Tag: மரபின் மைந்தன் முத்தையா

  • திருக்கடவூரில் கால சம்ஹார விழா

    திருக்கடவூரில் கால சம்ஹார விழா

    மரபின் மைந்தன் முத்தையா

    திருக்கடவூரில் இன்று கால சம்ஹார விழா – கால சம்ஹார மூர்த்திக்கு அபிடேக ஆராதனை

    சூலமேந்தி வீறு கொண்டான் சூரசம்ஹாரன்
    சூட்சுமமாய் அருள வந்தான் ஏழைப் பங்காளன்
    கால காலன் கருணை கொண்டான் காத்து ரட்சிக்க
    கழல்களிலே மலர்கள் தூவி நாமும் அர்ச்சிக்க

    மார்க்கண்டேயன் அழுத போது முன்னே வந்தவன்
    மார்க்கமுண்டு எனும் உறுதி நமக்குத் தந்தவன்
    காக்க வேண்டும் காக்க வேண்டும் காலகாலனே
    காலமறிந்து சூலம் வீசு எங்கள் ஈசனே

    Share
  • திருக்குடமுழுக்கில் வடமொழி-திருமுறைகள் சொல்வதென்ன?

    திருக்குடமுழுக்கில் வடமொழி-திருமுறைகள் சொல்வதென்ன?

    -மரபின் மைந்தன் முத்தையா
     
    தஞ்சைப் பெருவுடையார் திருக்கோவில் திருக்குடமுழுக்கு பற்றிய விவாதங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன. ஆலயத்தோடும் ஆன்மீகத்தோடும் அணுவளவும் தொடர்பில்லாத பலரும் அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் தம் நிலைப்பாடு என்னவென்பதை ஆன்மீக ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் அறிவிக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
     
    தொடர்பில்லாதவர்கள் துள்ளிக் குதிப்பதும் தொடர்புள்ளவர்கள் தள்ளி நிற்பதும் தமிழ்ச் சூழலுக்கு புதிதல்லவே!
     
    மாமன்னன் இராஜராஜன் கட்டிய ஆலயம் என்பதால் அவனிடமிருந்தே தொடங்குவோம். இன்று பல்லோரும் ராஜராஜன் தமிழ் மன்னன். ஒரு தமிழ் மன்னன் கட்டிய தமிழ்க் கோயில். அங்கே திருக்குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என்றெல்லாம் வாதங்களை வைக்கிறார்கள்.
     
    ராஜராஜன் தமிழ் மன்னனாக இருக்கலாம். ஆனால் அவருடைய ஆன்மீக குரு யாரென்று பார்த்தால் சதுரானன பண்டிதர் என்ற பெயருடைய காளாமுகச் சைவர் . அதேபோல அவருடைய மகன் ராஜேந்திர சோழனின் குரு யார் என்று பார்த்தால் லகுலீச பண்டிதன் என்னும் காளாமுகச் சைவர்.
     
    சொல்லப் போனால் ராஜராஜன் காலத்திற்கு முன்னரே திருமுறைகள் பாடக் கூடியவர்களுக்கு கல்வெட்டுகள் உண்டு. (திருமுறைகளை ராஜராஜன் கண்டெடுத்ததாக உமாபதிசிவம் பெயரில் ஒரு புராணம் வழங்கி வருகிறதே தவிர, அது அவரால் எழுதப்பட்டது அல்ல என்றுதான் ஆறுமுக நாவலர் உள்ளிட்ட ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்). எனவே இராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே ஆலயங்களில் திருமுறைகள் ஓதப்பட்டன.
     
    ஆனால் ராஜராஜன் காலத்தில் தேவார மூவர் திருநாமங்கள் கூட, தீக்ஷா நாமம் தரப்பட்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. திருநாவுக்கரசு அகோர சிவன், ஞானசம்பந்தன் வாமதேவ சிவம் என்றெல்லாம் சமய ஆச்சாரியர்கள் திருநாமங்கள் பின்னால் தீக்ஷா நாமம் சேர்க்கும் அளவு ராஜராஜன் வடமொழி சார்ந்தவனாக இருந்திருக்கிறான். எனவே அவர் எழுப்பிய ஆகம முறைப்படியான ஆலயத்தில் அந்த மரபு சார்ந்த முறையிலேயே திருக்குடமுழுக்கு நடைபெற வேண்டும்.
     
