Tag: மனதில் நிறைந்த மக்கள் திலகம்

  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    –புவனா.

    எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து

    எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

    தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

    இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
    செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
    பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
    என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.

    அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.

    நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.

    அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

    திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

    விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
    தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

    என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

    அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

    இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

    எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.

    அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

    1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

    2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.

    எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.

    இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.

    தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.

    புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.

    மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.

    முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.

    எம்.ஜி.ஆர்.

    அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
    அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
    மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
    என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
    அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
    மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..

    காலத்தை வென்றவர் அவர்..
    காவியமானவர் அவர்..

    — புவனா, மும்பை

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — கொ.வை. அரங்கநாதன்.

     

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம். இன்னலுற்ற இளமையில் அன்னையின் அரவணைப்பே அவரது ஒரே ஆறுதல். காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் இடும் வாழ்க்கை. அத்தனையயும் கடந்து நாடக மேடை, திரைப் படம், அரசியல் என்ற அவரது விஸ்வரூபம் கடுமையான உழைப்பின் கருவில் மலர்ந்தது. ஏளனப் பேச்சு, எதிர்ப்பு, அத்தனையையும் உரமாக்கி சிகரத்தைத் தொட்ட செம்மல்… எம் ஜி ஆர் என்ற அந்த மூன்றெழுத்து இன்று வரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்து கொண்டிருப்பது காலத்தை கடந்த அந்த காவிய மகனின் புகழுக்குக் கட்டியம் கூறுகிறது.

    இந்த மனிதரின் வாழ்வு பள்ளிகளில் பாடமாகப் பயிற்றுவிக்கத் தகுந்தது. பாரியையும் ஓரியயையும் பாடங்களில் படித்தவர்களுக்கு எட்டாவது வள்ளலாக எம் ஜி ஆரை அறிமுகப்படுத்தலாம். மனித நேயத்தின் மாண்பினை அவர் சரிதம் மூலம் அடுத்தத் தலை முறைக்கு எடுத்துச் சொல்லலாம். மாலை நேரத் திரையரங்குகளை நீதி போதிக்கும் மன்றங்களாக மாற்றிய மாமனிதர். பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படாததை தன் பாடல்களால் பயிற்றுவித்தப் பண்பாளர்.

    “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” … “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” என்று இன்னும் எத்தனையோப் பாடல்களில் வளரும் குழந்தைகளை வழி நடத்தியவர்.

    “நல்லப் பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்” … “நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு” போன்ற எத்தனையோ பாடல்கள் மூலம் இளைஞர்களைத் தட்டி எழுப்பியவர்.

    “என் தமிழே நீ பகை வென்று முடிசூடி வா” எனத் தமிழுக்குத் தாலட்டுப் பாடியவர் … “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” என இனப் பெருமையை உரக்க சொன்னவர்.

    “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்” என விவசாயிகளுக்கு உரம் மூட்டியவர் …”உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்” என உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தவர்.

    “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என தனது எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்தவர்.

    இன்னும் எத்தனை எத்தனைப் பாடல்கள்… அத்தனையும் விடியற்காலச் சேவலின் உறக்கம் கலைக்கும் ஒலியல்லவா? இந்தப் பாடல் வரிகளுக்கெல்லாம் அந்தக் கவிஞர்கள்தானே சொந்தக்காரர்கள்? இதில் மக்கள் திலகத்தின் பெருமை என்ன இருக்கிறது என்று என்னிடம் கேட்டவர்கள் உண்டு. கவிஞர்கள் யாராக இருப்பினும் மக்கள் திலகத்தின் பாடல் என்றால் அவர்கள் அறியாமலேயே எழுச்சியுட்டும் சொற்கள் எங்கிருந்தோ வந்தமைந்தது..

    பாடியது தாம் தானா அல்லது மக்கள் திலகமா என்ற ஐயம் அந்தக் கவிஞர்களுக்கே வந்ததுண்டு. இதனை கவியரசு கண்ணதாசன் கூட ஒரு காதற் பாடலில் “பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா, சேரனுக்கு உறவா செந்தமிழன் நிலவா” என அழகாகக் குறிப்பிடுகிறார்.

    பாடுவது கவியா – பாடியது நான்தானா அல்லது பாரி வள்ளல் மகன் போன்ற மக்கள் திலகமா?
    சேரனுக்கு உறவா- மக்கள் திலகம் மலையாளப் பூர்வீகம் கொண்டவர் என்பதைத் தான் இவ்வளவு அழகாகக் குறிப்பிடுகிறார்.
    செந்தமிழன் நிலவா- தமிழகத்து மக்களுக்கு நிலவு போன்றவரா- ராமச்(சந்திரன்) எவ்வளவு அழகான வர்ணனை பாருங்கள்!

    மக்கள் திலகத்தின் பாடல் வரிகள் அவரது வாழ்க்கை நிகழ்வின் முன்னறிவிப்பாய் பல சமயங்களில் அமைந்தது வியப்பிற்குறியது.

    “நானே போடப் போகிறேன் சட்டம் பொதுவில் நன்மை பயக்கும் திட்டம்” என 50 களிலவர் பாடியதும் … “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என அவர் 60 களில் பாடியதும் … 70 களில் நடை முறையானது.

    “தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்பது அவர் சுடப்பட்டும் உயிர் பிழைத்ததன் முன்னறிவிப்பு அல்லவா?

    “இறைவா உன்னிடன் கையேந்தினேன்” என்றப் பாடல் அவரது ஓர் உயிருக்காகத் தமிழர்கள் நடத்திய தவத்தின் முன்னறிவிப்பு அல்லவா?

    “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தப் பின்னாலும் என் பேச்சிருக்கும்” என்று அவர் மறைந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பும் அவரது பெயர் ஒலிக்காத நாளே இல்லை என்ற அளவில் அவரது புகழ் வியாபிதிருப்பதின் முன்னறிவிப்பு அல்லவா?

    “சொல்வது எல்லோருக்கும் சுலபமாகும் சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்” என்றார் நாமக்கல் கவிஞர். மக்கள் திலகம் ஒரு மாற்றுக் குறையாத மன்னன் அல்லவா? திரையில் சொன்னவற்றை வாழ்விலும் அப்படியே கடை பிடித்தவர்… மதுவின் தீமையை திரையில் அவரைப் போல் அழுத்தமாகச் சொன்னவர்கள் எவருமில்லை. திரையில் மட்டுமில்லை தனது வாழ்விலும் மதுவை மட்டுமல்ல தேனீரைக் கூட அருந்தியதில்லை.

    இரக்கமும், மனிதாபிமானமும் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. கை ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர் மழையில் நனைவது பொறுக்காமல் சென்னையில் இருந்த அத்தனை கை ரிக்க்ஷாத் தொழிலாளருக்கும் மழை ஆடை (ரெயின் கோட்) வழங்கிய மாண்பினை என்னவென்று உரைப்பது? அப்பொழுது அவருக்கு அரசியல் ஆசைகள் எதுவும் இல்லை என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    வறுமையில் வாடிய என். எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தாருக்கு அவர் செய்த உதவிகளை அவரது குடும்பத்தாரே சொல்லும்போது இப்படிப்பட்ட மகத்தான மனிதர் மறுபடியும் பிறப்பாரா என ஏங்க வைக்கிறது. நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பிறந்த நாகேஷ் வாழ்வில் தடுமாறியபோது கைகொடுத்த தெய்வம் அல்லவா எம்ஜிஆர்? பிரபல இயக்குனர் பி ஆர் பந்துலு கடனுற்று காலமான போது அவரது படத்தை தானே இயக்கி அக்குடும்பத்தை கரையேற்றிய கர்ணன் அல்லவா மக்கள் திலகம்? பிரபல எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் எம்ஜியாரை கடுமையாக விமர்சித்து வந்தவருமான சோ ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டார் “அடுப்பில் உலையை வைத்து விட்டு அரிசிக்காக எம்ஜியாரிடம் செல்லலாம். உலை கொதிப்பதற்குமுன் உதவி கிடைத்துவிடும்”

    சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும் கூட தன் தலையணை அடியில் பணக் கட்டுகளை வைத்து கொண்டு தன்னிடம் உதவி நாடி வந்தவர்களுக்கு அடுத்தவர் அறியாமல் உதவி வந்த உத்தமர். காரில் சென்று கொண்டிருக்கும் போது காலணி இல்லாமல் சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டிக்காக தனது துணைவியார் ஜானகி அம்மையார் காலில் இருந்த காலணிகளைக் கழற்றி கொடுக்கச் சொன்னக் கருணையாளர். சீன படையெடுப்பின் போது தங்க வாளினை பிரதமரிடம் நாட்டை காப்பதற்குத் தன் பங்காக அளித்தவர்.

    எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கல்வித் தொகையாக மாதந்தோறும் அவரது அலுவலகத்திலிருந்து பணம் அனுப்பப்பட்டு வந்தது எத்தனை பேருக்குத் தெரியும்? கொள்கை மாறுபட்டிருந்த போதும் வாரியார் சுவாமிகள் கோரினார் என்பதற்காக பெருந்தொகையை கோவில் கும்பாபிஷேகத்திற்கு அளித்து அவரால் பொன் மனச்செம்மல் என வாழ்த்தப்பட்டவர். இது போன்று எண்ணற்ற உதவிகள்… இவை அத்தனையுமே எவ்வித எதிர்பார்ப்பின்றி செய்யப்பட்டதே எம் ஜி ஆர் என்ற மாமனிதனின் இரக்க வரலாறு!

    இதே மனிதம்தான் அவரது ஆட்சி காலத்திலும் அவரை உயரத்தில் ஏற்றி அவர் உயிர் துறக்கும் வரை அங்கேயே வைத்திருந்தது. முதியோருக்கு சேலை வேஷ்டிகள், பள்ளி சிறுவர்களுக்கு சத்துணவு, பாடப் புத்தகங்கள் , காலணிகள், சீருடை , இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படும் அத்தனை பேருக்கும் கட்சி பாகுபாடின்றி நிவாரணம் …இன்னும் எத்தனை எத்தனையோ சமூக நலத் திட்டங்கள். அத்தனையும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள்… அவருடைய பதினொரு ஆண்டு கால ஆட்சியில் அரிசி விலை ஒரு ரூபாய் கூட ஏற்றப் படாதது அவர் ஏழை மக்கள் மீது கொண்டிருந்த அதீத அன்பின் வெளிப்பாடு. இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .. ஏடும் நேரமும் இடம் கொடா.

    பாய்ஸ் கம்பெனி நடிகராய் தொடங்கி, நாடக நடிகராய் மலர்ந்து, திரைப்படக் கதாநாயகனாய் உயர்ந்து, அரசியல் தொண்டராய் மாறி முதலமைச்சராய் முடிசூடி மக்களின் மனங்களில் இன்று வரை அகற்ற முடியாத பிம்பமாய் ஒளிரும் எம் ஜி ஆர் என்ற மாமனிதன் மக்கள் திலகமாய், புரட்சி நடிகராய், புரட்சித் தலைவராய், முதலமைச்சராய் என் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார்.

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — ஞா.  கலையரசி.

     

    “காலத்தை வென்றவன் நீ
    காவியமானவன் நீ
    வேதனை தீர்த்தவன்
    விழிகளில் நிறைந்தவன்
    வெற்றித் திருமகன் நீ!”
    என்று எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட இப்பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

    “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
    என்ற பாடலுக்கேற்ப, மக்கள் மனதில் அணையா தீபமாக ஒளிவீசிக் கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்!

    “வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?”
    என்று கேட்டால் தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் என்பது தான் ஒரே பதிலாக இருக்கும்! இவர் அளவுக்கு மக்கள் நெஞ்சங்களில் குடி கொண்டவர் ஒருவர் இனிமேல் தான் பிறந்து வர வேண்டும். குறிப்பாக அடித்தட்டு மக்களிடம், இவருக்கிருந்த செல்வாக்கு அளப்பரியது. “இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம்; ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்று புலம்பினார்கள், இவருடைய இரங்கற் கூட்டத்தில்.

    இவர் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், ஒவ்வோராண்டும் இவர் நினைவு நாளில் பொது மக்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பாக எம்.ஜி.ஆர் படத்துக்குப் பூவும் பொட்டும் வைத்து விளக்கேற்றி வழிபடுகிறார்கள் என்பதிலிருந்து தலைமுறைகள் தாண்டியும் இவர் மக்கள் மனதில் மகத்தான சக்தியாகத் திகழ்கிறார் என்பது விளங்கும். மக்கள் நெஞ்சமெனும் கோவில்களில் தெய்வமாகக் குடிகொண்டிருக்கும் ‘தனிப்பிறவி,’ எம்.ஜி.ஆரை, மக்கள் அதிசய பிறவி என்றும், ‘ஆயிரத்தில் ஒருவன்,’ என்றும் இன்றளவும் போற்றுகிறார்கள்.

    தமிழ்த் திரையுலகில் தமக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு சினிமாவைக் கண்ணுங்கருத்துமாக நேசித்து, சாதாரண மக்களுக்கான படம் கொடுத்து, அதன் பின் அரசியலிலும் வெற்றிகொடி நாட்டியவர். தமக்காக மட்டும் வாழாமல் அடுத்தவருக்காகவும் வாழ்ந்ததால் தான் பொன்மனச்செம்மல், ஏழைப்பங்காளன், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று போற்றப்படுகிறார்.

    பொதுவாழ்வில் இவரடைந்த வெற்றிகள், அதிர்ஷ்டத்தால் ஓரிரவில் பெற்றதல்ல. கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, எந்த வேலையிலும் மனமொன்றி முழுதாக ஈடுபடல் போன்ற இவரின் சிறப்புக்குணங்களால், தமிழ்த்திரைப்பட வரலாற்றிலும் சரி, அரசியலிலும் சரி, யாரும் வெல்லவியலாத வரலாற்று நாயகனாகத் திகழ்ந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னேறி விண்ணைத் தொட்டுச் சாதனை படைத்தவர். சிறுவயதில், குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    பின்னர் திரையுலகில் சிறு பாத்திரங்களில் நடிக்கத் துவங்கி கதாநாயகனாக உயர்ந்து, தமக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். துவக்கத்தில் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு காலங்களில் கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து முக்கிய உறுப்பினராக இருந்தவர், பின்னர் பொருளாளராக உயர்ந்தார். தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக இவர் திரைவாழ்வு அமைந்திருந்த நேரத்தில், பல சோதனைகளுக்கு இடையே “நாடோடி மன்னன்” படத்தைச் சொந்தமாகத் தயாரித்து திரையிட்ட போது எம்.ஜி.ஆர் சொன்னாராம்.

    “படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று.

    படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனை!

    இப்பட வெற்றி விழாவில், பேரரறிஞர் அண்ணா, “நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர். இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” என்று புகழாரம் சூட்டினார். அன்று முதல் அண்ணாவின் இதயக்கனியானார்.

    துவக்கத்தில் மக்கள் திலகம் நடித்தவை வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்கள் என்றாலும், இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ஏழை எளிய மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் பிரதிபலிப்பதாகவும், அம்மக்களின் நல்வாழ்வுக்காக அநீதியை எதிர்த்துப் போராடி எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்வதுமாக அமைந்திருந்தன.  நாளாக நாளாக நிஜ வாழ்விலும் தங்களுக்காகப் போராடும் நாயகன் கிடைத்து விட்டான் என மக்கள் நம்பத் தலைப்பட்டனர்.

    செருப்புத் தைக்கும் சமூகத்தால் வளர்க்கப்படும் பாத்திரத்தில் நடித்த ‘மதுரை வீரன்’ படம் இவர் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். இது திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது இதில்தான். மக்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் இவர் நடித்ததேயில்லை. பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் ஓடி வந்து வில்லனுக்கு நடுவே குதித்து பெண்கள் மானம் காப்பார். எப்போதுமே ஏழைப்பங்காளன்! எதிரிகள் பத்து பேர் என்றாலும் இவர் ஒருவர் மட்டும் தனியாக நின்று சுழன்று சுழன்று பந்தாடி துவம்சம் செய்வார். அநீதிக்கு அடிபணியாமல் தீரத்துடன் தீயசக்திகளை எதிர்த்து முறியடிப்பார். இப்படிப் படங்களில் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும், இவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன. என்பது மறுக்க முடியாத உண்மை.

    எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட பிறகு இவர் குரல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இவர் வசன உச்சரிப்பு தெளிவாக இல்லாதபோதும், ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். வாள் சுழற்றுதல், சிலம்பம், சுருள்கத்தி சுழற்றுதல், போன்ற பலவகை சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். “படகோட்டி” படம் மீனவ சமுதாயத்திடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம், இவருடைய அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தி வாக்கு வங்கியாக நிலைபெற்றது. மக்கள் இவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணத் தலைப்பட்டனர். திரைப்படங்களைத் தம் பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர் என்று சொல்வது மிகச்சரி. இவர் படப்பாடல்கள், இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன், கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் திகழ்கின்றன …

    “ஒரு தவறு செய்தால்
    அதைத் தெரிந்து செய்தால்
    அவன் தேவன் என்றாலும்
    விடமாட்டேன்”
    என்றும்;

    “தனியானாலும், தலைபோனாலும்
    தீமைகள் நடப்பதைத் தடுத்து நிற்பேன்”
    என்றும் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்து அவருக்காகவே பாடல்கள் எழுதினர் கவிஞர்கள்.

    “நதியைப் போலே நாமும் நடந்து பயன் தர வேண்டும்… 
    கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்… 
    வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்… 
    வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிடவேண்டும்…”
    என்ற வைர வரிகள் இவருக்காகவே எழுதப்பட்டவை.

    “மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்,” என்பதை மெய்ப்பித்து தம் பாடல்களில் தனித்துவத்துவத்தை ஏற்படுத்தியவர். இம்மூன்றெழுத்தைக் கடமை என்றும் சொல்லலாம்; எம்.ஜி.ஆர் எனவும் கொள்ளலாம்; சமுதாய விழிப்புணர்ச்சி, தாய்நாடு, தாய்மொழி பற்று ஆகியவை இவர் படப்பாடல்களில் எப்போதுமே கலந்திருக்கும். பாடல்கள் மட்டுமன்றி வசனத்திலும் இவர் அதிக கவனம் செலுத்தினார். “நான் வெற்றி ஒன்றையே பரிசாகப் பெற்று வருபவன்!” என்று சொல்லும் வில்லன் வீரப்பாவுக்கு, “நான் எதிரிகளுக்குத் தோல்வி ஒன்றையே பரிசாகக் கொடுத்துப் பழக்கப்பட்டவன்!” என்று பதிலடி கொடுத்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெறுவார். நிஜ வாழ்விலும் இதை இவர் நிரூபிக்கத் தவறவில்லை!

    தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. 1967 ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிய காலக்கட்டத்தில், வெளியான‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தை வெளியிட முடியாமல் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளித்துப் பல ஊர்களிலும் அதனைத் திரையிடச் செய்தவர்கள் ரிக்ஷாக்காரர்களே. அது போலப் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்ட போது அவருடைய ரசிகர் மன்றத்தினர், அவருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து படத்தை வெற்றி பெறச் செய்தனர்.

    1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வ ராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதல்வரானார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த நடிகருக்கும் கிடைக்காத அங்கீகாரமும், செல்வாக்கும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்ததென்றால், மக்கள் மனதில் இவர் நீக்கமற நிறைந்திருந்ததும், மக்களைக் கவர்ந்திழுத்த இவரின் காந்த சக்தியும், நம் நன்மைக்காக உழைக்கக்கூடியவர் என்று இவர் மீது மக்களுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தாம் காரணங்கள்.

    முதல்வராக இருந்த காலத்தில் இவர் தீட்டிய சில திட்டங்கள், மக்களிடையே இவர் செல்வாக்கை அதிகரித்தன. குறிப்பாக காமராஜரின் பள்ளிக்குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்தை முட்டை முதலியன சேர்த்துச் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தியது, உடை, புத்தகம்,காலணி வழங்கியது, உழவர் கடன் தள்ளுபடித் திட்டம்,   ஆதரவு அற்ற மகளிர்க்கான நல்வாழ்வுத் திட்டம் போன்றவற்றைச் சொல்லலாம். ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் எண்ணத்துடன் இவர் கொண்டு வந்த இத்தகைய நல்வாழ்வுத் திட்டங்கள், ‘பொன்மனச்செம்மல்,’ என்ற பட்டப்பெயரை இவருக்குப் பெற்றுத் தந்தது. ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னபடி எம்.ஜி.ஆர் உண்மையிலேயே ஏழை, எளிய மக்களை நேசித்தார். அவர்களுக்காக உள்ளம் உருகினார். அவர்களது மேம்பாட்டிற்காக உழைத்தார்.

    1984ல் இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த போதே, தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். பத்தாண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருந்த போதே 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது கொடுத்துப் புகழாரம் சூட்டினர்.

    தாம் நினைத்ததை நடத்தி முடித்தவர் மக்கள் திலகம். நடிகனாகவும் அரசியல்வாதியாகவும் புகழ் பெற விரும்புவோர்க்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கை ஒரு பாடம்.

     அவர் மரணப்படுக்கையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் இப்பாடல் ஒலிபரப்பானது …

    “உள்ளமதில் உள்ளவரை
    அள்ளித்தரும் நல்லவரை
    விண்ணுலகம் வாஎன்றால்
    மண்ணுலகம் என்னாகும்?”
    என்றும் …

    “உன்னுடனே வருகின்றேன்
    என்னுயிரைத் தருகின்றேன்
    மன்னன் உயிர் போகாமல்
    இறைவா நீ ஆணையிடு!”
    என்றும் …

    மக்கள் தம் உயிரை ஈந்து எம்.ஜி.ஆரை உயிர்ப்பிக்க வைக்க வேண்டும் என்று இறைவனிடம் கண்ணீர் மல்க வேண்டுதல் நடத்தினர். இதிலிருந்து எம்.ஜி.ஆர் மீது மக்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பும், பாசமும் விளங்குகின்றதல்லவா?
    அதனால் தான் கவிஞர் வைரமுத்து சொன்னார்:
    “ஒரே ஒரு சந்திரன் தான் ;
    ஒரே ஒரு சூரியன் தான் ;
    ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்;”
    தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்காலத்திலும் எம்.ஜி.ஆரின் புகழ் குன்றாமல் ஒளிவீசக் காரணம், மக்கள் தங்கள் நெஞ்சங்களில் அவர் உருவத்தை அழியாத கோலமாகத் தீட்டி வைத்திருப்பது தான். என்றென்றும் அது கலையாது; மறையவும் மறையாது!

    “நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
    என்றும் அது கலைவதில்லை
    எண்ணங்களும் மறைவதில்லை”

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — முனைவர் இதயகீதம் இராமனுஜம்.

    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.

    முன்னுரை:
    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் வாடினார். ஏன் தெரியுமா? பயிர் விளைந்தால்தான் உணவு கிடைக்கும். உணவு கிடைத்தால்தான் மக்கள் வாழ்க்கை செழிக்கும். அந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது இயற்கை. இதுவே வள்ளலாரின் சிந்தனையாக இருந்தது. அதே போல மக்கள் குறிப்பாக ஏழைக் குழந்தைகள் வாடியதால் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். பெருந்தலைவர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை சத்தான முத்தான திட்டமாகக் கொண்டு வந்து நடைமுறைப் படுத்தியவர் பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணாவின் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதைப் போல மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி அதில் இறைவனைக் கண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இன்றும் கிராமத்து மக்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறையவில்லை… எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    பிறப்பு:
    எம்.ஜி.ஆர். என்று மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ் பெற்ற பொன்மனச்செம்மல் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) மருதூர் கோபால மேனனுக்கும் சத்திய பாமாவுக்கும் 1917ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 17ஆம் நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார்.

    இளமையின் கனவும் லட்சிய உணர்வும்:
    இளமை பலருக்கு இனிமையாக இருக்கும். சிலருக்கு இன்னலாக இருக்கும். புரட்சித்தலைவரின் இளமை வாழ்க்கை பல சோகங்களும் இன்னல்களும் கலந்து இருந்தது. இளம் தந்தையை இழந்தார் எம்.ஜி.ஆர். அதனால் அவரது தாயார் சத்யபாமா வேதனையில் அவதிப்பட்டார். உழைத்து பிள்ளைகளைக் காக்க முடிவு செய்து மருதூரிலிருந்து தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் குடியேறினார். தனியாக குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்த சத்யபாமா அம்மையார் வேலை செய்து குழந்தைகளை வளர்த்தார்.

    தங்கள் குழந்தைகள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும். உலகிலே சிறந்த பக்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுதான். இதை நீங்கள் செய்ய வேண்டும். ஏழைகளின் துயரத்தைத் துடைத்தாலே கடவுளைத் தொழுத பலன் கிட்டும் என்று தனது தாயார் சொல்லிக்கொடுத்த பாடத்தைத்தான் தனது வாழ்நாளில் இலட்சியமாக இருந்து செயல்படுத்தினார் பொன்மனச் செம்மல்.

    மக்கள் சேவை:
    நாடும் சமூகமும் நலமாக இருக்க நல்ல பழக்க வழக்கங்கள் அவசியம். அதைத்தான் திரைப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். பரப்பினார். ராமானுஜர், ஆதிசங்கரர், காஞ்சி மகா சுவாமிகள் போல எம்.ஜி.ஆர். ஒரு அவதார புருஷர். ஏனென்றால் நாட்டு நலனுக்காக ஆன்மீக வழியில் அவர்கள் சேவை செய்தனர். ஆனால் எம்.ஜி.ஆர். தன் தொழிலான திரைப்படங்கள் மூலம் மனித நேயத்தையும் மக்கள் பண்புகளையும் மக்கள் மனதில் விதித்தார். எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யபாமா அம்மையாரின் அறிவுரைகள், தனது வாழ்க்கையில் சந்தித்த பல கஷ்டங்கள், நஷ்டங்கள், வேதனைகள், துயரங்கள் மூலமும் மிகவும் பக்குவமடைந்தார். அதனால் சமூகமும் நாடும் இப்படி இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று உணர்ந்தார். அதனால்தான் ஆட்சிக் கட்டிலில் எம்.ஜி.ஆர். அமர்ந்தபோது பல மக்கள் நலத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி மக்கள் சேவையே மகேசன் சேவை என்னும் தாரக மந்திரத்தைச் சொல்லி நலம் பயக்கும் திட்டங்களை நிறைவேற்றினார்.

    தேடி வந்த விருதுகள்:
    1960ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும், விருதில் ஹிந்தி வார்த்தைகள் இருந்ததால் அதை ஏற்க மறுத்தார் பொன்மனச்செம்மல்.
    1972ஆம் ஆண்டு ரிக்ஷாக்காரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார்.
    1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
    புரட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் சென்னை பல்கலைப் கழகமும் அரிசோனா உலகப் பல்கலைக் கழகமும் இணைந்து வழங்கிப் பெருமைப்படுத்தியது.

    அரசியல்:
    திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.கவில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.க. என்னும் கட்சியைத் துவங்கினார். கட்சியைத் துவக்கிய நிலையில் திண்டுக்கல் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதுதான் எம்.ஜி.ஆர்.-ன் அ.தி.மு.கசந்தித்த முதல் தேர்தல் களம். ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் போட்டியிட்ட நிலையில் தன் கட்சி வேட்பாளரான மாயத்தேவரை வெற்றி பெறச் செய்தார் எம்.ஜி.ஆர். தன்னுடைய சினிமா மாயைக் காட்டி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டார். பொதுத் தேர்தல் வரட்டும்… அப்போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து எம்.ஜி.ஆர். வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆரால் இவ்வளவு விரிவாகப் பிரச்சாரம் செய்ய முடியாது. சினிமா மாயை கலைந்துவிடும் என்று தன் கட்சியினருக்குத் தைரியம் சொன்னார் கலைஞர் கருணாநிதி.

    எம்.ஜி.ஆர். மீது பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளை எல்லாம் முறைப்படி அறப்போராட்டம் மூலம் சந்தித்தார். அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். எம்.ஜி.ஆருடன் ஜானகி அம்மாளும் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டார். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை உண்ணாவிரதம் இருந்து தன் எதிர்ப்பைக் காட்டுவார். அராஜகத்தில் ஈடுபடமாட்டார்.

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த வரையில் மக்கள் நலனே தன் நலன் என்ற வகையில், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் ஆட்சி செய்தார். மின் கட்டணம், பால் விலை கூட்டாமல் இருந்தார். விவசாயிகளுக்கு மின் கட்டணம் கட்டும் முறையில் எளிமையும் சலுகையும் காட்டினார். விவசாய மின் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் சாதாரண மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் தடையில்லாமல் கிடைக்குமாறு செய்தார். திறமையான அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு முடிவு எடுத்தார்.

    பொருளாதாரமும் எம்.ஜி.ஆரும்:
    1977ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சித் தலைவர்கள்… “எம்.ஜி.ஆருக்குப் பொருளாதாரம் தெரியுமா?” பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி நடத்த முடியுமா? என்று கேட்டார்கள். இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர். “அடுத்த வேலை பசியைப் போக்கத் தெரியும். உழைப்பும் எளிமையும் சேமிப்பும் நேர்மையும் இருந்தால் போதும், யாரும் பிரகாசமான வாழ்வு பெறலாம். இதுதான் எனக்குத் தெரிந்த பொருளாதாரம்” என்று பதிலளித்தார். பசியோடு இருந்தவன் நான். பசியை வென்றேன். திரைத்துறையில் ஈடுபட்டு திருப்தியாக வளர்ந்தேன். அதேபோல் என் ஆட்சியிலும் மக்கள் திருப்தியை அடையச் செய்வேன் என்றார்.

    திரைப்படப் பாடல்களில் திசையைக் காட்டியவர்:
    மீனவ சமுதாயத்திற்காக எழுதிய இப் பாடல் உலக அரங்கம் முழுவதும் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    தரைமேல் பிறக்க வைத்தான்…
    எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் …
    – என்ற பாடல் வரிகளில் அசைந்தாடுகின்றபோது, சமூகத்தின்மீது இவருக்கு உள்ள அக்கறை புலனாகிறது!

    ஒரு தாய் மக்கள் நாமென்போம்..
    ஒன்றே எங்கள் குலமென்போம்…
    – என்ற பாடல் மூலம் நாமெல்லாம் இந்தியத் தாயின் பிள்ளைகள் என்றும் நாம் அனைவரும் மனிதர்கள் என்னும் குலத்தைச் சார்ந்தவர் என்றும் விளக்கினார்.

    இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்.. அவர்
    என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்..
    – என்ற பாடலின் மூலம் அண்ணாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தார்.

    திருடாதே பாப்பா திருடாதே..
    வறுமை நினைத்து பயந்துவிடாதே
    திறமை இருக்கு மறந்துவிடாதே..
    -என்ற பாடலில் குழந்தைகளுக்கு திருடக் கூடாது என்ற தத்துவத்தை போதித்து வறுமையை நினைத்து பயந்து போகக் கூடாது. நமக்கு திறமை இருக்கு என்பதை நினைவூட்டி மக்கள் மனதில் திறமையை போதித்தவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.

    இவரது பாடல்களை பாமரர் முதல் படித்தவர் வரை கேட்டு மகிழ்கிறார்கள். சோதனையும் வேதனையும் வரும்போது அவரது தத்துவப் பாடல்கள் சோகத்தை விரட்டும் சக்தியாக விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.

    சமூகப் பார்வை:
    கடமையைச் செய். பலன் தானாக வரும் என்பது கீதையின் வாசகம். சமார்த்தியத்தைவிட சத்தியம் உயர்ந்தது என்பார் எம்.ஜி.ஆர். புகைக்கக் கூடாது … மது அருந்தக் கூடாது… திருடக் கூடாது… அராஜகம் செய்யக் கூடாது… பணிவு வேண்டும்… விசுவாசம் வேண்டும்… பெற்றோரைத் துதிக்க வேண்டும்… தோல்வி கண்டு துவளக் கூடாது… எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் வேதனை வந்தாலும் பொறுமையும் உழைப்பும் நல்ல வாழ்வைத் தரும் என்பார்.

    பழி வாங்கக் கூடாது… அடுத்தவர் பொருளை அபகரிக்கக்கூடது… வரதட்சணை வாங்கக் கூடாது… ஊதாரித்தனம் கூடாது… அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும்… மனித நேயம் பேண வேண்டும்… குழந்தைகளை மதிக்க வேண்டும்… அவர்கள்தான் சமூகத்தில் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்பார்… பெற்றோர்கள் நேரில் வந்த தெய்வங்கள் என்பார்.

    நம்மை யாரும் பார்க்கவில்லை என்கிற தைரியத்தில் தவறு செய்யாதீர்கள். எங்கும் வியாபித்து இருக்கும் தெய்வம் (சத்தியத்தின் கண்கள்) உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாட்சியிடம் தப்பிக்கலாம். சட்டத்தின் முன் தப்பிக்கலாம். ஆனால் சத்தியத்திடமிருந்து தப்ப முடியாது – சத்தியம் தெய்வம் அத்தனை வலிமை வாய்ந்தது. இந்தத் தத்துவத்தைத்தான் சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் வரும் மேரே நாம் அப்துல் ரஹ்மான் என்ற பாடலின் வரிகள் வாயிலாக விளக்கியுள்ளார் எம்.ஜி.ஆர்.

    முடிவுரை:
    தமிழக சட்ட மன்ற வரலாற்றில் முதல்வர்களாக பணி புரிந்ததில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும், ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காமராசருக்கு அடுத்தபடியாக தொடர்ந்து பத்தரை ஆண்டுகள் முதல்வராகப் பணி செய்த சாதனை புரிந்தவர் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சியில் மக்கள் கஷ்டம் இல்லாமல் திருப்திகரமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

    மனித நேயம், உழைப்பு, உண்மை, பாசம், அர்ப்பணிப்பு, நேர்மை, சேவை எண்ணம் கொண்டு மகத்தான சாதனை புரிந்தவர். காஞ்சி மகா சுவாமிகளின் ஆசியும் பெற்ற எம்.ஜி.ஆர். இந்தப் பூவுலகை விட்டு 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் நாள் பொன்னுலகம் சென்றார்.

    பொன்மனசெம்மலின் வழியில் நாமும் மனித நேயத்தை வளர்த்து வாழ்க்கையில் முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்து வாழ்வில் வளம் பெறுவோம்.

     

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — ஜெயஸ்ரீ ஷங்கர்.

    யோகத்தின் முகவரிகள்:
    நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, மரங்களாகி நந்தவனமாகியது. அதையும் கடந்து, இள நெஞ்சங்களுள் அவரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தின் ஆதிக்கம் அபாரமானது என்றே சொல்ல வேண்டும்…

    இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு யோகம் கைதூக்கி விட்டு கடைசி வரையில் கூட வரும் என்றும் சொல்வார்கள். அந்த விதத்தில் பரிபூரணமா அமைந்த ‘யோக ஜாதகம்’ அவருடையது தான். அப்பேர்பட்ட யோகக்காரருக்கு தனது உயர்ந்த பண்பால், செல்வமும், பெரும்புகழும், அழிவில்லாத மக்கள் செல்வாக்கும் வாழ்வின் எல்லை வரை அமையப் பெற்றால் அவர் மனிதருள் மாணிக்கமாவர் .

    இந்நிலையில் தான் ஒரு நாள் நம்ப ஊருக்கு எம்.ஜி.ஆர் வருகிறார் என்ற செய்தி ‘காட்டுத் தீ’ போலப் பரவியது. எந்தவித தொலைத் தொடர்பும் அதிகரித்திராத காலம். மதுரையில் அவருக்கு ரசிகர்கள் கடலளவு என்பதை உணர்த்திய அனுபவம் எனக்கு அதுதான். திரையில் பார்த்திருந்த ஒரு மனிதனை நேரில் பார்க்கும் அந்த சந்தர்ப்பம் மிகவும் பிரமாண்டமானது என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பிரமிப்பு மனத்துள். நேரமாக நேரமாக மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது. அந்த ரசிகர் கூட்டத்தின் மத்தியில் நானும் எனது தோழியின் வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி அவரைக் காணும் ஆவலுடன் நின்றிருந்தேன். அவர் நடித்த திரைப்படப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தது.

    “நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
    என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
    நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே”

    அத்தோடு கூடவே இன்னொரு பாடலாக …

    “வாங்கய்யா வாத்தியாரையா
    வரவேற்க வந்தோமைய்யா “

    இந்தப் பாடலும் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருந்தது. மதுரையின் தெருக்கள் முழுதும் அவருக்காக அலங்கரிக்கப் பட்டு அத்தனை இதயங்களுக்குள்ளும் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ‘ஒரே எண்ணம் ‘ நிறைந்ததாக இருந்ததைக் உணரவும் முடிந்தது. அத்தனை அன்புக்கும் சொந்தக்காரர் ‘அமாவாசை வானில் எழுந்த முழு நிலவாக’ வசீகரமான தோற்றப் பொலிவோடு வெண்பஞ்சுத் தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும், வெள்ளை அங்கியும் கழுத்தைச் சுற்றிய ஷாலோடு , கூப்பிய கரங்களில் ஒரு வாகனத்தில் நின்று அனைவரையும் பார்த்து கையசைத்த வண்ணம் எங்களைக் கடந்து சென்றார். வானுலக தேவனே வந்து எழுந்தருளியது போன்ற ஒரு நிம்மதி அவரைக் கண்டுவிட்ட முகங்களில் தெரிந்தது. கூட்டத்தில் பெருத்த ஆரவாரம். அந்த ஆனந்த அலை ஓயாது நீண்ட நேரம் ஒலித்தவண்ணம் இருந்தது. இன்றும் கூட நான் முதன் முதலாகக் கண்ட அந்த மாபெரும் பிரம்மாண்டமான மக்கள் திரள் கண்ணுள் நிறைந்து வழிகிறது. அன்றிலிருந்து எனது மனத்துள் அவரை ஒரு அதிசயப் பிறவியாகவே எண்ண ஆரம்பித்தது.

    பள்ளியில் மாறுவேடப் போட்டியில் அநேகமாக அத்தனை தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு ‘எம்.ஜி.ஆர்” வேடமிட்டு ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘ என்ற அவர் மேடையில் பேச ஆரம்பிக்கும் போது, பொது மக்களிடையே தனக்கு இருக்கும் பந்தத்தை உறுதி செய்யுமுகமாக உபயோகப் படுத்தும் அந்த சக்திப் பிரயோக வாக்கியத்தையே வசனமாகச் சொல்ல வைத்து அப்படியே மெய் சிலிர்த்துப் போவார்கள். அத்தனை ஈடுபாடும், அன்பும், பக்தியும் கொண்ட தாய்குலங்கள் அவரை ஒரு அவதார புருஷராகவே எண்ணியிருந்தனர் . அவர் மக்கள் இதயத்தின் தாரக மந்திரம்.

    வெள்ளித் திரை நடிகர் என்பதையும் மீறிய ஒரு பிணைப்பும், ஆளுமையும் அவர் மீது பொது மக்களிடையில் இருப்பதை காணும் போதெல்லாம் ‘இது எப்படி சாத்தியம்’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் அத்தனை பேர்களின் உள்ளத்தையும் ஈர்த்த வினோத காந்தமாக அவரது எளிமையும், காருண்யமும் இருந்தது தான் அந்த உயர்ந்த ஆன்மாவின் உன்னத சாட்சி. அவரைச் சந்திக்கும் எவரையும் அவரது ரசிகனாகவே மாற்றிவிடும் இரகசியம் தெரிந்தவர். அவர் பிறந்ததும், வாழ்ந்ததும், வெள்ளித் திரையில் சாதனைகள் புரிந்ததும், அரசியலில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பற்றி பொது மக்களின் நலனுக்காக சேவைகள் பல புரிந்ததும் அறியாதவர் யாருமே தமிழ் நாட்டில் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் என்ற இந்தப் பெயரில் தான் எத்தனை ஆணித்தரமான நம்பிக்கை மக்களிடத்தில் இருந்திருக்க வேண்டும்.

    செல்வம்:
    இந்நிலையில் அவர் நடித்து வெளிவந்த படங்களும், கருத்துமிக்கப் பாடல்களும், பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்பும் ஏணியாகி, அவரைத் தமிழக மக்களின் மத்தியில் ஓர் அரிய மேதையாக,மங்காத புகழ் தாங்கி நிற்கும் ‘மக்கள் திலகமாக’ மாற்றக் காரணமாயிருந்தது.. அவரை ‘ரத்தத்தின் ரத்தமாக’ அவர் நடித்த நடிப்பு வளர்த்ததா, அவரது சமூக சிந்தனை வளர்த்ததா, மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு வளர்த்ததா என்றெல்லாம் ஆராய இயலாத குறுகிய காலக்கட்டம், அவர் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொல்லும் போதே ஒரு மிகப்பெரிய கடலுக்கு முன்னால் கம்பீரமாக எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கம் போன்றதொரு பாதுகாப்பு அவரிடத்தில் நமக்கு ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை எனலாம். அத்தனை இறைவனும் அவர் பக்கம் நின்று ஒன்றாக ஆசீர்வதித்திருக்க வேண்டும். ஒரு சாமானிய மனிதனால் அசாதாரண உயரத்தில் ஒவ்வொரு இதயத்திலும் கோலோட்சி செய்தவர் நமது எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் தான் என்றாலும் அது மிகையில்லை.

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பரந்த மனப்பான்மையை நெஞ்சில் விதைத்தவர் திருமூலர். அந்த உயர்ந்த கருத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி மனித நேயத்தை வளர்த்தவர் நம் புரட்சித்தலைவர். அவருக்காகவே கவிஞர்கள் இதயத்தில் சுரக்கும் அமிர்த சஞ்சீவியாக கவிதை வரிகள் பொங்கி எழும். அதை எம்.ஜி.ஆர். பாடும்போது, ரசிகர்களின் நெஞ்சம் பெருமையில் பூரித்துப் போகும். சாமான்ய மக்களையும் அவரது திரையிசைப் பாடல்களால் வாழ்வியல் முறைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள வைக்கும். எத்தனையோ பேர்களின் உந்து சக்தி அவரது பாடல்களாகவே இருந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் அஸ்திவாரத்தை அதன் மூலமாகவே மக்களிடம் எழுப்பி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

    எந்த உயரமும் ஒரே நாளில் ஏற்பட்டு விட முடியாது என்பது நியதி. இருப்பினும், அவரது அரசியல் உயரம் ஆரம்பித்த போதே பிரம்மாண்டமாக வளர்ந்து உயர்ந்த நிலையில் தான் உருவானது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இருந்தாலும், ஒரு சராசரி மனிதன் தனது சொந்த வாழ்வில் படும் அத்தனை அவஸ்தைகளையும் சந்தித்தவர் தான் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவித்தவர் தான். இதிலிருந்தெல்லாம் அவர் வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும் நல்ல மனமும் மட்டும் தான் துணையாக இருந்தது. அங்கிருந்து நாடே போற்ற அந்த மனிதர் மாமனிதர் ஆனார். வயது வித்தியாசமில்லாமல் சகலமானவர்களும் போற்றும் உயர்ந்த பொக்கிஷமாக கருதப்பட்டார். அவரைச் சுற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள். ஒரு நாட்டின் அத்தனை இதயங்களுக்கும் ஒரே ‘ஏகாந்தம்’ அவராகவே திகழ்ந்தார், அவரது புகழ் உயர்ந்தாலும், அவர் வந்த பாதையை மறக்காமல் , ஏழை எளிய மக்களுக்கு அவரது உதவும் கரங்களை நீட்டிக் கொண்டே இருந்தார். அவருக்கு வாழ்க்கை தந்த திரை உலகத்தையும், அவரால் மக்களுக்கு வாழ்க்கை தர முடிந்த அரசியல் உலகத்தையும் தனது இரண்டு கண்களாகவே போற்றியவர் தனது அரசியல் சின்னத்திற்கு ‘இரட்டை இலையை ‘ அடையாளமாக்கி அதையே என்றென்றும் அரசியல் செல்வத்தின் முத்திரையாகப் பதித்தவர்..

    பெரும்புகழ்:
    பள்ளிக் கூட கல்வி என்பது அவரது வாழ்வில் எட்டாத கனியாகி இருந்தாலும், தமிழகக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணர்த்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் பள்ளிகளில் ‘மதிய உணவு திட்டத்தை ‘ ஏற்படுத்தி அதன் மூலம் வருங்கால சந்ததியினரின் அறிவுக்கும் உணவு ஊட்டி அழகு பார்த்தார்.. இது ஒரு சமுதாயப் புரட்சியாகவே மக்களிடையில் பெருமையாகப் பேசப்பட்டது. நல்லதொரு தலைவன் நம் நாட்டைக் காக்கிறான் என்னும் நம்பிக்கையில் மக்கள் கவலைகளற்று இருந்த நேரம். மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளும் எளிமையானவை. வாழ்க்கையும் எளிமையானவை தான். காலம் அவருக்கான செயல்களை மிகவும் சிறப்பாகவே செய்தது. அதே போல்,

    தமிழக மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவை வேறு எதனாலும் அளவிட்டுக் குறித்து விட முடியாததாகும். அவரையே தன்னுயிராக பாவித்து வாழ்ந்தவர்கள், அவருக்கு ஒன்றென்றால் தனது உயிரையும் துச்சமாக எண்ணி உயிர் கொடுத்து உயிர் காக்கக் கடமை பட்டவர்களாகவே பெரும்பாலான அவரது ரசிகர்கள் இருந்தார்கள் என்பது கண்கூடு. அப்படித்தான் ஒருமுறை ‘எம்.ஜி.ஆர் அவர்களின் திடீர் மரணச் செய்தி ‘ கொண்ட பொய்யான தகவல் காற்றுவாக்கில் பரவத் தொடங்கியதும், மக்களின் வேதனை கரை மீறியது. அந்த மாலை வேளையில் ஊரே ஸ்தம்பித்து ஆக்ரோஷித்தது. அந்தச் செய்தியை ஜீரணிக்க இயலாத பல ரசிகர்கள் தங்களையே எமனுக்குத் தாரை வார்த்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் அந்தக் கொந்தளிப்பை அடக்க, அந்தச் செய்தி பொய்யான வதந்தி என்ற செய்தியால் மட்டுமே முடிந்தது. அவர் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்களின் வலிமையை அனைவரும் உணர்ந்து கொள்ள அந்த ஒரு நிகழ்வு போதுமாயிருந்தது.

