கக்கூடும்.

அந்த ஐந்தாம்வகுப்பு சி பிரிவின் ஆசிரியையான எனக்குமட்டும்தானே தெரியும் அவன் படுத்தும் பாடு. ஒருநாள் அவன் வரவில்லையென்றால் எனக்கு சிறிது ஓய்வு கிடைக்கும்.

என் எதிர்பார்ப்பு வீண். அவன் வந்திருக்கிறான். முதல் பாட வகுப்பிற்கான அழைப்புமணி ஒலித்துவிட்டது. நான் ஆறாம் வகுப்பிற்குப் பாடம் எடுக்கச் செல்லவேண்டும். தினப்படி அறிவுரைகளுடன் கூடுதலாக கிரிஷாங் என அழைத்து இன்று எந்த ஆசிரியையிடமிருந்தும் புகார் வராவிட்டால் கடைசி பாட வகுப்பில் உனக்கு சாக்லெட் கிடைக்கும் என ஊக்குவித்தேன்.

சொல்லிமுடிக்குமுன்பே பக்கத்து சீட்டில் இருந்த கார்த்தியாயினியைப் பென்சிலால் குத்திவிட்டான். வீர் என அலறுகிறாள்.

முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு சாரி மேடம். பென்சில் ஷார்ப்னஸ் செக் பண்ணினேன்.  அவ்வளவுதான் என்கிறான்.

இன்று அவன் பெற்றோர் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். ஸ்கூல் கவுன்சிலருடன் அமர்ந்து ஒரு முடிவு எடுத்துவிட வேண்டும்.

அவனைப்பற்றி மற்ற ஆசிரியர்கள் புகார் அளித்த துண்டு சீட்டுக்களை எடுத்துக்கொண்டு கவுன்சிலர் அறைக்குச் செல்கிறேன்.

கவுன்சிலர் ரமா பெற்றோருக்கு விளக்கத்தொடங்கினாள். உங்கள் மகன் எந்த ஆசிரியரின் பேச்சையும் கேட்பதேயில்லை. ஓரிடத்தில் உட்காருவதேயில்லை. வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது பென்சில் சுண்டி விளையாடுகிறான். ரப்பரில் பென்சிலின் சீவிய முனையைச் சொருகி பம்பரம்விடுகிறான். எல்லாப் பாட வேளைகளிலும் தாகம் அல்லது டாய்லெட் எனக்காரணம் காட்டி வெளியே சுற்றி நேரம் போக்குகிறான். உள்ளே வேறு மாணவர்கள் இருக்கும்போது கழிவறைக் கதவுகளை வெளியிலிருந்து தாள் போட்டுவிட்டு வந்துவிடுகிறான். என நீண்டுகொண்டே போனது.

ரமா அவன் அப்பாவைப்பார்த்துத் தொடர்ந்தாள்.  நீங்கள் ஒரு மனநல மருத்துவர். உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. அவனைப்பார்த்தாலே ஆசிரியர்களும் மாணவர்களும் தெரித்து ஓடுகிறார்கள். இப்போ அவன் சின்னப்பையன். போகப்போக இது பெரிய பிரச்சினையாயிடும் உங்களுக்கு. அவனை அமரச்செய்து பலமுறை அறிவுரை சொல்லியிருக்கேன். நான் சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ள அவனே எது சரி எது தப்புனு சொல்லிடுவான். எனக்கென்னமோ தான் செய்யறது தப்புனு தெரிஞ்சுக்கிட்டே திரும்பத்திரும்ப அதே தப்ப அவன் பண்றான். தூங்கறவனதான் எழுப்பமுடியும். தூங்கறாமாதிரி நடிக்கறவன எழுப்பறது ரொம்ப கஷ்டம். எங்களப் பொறுத்தவர அவன் தூங்கறாமாதிரி நடிக்கறவன். அதனாலதான் உங்களைக் கூப்பிட்டோம். நீங்களூம் கொஞ்சம் வீட்ல கண்டிப்பா நடந்துக்கணும்.

கவுன்சிலர் ரமா பேசப்பேச தமிழச்சியான எனக்கு அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது. பழமொழி நினைவிற்கு வருகிறது. இப் பழமொழி பற்றி வெளியில் சொல்ல இது தருணம் அல்ல. இருப்பினும் இதற்கு விளக்கம் போல் என் வகுப்பு மாணவன் கிரிஷாங் நடந்து கொள்வது ஆச்சரியம்தான்.  நான் அங்கு அமர்ந்திருந்தாலும் என் மனம் பின்னோக்கிச் சென்று பள்ளிப் பருவத்தில் கற்ற பழமொழிகளை அசைபோடுகிறது.

சுதாரித்துக்கொண்டு அவர்கள் பேசுவதில் மீண்டும் கவனம் செலுத்த முயல்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *