Tag: வல்லமையாளர் விருது

  • இந்த வார வல்லமையாளர் 308 – ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ அப்துல் கனி

    இந்த வார வல்லமையாளர் 308 – ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ அப்துல் கனி

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    இந்த வார வல்லமையாளர் 308 – அப்துல் கனி

    உலக வெப்பமயமாதல் அதனால் ஏற்படும் வறட்சி பேரழிவு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதே ஆகும். இதிலிருந்து மீண்டு வருவதற்கு மரங்கள் வளர்ப்பது ஒன்றே தீர்வாக அமையும். .

    தொல்காப்பியம், சங்க இலக்கியப் பாடல்களில் தொடங்கி  தற்கால புதுக்கவிதைகள் வரை அனைத்திலிருந்தும் நம் தமிழர்கள் மரங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை உணரலாம். பண்டைய தமிழகத்தில் ஒவ்வொரு மன்னனும் ஒரு குறிப்பிட்ட மரத்தினை காவல் மரமாகக் கருதினர்.  . இறை வழிபாட்டோடு தொடர்புடைய தல விருட்சங்களாகவும் மரங்கள் இருந்ததற்குப் பக்தி இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

    ஆனால் இன்றைய நிலையில் வேளாண்மை, நகரமயமாக்கம் போன்ற பல காரணங்களுக்காக சிறிது சிறிதாக நாம் காடுகளை அழித்து வந்துவிட்டோம். அதன் விளைவு புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்கள். இயற்கையான காட்டு மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டு எரிபொருள் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படுவதோடு , அந்த இடங்கள் மேய்ச்சல் நிலம், விளை பொருள் தோட்டங்கள் மற்றும் குடியேற்றங்களாக உருமாறிவிட்டன. மரங்கள் தொடர்ந்து குறைந்துவருவதால் உயிரியற் பல்வகைமை (bio diversity) குறைந்து சூழலும் தரம் குறைந்துவிட்டது. வாழ்விட சேதம், பல்லுயிர் இழப்பு, மற்றும் வறண்ட நிலங்கள் பெருகிவிட்டன.. வளிமண்டல கரியமிலவாயுவை நீக்க போதிய காடுகள் இன்மையால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு காலநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

    தற்போதைய மிகப்பெரும் பிரச்சினையான தண்ணீர்ப் பஞ்சத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் , மரங்கள் அழிப்பால் போதிய  மழைப்பொழிவு இல்லாமல் போனது முக்கிய காரணம். இதேபோல் போதியமரங்கள் இல்லாததால் சென்னை போன்ற பெரு நகரங்களில் காற்று மாசுபாடும் அதிகரித்து வருகின்றது.

    மனிதன் இன்புற்று வாழ

    மழை வளம் பெருக்கி, மண்வளம் காத்து,

    உறைவிடம் கொடுத்து,  உணவு வழங்கி

    மகிழ்ச்சியுடன் நாளும் மாசில்லாக் காற்றளிக்கும்

    மரங்கள் இயற்கைச் சீற்றத்தால் இன்னலுரும்போது கை கொடுத்துக் காப்பது நம் கடமையன்றோ.

    அந்த மாபெரும் பணிக்காகத்தான் சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் ட்ரீ ஆம்புலன்ஸ் சேவை ஒன்றைத் தொடங்கியுள்ளது. உலக சுற்றுச் சூழல் தினத்தன்று மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அவசர ஊர்தி சேவையை இந்த நிறுவனம் சென்னையில் துவக்கியது. இந்த சேவையை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்தியில் பயணிக்கும் சுற்றுச் சூழல்  ஆர்வலர்கள், மரங்களுக்கு முதலுதவி அளித்தல், வேரோடு சாய்ந்த மரங்களை மறு பதியம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இது குறித்து திரு அப்துல் கனி பேசுகையில் பசுமையின் தேவையை மனிதர்கள் உணர வேண்டும். அதனால்தான் இந்த மர ஆம்புலன்ஸ் சேவை என்றும் தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாகவும் 2020க்குள் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாகவும் கூறினார். முதற்கட்டமாக தமிழகத்தில் பயணிக்கும்  இந்த அவசர ஊர்தி நாட்டின் பல்வேறு இடங்களுக்கும்  சென்று பாதிக்கப்பட்ட மரங்களுக்கு முதலுதவி அளித்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளைச் செய்யும்.