    மனிதன் என்று பிறந்தானோ மரணமும் அவனோடு சேர்ந்தே பிறந்து விடும் என்னும் உண்மையைப் பொய்யாக்கி எம்.ஜி.ஆர் அவர்களை சிரஞ்சீவியாக வாழவைக்க வழி தேடியது அவரது ரசிக மனங்கள். அதன் வெளிப்பாடும் தெரியப் படுத்தும் விதமாக அந்த நாளும் வந்தது.

    அழிவில்லாத மக்கள் செல்வாக்கு:
    அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம் தான் அது. ஒரு நாட்டையே உலுக்கி எடுத்த நாட்கள் அவை. கூட்டுப் பிரார்த்தனை இல்லை. நாட்டுப் பிரார்த்தை அது. எங்கள் எம்.ஜி.ஆர். மீண்டும் நலம் பெற வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனை. தொடர்ந்த பிரார்த்தனையாக அவர் நடித்த படப்பாடலே எங்கும் ஒலித்து பிரபஞ்ச சக்தியை கெஞ்சிக் கொண்டிருந்தது.

    இறைவா உன் மாளிகையில்
    எத்தனையோ மணி விளக்கு
    தலைவா உன் காலடியில்
    என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு…!

    இதன் அடுத்த வரி நம் அனைத்து இதயத்துள்ளும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பிரார்த்தனை வரிகள் தான்..நம்பிக்கையோடு பல்லாயிரக் கணக்கான இதயங்களின், ஒரே ஒரு மனிதனின் இதயத்துடிப்பின் தொடர்ச்சிக்காக இசையால் கையேந்திக் கதறிய நாட்கள் அவை. இந்த நாட்டுப் பிரார்த்தனை எந்தக் காலக்கட்டத்திலும் நடந்திராத ஒரு உலகளாவிய அதிசயம் தான். அதன் முன்பும், அதன் பின்பும் யாருக்காகவும் நடந்திருப்பதாக சரித்திர வரலாறு கூட இல்லை எனலாம்.. ஒரு உயிரின் மீது லட்சோப லட்ச மக்களின் ஆளுமையும் அன்பும் கரை புரள அதைத் தாங்கிய புரட்சித் தலைவர் எனும் அந்தப் பொன்மனச் செம்மலை மட்டுமே சேரும். பிரபஞ்சம் விடை சொன்னது. அவரை மீட்டுக் கொடுத்தது. மக்களின் மனத்துள் பால் வார்த்தது. இந்த நாடே அவர் ஒருவருக்காகவே உருவானதோ என்று எண்ணும் அளவுக்கு அவரது செல்வாக்கும் புகழும் ஓங்கி உலகளந்தது .

    ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — சுரேஜமீ.

     

    நான் பார்த்த எம்.ஜி.ஆர்

    அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும் என நினைக்கிறேன். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, களத்த்தில் நிற்கும் ஜாம்பவான்களுக்கிடையே, புதிதாய் முளைத்த இலை வருகிறது! முதன் முதலில் எங்கள் வீட்டில், DMK & ADMK என்ற சொற்கள் உபயோகிகப் படுகின்றன. அதுதான், என் முதல் பசுமையான நினைவு மக்கள் திலகம் பற்றி! (1976-77).

    அதன் பின்னர், வெள்ளித் திரையில் நான் பார்த்த பல திரைப்படங்கள்! ஒரு காலத்தில் காலை, பகல் மற்றும் இரவுக்காட்சியென மூன்று வேளைகளிலும் பைத்தியமாக என் தந்தையுடன் பார்த்த திரைப்படங்கள் சொன்னது …
    யார் இவர் என!

    மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழவேண்டும்!

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

    நான் ஆணையிட்டால்; அது நடந்து விட்டால்
    இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !

    என எத்தனையோ பாடல்களின் வரிகள் என் இரத்தத்தில் கலந்து இரத்தத்தின் இரத்தமாக்கிய தருணங்கள் பொன்னானவை என்றால் மிகையாகது!
    தமிழின் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல்தான் புரட்சித்தலைவர்! இன்றைக்கு இருக்கக்கூடிய பல அரசியல் தலைவர்களை இனம் கண்டு படிக்க வைத்து, வாழ்க்கை கொடுத்தவரை வள்ளல் என்றுதானே தமிழ் சொல்கிறது! கர்மவீரர் காமராஜருக்குப் பின் கல்வியின் வலிமையை அறிந்து அதைக் கடைக்கோடித் தமிழனும் பெறவேண்டுமென்றும், பட்டினி பள்ளிக் கல்வியைத் தடுக்கக் கூடாதென்றும், சத்துள்ள உணவு தந்த அன்னை சத்யாவின் புதல்வர்தான் எம்.ஜி.ஆர்!

    தலைவனுக்கு எடுத்துக்காட்டு:
    அடுத்து நான் பார்த்த எம்.ஜி.ஆர் ஒரு பத்து பதினோரு வயது இருக்குமென நினைக்கிறேன்! முகவை மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டம்; வானம் பார்த்த பூமி. மக்கள் கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம் என அனைத்திலும் பின் தங்கியிருந்த காலம். சாதிக்கலவரம் கோலோச்சிய நேரம். (1981).

    அப்படி ஒரு கலவரத்தில், முகவையும்; சுற்று வட்டாரமும் பற்றி எரிகிறது! வீடுகளை விட்டு வீதிகளில் செல்கின்றனர் மக்கள். உடமைகள் போனால் என்ன; உயிரல்லவா முக்கியம் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் தஞ்சம் தேடி அலைகிறது! வீடுகள் தீக்கிரையாக்கப் படுகிறது! எங்கு பார்த்தாலும் வெட்டு; குத்து; கொலை; மனித உயிரைக் குடிக்க மனிதனே துடிக்கின்ற அவலம்! ஊரடங்கு பிறப்பிக்கப் படுகிறது. கலவரம் கட்டுக்குள் வருகிறது.

    மக்களின் தலைவர், மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வருகிறார். என்னுடைய கிராமத்திற்கு மிக அருகில் உள்ள கிராமத்திற்கு! அவரது கண்கள் பனிக்கின்றன! வேதனை அவர் நெஞ்சை அடைக்கிறது! பார்த்த அத்துனை உள்ளங்களும் உடைந்து உருகுகின்றன! இதுதான் ஒரு தலைவனுக்கு எடுத்துக்காட்டு என என் பிஞ்சு நெஞ்சில் அன்று விதைத்த விதைதான் இன்னும் என்னை மனிதாபிமானமுள்ள மனிதனாக வைத்திருக்கிறதென்று பெருமைப்படுகின்ற தருணங்கள் அவை!

    வாழ்க்கையே பார்த்து அஞ்சிய தலைவன்:
    அடுத்து வருவதோ, எம் இனப் பிரச்சினை. நாங்கள் இருப்பதோ முகவை. கரைக்கு இந்தப் பக்கம் ராமேஸ்வரம். அந்தப் பக்கம் மன்னார். ஈழத்தின் இனவாதம் உச்சத்தில் இருக்கிறது. பிரித்தானிய கொள்கையை; பிரித்தாளும் சூழ்ச்சியை இலங்கைப் பேரினவாதம் தமிழ் குழுக்களுக்குள் வித்திட்டு, இரண்டு பக்கங்களிலும் (ஒன்று அரசாங்கம்; மற்றொன்று போராடும் தமிழ் வர்க்கம்) நம் இன மக்கள் அவதியுற்று அடைக்கலம் நாடி தாய்த்தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்! (1981-82).

    மக்களுக்காகவே தலைவனானவனாயிற்றே. எப்படிப் பொறுப்பான்? அகதிகளுக்காகவே, அன்றைக்கு ஒரு அமைச்சகத்தை உருவாக்கி, அதற்கு அமைச்சராக அன்றைய முகவை சட்ட மன்ற உறுப்பினர், அருமை அண்ணன் மறைந்த திரு. டி. இராமசாமி அவர்கள் அமைச்சராக்கப் படுகிறார்கள்! அதுமட்டுமா? அதன்பின் மக்கள் திலகம் செய்த உதவிகள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக ஏராளம்! அது நம் நெஞ்சத்தில் என்றும் நிலழாடும்!

    வாழ்க்கையப் பார்த்து அஞ்சிய தலைவர்களுக்கிடையே, வாழ்க்கையே பார்த்து அஞ்சிய தலைவன் ‘மக்கள் திலகம்’ என்றால் மிகையாகாது! முன் வாழ்க்கையின் வறுமை தந்ததுதான் பின் வாழ்க்கை என்பதனால் தானோ, மக்களின் வறுமையை ஒழிக்க எண்ணிய வள்ளலாகத் திகழ்ந்த ஒப்பற்ற, மாற்றாரும் வணங்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார்.

    தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்த தொண்டுகள்:
    பொன்மனச் செம்மல் தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்த தொண்டுகள் ஏராளம்; அதில் முத்தாய்ப்பான சிலவற்றைப் பார்போமா?

    1. முதலில் வருவது நான் வணங்கும் ஆசான், என் தமிழின் தடாகம்; தமிழ்த்தாயின் இளைய மகன் முத்தையா எனும் கண்ணதாசன்; கவிக்கெல்லாம் அரசன்; கலைவாணியின் அருள்பெற்ற கவியரசரை அரசவைக் கவிஞராக அமர்த்தி அழகு பார்த்தது! (1978)

    2. தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியது. எத்தனை பேருக்கு இது நினைவில் இருக்குமெனத் தெரியவில்லை! (உதாரணத்திற்கு: றா, னா, ணா, லை, ளை, னை, ணை என்பன)

    3. சங்கம் வளர்த்த மதுரையில், தமிழுக்கு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தித் தமிழ் அறிஞர்களைக் கொளரவப்படுத்தியவர்!

    4. கல்லாதோரில்லாத் தமிழகத்திற்காக ‘முதியோர் கல்வி’!

    5. தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம்!

    6. இலவச பாடநூல் வழங்கும் திட்டம்!

    7. ஈழப் பிரச்சினைக்கு ஆற்றிய பணிகள்!

    என அடுக்கிக்கொண்டே போகலாம்; ஆனால், எழுத்தின் அளவும்; வாசிப்பின் சுவாசிப்பும் கருதி, என் கருத்தினை, நான் பார்த்த அனுபவத்தின் அடிப்படையில், என்னுள் வாழ்கின்ற தலைவனைப் பற்றி எடுத்து வைத்திருக்கிறேன். அதன் முடிவாக,

    தமிழகம் போற்றும் ஒப்பற்ற தலைவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான் என்ற செய்தி ஊடகங்களில் பரவக் கேட்ட மக்கள் அலை மோதுகின்றன மருத்துவ மனை நோக்கி, மக்கள் தலைவனின் நலம் வேண்டி! என் இதயக் கண் முன்னே அன்றைய நிழல் காட்சிகள் ஓடுவதை வர்ணிக்க மனம் சற்று கிலேசமடைகிறது!

    அமெரிக்கா பயணம்:
    பின்னர், மேல் சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்கிறார். அங்கு உலகில் தலை சிறந்த மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைத் தொடர்கிறது. ஆனால், தமிழகத்திலோ, தங்கத் தலைவனின் நலம் வேண்டி கோவில்கள்; தேவாலயங்கள்; மசூதிகள் என எல்லா இடங்களிலும், மக்களின் பிரார்த்தனை எம் மன்னனை வாழவிடு என்று!

    இச்சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒளி விளக்கு என்ற ஒரு திரைப்படம். அதில் வரும் ஒரு பாடல் காட்சி; சொகார் ஜானகி அவர்கள், மனமுருகி இறைவனிடம் வேண்டுவார்….

    என்னுயிரைத் தருகின்றேன்…..மன்னனுயிர் காத்துவிடு என்று!

    இப்பாடலின் முதல் வரிகள்

    இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு;
    தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு !

    தமிழகத்தின் பட்டி, தொட்டியெல்லாம் இப்பாடல் ஒலிக்காத இடமே இல்லையெனலாம்! அவர்கள் அத்துனை பேருடைய நம்பிக்கையும், மக்கள் திலகத்தை மீட்டுக் கொண்டுவந்தது என்று சொன்னால், அது தலைவனின் மேல் தமிழனுக்கு இருந்த நம்பிக்கைக்குக் கிடைத்த பெருமை!

    கடைசி அரசு விழா:
    கடைசி அரசு விழா. அதுவும் என் நெஞ்சைத் தட்டுகிறது. ஆசிய ஜோதி நேருவுக்கு, சென்னை கத்திப்பாராவிலே சிலை திறக்கும் விழா! அன்னை இந்திரா மறைந்த செய்தி கூட என் மன்னனின் உடல் நலம் கருதி மறைக்கப்பட்டிருந்தாலும், இந்திராவின் புதல்வர், மறைந்த இளம் இந்தியப் பிரதமர் ராஜீவுடன் கலந்து கொண்ட அந்த விழாதான், அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் கடைசி விழாவாகிப்போனது!

    மறைவின் செய்தி பரவிய நேரம், தமிழகமே திரண்டது தலை நகர் நோக்கி! எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்! தன் வீட்டில் ஒருவன் மறைந்தது போன்ற உணர்ச்சிப் பெருக்கு!
    மன்னவனை மண்ணும் போற்ற, தன்னுள்ளே வாங்கிக் கொண்டது!
    அலைகடலும், அடைக்கலம் நானென்றது!
    வான் மகளோ தினமும் நானுன்னை வணங்குவேன் என்றது! மன்னவன் புகழ் பாட

    மக்கள் திலகம் பற்றி ஒரு சின்னக் கவிதை!
    (பொன்மனச் செம்மலின் பிறந்த தினமான ஜனவரி 17 அன்று எழுதியது)

    இவன்
    மாற்றான் தோட்டத்து
    மல்லிகையாய்
    இருந்தும்;
    மணம் வீசியதென்னவோ
    நம் தோட்டத்தில்தான்!

    தமிழுக்கே
    திலகம்
    வைத்தவன்!
    தமிழகத்திற்குத்
    திலகமாய்
    இருந்தவன்!
    அவன் தான்
    மக்கள்
    திலகம்!

    தாயைவிட
    தமிழை
    நேசித்தவன்!

    ஆம்!
    பசுத்தோல்
    போர்த்திய
    புலிகளுக்கிடையே
    புலியையே
    மடியில்
    கிடத்தி
    போலிகளை
    விரட்டிய
    புண்ணியவான்!

    இன்னும்
    என் மக்களின்
    இதயக் கோயிலில்
    வாழும்
    இரட்டை இலைத்
    தெய்வமிவன்!

    இந்த நாள்
    அன்று
    தீர்மானிக்கப் பட்டது;
    இவன் பிறந்தால்
    தமிழகம்
    தலை நிமிரும்
    என்று!

    அந்தப்
    பொன்னாள்
    இன்றும்
    வருகிறது!

    வாழ்த்தும்
    உள்ளங்கள்
    வாழட்டும்!
    பொன்மனச்
    செம்மலின்
    பொன்னான
    பிறந்தநாள்
    இன்று!!

