Author: மரபின்மைந்தன் முத்தையா

  • திருக்கடவூரில் கால சம்ஹார விழா

    திருக்கடவூரில் கால சம்ஹார விழா

    மரபின் மைந்தன் முத்தையா

    திருக்கடவூரில் இன்று கால சம்ஹார விழா – கால சம்ஹார மூர்த்திக்கு அபிடேக ஆராதனை

    சூலமேந்தி வீறு கொண்டான் சூரசம்ஹாரன்
    சூட்சுமமாய் அருள வந்தான் ஏழைப் பங்காளன்
    கால காலன் கருணை கொண்டான் காத்து ரட்சிக்க
    கழல்களிலே மலர்கள் தூவி நாமும் அர்ச்சிக்க

    மார்க்கண்டேயன் அழுத போது முன்னே வந்தவன்
    மார்க்கமுண்டு எனும் உறுதி நமக்குத் தந்தவன்
    காக்க வேண்டும் காக்க வேண்டும் காலகாலனே
    காலமறிந்து சூலம் வீசு எங்கள் ஈசனே

    Share
  • திருக்குடமுழுக்கில் வடமொழி-திருமுறைகள் சொல்வதென்ன?

    திருக்குடமுழுக்கில் வடமொழி-திருமுறைகள் சொல்வதென்ன?

    -மரபின் மைந்தன் முத்தையா
     
    தஞ்சைப் பெருவுடையார் திருக்கோவில் திருக்குடமுழுக்கு பற்றிய விவாதங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன. ஆலயத்தோடும் ஆன்மீகத்தோடும் அணுவளவும் தொடர்பில்லாத பலரும் அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் தம் நிலைப்பாடு என்னவென்பதை ஆன்மீக ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் அறிவிக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
     
    தொடர்பில்லாதவர்கள் துள்ளிக் குதிப்பதும் தொடர்புள்ளவர்கள் தள்ளி நிற்பதும் தமிழ்ச் சூழலுக்கு புதிதல்லவே!
     
    மாமன்னன் இராஜராஜன் கட்டிய ஆலயம் என்பதால் அவனிடமிருந்தே தொடங்குவோம். இன்று பல்லோரும் ராஜராஜன் தமிழ் மன்னன். ஒரு தமிழ் மன்னன் கட்டிய தமிழ்க் கோயில். அங்கே திருக்குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என்றெல்லாம் வாதங்களை வைக்கிறார்கள்.
     
    ராஜராஜன் தமிழ் மன்னனாக இருக்கலாம். ஆனால் அவருடைய ஆன்மீக குரு யாரென்று பார்த்தால் சதுரானன பண்டிதர் என்ற பெயருடைய காளாமுகச் சைவர் . அதேபோல அவருடைய மகன் ராஜேந்திர சோழனின் குரு யார் என்று பார்த்தால் லகுலீச பண்டிதன் என்னும் காளாமுகச் சைவர்.
     
    சொல்லப் போனால் ராஜராஜன் காலத்திற்கு முன்னரே திருமுறைகள் பாடக் கூடியவர்களுக்கு கல்வெட்டுகள் உண்டு. (திருமுறைகளை ராஜராஜன் கண்டெடுத்ததாக உமாபதிசிவம் பெயரில் ஒரு புராணம் வழங்கி வருகிறதே தவிர, அது அவரால் எழுதப்பட்டது அல்ல என்றுதான் ஆறுமுக நாவலர் உள்ளிட்ட ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்). எனவே இராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே ஆலயங்களில் திருமுறைகள் ஓதப்பட்டன.
     
    ஆனால் ராஜராஜன் காலத்தில் தேவார மூவர் திருநாமங்கள் கூட, தீக்ஷா நாமம் தரப்பட்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. திருநாவுக்கரசு அகோர சிவன், ஞானசம்பந்தன் வாமதேவ சிவம் என்றெல்லாம் சமய ஆச்சாரியர்கள் திருநாமங்கள் பின்னால் தீக்ஷா நாமம் சேர்க்கும் அளவு ராஜராஜன் வடமொழி சார்ந்தவனாக இருந்திருக்கிறான். எனவே அவர் எழுப்பிய ஆகம முறைப்படியான ஆலயத்தில் அந்த மரபு சார்ந்த முறையிலேயே திருக்குடமுழுக்கு நடைபெற வேண்டும்.
     
    இரண்டாவதாக சைவர்களுக்கு உயிர்நாடியாக விளங்கக் கூடியவை திருமுறைகள். குறிப்பாக தேவாரம் திருவாசகம் ஆகியவை. அவை சமஸ்கிருதத்தை முழுமையாக ஒப்புக்கொள்கின்றன. திருமுறைகள் முழுவதிலும் வேதங்களும் வடமொழியும் சிறப்பிக்கப்படுவது கண்கூடு.
     
    “வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்
    வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்”
     
    என்றும்
     
    “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”
     
    என்றும் சிவபெருமான் சிறப்பிக்கப்படுகிறார்.
     
    இன்று பலரும் வடமொழி என்பது தமிழ்நாட்டில் சைவ மரபுக்கு முரணானது என்பது போல ஒரு பிம்பத்தை வலிந்து கட்டமைக்கிறார்கள். தமிழ்ச் சைவர்களின் மேல் வரிச் சட்டம் ஆகிய திருமுறைகள் அவ்வாறு நமக்குச் சொல்லவில்லை. எனவே சமஸ்கிருதம் அந்நிய மொழி என்பது நாத்திகவாதிகள் கொண்டுவரும் பொய்யான பரப்புரை ஆகும்.
     
    ஆகமங்கள் என்பவை ஆலயங்கள் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் பேசுபவை அல்ல. ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவை. அவை ஆழமான ஆன்மீக அறிவியல். மேலும் இன்று சிலர் திருக்குடமுழுக்கு நிகழும்போது சொல்லப்படும் மந்திரங்கள் புரிய வேண்டும் என்கிறார்கள். எல்லோருக்கும் புரியும் விதமாய் அமைய அவை வாய்பாடுகள் அல்ல. அவை மிக நுட்பமான ஒலி ஒழுங்குகளும் முத்திரைகளும் கூடிய தொன்மையான ஞானக் கலை.
     
    வடமொழியில் மந்திரங்கள் சொல்லி திருக்குடமுழுக்கு நடத்துவதால் தமிழ் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் ஆன்மீகம் என்பதையே அறியாதவர்கள் சொல்வது. காலங்காலமாகவே ஆலய வழிபாட்டு மரபில் தமிழ் என்பது இரண்டாம் மொழி அல்ல. இணைமொழி.
     
    “இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்”
     
    என்று ஆலயச் சூழலை மணிவாசகப் பெருமான் வர்ணிக்கிறார். இங்கே இருக்கு என்பது ரிக்வேதம் ஆகிய சாஸ்திரத்தையும் தோத்திரம் என்பது தமிழில் ஓதப்படும் திருமுறைகளையும் குறிக்கும்.
     
    ஆலயங்களில் தமிழ் அர்ச்சனை தாராளமாகச் செய்யலாம். ஆனால் திருக்குடமுழுக்கு என்பது ஆலயத்தில் இருக்கிற விக்கிரகத்துக்கு இருக்கும் சக்தியைப் புதுப்பிக்கும் மெய்ஞான விஞ்ஞானம். அந்த மந்திரங்களின் பொருளைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் அதிர்வுகள் தான் மிகவும் முக்கியம்.
     
    ஆகமங்கள் என்பவற்றை “வந்தவை” என்று பொருள். எனவே தமிழிலிருந்து வடமொழிக்கு வந்தது என்பதாக திரு. சத்தியவேல் முருகனார் போன்றவர்கள் சொல்லி வருகிறார்கள். சிவபெருமானிடமிருந்து வந்தது என்றுதான் அதற்குப் பொருள்.
     