    இரண்டாவதாக சைவர்களுக்கு உயிர்நாடியாக விளங்கக் கூடியவை திருமுறைகள். குறிப்பாக தேவாரம் திருவாசகம் ஆகியவை. அவை சமஸ்கிருதத்தை முழுமையாக ஒப்புக்கொள்கின்றன. திருமுறைகள் முழுவதிலும் வேதங்களும் வடமொழியும் சிறப்பிக்கப்படுவது கண்கூடு.
     
    “வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்
    வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்”
     
    என்றும்
     
    “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”
     
    என்றும் சிவபெருமான் சிறப்பிக்கப்படுகிறார்.
     
    இன்று பலரும் வடமொழி என்பது தமிழ்நாட்டில் சைவ மரபுக்கு முரணானது என்பது போல ஒரு பிம்பத்தை வலிந்து கட்டமைக்கிறார்கள். தமிழ்ச் சைவர்களின் மேல் வரிச் சட்டம் ஆகிய திருமுறைகள் அவ்வாறு நமக்குச் சொல்லவில்லை. எனவே சமஸ்கிருதம் அந்நிய மொழி என்பது நாத்திகவாதிகள் கொண்டுவரும் பொய்யான பரப்புரை ஆகும்.
     
    ஆகமங்கள் என்பவை ஆலயங்கள் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் பேசுபவை அல்ல. ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவை. அவை ஆழமான ஆன்மீக அறிவியல். மேலும் இன்று சிலர் திருக்குடமுழுக்கு நிகழும்போது சொல்லப்படும் மந்திரங்கள் புரிய வேண்டும் என்கிறார்கள். எல்லோருக்கும் புரியும் விதமாய் அமைய அவை வாய்பாடுகள் அல்ல. அவை மிக நுட்பமான ஒலி ஒழுங்குகளும் முத்திரைகளும் கூடிய தொன்மையான ஞானக் கலை.
     
    வடமொழியில் மந்திரங்கள் சொல்லி திருக்குடமுழுக்கு நடத்துவதால் தமிழ் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் ஆன்மீகம் என்பதையே அறியாதவர்கள் சொல்வது. காலங்காலமாகவே ஆலய வழிபாட்டு மரபில் தமிழ் என்பது இரண்டாம் மொழி அல்ல. இணைமொழி.
     
    “இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்”
     
    என்று ஆலயச் சூழலை மணிவாசகப் பெருமான் வர்ணிக்கிறார். இங்கே இருக்கு என்பது ரிக்வேதம் ஆகிய சாஸ்திரத்தையும் தோத்திரம் என்பது தமிழில் ஓதப்படும் திருமுறைகளையும் குறிக்கும்.
     
    ஆலயங்களில் தமிழ் அர்ச்சனை தாராளமாகச் செய்யலாம். ஆனால் திருக்குடமுழுக்கு என்பது ஆலயத்தில் இருக்கிற விக்கிரகத்துக்கு இருக்கும் சக்தியைப் புதுப்பிக்கும் மெய்ஞான விஞ்ஞானம். அந்த மந்திரங்களின் பொருளைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் அதிர்வுகள் தான் மிகவும் முக்கியம்.
     
    ஆகமங்கள் என்பவற்றை “வந்தவை” என்று பொருள். எனவே தமிழிலிருந்து வடமொழிக்கு வந்தது என்பதாக திரு. சத்தியவேல் முருகனார் போன்றவர்கள் சொல்லி வருகிறார்கள். சிவபெருமானிடமிருந்து வந்தது என்றுதான் அதற்குப் பொருள்.
     
    சிவபெருமான் வேதங்களை திருவாய் மலர்ந்தருளியதைப் போலவே ஆகமங்களையும் அருளினார் என்கிறார் திருமூலர்.
     
    “வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
    ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உன்னுக”
     
    என்பது திருமந்திரம்.
     
    ” ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க”
     
    என்பது சிவபுராணம்.
     