    முடிவுரை:
    இந்தக் கட்டுரைத் தகவல்கள் தாங்கி வந்தது என் இதயத்திலிருந்த நினைவுகளை! இதைப் படிக்கும், உங்கள் உள்ளத்தில் கடுகளவாவது என் மன்னனின் பண்புகள் வேரூன்றுமானால்,

    அந்தப் பரிசுக்கு இணை நிச்சயமாக வேறேதுமில்லை எனக்கு!

    வாழ்க தமிழ்! வளர்க தமிழர் தம் இல்லங்கள்! ஓங்குக மக்கள் தலைவனின் புகழ்!!

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    –ஆகிரா.

    அறிமுகம்:
    “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?
    மாபெரும் வீரர் மானம் காத்தோர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்.”

    என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலைப் பாடிக்கொண்டே அக்கால இளவரசு குதிரை வண்டியில் நண்பன் குலதெய்வம் ராஜகோபாலுடன் சவாரி செய்யும் “மன்னாதி மன்ன”னாக பவனி வந்த மக்கள் திலகம் அவர்களது நாட்டியத் திறமை அதே திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியுடன் அவர் போட்டி நடனம் புரிந்து வெல்வதாகப் படமெடுக்கப் பட்ட காட்சிகளில் தெளிவாயிற்று. நாட்டியத்தில் மட்டுமின்றி இசையிலும் அவர் திறமை மிக்கவர் என்பது அதே திரைப்படத்தில் அவர் பத்மினி ஆடும் நடனத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட தாள வாத்தியக் கருவிகளைக் கொண்டு தாளம் போடுவதாக அமைந்த, டி.எம். சௌந்தரராஜன், எம்.எல். வசந்தகுமாரி குரல்களில் ஒலிக்கும் “ஆடாத மனமும் உண்டோ?” எனும் பாடல் காட்சியில் தெளிவானது. அதே திரைப் படத்திலும் அனேகமாக அவர் நடித்த அனைத்துத் திரைப் படங்களிலும் அவர் பங்கு பெற்ற சண்டைக் காட்சிகளைக் கண்டு பாராட்டாத ரசிகர் யாரும் இல்லை என்பது பிரசித்தம்.

    பண்டைய பாரத மன்னர்களைப் போலவே யானையேற்றம், குதிரை சவாரி, வாட்போர், மற்போர், கம்பு சுழற்றுதல் மற்றும் பல்வேறு சாகசக் கலைகளில் தலைசிறந்து விளங்கினார் எம்.ஜி.ஆர். அவரது திரைப்படம் வெளியாகிறதென்றால் அத்திரையரங்குகளில் கூட்டம் வரலாறு காணாத அளவுக்குக் காணப்படும். 1964-ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப் படத்தைத் திரையிட்ட கிராமப்புற ஓலைக் கொட்டகைத் திரையரங்குகளில் டிக்கட் கவுண்டர்களின் முன்னால் போடப்பட்ட தடுப்புகள் தவிடுபொடியாயின. அதுவரையில் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் அப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்டதில்லை, அதன் பிறகும் கண்டதில்லை. எம்.ஜி.ஆர். என்பது ஒரு தாரக மந்திரமாகவே விளங்கிற்று. அவர் பெயரைக் கேட்டால் “மயங்காத மனம் யாவும் மயங்கும்” எனக் “காஞ்சித் தலைவன்” திரைப்படத்தில் பானுமதி பாடும் பாடல் போலவே அனைவரது மனங்களும் மயங்கும். அவரது திரைப்படங்களைக் கண்டு மகிழாத மக்கள் மிகவும் குறைவே.

    மக்களின் மனங்களில் மாறா இடம்:
    தனது குணச்சித்திர நடிப்பினாலும் பல்வேறு வகையான பாத்திரங்களை ஏற்று, அப்பாத்திரங்களாகவே தான் மாறி ரசிகர்களைத் தன்பால் ஈர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப் படங்களைக் காட்டிலும் எம்.ஜி.ஆர். அவர்களது திரைப் படங்கள் அதிகப் பொழுது போக்கு அம்சங்களுடன் காண வருவோர் மனங்களைக் குளிர்விக்கும் தன்மை கொண்டவையாய் இருந்ததுடன் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய சீரிய அறிவுரைகள் நிறைந்திருந்தமையே எம்.ஜி.ஆர். மக்கள் திலகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் அடிப்படை ரகசியமாகும்.

    கொடுக்குற காலம் நெருங்குவதால்
    இனி எடுக்குற அவசியம் இருக்காது
    இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
    பதுக்குற வேலையும் இருக்காது
    ஒதுக்குற வேலையும் இருக்காது
    உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டாக்
    கெடுக்குற நோக்கம் வளராது
    மனம் கீழும் மேலும் புரளாது.”

    எனக் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் எழுதிய,
    “திருடாதே பாப்பா திருடாதே,
    வறுமை நிலைக்கு பயந்து விடாதே,
    திறமை இருக்கு மறந்து விடாதே”
    எனும் “திருடாதே” படப் பாடலைக் கேட்டுத் திருந்தியவர்கள் ஏராளம்.

    திரைப்படங்களில் நடித்ததுடன் நில்லாது மக்கள் திலகம் சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டு பல்வேறு காரணங்களால் அவதியுற்ற மக்களின் துயர் நீங்க அரும்பாடு பட்டார். கை ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓட்டிப் பிழைப்போர், மீனவர்கள், ஏழைத் தொழிலாளிகள், விவசாயிகள் முதலானோர் வாழும் வாழ்க்கையினை விளக்கும் பல திரைப்படங்களைத் தந்ததோடு அவர்களது குறைகள் களைய நிஜ வாழ்வில் பெரும் பொருளுதவியும், வேறு பலவித உதவிகளையும் அவர் செய்தார்.

    “கடல்நீர் நடுவே பயணம் போனால்
    குடிநீர் தருபவர் யாரோ?
    தனியாய் வருவோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ?
    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்;
    ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
    உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”
    எனும் உயிர்த்துடிப்பு மிக்க வரிகளுடன் கவிஞர் வாலி எழுதிய

    “தரை மேல் பிறக்க வைத்தாய்
    எங்களைத் தண்ணீரில் திளைக்க வைத்தாய்,
    கரைமேல் இருக்க வைத்தாய்
    பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தாய்”
    எனும் மீனவர்கள் படும் துயரத்தை விளக்கும் பாடலைப் “படகோட்டி” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கக்கண்டு கண்ணீர் உகுக்காதவர் வெகு சிலரே.

    “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
    ஒழுங்காய்ப் பாடுபடு வயக்காட்டில்,
    உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”
    எனும் வாலி பாடலை டி.எம்.எஸ். குரலில் பாடி கே.ஆர். விஜயாவுடன் அவர் நடித்த “விவசாயி” படம் விவசாயத்தின் பெருமையைப் பறைசாற்றிற்று. பேருந்து நடத்துனராகப் பணி செய்கையில் தன் தாய் வழியில் நிற்கக் கண்டும் அதிகம் பேரை ஏற்றக்கூடாது எனும் சட்டத்தை மதித்துத் தாய்க்கும் பேருந்தில் இடமளிக்காமல் நடத்தும் காட்சியும், பின் அதே பேருந்துக் கம்பெனியில் அதிகாரி பதவி பெற்று அதன் பின் முதலாளியின் மகள் கே.ஆர். விஜயாவின் காதலை ஏற்க மறுத்ததால் வேலையிழந்து கைவண்டி இழுத்துக் கொண்டு அவர் பாடுவதாக, “தொழிலாளி” படத்தில் அமைந்த
    “ஆண்டவன் உலகத்தின் முதலாளி,
    அவனுக்கு நானொரு தொழிலாளி,
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி”
    என டி.எம்.எஸ். குரலில் அமைந்த பாடல் தொழிலாளியின் பெருமையை இனிமையான இசையுடன் விளக்குவதாகும்.

    சென்னையை அடுத்த பரங்கிமலை எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராய் விளங்கிய தொகுதியாகும். அங்கே எம்.ஜி.ஆர். தோட்டம் இன்னும் சிறப்புடன் விளங்குகிறது. அங்கே காது கேளாத குழந்தைகள் பலர் இலவசமாய்க் கல்வி பெற ஒரு அருமையான பள்ளிக் கூடம் எம்.ஜி.ஆர். அருளால் துவங்கப் பட்டு இன்றும் சீரும் சிறப்புமாய் நடந்து வருகிறது.

    எல்லா அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கும் நோக்கில் பெருந்தலைவர் காமராஜர் துவக்கி வைத்துத் திறம்பட நடத்தி வந்த மதிய உணவுத் திட்டத்துடன் பள்ளிகளில் மட்டுமின்றி வேறு பல மையங்களிலும் ஏழைக் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கவும், அம்மையங்களில் அவர்களுக்குப் பாடங்கள் சொல்லித் தரவும் ஏற்ற வகையில் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கையில்.

    எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்:
    அகத்திய முனிவர் காவேரி நதியையே தன் சிறு கமண்டலத்தில் அடைத்தாரம். அது போன்றே எம்.ஜி.ஆர். குறித்த கட்டுரையை 1500 வார்த்தைகளுக்குள் அடக்குவதும் ஆகும். ஏனெனில், அவரது தனிமனித சிறப்பு குறித்தும் அவரது படங்கள் குறித்தும் எழுதத் துவங்கினால் மகாபாரதத்தையும் விட அதிகமான பக்கங்கள் நிறையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும் என் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய விஷயங்களை மட்டும் முன்வைக்கிறேன்.

    வி.என். ஜானகி, பானுமதி, சரோஜா தேவி, சாவித்திரி, மாலினி, கே.ஆர். விஜயா, ரத்னா, ஜெயலலிதா, மஞ்சுளா உட்படப் பல கதாநாயகிகளுடனும் சேர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அன்றும் இன்றும் என்றும் பார்த்து இன்புறத் தக்க இனிய காவியங்களாகும். திரைப்படங்களில் கண்கவரும் பாடல் காட்சிகளும், செட்டிங்குகளும், சந்திரபாபு, எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, நாகேஷ், மனோரமா, குமாரி சச்சு, ஐசரி வேலன் உட்படப் பல நகைச்சுவை நடிகர்கள் இடம்பெற்ற இனிய நகைச்சுவைக் காட்சிகளும் குறைவின்றி நிறைந்திருந்தன. கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், மருதகாசி, புலமைப் பித்தன், தஞ்சை ராமையா தாஸ், வாலி உட்படப் பல கவிஞர்கள் இயற்றிய அரிய பொருட்செறிவு மிக்க எம்.ஜி.ஆர். படப் பாடல்கள் திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உட்படப் பல திறமைமிக்க இசையமைப்பாளர்களது இசையில் என்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் தன்மையவை. ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ் உட்படப் பல பிரபலப் பாடகர்கள் என்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்துப் பாடியுள்ளனர்.

    எம்.ஜி.ஆர். படங்களில் பி.எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், டி.எஸ். பாலையா, சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா, என்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், ஆர்.எஸ். மனோகர் முதலானோர் முக்கிய வில்லன் பாத்திரங்களிலும் பிற குணச்சித்திரப் பாத்திரங்களிலும் தவறாமல் பங்கு பெற்றனர். நடிப்புத் திறமையில் புகழ்பெற்று விளங்கிய எந்த நடிகரையும் எம்.ஜி.ஆர். தன் படத்தில் பங்கேற்க வைப்பதில் மிக முனைப்புடன் இருந்தார். சிவகுமார், டி.கே. பகவதி, எஸ்.வி, சஹஸ்ரநாமம், எம்.வி. ராஜம்மா, பண்டரி பாய் முதலானோர் அவரது பல படங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். சின்னப்பா தேவர் எம்.ஜி,ஆர். அவர்ககளை வைத்துப் பல திரைப்படங்கள் தயாரித்துள்ளார்.

    மாறுவேட மாமன்னன்:
    எம்.ஜி.ஆர். மாறுவேடம் புனைந்து நடிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர். “குலேபகாவலி” திரைப்படத்தில் கிழவர் வேடம் பூண்டு டி.ஆர். ராஜகுமாரியும் தங்கவேலுவும் சேர்ந்து நடத்தும் ஏமாற்று பகடை விளையாட்டை வெளிச்சமாக்கும் காட்சிகளும், “பாக்தாத் திருடன்” படத்தில் அருவருப்பான கிழவர் வேடம் பூண்டு அடிமையாக விற்கப்படும் கதாநாயகி வைஜயந்திமாலாவை விலை கொடுத்து வாங்கி அவள் இரவில் திருட்டுத் தனமாகத் தன்னிடமிருந்து தப்ப முயல்கையில் பிடித்து, “யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே? எங்கே ஓடுறே? சொல்லு” எனும் பாடலைப் பாடும் காட்சிகளும், “மஹாதேவி” திரைப்படத்தில் குருடனாகத் தாயத்து விற்றுக்கொண்டே, “தாயத்து அம்மா தாயத்து” என்று பாடிச் சென்று மக்களூக்குத் தாயத்துகள் மூலம் ரகசிய செய்தி சொல்லும் காட்சிகளும், “படகோட்டி” படத்தில் வளையல் காரராக வேடம் பூண்டு எதிரிகளால் சிறை வைக்கப்பட்டிருக்கும் நாயகி சரோஜா தேவியை சந்தித்து, “கல்யாணப் பொண்ணு, கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்” என்று பாடி ஆடி தைரியமூட்டும் காட்சிகளும் “குமரிக்கோட்டம்” திரைப்படத்தில் மொட்டைத் தலையுடன் நெற்றி நிறையத் திருநீற்றுடன் அவர் செய்யும் கதாகாலக்ஷேபமும், “இதயவீணை” திரைப்படத்தில் சாமியார் வேடம் பூண்டு தன் சகோதரியின் திருமணம் நிகழும் மண்டபத்தில் வாயிலில் நின்று, “திருநிறைச் செல்வி, மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக” என்று பாடி மணமக்களை ஆசீர்வதிக்கும் காட்சிகளும் எம்.ஜி.ஆர். அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துகின்றன.

    புரட்சித் தலைவர்:
    “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” எனும் பாடலை “மலைக்கள்ளன்” படத்தில் பாடி நடித்த எம்.ஜி.ஆர். புரட்சி நடிகர் என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் புகழப் பட்டார் முன்பு. அதே பாடலில் வரும்,
    “தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்,
    கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்,
    கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்,
    ஊரில் கஞ்சிக்கில்லை எனும்
    கொடுமையைப் போக்குவோம்”
    எனும் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் தான் முதல்வரான பின்பு செயல்பட்டவர். புரட்சி நடிகர் புரட்சித் தலைவரான வரலாறு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம். இங்கே அரசியல் வேண்டாம் என்பதால் எழுதவில்லை.

    பொன்மனச் செம்மல்:
    திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவரது சேவை மனப்பான்மையைப் பாராட்டிப் “பொன்மனச் செம்மல்” என்று பட்டம் சூட்டினார். அப்பெயர் இன்றளவும் நீடித்து நிற்கிறது, இனி என்றும் நிலைத்து நிற்கும். “பொன்மனச் செம்மலைப் புண்பட வைத்தது யாரோ?” எனும் தஞ்சை ராமையா தாஸ் அவர்கள் இயற்றிய பாடல் வாணி ஜெயராம் பாட, எம்.ஜி.ஆர்., லதா ஆகியோர் நடிக்க இடம்பெற்ற படம் “சிரித்து வாழ வேண்டும்”.