    சிவபெருமான் வேதங்களை திருவாய் மலர்ந்தருளியதைப் போலவே ஆகமங்களையும் அருளினார் என்கிறார் திருமூலர்.
     
    “வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
    ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உன்னுக”
     
    என்பது திருமந்திரம்.
     
    ” ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க”
     
    என்பது சிவபுராணம்.
     
    எனவே ஆகமங்கள் என்பவை, வழிபாட்டு நெறியின் உயிர் நாடி. அவற்றை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.
    —————————————————————
    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா
    Share
  • மந்திரத் திருவடி

    மந்திரத் திருவடி

    மரபின் மைந்தன் முத்தையா  

    வணங்கா முடியும்
    வணங்கும் திருவடி
    இணங்கா அசுரரும்
    இணையும் மலரடி
    துணங்கை வென்று
    துலங்கும் கழலடி
    குணங்கள் கடந்த
    கயிலைச் சிவனடி

    வேதப் பொருளென
    விளங்கும் திருவடி
    ஆதிச் சுடர் என
    ஆடும் கழலடி
    நாதமும் தாளமும்
    நாடும் மலரடி
    மாதொருபாகன்
    மந்திரத் திருவடி

    சித்தர்கள் தேடிச்
    செல்லும் திருவடி
    பக்தர்கள் அஞ்சிப்
    புல்லும் திருவடி
    சத்திய ஞானியர்
    சொல்லும் திருவடி
    வித்தகன் சிவனின்
    வெல்லும் திருவடி

    தென்னாடுடைய
    தெய்வக் கழலடி
    எந்நாட்டவரும்
    எண்ணும் திருவடி
    பொன் கைலாயம்
    பொருந்தும் பொன்னடி
    தென் கைலாயம்
    தோயும் மலரடி

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 10

    2019 நவராத்திரி கவிதைகள் 10

    மரபின் மைந்தன் முத்தையா

    (06.10.2019 அன்று சென்னையில் நிகழ்ந்த “முப்பெருந் தேவியர்” எனும் தலைப்பிலான கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை)

    பட்டாக இருள்போர்த்து பராசக்தி நடக்கின்ற
    பண்டிகைதான் நவராத்திரி
    பக்கத்தில் கலைமகளும் அலைமகளும் கைகோர்த்து
    பவனிவரும் சுபராத்திரி
    எட்டாத உயரங்கள் எட்டிடவே செய்கின்ற
    ஏகாந்த நவராத்திரி
    எந்திரத்தில் மந்திரத்தில் தந்திரத்தில் விக்ரஹத்தில்
    ஏந்திழையாள் வரும்ராத்திரி
    கட்டான குழலோடு பொட்டோடு மலரோடு
    கற்பகத்தாள் வரும்ராத்திரி
    கயிலையிந்த மயிலையென கபாலிவந்து அமர்கின்ற
    குளக்கரையின் அருள்ராத்திரி
    எட்டடுக்கு மாளிகைக்கும் ஏழைகளின் குடிசைக்கும்
    கொலுவமர வரும்ராத்திரி
    என்னென்ன கவலைகளோ- எல்லாமே தீர்கின்ற
    ஏற்பாடு நவராத்திரி

    ——————————————————————————-

    ஆயிரம்பேர் பார்த்தாலும் அத்தனைபேர் முகங்களிலும்
    அம்பிகையின் ஜாடை இருக்கும்
    ஆயிரம்தான் முயன்றாலும் அபிராமி நினைத்தால்தான்
    ஆசைவைத்த ஏதும் நடக்கும்
    ஆயிரம்தான் வாழ்ந்தாலும் அவள்முன்னர் நின்றால்தான்
    ஆகாயம் உன்னில் திறக்கும்
    ஆயிரமா நாமங்கள்? அத்தனையும் சொன்னாலும்
    அவள்பெருமை மீதமிருக்கும்