    எனவே ஆகமங்கள் என்பவை, வழிபாட்டு நெறியின் உயிர் நாடி. அவற்றை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.
    —————————————————————
    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா
    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 10

    2019 நவராத்திரி கவிதைகள் 10

    மரபின் மைந்தன் முத்தையா

    (06.10.2019 அன்று சென்னையில் நிகழ்ந்த “முப்பெருந் தேவியர்” எனும் தலைப்பிலான கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை)

    பட்டாக இருள்போர்த்து பராசக்தி நடக்கின்ற
    பண்டிகைதான் நவராத்திரி
    பக்கத்தில் கலைமகளும் அலைமகளும் கைகோர்த்து
    பவனிவரும் சுபராத்திரி
    எட்டாத உயரங்கள் எட்டிடவே செய்கின்ற
    ஏகாந்த நவராத்திரி
    எந்திரத்தில் மந்திரத்தில் தந்திரத்தில் விக்ரஹத்தில்
    ஏந்திழையாள் வரும்ராத்திரி
    கட்டான குழலோடு பொட்டோடு மலரோடு
    கற்பகத்தாள் வரும்ராத்திரி
    கயிலையிந்த மயிலையென கபாலிவந்து அமர்கின்ற
    குளக்கரையின் அருள்ராத்திரி
    எட்டடுக்கு மாளிகைக்கும் ஏழைகளின் குடிசைக்கும்
    கொலுவமர வரும்ராத்திரி
    என்னென்ன கவலைகளோ- எல்லாமே தீர்கின்ற
    ஏற்பாடு நவராத்திரி

    ——————————————————————————-

    ஆயிரம்பேர் பார்த்தாலும் அத்தனைபேர் முகங்களிலும்
    அம்பிகையின் ஜாடை இருக்கும்
    ஆயிரம்தான் முயன்றாலும் அபிராமி நினைத்தால்தான்
    ஆசைவைத்த ஏதும் நடக்கும்
    ஆயிரம்தான் வாழ்ந்தாலும் அவள்முன்னர் நின்றால்தான்
    ஆகாயம் உன்னில் திறக்கும்
    ஆயிரமா நாமங்கள்? அத்தனையும் சொன்னாலும்
    அவள்பெருமை மீதமிருக்கும்

    ———————————————————————————

    தேனிருக்கும் பூக்களெல்லாம் தேவதேவி பாதத்தில்
    தேனெடுக்க வந்து வீழும்
    ஊனிருக்கும் உயிர்களெல்லாம் உத்தமியாள் கண்டவுடன்
    உற்றவினை முற்றும் மாளும்
    வானிருக்கும் நிறத்தழகி வாத்சல்யம் பழகிவிட்டால்
    வாழ்க்கையெல்லாம் லஹரியாகும்
    மானிருக்கும் கண்கள்மேல் மயல்பிறக்கும் ஈசனுக்கு;
    மந்திரங்கள் மௌனமாகும்

    ———————————————————————————-

    நாடகங்கள் அவள்நடத்த நாமெல்லாம் ஆடுகிறோம்
    நாயகிக்குத் தெரியாததா?
    பூடகமாய் சிரித்துநிற்கும் புன்னைநல்லூர் மாரியன்னை
    பொன்னுள்ளம் கரையாததா?
    ஆடகப்பொன் பாதங்கள் அதில்பதியும் வேதங்கள்
    அம்பலத்தில் ஆடாததா?
    ஏடெடுத்து நாமெழுத எழுத்தாகி வருவாளே
    ஏழைமனம் அறியாததா?

    —————————————————————————————-

    ஜாமங்கள் அடங்குகையில் சலங்கையொலி கேட்கிறதே
    சியாமளையாள் வரும்நேரமே
    நாமங்கள் மொழிகையிலே நாநடுங்க கண்கலங்க
    நாமுருகும் அருள்நேரமே
    காமங்கள் மாற்றுகிற காருண்யை அருள்நம்மை
    காப்பாற்ற இதுநேரமே
    ஓமென்ற ரூபத்தில் ஓங்காரி எழும்நேரம்
    ஓயாத வினை ஓயுமே

    —————————————————————————————–

    விழிகளெனும் சமுத்திரத்தில் விடுகதைகள் ஏந்திநிற்கும்
    வித்தகியைப் போற்றுகின்றோம்
    மொழியென்ற படகேறி மனமென்ற துடுப்போடு
    சக்திகடல் மேவுகின்றோம்
    வழிதேடி அழும்போது வீதிமுனை திருப்பத்தில்
    விளக்காக நிற்கிறாளே
    பழியேதும் சூழாமல் பாவங்கள் நேராமல்
    பைரவி காக்கிறாளே