    எம்.ஜி.ஆர். ரின் முதல் படம் “சதி லீலாவதி”. அதன் பின்னர் அவர் “ராஜகுமாரி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் அவரது இறுதிப் படமான, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” வரை கதாநாயகனாகவே நடித்து வந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த ஓரே திரைப்படம், “கூண்டுக் கிளி”. அதன் பின்னர் சிவாஜிக்குப் போட்டியாகத் தனியாக நடித்து வந்தாலும் தான் முதல்வரான பின்னர் கலைத்துறை தொடர்பான எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த போதும் சிவாஜியை அழைத்து மேடையில் அமர்த்தி உரிய மரியாதை செலுத்தத் தவறியதில்லை.

    அடிமைப்பெண் திரைப்படத்தில் முதல் முதலாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டார். பாடல் பதிவு செய்யும் நாளில் எஸ்.பி.பி. உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதால் பதிவு செய்யும் நாளைத் தள்ளி வைத்தார் எம்.ஜி.ஆர். பின்னர் பதிவு செய்யப்பட்டு ரசிகர்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட பாடலே,

    “ஆயிரம் நிலவே வா,
    ஓராயிரம் நிலவே வா,
    இதழோரம் சுவை தேட,
    புதுப் பாடல் விழி பாடப் பாட”
    எனும் பாடல். அப்பாடலுடன் தன் தமிழ்த் திரையிசைப் பயணத்தைத் துவங்கிய எஸ்.பி.பி. இன்று சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறி நிற்கிறார்.

    தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை கொண்ட பொன்மனச்செம்மலன்றோ எம்.ஜி.ஆர்!

    “ஒளிவிளக்கு” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடும் நிலையில் படுத்திருக்க, அவரது உயிரை மீட்டுத்தரக் கோரி சவுகார் ஜானகி அவர்கள் முருகனிடம் வேண்டுவதாக அமைந்த பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,

    “ஆண்டவனே, உன் பாதங்களை நான்
    கண்ணீரில் நீராட்டினேன்,
    இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று
    உன்னிடம் கையேந்தினேன் முருகையா!”
    எனும் பாடல் பிற்காலத்தில் 1984ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னை அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கையில் தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் ஆட்டோ ரிக்ஷாக்களிலும், வேறு பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் வாயிலாகத் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. எம்.ஜி.ஆர். பிழைத்து வர வேண்டும் என வேண்டாத உள்ளங்கள் அரிதாக இருந்தது அந்நாளில்.

    தமிழ் மக்களின் பிரார்த்தனை பலித்தது. எம்.ஜி.ஆர். அவர்களை சகல வசதிகளுடன் ஒரு மருத்துவ மனையாகவே மாற்றப்பட்ட ஆகாய விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்காவில் இருக்கும் ப்ரூக்லின் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல அந்நாளில் பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தியவர்கள் ஏற்பாடு செய்தார். ப்ரூக்லின் மருத்துவமனையில் தன் அண்ணன் சக்கரபாணி அவர்களின் மகள் தானமாகக் கொடுத்த சிறுநீரகம் பொறுத்தப்பட்டு உடல்நலம் தேறிப் புத்துயிர் பெற்றார் எம்.ஜி.ஆர். ப்ரூக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்திலேயே தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிற்று அபார வெற்றியும் பெற்றுத் திரும்பி வந்து முதல்வர் பதவியில் தன் இறுதி மூச்சுள்ள வரை தொடர்ந்தார்.

    எம்.ஜி.ஆர். எனும் ஒளிவிளக்கு இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பானாற் போலத் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கி மக்கள் சொல்லுணாத் துயருற்று விலைவாசி ஏற்றத்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகுவதாலும், தண்ணீர் தரும் ஆறுகள் சாக்கடைகளாகி ஓட, சாராய ஆறு கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடுவதாலும் இன்னும் பல முறைகேடுகளாலும் அவதியுறும் நிலை வந்துற்றது. அவர் அன்று பாடி நடித்த, “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” எனும் பாடலை மீண்டும் பாடி நல்ல காலம் வருமா என ஏங்கும் உள்ளங்கள் விடை தெரியாமல் கலங்கி மடிகின்றன.

    இன்னும் ஒரு பொன்மனச் செம்மல் தமிழ்நாட்டைக் காக்க வர வேண்டும். நம் துன்பங்கள் தீர வேண்டும். அதற்கு மக்கள் திலகத்தின் உயிரைக் காத்த முருகன் அருள்புரிய வேண்டும்.

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — சி. எஸ். குமார்.

     

     

    உலகத் திரைப்பட வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்து என்றென்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் ஒருவர் வாழ்கிறார் என்றால் உலக வரலாற்றில் அவர் மக்கள் திலகம் ஒருவரே. இயற்கையான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் .ஆஸ்கர் விருதை விட, மக்கள் தந்த விருது ”மக்கள் திலகம் எம்ஜிஆர் ”- இது ஒன்று போதுமே.

    எம்ஜிஆர் படங்களையும், அவரது ரசிகர்களையும் ஒரு கால கட்டத்தில் தரமின்றி சில பத்திரிகைகள் விமர்சனம் செய்தார்கள். அடிமட்ட மக்கள் மட்டும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்று ஏளனமாக பார்த்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களைப் பற்றி கவலை படாமல் தன்னுடைய தொழிலில், அரசியலில், பொது வாழ்வில் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி மாபெரும் வெற்றிகளைக் குவித்தார். வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா தரப்பு மக்களின் ஆதரவை பெற்றார்.

    1967 முதல் 1984 வரை நடந்த பல தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் – உழைப்பு – திரைப்பட தாக்கம் மறக்க முடியாதது . அண்ணாவை ஆட்சியில் அமர்த்தினார். பின்னர் கருணாநிதியை ஆட்சியில் அமர வைத்தார் . 1977ல் தானே முதல்வரானார். இந்த விந்தை உலகில் யாருக்கு சாத்தியம்? அவருக்குப் பிறகும் அவருடைய பெயர் – இரட்டை இலை சின்னம் மூலம் மூன்று முறை எம்ஜிஆர் ஆட்சி அமைத்தது – மக்கள் திலகம் எம்ஜிஆர் வலிமை அன்றோ ?

    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படத் துறையை விட்டு விலகி 38 ஆண்டுகள் கடந்த பின்னாலும் இன்றும் அவருடைய எல்லா படங்களும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் புகழ் பாடும் பல புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளது . எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடை பெற்று வருகிறது. மக்கள் திலகம் ஒரு சகாப்தம். சாதனையின் சிகரம் -திரை உலகின் சரித்திரம்.

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    –சக்தி சக்திதாசன்.

    “மக்கள் திலகம்” என்றதுமே ஏதோ இனம்புரியாப் பரவசம் என் மனதில் ஊற்றெடுக்கிறது. அந்த ஊற்றின் மூலத்தைத் தேடிக் கொண்டே சென்றேன் அது என்னை எனது இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றது .

    ஆமாம், எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து, “சக்தி” எனும் இந்த மூன்றெழுத்துடன் பின்னிப்பிணைந்தது இன்று நேற்றல்ல.

    அப்படி என்னதான் இந்த மனிதனுடன் என்னைப் பிணைத்தது?

    மிக ஆழமான கேள்வி? ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் காலடி வைத்திருக்கும் இந்நிலையில் நான் என்னைக் கேட்கிறேன்.

    பதில் மிகவும் விசித்திரமானது.

    “மனிதனாக வாழந்திட வேண்டும் மனதில் வையடா, தம்பி மனதில் வையடா !” என்று மக்கள் திலகத்தின் படத்தில் வரும் பாடலொன்றில் வரிகள் உண்டு.

    உலகில் நன்னெறி கொண்ட மனிதனாக, மக்கள் மனங்களில் கோலோச்சும் மன்னனாக நடைபோட வேண்டுமென்றால் மக்கள் திலகத்தின் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் எனும் உன்னத கருத்தே இம்மாமனிதனுடன் என்னை இணைத்தது என்பதே உண்மையாகும்.

    யார் இவர் ? ஒரு சாதாரண நடிகர் தானே! இவருக்கென்ன இத்தனை விளம்பரம் என்று எண்ணுபவர்கள் இருக்கலாம்.

    இவரின் படத்தில் வரும் பாத்திரங்களில் மயங்கி விட்டாய் என்று சொல்பவர்கள் கூட இருக்கலாம் .

    சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆனால் இம்மானிதர் மக்களுடைய மனங்களில் பிடித்திருக்கும் இடம் காலத்தால் அழிக்கப்பட முடியாத ஒன்றாக இருப்பதற்குக் காரணம் என்ன என்றாவது நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா ?

    மக்கள் திலகம் எனும் இம்மாமனிதருடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இவருடன் பழகிய பலருடன் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

    அவர்களில் முக்கியமானவர் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் கவிஞர் வாலி அவர்கள்.

    அவரைப் பலமுறை சந்தித்து அளவளாவும் பாக்கியம் பெற்றிருந்தேன் . எமது ஒவ்வொருமுறைச் சந்திப்பின் போதும் அவர் எனக்கு மக்கள் திலகத்தின் உயரிய பண்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி உன்னதமாக விளக்குவார்.

    திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைத் தனது குடும்பத்தில் ஒருவராக மதித்து அவர்களது தேவை என்னவோ அதைத் தனது தேவையாகக் கருதி நிறைவேற்றும் அவரது இளகிய மனம் ஒன்றே அவருக்கு “பொன்மனச் செம்மல்” எனும் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் வல்லமை பெற்றது.

    எனது மானசீகக் குரு கவியரசர் கணவிதாசன் அவர்களை தமிழக ஆஸ்தானக் கவிஞராக்கி மகிழ்ந்த அவரது உள்ளத்தை என்னவென்று போற்றுவது.

    கவியரசரது விழுதுகளில் ஒன்றான கண்மணி சுப்பு அவர்களின் சந்திப்பின் போது
    தனது தந்தையின் வேண்டுகோளை சிரமேல் ஏற்று கவியரசரின் மறைவிற்கு பின்னர் அதைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்த பண்பினை மிக அழகாக எடுத்தியம்பியபோது மக்கள் திலகம் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் மர்மம் புரிகிறது.

    நான் படித்த ஒரு சுவையான சம்பவம் எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது .
    பணத்தோட்டம் எனும் படத்திற்காக டி.எம்.எஸ் உம் , பி.சுசீலா வும் பாடிய “பேசுவது கிளியா ?“ எனும் பாடலில் ஒரு பகுதி

    பாடுவது கவியா -இல்லை
    பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவா
    செந்தமிழர் நிலவா …
    என்று வரும் .

    இந்தப் பாடல் எழுதப்பட்ட சமயம் மக்கள் திலகத்தை அவரது தோட்டத்தில் சந்தித்த ஒரு தயாரிப்பாளரிடம் இப்பாடலைக் கேட்டு அவரது கருத்தைக் கூறும்படி மக்கள் திலகம் கேட்டாராம் .

    பாடலைக் கேட்ட அத்தயாரிப்பாளர் உங்களது சரித்திரத்தையே இருவரிகளில் கவியரசர் கண்ணதாசனை விட வேறுயாரால் கூற முடியும் என்று சொன்னராம்.

    அதற்கு மக்கள் திலகம் அது எப்படி ? என்று கேட்க,

    சேரனுக்கு உறவா
    செந்தமிழர் நிலவா

    எனும் இந்த இருவரிகள் உங்கள் சரித்திரத்தைத் தானே கூறுகிறது என்று கூற மக்கள் திலகம் வியப்பில் ஆழ்ந்து கவியரசரின் திறமையை ரசித்தாராம் .

    எனக்கு அப்போது 9 வயது என்று நினைக்கிறேன். எனது தாய்மண்ணாம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.

    “எங்க வீட்டுப் பிள்ளை” யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும் யாழுக்கு விஜயம் செய்திருந்தார்கள்.

    திறந்தததொரு ஜீப் வண்டியில் பலாலி விமான நிலயத்திலிருந்து பலாலி வீதி வழியாக யாழ் நகருக்கு ஊர்கோலமாக அழைத்து வரப்பட்டார்கள்.

    மிகவும் பரபரப்பாக இருந்த என்னை அப்போது விடுமுறையில் வந்திருந்த என் தந்தை எதற்காக இந்தப் பரபரப்பு என்றதும் மக்கள் திலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கேட்டதும் சைக்கிளில் என்னை உட்கார்த்தி யாழ் கந்தர்மடத்தில் பலாலி வீதிச் சந்தியில் எம்.ஜி.ஆரையும் , கன்னடத்துப் பைங்கிளியையும் நேராகப் பார்க்கும் வாய்ப்பை என் அன்புத்தந்தை ஏற்படுத்திக் கொடுத்ததை எப்படி என்னால் மறக்க முடியும்?

    அப்பப்பா ! பொன் வண்ணம் என்பார்களே அப்படியான வதனம், அன்பான புன்னகை அவரைப் பற்றி அவ்வயதில் நான் கொண்டிருந்த கற்பனையை அக்காட்சி எவ்விதத்திலும் சிதறடிக்கவில்லை .

    பின்பு எனது பதினாறவது வயதில் எங்க வீட்டுப் பிள்ளை மீண்டும் யாழ் வெலிங்டன் தியேட்டரில் திரையிடப்பட்ட போது டிக்கெட் கிடைக்காமல் மதில் வழியாகப் பாய முற்பட்டு தியேட்டர் ஊழியர் என் சட்டையைப் பிடித்திழுக்க முதுகுப் பக்கச் சட்டை கிழிந்து சட்டை அவர் கையிலும் நான் உள்ளேயும் விழுந்த அனுபவம் இனிக்கிறது.

    முதுகுப் பக்கச் சட்டை இல்லாமலே அத்திரைப்படத்தை என் நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தது மக்கள் திலத்தின் ஞாபகத்திற்கு ஒரு மகுடமாய் நெஞ்சில் திகழ்கிறது .

    மக்கள் திலகத்தின் திரைப்படப் பாடல்கள் எப்போதும் மனதில் அளவிடமுடியாத உற்சாகத்தைக் கொடுக்கும்.

    இப்போது கூட லண்டனில் எப்போது எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் பார்ப்பதே என் மனதிற்கு ஆனந்தத்தை அளிக்கும்.

    நீ ஆண்டது
    அரியணைக் கதிரையல்ல
    மக்களின்
    அன்பு மனங்களென்பேன்

    காலன் உனைக்
    கவர்ந்து சென்று
    காலங்கள் பல
    கடந்தாலும்
    காலத்தால் அழியாத
    கலங்கரை விளக்காய்
    அரசியல் உலகிற்கு
    ஆணிவேராகினாய்

    மன்னாதி மன்னனாய்
    உலகம் சுறும் வாலிபனாய்
    உழைக்கும் கரங்களோடு
    பட்டிக்காட்டு பொன்னையா
    மாட்டுக்கார வேலனாக
    மக்கள் மனங்களை உழுதாயே !

    மதுரை வீரனாய் நீயோ
    நீதிக்குத் தலைவணங்கும்
    எங்கள் வீட்டுப் பிள்ளையென
    தர்மம் தலைகாக்கும் என
    கலங்கரை விளக்கானாய்

    பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
    தனிப்பிறவி நீ என்வாழ்வில்
    ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
    புதுமைப் பித்தன் நீ
    தாய்சொல்லைத் தட்டாமல்
    தாய்க்குப்பின் தாரம் என
    நல்லவன் வாழ்வான் என்றே
    ஆயிரத்தில் ஒருவனானாய்

    தமிழர்களின் காவல்காரன்
    காத்திருந்தாய் விவசாயிகளை
    ஒருதாய் மக்கள் நாமென்று
    சங்கே முழங்கென்றாய்
    ஊருக்கு உழைப்பவனே
    நம்நாடு என் இதயவீணை
    பாடிய உன் உள்ளமே
    உன் மக்கள் எப்போதும்
    குடியிருந்த கோயில்

     

    Share
  • மறைந்தும் மக்கள் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகம்

    –சித்தார் கோட்டை நூர் மணாளன்.