    ———————————————————————————

    தேனிருக்கும் பூக்களெல்லாம் தேவதேவி பாதத்தில்
    தேனெடுக்க வந்து வீழும்
    ஊனிருக்கும் உயிர்களெல்லாம் உத்தமியாள் கண்டவுடன்
    உற்றவினை முற்றும் மாளும்
    வானிருக்கும் நிறத்தழகி வாத்சல்யம் பழகிவிட்டால்
    வாழ்க்கையெல்லாம் லஹரியாகும்
    மானிருக்கும் கண்கள்மேல் மயல்பிறக்கும் ஈசனுக்கு;
    மந்திரங்கள் மௌனமாகும்

    ———————————————————————————-

    நாடகங்கள் அவள்நடத்த நாமெல்லாம் ஆடுகிறோம்
    நாயகிக்குத் தெரியாததா?
    பூடகமாய் சிரித்துநிற்கும் புன்னைநல்லூர் மாரியன்னை
    பொன்னுள்ளம் கரையாததா?
    ஆடகப்பொன் பாதங்கள் அதில்பதியும் வேதங்கள்
    அம்பலத்தில் ஆடாததா?
    ஏடெடுத்து நாமெழுத எழுத்தாகி வருவாளே
    ஏழைமனம் அறியாததா?

    —————————————————————————————-

    ஜாமங்கள் அடங்குகையில் சலங்கையொலி கேட்கிறதே
    சியாமளையாள் வரும்நேரமே
    நாமங்கள் மொழிகையிலே நாநடுங்க கண்கலங்க
    நாமுருகும் அருள்நேரமே
    காமங்கள் மாற்றுகிற காருண்யை அருள்நம்மை
    காப்பாற்ற இதுநேரமே
    ஓமென்ற ரூபத்தில் ஓங்காரி எழும்நேரம்
    ஓயாத வினை ஓயுமே

    —————————————————————————————–

    விழிகளெனும் சமுத்திரத்தில் விடுகதைகள் ஏந்திநிற்கும்
    வித்தகியைப் போற்றுகின்றோம்
    மொழியென்ற படகேறி மனமென்ற துடுப்போடு
    சக்திகடல் மேவுகின்றோம்
    வழிதேடி அழும்போது வீதிமுனை திருப்பத்தில்
    விளக்காக நிற்கிறாளே
    பழியேதும் சூழாமல் பாவங்கள் நேராமல்
    பைரவி காக்கிறாளே

    —————————————————————————————–

    கிளிநின்ற தோளோடு  குயில்வென்ற குரலோடு
    கதைபேசக் காத்திருக்கிறாள்
    களிநின்ற மனதோடு கைகூப்பும் நேரத்தில்
    கண்ணெதிரே பூத்திருக்கிறாள்
    வெளிநின்ற கோலத்தில் வெளியெங்கும் நிறைந்தாளே
    வெறிகொண்டு ஆடுவாளே
    தெளிநின்ற ஞானத்தைத் தருகின்ற பராசக்தி
    தினம்நம்மை ஆளுவாளே

    —————————————————————————————

    தவள் எங்கள் மாசக்தி தயாபரி நிற்கையில்
    தயக்கங்கள் நமக்கேதடா
    கவளங்கள் ஊட்டுவாள் கவசங்கள் பூட்டுவாள்
    கவலைகள் நமக்கேதடா
    சிவமெங்கள் தந்தையாம் சக்தியே அன்னையாம்
    சஞ்சலம் நமக்கேதடா
    நவமாக உயிர்சுடர, தவமாக மனம்பொலிய
    நாளுமவள் முகம்பாரடா.