    —————————————————————————————–

    கிளிநின்ற தோளோடு  குயில்வென்ற குரலோடு
    கதைபேசக் காத்திருக்கிறாள்
    களிநின்ற மனதோடு கைகூப்பும் நேரத்தில்
    கண்ணெதிரே பூத்திருக்கிறாள்
    வெளிநின்ற கோலத்தில் வெளியெங்கும் நிறைந்தாளே
    வெறிகொண்டு ஆடுவாளே
    தெளிநின்ற ஞானத்தைத் தருகின்ற பராசக்தி
    தினம்நம்மை ஆளுவாளே

    —————————————————————————————

    தவள் எங்கள் மாசக்தி தயாபரி நிற்கையில்
    தயக்கங்கள் நமக்கேதடா
    கவளங்கள் ஊட்டுவாள் கவசங்கள் பூட்டுவாள்
    கவலைகள் நமக்கேதடா
    சிவமெங்கள் தந்தையாம் சக்தியே அன்னையாம்
    சஞ்சலம் நமக்கேதடா
    நவமாக உயிர்சுடர, தவமாக மனம்பொலிய
    நாளுமவள் முகம்பாரடா.

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 7

    2019 நவராத்திரி கவிதைகள் 7

    மரபின் மைந்தன் முத்தையா

    சூரியனை, சந்திரனை, சூடுகிற தோடாக்கி
    சுந்தரி நீ நிற்கிறாய்
    சூட்சுமங்கள் நிகழ வைத்து சாட்சியங்கள் இல்லாமல்
    சுடராக ஒளி  பூக்கிறாய்
    காரியங்கள் அத்தனையும் கணப்பொழுதில் ஆக்கிவிட்டு
    கல் வடிவில் ஏன் நிற்கிறாய்
    காண வரும் பக்தர் நலம் பேணுகின்ற அபிராமி
    காண்பதெல்லாம் நீ ஆகிறாய்
    காரிகையே உன்னுடைய காலசையும் ஜதியினிலே
    கூத்தனவன் புன்னகைக்கிறான்
    காலகாலன் மனம்நெகிழும் காதலிலே நீபோடும்
    கட்டளைக்கே ஆட்படுகிறான்
    பேரிகையின் ஒலியெல்லாம் பேரழகே உனைப்பாடும்
    பெரியவிழா நவராத்திரி
    பேணுமொரு தாயாகி புவனமெலாம் காக்கின்ற
    பேரரசி அபிராமியே!

    துந்துபிகள் ஒலிசெய்ய தும்பிகளும் களிசெய்ய
    துதிக்கின்ற சுகம்போதுமே
    தந்ததிமி தாளங்கள் திசையதிரும் மேளங்கள்
    தரிசன சுகம்போதுமே
    சிந்துரத் திருநுதலில் சிரிக்கின்ற குங்குமம்
    சுகந்தத்தின் சுகம்போதுமே
    சுடர்வீசும் தீபங்கள் இடர்தீரும் நேரங்கள்
    சரணென்று விழும் நேரமே
    வந்தவினை  தரியாமல் சென்றவழி தெரியாமல்
    விடைபெற்று விரைந்தோடுமே
    வந்தனைக்குச் செந்தமிழும் வண்ணவண்ண சந்தமுடன்
    வரிசையில் சுழன்றாடுமே
    கந்தனைப் பயந்தவளே கண்பதியைத் தந்தவளே
    ககனத்தின் அன்னைநீயே
    கரும்பேந்தி நிற்கின்ற கற்பக விருட்சமே
    கலையேயென் அபிராமியே!

    குங்கிலியக் கலயரின் கைகளிட்ட தூபங்கள்
    காற்றிலின்றும் மணம்வீசுதே
    கடவூரின் தெருவெங்கும் நாயன்மார் பாதங்கள்
    கல்வெட்டு போல்நின்றதே
    குங்குமத்தின் வாசத்தில் குறைமறந்த பட்டர்முன்
    கோலநிலா  எழுகின்றதே
    குற்றமிலா மார்க்கண்டன்  முற்றத்தில் தொழுதவிதம்
    கண்ணுக்குத் தெரிகின்றதே
    பொங்கியெழும் கடலோசை புண்ணிய  வடிவேஉன்
    புகழ்பாடித் திரிகின்றதே
    பொன்னெழுந்த பாவனையில் மின்னெழுந்த திருக்கோலம்
    பார்வையை நிறைக்கின்றதே
    இங்கும்நீ அங்கும்நீ எங்கெங்கும் நீயேதான்
    எனக்கின்று புரிகின்றதே
    இதழோரம் நகைவீசி என்னோடு கதைபேசி
    எனையாளும் அபிராமியே!