     

    பிறப்பும் சிறப்பும்:
    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…
    மக்களின் மனதில் நிற்பவர் யார்…?
    என்ற இந்த வினாவை தமிழறிந்த மக்களிடம் வினவினால் எம்.ஜி.ஆர். தான் என பட்டென பதில் வரும்!

    இந்த இருபதாம் நூற்றாண்டில் திரையுலகிலும் அரசியலிலும் விடி வெள்ளியாக ஒளிர்ந்து, தொட்டதெல்லாம் துலங்க கொடிகட்டிப் பறந்து நட்புக்கரம் நீட்டி தன்னை நேசித்த நெஞ்சங்களை அரவணைத்த அற்புதமான கரத்திற்கு சொந்தக்காரரே எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக் காரர்தான்.

    மாநிலத்தில் மானிடராய் பிறந்திட என்ன தவம் செய்தால் நலம் என்றால்… மறைந்த பின்னும் மக்களின் மனதை விட்டு நீங்காது இடம்பிடிக்கும் அளவுக்கு நன்மை செய்தலாகும் என்று வாழ்ந்து காட்டியவர்!!

    வரலாற்று வரிகளில் மறைந்தும் மக்கள் மனதில் நிறைந்தும் வாழுகின்ற அறிஞர் கூட்டம் ஏராளம்! அவர்களது படைப்புகளும் அசாதாரணமான பங்களிப்புகளும்தான் மக்களின் மனங்களில் விழுந்த விதையாகிப் பின் முளைத்து தழைத்து விருட்சமாக எழுந்து பரந்து நிற்கிறது!

    இளமைப் பருவம்:
    வாழ்க்கைத் தளத்தில் முறையாக நடந்து நெறியோடு வாழத் தகுந்த பாதை எதுவென தேடி ஓடிய எம்.ஜி.ஆருக்கு நாடகக் கூடாரம் ஒளி விளக்குடன் மிளிரி அழைப்புக் கொடுத்து அரவணைத்தது!

    நான் ஏன் பிறந்தேன்? என தனக்குத் தானே வெந்து வேதனை வினாவினை தன்னுள் எழுப்பியவாறு வாழும் மக்களிடையே … மக்களின் நெஞ்சங்களில் மஞ்சம் அமைத்து வாழும் அளவுக்கு, மன்னாதி மன்னனாகவும், நாடோடி மன்னனாகவும், காவல்காரனாகவும், அன்னமிட்டகையாகவும், குடியிருந்த கோவிலாகவும், எண்ணை விளக்குகளின் ஒளியில் வாழ்க்கை துவங்கிய எம்.ஜி.ஆர். கண்ணைக்கவரும் வண்ணமயமான மின்னொளியில் மிளிரும் காலம்வரை மண்ணில் வைரமாகவும் விண்ணில் கண் சிமிட்டும் நட்ச்சத்திரமாகவும் ஜொளிக்கலானார்.

    ஆரம்பக் காலங்களில் சில அணாக்களை சம்பளமாகப் பெற்று நடிப்புத்துறையில் நுழைந்தார். தனது சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, தளாரத முயற்சி, இடைவிடாப் பயிற்சி, கண்ணியம் இவைகளுடன் கடமையைச் செய்ததால் பல கோடி பணம் ஈட்டி உயரும் உன்னத நிலையை அடைந்தார்.

    நட்ட மரமே பலனளிக்கும்… என்ற உண்மையை உணர்ந்தவர். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வேண்டும் என எண்ணினார். அதனால் ஏழை எளிய மக்கள் மீது அக்கறை காட்டினார். தன்னால் ஆன உதவிகளைச் செய்து ஏழை மக்களை அரவணைக்கலானார். அதன் பயனாய் சொந்த வாழ்வு பந்த வாழ்வாக மலர்ந்தது.

    பருவ வயது:
    புகழடைய வேண்டுமென்ற அவாவில் மக்களெல்லாம் எதையெதையோ தேடி ஓடும் காலத்தில் எம்.ஜி.ஆரைத் தேடி புகழ் வந்தது. நாடக வாழ்வு முடிவுற திரையுலக வாழ்வுத் தொடரலானது.

    மக்களின் யதார்த்தங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட வசனங்களுக்கு ஏற்ப திரையுலகில் காட்சியளித்த எம்.ஜி.ஆரின் நடிப்பு அவர்பால் மக்கள் மட்டுமல்ல… பற்பல கதாசிரிய விற்பன்னர்களும் அவரது தொடர்புக்காக காத்திருந்தனர். கழகங்கள் பலவும் அவரின் ஆதரவுக்காக அணிவகுத்தது. ஆரம்ப காலங்களில் காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். காங்கிரஸ்காரராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். கதர் ஆடையுடனும் கழுத்தில் துளசி மாலையுடனும் வலம் வந்த அவரை அறிஞர் அண்ணாவின் அழைப்பும், அரவணைப்பும் திரையுலகில் முன்னணி நட்ச்சத்திரமாக ஜொலிக்க வைத்தது. அது மட்டுமல்ல… அவருடைய இளமைக் கால கனவுகளை நனவாக்க அரசியல் பாட்டையும் அவருக்கு கை கொடுத்தது. கால சுழட்சிக்குப் பின்னால் மள மளவென புகழ் அடைந்துவிட்ட பல படங்கள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சேர்த்தது.

    திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணியும் பங்கும் மகத்தானது.

    அண்ணாவின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தம்பியாக ஆரம்பத்தில் இருந்தவர் அண்ணாவின் மறைவுக்குப் பின் அவரது கனவுகளை நனவாக்கிக் காட்டி தமிழ் திரையுலகிலும் அரசியல் உலகிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து அவரின்றி வேறொருவர் அவரிடத்தை அடைய முடியாது என்ற நிலைக்கு ஆளாகிப் போய்விட்டார். அண்ணாவைத் தொட்டவர்களில்… தொடர்ந்தவர்களில் அரியணை ஏறிய பலரில் முதலாமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் என்றால் அது மிகையில்லை.

    பிறந்தது முதல் வேதனைகளும் சோதனைகளும் எம்.ஜி.ஆரின் கரம்பிடித்து நடந்தும் அவரது சுய சாதனையால் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

    திரைத்துறை:
    ‘ரத்னகுமார்’ என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கத் துவங்கியவரை ‘சதிலீலாவதி’ என்ற திரைப்படம்தான் எம்.ஜி.ஆரை அடையாளப்படுத்திக் காட்டியது. அதன்பின் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் கதை வசனங்களுக்கு ஏற்ற நடிப்பு எம்.ஜி.ஆருக்கு ஈடு இணையில்லை என்கிற நிலையை உருவாக்கியது.

    தொடர்ந்து அவர் நடித்த படங்களும், அதன் தலைப்புகளும் அவர் நடந்த தடங்களாகவும், அவர் நடத்தியப் பாடங்களாகவும் ஆகின. பெற்றால்தான் பிள்ளையா, தாயைக் காத்த தனயன், அன்னமிட்டகை, பாசம், ஊருக்கு உழைப்பவன், படகோட்டி, தொழிலாளி, ரிக்க்ஷாக்காரன், விவசாயி, காவல்காரன் என ஒவ்வொரு படத்தின் தலைப்பும் அவருக்குப் புகழை வாரி வாரி வழங்கிட… திரை உலகில் ஒளி விளக்காக மிளிர்ந்து உலகம் சுற்றும் வாலிபனாக இறுதியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனுடன் அவர் தனது திரையுலகத் தொடர்பை காரண காரியங்களை முன்னிட்டு துண்டித்துவிட்டார். அவரது நடிப்பு தான் நின்றுபோனதே தவிர அவரின் இதயத்துடிப்பு நின்றபாடில்லை. இன்றும்கூட அவரது படங்களை விரும்பிப் பார்க்கும் மக்கள் இருந்து கொண்டுள்ளார்கள் என்பதே அதற்குச் சான்று!

    அரசியல்:
    புரட்சி நடிகர் என மக்களால் புகழப்பட்டவர் புரட்சித் தலைவரானார். நாத்திகர்களால் மட்டுமல்ல.. ஆத்திகர்களாலும் போற்றப்பட்டவர். நாட்டின் பற்பல விருதுகளையும், பட்டங்களையும் சுமக்கலானர். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் ‘பொன்மனச் செம்மல்’ என்கிற பட்டத்தையும் பெற்றார்.

    காங்கிரஸ்காரராக கட்சியில் இணைந்தவர் கலையுலகப் பிரவேசத்தின் முதிர்வில், கழகக்காரராக கட்சியில் இணைந்து தமிழக அரசியல் வானில் உதயசூரியனாக உயர்ந்து வலம் வந்தார்.

    அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞரின் ஆட்சி தொடங்கியது. கொள்கைகள் அளவில் உண்டான கருத்து வேறுபாடுகளால் திராவிட முன்னேற்ற கழகத்தை விட்டும் நீங்கியோ, நீக்கப்பட்டோ போன எம். ஜி.ஆர். நன்றி மறவாத தனது தன்மையின் வெளிப்பாடாக அறிஞர் அண்ணாவின் பெயரை முன்வைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்கி இரட்டை இலையை சின்னமாக்கி தமிழக அரியணையில் ஏறி அமர்ந்தார்.

    தனது பிரகாசம் பொருந்திய சட்டதிட்டங்களால் மக்களுக்கு பயனளிக்கும் உதவிகளையும் உபகரணங்களையும் அரசு மூலம் நல்கினார். மறைந்த பின்னும் மக்களின் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகமாக – திகழக் காரணம் அவரது சரியான திட்டங்கள்தான்.

    ஆட்சிக்கு வந்ததும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது, பள்ளிமாணவ மாணவியர்க்கு சீருடை வழங்கியது, சத்துணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது, இன்ன பிற திட்டங்களுடன்… அண்ணாவின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றைக்கொண்டு கருணை உள்ளம் கொண்டு மக்களை அரவணைத்துச் சென்றதால் திரை உலகிலும், அரசியல் உலகிலும் தனக்கென ஓர் தனியிடத்தைப் பிடித்து ‘மக்கள் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகம்’ என்று போற்றுதலுக்கு உரியவராக உயர்ந்துள்ளார்.

    வாழ்க அவரது புகழ்!

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — சுடர்மதி மலர்வேந்தன். 

    முன்னுரரை:
    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை…
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”
    கவியரசரால் எழுதப்பட்ட தீர்க்கமான வரிகள்.

    சரித்திரப் பக்கங்களில் இடம்பெற்ற ஒரு மனிதரின் … திருத்தம்… தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கிவிட்ட ஒரு அசாதாரண மனிதரைப் பற்றியதோர் கட்டுரை. தொட்டவை அனைத்தும் வெற்றிகளாகவே வந்து மடியில் தவழ, இவர் என்ன அதிசயப் பிறவியா? கேள்விகள் இன்றும் கூட இப்படித்தான் கேட்கப்படுகின்றன. இவரைப்பற்றி அறியும்பொழுது, 20-ம் நூற்றாண்டில் பிறந்து, இன்றளவும் நம் உணர்வோடு உறவாடும் மா மனிதர்… மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வருகிறார்… நம்மோடு இந்தக் கட்டுரையில்!

    விடிவெள்ளியின் உதயம்:
    ஜனவரி 17, 1917 கண்டியில் பிறந்த நம் தலைவர் அங்கேயே வளர்ந்து… வாழ்ந்து… உதிர்ந்திருக்க முடியும். கடவுள் நினைத்தார் போலும் “தமிழகமே நம்மை தூற்றும் இச்சக்ரவர்த்தியை அங்கு கொண்டு சேர்க்காவிடில்” என்று! கோபால மேனன், சத்ய பாமா தம்பதியருக்கு ஐந்தாம் பிள்ளையாய் பிறந்தார். ஐவரில் ஒருவன் என்பது போலாகாது.. கையின் கட்டை விரலாய் சிறப்புப் பெற்றார்.

    வறுமை:
    “இளமையில் வறுமை கொடுமை” இலட்சக் கணக்கான மாணவர்களைப் படிக்க வைத்த செம்மல், தன் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத அளவு, வறுமையில் உழன்றவர். தன் இரண்டு வயதில் தந்தையின் அரவணைப்பை இழந்த எம்.ஜி.ஆர். அவர்கள், தாயின் வளர்ப்பிலும், வறுமையின் தவிப்பிலும் வளர்ந்தவர். குடந்தை நகரை அடைந்து இம்மண்ணில் கால் பதித்தார். பின்பு மக்களின் மனதிலும் கூட என்பது உலகறிந்த ஒன்று!

    கலை வாழ்க்கை:
    தன் ஏழு வயதில் நாடகத்துறையில் நுழைந்தபொது எண்ணியிருக்க மாட்டார்… ஆம்… இந்த உலகம் எனும் நாடக மேடையிலும், தான் கதாநாயகனாக வலம் வரப் போகிறோம் என்று! பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் காலத்தின் கட்டாய சூழ்நிலையால் தள்ளப்பட்டு, நாடகங்களில் நடிக்கவந்தவரைப் போல் தெரியவில்லை. ஆர்வமும் தன்னம்பிக்கையும் மிளிர்ந்தன. தன் வாழ்வை முன்னெடுத்துச் செல்ல, தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை அனைவரைக்காட்டிலும் மிகச் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார். உடலையும் மனதையும் ஒருசேர வடிவமைத்துக் கொண்டார்.

    “கல்லுக்குள் உளி செலுத்தி சிற்பத்தைப் பெற வேண்டும்… ஆனால், இங்கோ சிற்பம் தானாகவே தன்னைச் செதுக்கிக் கொண்டிருந்தது” மதுரை ஒரிஜினல் பாய்ஸ் குழுமத்தில்…

    திரையுலகம்:
    அக்காலத்தில் நாடகத்தில் ஒளிரும் மணிகள், பட்டைத்தீட்டப்பட்டு, அடுத்த கட்டமாக இடம்பெறப் போவது திரைத்துறை எனும் கிரீடத்தில் தான் காத்துக் கொண்டிருந்தது போலும். எம்.ஜி.ஆர். தம் வருகைக்காக! ஆரம்ப காலத்தில் சினிமா, ரோஜா மேத்தைபோல அமையவில்லை… முட்களாய் குத்தின தவறிய வாய்ப்புகள். ஆயினும், அம்முட்களையே தன் ஊன்றுகோலாக்கி முன்னேறினார் எம்.ஜி.ஆர் அவர்கள். 1936ல் தொடங்கிய திரை வாழ்க்கையை கைவிட மனமில்லாது, தான் முதல் அமைச்சர் ஆனா பின்னரும்கூட அதனைத் தன்னோடு அதனை இணைத்துக் கொண்டார். கடமை, பற்று என்பது இதுதானா என்று வியக்க வைத்தவரும் இவரே! அரசியல் கடலில் நீந்திக் கொண்டிருக்கும்போதே, நல்ல கருத்துக்களை, இதுவரை தான் சொல்லிவந்த திரைப்படங்கள் வாயிலாகவும் தொடர எண்ணினார்.