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 9

    2019 நவராத்திரி கவிதைகள் 9

    -மரபின் மைந்தன் முத்தையா
    வெண்ணிறப் பாற்கடல் மத்தியிலே
    வெண்ணிலவாக எழுந்தவளாம்
    தண்ணந் துழாயணி கேசவனின்
    திருமார் பினிலே அமர்ந்தவளாம்
    எண்ணிய யாவையும் நிகழ்ந்திடவே
    என்றும் இன்னருள் பொழிபவளாம்
    வண்ணத் திருமகள் திருவடிநம்
    வாசலில் வைத்தால் வாழ்ந்திடுவோம்
    பாம்பணை துயில்கிற பேரழகி
    பிள்ளைகள் பசியைப் போக்கிடுவாள்
    தேம்பும் மனங்களை தேற்றிவைத்து
    தேடரும் செல்வங்கள் ஆக்கிடுவாள்
    தாம்புக் கயிற்றினில் கட்டுண்ட
    தாமோதரனின் மனையரசி
    ஆம்நம் அன்பினில் சிறைப்படுவாள்
    ஆயிரம் நன்மைகள் அளித்திடுவாள்
    செக்கச் சிவந்த தாமரையே
    சிம்மா சனமாம் அவளுக்கு
    தக்க தருணத்தில் தனம்தான்யம்
    தருவது வழக்கம் அவளுக்கு
    பக்கம் இருந்து பாலூட்டி
    புகழ்வரும் விதமாய் ஆளாக்கி
    எக்கணமும் எமை ஆண்டிடுக
    இலட்சுமி  தேவியே காத்திடுக!!
    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 8

    2019 நவராத்திரி கவிதைகள் 8

    மரபின்மைந்தன் முத்தையா

    காலை திருவாரூர் மாலை திருக்கடவூர்
    கோலங்கள் காணக் கிடைத்ததே – சீலமாய்
    அங்கே கமலாம்பா இங்கே அபிராமி
    மங்கலத்தே ஆழும் மனம்.

    யோகா சனத்தே இருந்தாள் கமலாம்பா
    ஏகாந்த மாக அபிராமி – ஆகா
    விழிகண்ட காட்சி விரித்துரைப்பார் யாரோ
    மொழிகொண்டு சேர்க்குமோ மாண்பு.

    புற்றிடங் கொண்டார் பொருந்தும் கமலாம்பா
    மற்றிங் கமுதீசர் மாண்பரசி – குற்றங்கள்
    நீக்கிடுந் தாயர் நயனக் கனிவன்றோ
    காக்கும் நமையே கனிந்து.

    ஆரத்தி நேரம் அவளே இவளாவாள்
    ஓரத்தில் நின்றே உளங்களித்தேன் – சாரத்தில்
    சக்தி நிலையங்கள் சாநித்யம் ஒன்றேதான்
    பக்தி கனிகின்ற போது.

    கீர்த்தனைகள் கேட்டாள் கமலாம்பா பட்டர்முன்
    ஆர்த்தெழுந்தே வந்தாள் அபிராமி – சாத்திரங்கள்
    காணாத தேவியைக் காட்டுகிற பக்திநலம்
    பேணல் பிறவிப் பயன்.

    ஆசன மிட்டே அவளிருக்க, நின்றபடி
    பூசனைகள் ஏற்றே இவள்சிரிக்க – தேசுடைய
    பொன்விளக் கெல்லாமே பூரிக்க நன்னெஞ்சே
    என்னிருட்டு நீங்கும் இனி.