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 4

    2019 நவராத்திரி கவிதைகள் 4

    -மரபின் மைந்தன் முத்தையா

    தோகை விரித்திடும் பொன்மயில் அழகில்
    தென்படும் பசுமை அவள்கொடைதான்
    வாகைகள் சூடிட நீதியும் எழுகையில்
    வெறிகொண்டு தொடர்வது அவள் படைதான்
    யாகங்கள் யாவிலும் ஆடிடும் கனல்மிசை
    ஏகி நடப்பது அவள் நடைதான்
    நாகத்தின் படத்திலும் நாதத்தின் இசையிலும்
    நாளும் அசைவது அவள் இடை தான்!

    சூத்திரம் எழுதிய ஞானியர் நெஞ்சினில்
    சூட்சுமம் ஆனவள் பராசக்தி
    பாத்திரம் நிரம்பிடும் தானிய வகைகளில்
    பவித்திரம் ஆனவள் பராசக்தி
    காத்திடும் வலிமையின் காருண்ய ரூபமாய்
    கண்ணெதிர் தெரிபவள் பராசக்தி
    சாத்திர விதிகளைத் தாண்டிய ரூபமாய்
    சாகசம் செய்பவள் பராசக்தி!

    ஆலய வாயிலில் பூச்சரம் விற்கையில்
    அவளே வெய்யிலில் வாடுகிறாள்
    காலமும் நேரமும் கருதா உழைப்பினில்
    காளி மரநிழல் தேடுகிறாள்
    தூலமும் உயிரும் தூளியில் ஆடிடும்
    தருணம் அவளே பாடுகிறாள்
    காலகாலனின் உடுக்கை அசைவுக்குக்
    கால்கள் மாற்றி ஆடுகிறாள்!

    பிச்சியென் றலைவதும் பெருங்கலை ஆள்வதும்
    பிறவியை அறுப்பதும் அவள்தானே
    உச்சியில் திலகமாய் சூரியச் சாந்தினைச்
    சூடி நடப்பதும் அவள்தானே
    அர்ச்சனை வேளையில் ஆதங்கப் பார்வைக்கு
    ஆறுதல் தருபவள் அவள்தானே
    கர்ச்சனை சிங்கத்தின் முதுகினில் ஏறி
    ககனங்கள் ஆள்வதும் அவள்தானே!

    படத்திற்கு நன்றி – http://www.tantricmoments.nl/shiva-shakti/

    Share
  • 2019 நவராத்திரி 3

    2019 நவராத்திரி 3

    -மரபின்மைந்தன் முத்தையா 
    வாலை இதழ்களில் வளரும் நகை-அது
    வானத்துப் பொய்கையில் மலரும் முகை
    பாலா விழிகளில் சுடரும் நகை- அதில்
    பரவும் நெருப்பினில் அழியும் பகை
    சூலத்தின் முனைகளில் ஒளிர்வதென்ன=விரல்
    சொடுக்கிடும் முன்னர்  ஒளிவதென்ன
    நீல க ண்டத்தில் நெளிவதென்ன -அவள்
    நீவிய குண்டலி நாகமன்றோ
    சாந்தத் திருமுகம் சிரித்திருக்கும்-அவள்
    சந்நிதித் தூண்களும் சிலிர்த்திருக்கும்
    காந்தக் கயல்விழி  குளிர்ந்திருக்கும்-நுதல்
    காட்டிடும் கண்மிசை கனலிருக்கும்
    கோடையும் பனியும் அவள் அசைவே- பயிர்
    கொழிப்பதும் காய்வதும் அவள் இசைவே
    பாடல்கள் அவளது பவனிரதம்-கலை
    பயில்பவர் அடைவது அவளின்பதம்
    திக்குகள் அவள்முகம் தேடுவதும்-புவி
    திடுக்கிடும் படியவள் ஆடுவதும்
    இக்கணம் இந்நொடி நிகழ்வதுதான்- இவள்
    இங்கிதம் எப்படிப் புகழ்வதுநாம்
    சாம்ப சதாசிவன் மேனியிலே-இடம்
    ஷாம்பவி ஆள்வது சாஸ்வதமாம்
    தேம்பி அழுகிற பிள்ளைமுன்னே- தேவ
    தேவியின் பொற்கிண்ணப் பால்வருமாம்
    வையங்கள் ஆள்கிற வீரையவள் -அந்த
    வான்முகில் பொழிகிற தாரையவள்;
    பொய்யிந்த வலியென்று காட்டிடுவாள்-ஒரு
    பொற்கணம் தனில்நம்மை மீட்டிடுவாள்
    Share
  • 2019 நவராத்திரி 1