    1936 முதல் 1977 வரை கலை உலகில் அவர் ஏற்று நடித்த கதா பாத்திரங்கள், அவரைப் புரட்சி நடிகராக மட்டுமில்லாமல், புரட்சித் தலைவராகவும் மக்களைப் பார்க்கச் செய்தது. தங்கள் அபிமான நடிகராக மட்டுமின்றி, நம்பிக்கை நட்சத்திரமாகவும் எதிர்பார்த்தனர்.

    வெற்றி நாயகன்:
    மருத நாட்டு இளவரசி, மலைக்கள்ளன், குலேபகாவலி, விவசாயி, அடிமைப்பெண், அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன் .. போதும் போதும்! வெற்றிப் படங்களின் பட்டியலிடவே பல ஏடுகள் வேண்டும்! நல்லக் கதைகளையும் கற்பனைத் திறனையும் சுமந்து நின்ற இயக்குனர்களுக்குக் கிடைத்த ஒப்பற்றக் கலைஞன். தயாரிப்பாளர்களின் அட்சயப்பாத்திரம்! முதலில் நாடகம், பின்பு சினிமா, அடுத்து அரசியல் என தன் நிறங்களை மாற்றிக்கொள்ளவில்லை எம்.ஜி.ஆர்.

    தன் பணிகளுக்கிடையே இடையூறு வராத வகையில் 1977வரையிலும் மக்களை மகிழ்விக்கும் கலைஞனாகவும் திகழ்ந்தார். இயக்குனர், தயாரிப்பாளர் என தான் தொட்ட துறைகளெல்லாம் வெற்றிப் பூக்களை மலர்ச் செய்தார்.

    தடைகள் துகள்களாக:
    முடியவே முடியாது! அவரா? கெடுபிடியான அந்த மனிதர் இதற்கெல்லாம் இணங்க மாட்டார்! ஒரு முதல்வர் சினிமாவில் நடிப்பதைத் தொடர்வதா? சாத்தியப்படாத செயல். இவர் யாராக இருக்கக் கூடும்? 1977ல் பிரதமரான மொரார்ஜி தேசாய் தான் அவர்.. ஆம் .. எம்.ஜி.ஆர். தான் தொடர்ந்து நடிக்கப்போவதாக அறிவித்தபோது, இத்துணை எதிர்மறையான உறுதியுரைகளை சுற்றியிருந்தோர் கூறினார்.

    மறுநாள், நாளிதழ்களில் வெளிவந்த செய்தி அத்துனைப் போரையும் மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்தது. “தன் பணிகளுக்கு குந்தகம் நேராமல், திரு எம்.ஜி.ஆர் நடிப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை” எனக் கூறியிருந்தார் மொரார்ஜி.

    இது உண்மைதானா? உண்மை ஆக்கியவர் எம்.ஜி.ஆர். மற்றொரு சம்பவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1972ல் தானே இயக்கிய “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். கட்சியைத் தொடங்கியாயிற்று. எதிர்த்து நிற்பது கருணாநிதி எனும் அரசியல் சிகரம்! இருந்தபோதிலும் படப்பிடிப்பு வேளைகளில் சற்றும் சுணக்கம் காட்டவில்லை. தி.மு.க. மதுரை மாவட்டச் செயலாளர் முத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “உலகம் சுற்றும் வாலிபன்” நம் ஊருக்கு வர மாட்டான். வந்தாலும் ஒரு நாள் கூட ஓடாது. நான் கூறியது தவறானால், சேலைக் கட்டிக் கொள்கிறேன்’ என்றார். படம் திரையானது. ஓடியது.. உசேன் போல்ட் போல மிக பிரம்மிப்பான அளவில்! தமிழகத்தில் மட்டுமல்ல அயல் நாடுகளில் திரையிடப்பட்ட ஒருசில திரைப்படங்களுக்குள் அதுவும் ஒன்று என்ற பெருமையையும் தட்டிச்சென்றது!

    இப்படியும் இருப்பாரா?:
    இருந்தார்… எம்.ஜி.ஆர். 1967-ல் மக்கள் போற்றும் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் சுடப்பட்டார். தகவலறிந்து அதிர்ந்தது தமிழகம். சுட்டவர் எம்.ஆர்.ராதா … “தன் பண பலத்தால், குண்டர்களை வைத்து காமராசரை கொலை செய்ய முயன்றார் எம்.ஜி.ஆர். என்பதுதான் அவர் சார்பாக வைக்கப்பட்ட வாதம்” .எம்.ஆர். ராதா கூறிய அந்த பண பலமும், மக்கள் மன்றத்தில் அவர் பெற்றிருந்த இடமும் அப்போது, எம்.ஜி.ஆரிடம் அதீதமாகவே இருந்தது. ஆனால், ஒரு மாநாட்டு மேடையிலே, “காமராசர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி” என்று தெளிவு படுத்திய எம்.ஜி.ஆர்… எவ்வாறு இப்படி ஒரு செயலை நினைப்பார்? கடுஞ்சொல் கூறியவனையே துரோகி… எதிரி என்று சொல்லும் நபர்களுக்கிடையே எம்.ஆர். ராதா அவர்களைத் தொடர்ந்து தன் நண்பராகவும்… சக பணியாளராகவும் மட்டுமே பார்த்தார் தலைவர் அவர்கள்.

    தி.மு.கவில் பங்களிப்பு:
    1953 தொடக்கம் முதல் 1972 வரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தவிர்க்க முடியாத, தடுக்க முடியாத ஓர் பிரபலமாகவே ஜொலித்தார். கருணாநிதி இறங்கி மைக்கைப் பிடித்தால் ஆர்ப்பரித்தது கூட்டம். எம்.ஜி.ஆர். இறங்கினார். மைக்கைப் பிடிக்க எழுந்தாலே அரங்கம் கர்ஜித்தது. அடுக்கு மொழி வசனங்களால் மக்களை வசியமாக்கும் கலைகளில் வல்லமை பெற்றவர்கள் திராவிடத் தலைவர்கள். தனக்கென்ற தனி பாணியில் மக்களிடையே சென்றார் எம்.ஜி.ஆர். பிரசார பீரங்கியாக சென்ற இடங்களில் எல்லாம் வாக்குகளோடு, மக்களின் தனி அன்பையும் பெற்றுக் கொண்டு தனக்கான ஓர் இடத்தையும் அவர்களிடையே விட்டுச் சென்றார்.

    “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை… இது ஊரறிந்த உண்மை… நான் செல்லுகின்ற பாதை… பேரறிஞர் காட்டும் பாதை” அண்ணாவின் இதயக்கனி ஆனார் மக்கள் திலகம்.

    உதயமானது அஇஅதிமுக … பேரறிஞரின் பாதையிலே!

    1967ல் மேலவை உறுப்பினர்…1969ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் என பல உயரிய பதவிகள் வகித்தாலும், கட்சியின் சாதாரணத் தொண்டனாகவே தன்னைக் கருதினார். தி.மு.கவின் ஒவ்வொரு படி வளர்ச்சியிலும் தன் அயராத உழைப்பை அடித்தளமாக்கினார். கொள்கைகளை விரும்பிய எம்.ஜி.ஆர் அதே சமயத்தில் உள்ளிருக்கும் சில களைகளையும் நீக்க நினைத்தார். அனைத்து தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினரும்… தங்கள் மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களின் சொத்து மதிப்புகளையும் கணக்குகளையும் கட்சியின் முன்பாக பட்டியிலிட வேண்டும் என்று எண்ணினார். அத்துணை பெரும் ஒப்புக் கொள்ளவில்லை. மக்கள் மன்றத்தின் முன் இந்தக் கோரிக்கையை வைக்கப் போவதாகத் தெரிவித்தார். ஆண்டுகளாகக் காத்திருந்த எதிரிகளுக்குக் கிடைத்துவிட்டது துருப்புச் சீட்டு! வெளியேற்ற எத்தனித்தார்கள்.. ஜெயித்தார்கள்.. நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.!

    நான் ஆணையிட்டால்… அது நடந்து விட்டால்… இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்! 17, அக்டோபர் 1972ல் உதயமானது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தன் ரசிகர் மன்றங்களை கட்சி அலுவலகங்களாக மாற்ற அழைத்தார். 20,000 கட்சி அலுவலகங்களோடு ஆரவாரமாக பறக்கிறது இரட்டை இலை.. எம்.ஜி.ஆரின் அரசியல் கனவுகளுக்கு சுருக்குக் கயிறு என்று எண்ணியவர்களைக் கண்டு பரிதாபம் மட்டுமே கொள்ள முடிகிறது. அது அவருக்கு அணிவிக்கப்பட்ட வெற்றி மாலை என அவர்கள் புரிந்து கொள்ள வெகு காலம் ஆகவில்லை.

    வெற்றி முழக்கம்:
    கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் தேடிவந்தது முதலமைச்சர் அரியணை. தி.மு.கவிற்கு அதிமுக எவ்வகையிலும் சளைத்ததல்ல என்பதனைச் சொல்லாமல் சொல்லியது அந்த வெற்றி.

    “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு” … அதுவரை தி.மு.க. செய்யாத அல்லது செய்ய முடியாத ஒன்று! தமிழகம் சார்பாக இருவரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார் எம்.ஜி.ஆர். இந்திரா, மொரார்ஜி… என எந்த அரசு மத்தியில் அமர்ந்தாலும் அவர்களுடன் ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார்.

    சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்:
    எண்ணிலடங்கா சாதனைக் குவியலிலிருந்து சில… தமிழக்கத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவில் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த சத்துணவுத் திட்டம்… பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவுத் திட்டத்தின் மேம்பாடு. 1,20,000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வியை உறுதி செய்த பெருமைக்குரிய செயல்பாடு.

    நெற்களஞ்சியமாம் தஞ்சைக்கு இரு பெரும் சிறப்புகள் ஒன்று தஞ்சை இராச ராசனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில். மற்றொன்று 1981ல் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசால் நிறுவப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம்…

    “ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்…” என்பார்களே அதுபோல தான் இவ்விரண்டும்!

    தமிழர் தலைவர்:
    “நீங்க நல்லா இருக்கணும்… நாடு முன்னேற…
    இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற!

    சென்ற இடங்களிலெல்லாம் புகழ்! வெற்றியின் கூக்குரல்! தமிழகத்திற்கு நன்மை செய்தாரா இந்த முதல்வர்? இல்லை… தமிழர்களுக்குச் செய்தார்… அண்டை நாடான இலங்கையில் மண்ணோடு மண்ணாக அழிந்து வரும் நம் தமிழனத்தின் துயர் கண்டு, வெகுண்டது தமிழகம்… ஆனால், இலங்கையில் இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்! வேறு நாட்டில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து சென்றவர்கள். அனுதாபங்களை அள்ளி வீசுவோம் என்றது இந்திய அரசு! செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் விரைந்தார் டில்லியை நோக்கி… பதிலாக, ஈழத்தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியையும் அளித்தது இந்திய அரசு. கடமை முடிந்தது என்பது போல் நினைக்கவில்லை நம் தலைவர். இயக்கங்களின் தலைவர்களை சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்தார்… நேரடியாக! புலிகளின் முன்னேற்றத்திற்காக… விடுதலை வேட்கைக்காக… நான்கு கோடி தேவைப் பட்டது. அரசாங்க ரீதியாக வழங்க தடைஎற்பட்டபோது, தன் சொந்தப் பணத்தை கரங்கள் சிவக்க அள்ளி வழங்கியவர்.

    அமெரிக்காவை எதிர்நோக்கிய நெஞ்சங்கள்:
    எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் குன்றியபோது, இனி வரமாட்டார்… என்று ஒரு வதந்தி வந்த வேளையில் தமிழகமே இருளானது போல ஒரு மாயை! வதந்திகளும் அவதூறுகளும் புதிததல்ல! பொய்க் கூற்றுகளைத் தவிடுபொடியாக்கினார். நின்றார் ஆண்டிப்பட்டித் தொகுதியில் அமெரிக்காவில் இருந்தபடியே வேட்புமனு பெறப்பட்டது. அபாரமான வெற்றி! அனுதாப வெற்றி என்றார்கள் அறியாதவர்கள். ஆழிப் பேரலையாய் எழுந்து நின்றது தமிழகம். தலைவர் இல்லம் திரும்புகையில் வெற்றிடத்தையும் வெற்றி இடங்களாய் புரட்டிப் போட்டார்!
    1977 முதல் 1987ல் தான் இறக்கும் வரை தொடர்ந்து நீண்ட காலமாக இருந்த ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர். என்ற சிறப்பை இன்றளவும் தன்னோடு மட்டுமே வைத்திருக்கிறார் இந்த மகான்!

    மீளாத் துயர்:
    டிசம்பர் 24, 1987 அதிகாலை 3.30 மணி அத்துணை நெஞ்சங்களையும் சோக வெள்ளத்திலே மூழ்கடித்தது அந்தத் தகவல்! எங்கும் வன்முறை… கதறல், ஸ்தம்பித்தது.. தமிழகம்! வந்த துக்கம் தொண்டையை அடைத்தது! செய்வதறியாது திகைத்த மக்கள், துயரச் செய்தி தாளாது மாண்டோர் பலர்.

    எம்.ஜி.ஆர் ஒரு நபராகவோ… கட்சித் தலைவராகவோ பார்த்திருந்தால் ஏற்பட்டிருக்காது இப்படி ஓர் நிகழ்வு! அனாதைகளாக்கிவிட்டு இம்மண்ணுலகைவிட்டு மட்டுமே சென்றிருந்தார் மக்கள் திலகம்!

    கலைத்துறையில் தேசிய விருதுகள்… இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” என நூற்றுக்கணக்கான விருதுகளின் சொந்தக்காரர் மட்டுமல்ல… தமிழக மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கொள்ளைக்காரரும் கூட!

    முடிவுரை:
    எம்.ஜி.ஆர். அவர்தம் வாழ்வின் சிறப்பைப் பேச எனக்குக் கிடைத்த இந்த 1300 வார்த்தைகள் போதுமா? நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், முதல்வர் … என்னவாக தோற்றம் கொண்டாலும், அவர் மக்கள் திலகம்! இதய தெய்வம்! தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழர்களுக்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்தவர்!

    தொண்டர்களைத் தன் தோழர்களாக பாவித்தவர். எளிமையும் உண்மையும் நெஞ்சில் கொண்ட கொள்கையும் அவரை தமிழக முதல்வர் எனும் சிம்மாசனத்தில் அமரச் செய்தது. சாத்தியமே இல்லை என்பவற்றைக்கூட தன் சட்டைப்பையில் சகஜமாக வைத்திருப்பார்! முடியுமா என்பவற்றை முடித்துவிட்டேனே என புன்முறுவல் பூத்தவர்!

    காலனே! எம்.ஜி.ஆர். என்பவர் உலகில் இல்லை என்று நீ எண்ணினால், ஏளனம் செய்யும் தமிழகம்! இல்லை இல்லை.. தமிழினம்! அஸ்தமிக்கும் சூரியனுக்கும் பஸ்பமாக்கும் உஷ்ணம் உண்டு… நன்றி மறந்தோர் அல்லர் தமிழர்! வழங்கிய கொடிகளும் அவர் நிறுவிய படைகளும் எக்காலமும் முக்காலமும் பறைசாற்றும் உந்தன் பெருமைகளை!

    நினைக்க கோடி உண்டு.. மறக்க ஒன்றே ஒன்று தான் – அவர் மறைவு

    இது முடிவுரை.. இந்தக் கட்டுரைக்கு மட்டுமே!

    Share