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 7

    2019 நவராத்திரி கவிதைகள் 7

    மரபின் மைந்தன் முத்தையா

    சூரியனை, சந்திரனை, சூடுகிற தோடாக்கி
    சுந்தரி நீ நிற்கிறாய்
    சூட்சுமங்கள் நிகழ வைத்து சாட்சியங்கள் இல்லாமல்
    சுடராக ஒளி  பூக்கிறாய்
    காரியங்கள் அத்தனையும் கணப்பொழுதில் ஆக்கிவிட்டு
    கல் வடிவில் ஏன் நிற்கிறாய்
    காண வரும் பக்தர் நலம் பேணுகின்ற அபிராமி
    காண்பதெல்லாம் நீ ஆகிறாய்
    காரிகையே உன்னுடைய காலசையும் ஜதியினிலே
    கூத்தனவன் புன்னகைக்கிறான்
    காலகாலன் மனம்நெகிழும் காதலிலே நீபோடும்
    கட்டளைக்கே ஆட்படுகிறான்
    பேரிகையின் ஒலியெல்லாம் பேரழகே உனைப்பாடும்
    பெரியவிழா நவராத்திரி
    பேணுமொரு தாயாகி புவனமெலாம் காக்கின்ற
    பேரரசி அபிராமியே!

    துந்துபிகள் ஒலிசெய்ய தும்பிகளும் களிசெய்ய
    துதிக்கின்ற சுகம்போதுமே
    தந்ததிமி தாளங்கள் திசையதிரும் மேளங்கள்
    தரிசன சுகம்போதுமே
    சிந்துரத் திருநுதலில் சிரிக்கின்ற குங்குமம்
    சுகந்தத்தின் சுகம்போதுமே
    சுடர்வீசும் தீபங்கள் இடர்தீரும் நேரங்கள்
    சரணென்று விழும் நேரமே
    வந்தவினை  தரியாமல் சென்றவழி தெரியாமல்
    விடைபெற்று விரைந்தோடுமே
    வந்தனைக்குச் செந்தமிழும் வண்ணவண்ண சந்தமுடன்
    வரிசையில் சுழன்றாடுமே
    கந்தனைப் பயந்தவளே கண்பதியைத் தந்தவளே
    ககனத்தின் அன்னைநீயே
    கரும்பேந்தி நிற்கின்ற கற்பக விருட்சமே
    கலையேயென் அபிராமியே!

    குங்கிலியக் கலயரின் கைகளிட்ட தூபங்கள்
    காற்றிலின்றும் மணம்வீசுதே
    கடவூரின் தெருவெங்கும் நாயன்மார் பாதங்கள்
    கல்வெட்டு போல்நின்றதே
    குங்குமத்தின் வாசத்தில் குறைமறந்த பட்டர்முன்
    கோலநிலா  எழுகின்றதே
    குற்றமிலா மார்க்கண்டன்  முற்றத்தில் தொழுதவிதம்
    கண்ணுக்குத் தெரிகின்றதே
    பொங்கியெழும் கடலோசை புண்ணிய  வடிவேஉன்
    புகழ்பாடித் திரிகின்றதே
    பொன்னெழுந்த பாவனையில் மின்னெழுந்த திருக்கோலம்
    பார்வையை நிறைக்கின்றதே
    இங்கும்நீ அங்கும்நீ எங்கெங்கும் நீயேதான்
    எனக்கின்று புரிகின்றதே
    இதழோரம் நகைவீசி என்னோடு கதைபேசி
    எனையாளும் அபிராமியே!

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 6

    2019 நவராத்திரி கவிதைகள் 6

    -மரபின்மைந்தன் முத்தையா

    புத்தகம் என்பது கோயிலென்றே -அதை[
    புரட்டிடும் நொடியினில் நினைந்திடுக
    புத்தம் புதிய கலைகளெல்லாம் -அந்த
    பாரதி கொடைஎன மகிழ்ந்திடுக
    தத்துவ முட்டல்கள் வாதங்கள்- நிகழ்
    தர்க்கங்கள் தீர்ப்புகள் எல்லாமே
    சத்திய நாயகி வாணியவள்- பதச்
    சலங்கையின் ஒலியென அறிந்திடுக