    2019 நவராத்திரி 1

    மரபின் மைந்தன் முத்தையா
     
    கரும்பட்டு வானில் போர்த்து
    கண்தூங்கச் சொன்னாள் தேவி
    வரும் ஒற்றைக் கதிருக்குள்ளே
    விதையாக நிற்கும் நீலி
    ஒரு வார்த்தை சொல்வாள் என்றே
    உலகமே ஏங்கும் நேரம்
    கருவாகும் வேதத்துள்ளே
    கலையாகி நின்ற காளி!
     
    ஆற்றோர நாணல் தூங்க
    ஆராரோ பாடும் அன்னை
    நேற்றோடு நாளை இன்றி
    நிகழ்கணம் சமைத்தாள் முன்னை
    காற்றாகிப் புயலாய் மாறி
    கடுங்கோபம் தீர்ந்த பின்னை
    ஊற்றாகி ஒளியும் ஆவாள்
    உயிர்ப்பித்துத் தந்தாள் என்னை!
     
    எழுதுகோல் முனையில் நிற்பாள்
    எழுத்தையும் அவளே கற்பாள்
    பழுதுகள் அகற்றி வைப்பாள்
    பவவினை சுமைகள் தீர்ப்பாள்
    விழுதிலே வருபவள்தான்
    வேரெனப் படர்ந்திருப்பாள்
    அழுதவன் கண்ணீருக்குள்
    அனுபவ உப்ப ளிப்பாள்!
     
    கன்னியே என்றழைத்தால்
    கிழவியாய் முன்னே நிற்பாள்
    அன்னையே என்றால் ஐயோ
    அழகிய குழந்தை ஆவாள்
    மின்னலாய்த் தெரிவாள் விண்ணில்
    மேகமாய்த் திரிவாள் கையில்
    கன்னலை ஏந்தி நிற்கும்
    கனலையே சக்தி என்போம்!
     
    சிலையெனக் கடக்க வேண்டாம்
    சிரிப்பொலி காதில் கேட்கும்
    மலையென மலைக்க வேண்டாம்
    மழலையாய் மார்பில் மேவும்
    கலையினில் அளக்க வேண்டாம்
    காணவே முடியா வானம்
    நிலையென நிற்கும் தேவி
    நீள்விரல் நிழலே போதும்!
    Share
  • வண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி

    வண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி

    மரபின் மைந்தன் முத்தையா

    காலத்தின் தோள்களிலே குயிலாக உட்கார்ந்து
    கானங்கள் இசைத்தவனைப் பாடு
    காற்றுவரும் திசையெல்லாம் குளிர்ந்துவரும் அவன்பாட்டில்
    கூறியுள்ள வாழ்க்கைமுறை தேடு

    ஞானத்தின் கருவூலம் தான் என்று இருந்தாலும்
    நான் என்ற ஆணவமே இன்றி
    வானத்தின் செய்திகளை வார்த்தைகளில் வார்த்தளித்த
    கண்ணதாசக் கவியரசே நன்றி

    சூட்சுமங்கள் எத்தனையோ சொல்லி வைத்த உன் கவிதை
    சூத்திரமாய் இருக்குதய்யா வாழ்வில்
    காட்சிக்கு இலை எனிலும் கருத்தெல்லாம் நிறைந்தவனே
    கைகூப்பினோம் உனது நாளில்

    சிறுகூடல் பட்டியையோர் ஷேத்திரமாய் ஆக்கியவன்
    சிறகடித்து ஆண்டுகளும் ஓடும்
    வருங்காலம் எப்போதும் வரகவியே உன்னுடைய
    வண்ணத்தமிழ் பாட்டிசைத்தே வாழும்

    Share