    அவள்தான் எழுவகை ஸ்வரமமைத்தாள்-இங்கு
    அபிநயம் ஆயிரம் வடித்தளித்தாள்
    கவிதைகள் காவியம் மலரவைத்தாள்-கருங்
    கல்லுக்குள் சிற்பங்கள் ஒளித்துவைத்தாள்
    இவரும் அவரும் விருதுபெற -கலை
    இயற்றிடும் ஆற்றலும் அவள்கொடுத்தாள்
    தவங்கள் செய்ததன் பயனாக -கலை
    தேர்ந்திடும் வல்லமை அவள்கொடுத்தாள்

    பிள்ளைகள் விரல்களை நாம்பிடித்தே-நல்ல
    பசுநெல் பரப்பினில் எழுதுகையில்
    கிள்ளைக் குரலினில் அக்‌ஷரமாய்-சிறு
    கண்களில் தெரிபவள் கலைமகளே
    கொள்ளும் செயல்கள் அனைத்திலுமே- அவள்
    கூட வருவாள் எண்ணெழுத்தாய்
    விள்ள முடியாப் புதுமையினள் -எங்கள்
    வாணியின் திருவடி சரண்புகுவோம்

    நுண்கலை வாணர்கள் திரண்டிடுக-பல
    நூதனக் கவிஞர்கள் இசைத்திடுக
    பண்கலையாளர்கள் பாடிடுக-நடம்
    புரிகிற வித்தகர் ஆடிடுக
    வண்ணக் கலைமகள் கொண்டாட்டம்-இங்கு
    விதந்து கலைகளைப் பேணுதலே
    மண்மிசை வானகம் தென்படுக-எங்கள்
    மகத்துவக் கலைமகள் அருள் தருக!

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 5

    2019 நவராத்திரி கவிதைகள் 5

    மரபின்மைந்தன் முத்தையா 

    எழுதப் படாத ஏடுகளில்- வந்து
    எழுது கோல்முனை தீண்டுகையில்
    உழுத நிலத்தில் பயிர்போலே-அங்கே
    உதித்திடும் எண்ணம் கொடுப்பது யார்?
    பழுது நிரம்பிய மனதுக்குள்ளே -உயர்
    பாட்டும் இசையும் பிறப்பதெங்கே
    தொழுது சொல்வேன் இவையெல்லாம்- தினம்
    தருவது வாணியின் கருணையன்றோ!

    பாரதி  சரஸ்வதி பேரெழிலாள்- ஒளி
    பொலிந்திடும் வெண்மலர் வீற்றிருப்பாள்
    நேருறக் கலைகளை ஆண்டிருப்பாள்- அவள்
    நேர்த்தியில் கீர்த்தியாய் நிறைந்திருப்பாள்
    சீரிய விரல்களின் கோலங்களில்- எழில்
    சித்திரம் தீட்டிடும் தூரிகையில்
    காரியம் யாவையும் நிகழ்த்திவிடும்-எங்கள்
    கலைமகள் பதமலர் வணங்கிடுவோம்!

    நான்முகன் படைக்கின்ற உலகமெல்லாம்- எங்கள்
    நாயகி கலையின்றிச் சிறந்திடுமோ
    வான்வரை வளர்புகழ் பெருமையெலாம்- அவள்
    வாரித் தராவிடில் வந்திடுமோ
    தேன்மழை அவளது பெருங்கருணை- எட்டுத்
    திக்குகள் ஆள்வதும் அவள் அறிவே
    மான்விழி நோக்கினில் கலைமகளே -பல
    மாண்புகள் நிறைந்திட அருளுகிறாள்!

    சுவடிகள் தேன்மலர் ஜெபமாலை -அன்னை
    சுந்தரக் கரங்களில் தவழ்ந்திடுமாம்
    தவம்செய்த பயனாய் ஒரு வீணை- எங்கள்
    தேவியின் திருமடி கிடந்திடுமாம்
    நவமென ஒளிர்ந்திடும் கலைகளெலாம்- அவள்
    நளினத் திருவிரல் நகங்களடா
    அவள் விரல் துகள்படக் காத்திருப்போம்- நாம்
    அதன்பின்னர் அவனியை ஆண்டிருப்போம்!

    Share