    9941006786 என்ற எண்ணில் ட்ரீ ஆம்புலன்ஸ் குழுவினரை அழைத்து, அவர்களின் சேவையைப் பெறலாம். இவர்களின் இணையத்தளம் – www.treeambulance.org

    உயிர் காக்கும் மரங்களின் உயிர் காக்கும் பணி செய்யும் ட்ரீ ஆம்புலன்ஸ் நிறுவனர் அப்துல் கனி அவர்களையும், உடன் பணியாற்றும் ஆர்வலர்களையும் வல்லமை மின்னிதழ் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம். இந்த நற்பணிக்காக அவருக்கு “இந்த வார வல்லமையாளர்” விருதினை அளித்துப் பாராட்டுகிறோம்.  அப்துல் கனி குழுவினர், இன்னும் பற்பல தொண்டுகள் புரிய வாழ்த்துகிறோம்.

    தொடர்புடைய பக்கங்கள்

    https://www.indiatimes.com/news/india/in-a-first-chennai-environmentalist-launches-tree-ambulance-to-give-first-aid-to-trees-368673.html

    http://www.nxtpix.com/tree-ambulance-demonstration-program-on-world-environmental-day-an-initiative-by-dr-k-abdul-ghani-and-mr-suresh-k-jadhav-sasa-group/

    Share
  • வல்லமையாளர் விருது 307 – திவான்ஷு

    -விவேக்பாரதி

    அறிவியலின் துணை கொண்டு மனிதன் எத்தனையோ இயலாமைகளைச் சாத்தியமாக்கி இருக்கிறான். மனிதனால் வேகமாக நகர முடிந்தது, இருட்டை விலக்க ஒளி உருவாக்க முடிந்தது, பறக்க முடிந்தது, தண்ணீரின் ஆழம்வரை காண முடிந்தது, விண்வெளியின் விளக்கங்களைப் பார்த்துப் பகிர முடிந்தது. மனிதன், தன்னுடைய எத்தனையோ இயலாமைகளை அறிவியலால் சாத்தியமாக்கி இருக்கிறான். ஆனாலும் இன்னும் சில இடங்களில் மனிதராகிய நாம் பின் தங்கித்தான் இருக்கிறோம். காற்றில்லா வெற்றிடத்தின் (Vacuum) மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கும் நம் தொழில்நுட்பம், செப்டிக் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இன்னும் சில இடங்களில் மனிதக் கரங்களைத்தான் நம்பி இருக்கிறது. அதற்கும் அறிவியல் விடையைக் கண்டுகொண்டால்? இன்னும் பல நகரப்பார்வை படாத உள்முக கிராமங்களில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்துகிறார்கள். இந்த நிலையை மாற்ற ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள் ஐஐடி மாணவர்கள். அவர்களே இந்த வாரத்தின்  வல்லமையாளர்கள்.

    ஐஐடி மதராஸைச் சேர்ந்த திவான்ஷு என்ற மாணவரும் அவருடைய குழுவும் தங்கள் பேராசிரியர் பிரபு ராஜகோபால் என்பவருடன் இணைந்து இந்தச் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது செப்டிக் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் இயந்திரம். மீன் போன்று செயல்படும் வடிவமைப்பைக் கொண்ட இந்த ரோபோ, செப்டிக் தொட்டிகளில் இருக்கும் அழுக்குகளை பிரத்யேகமான ஒரு வெட்டுக் கருவி  கொண்டு வெட்டி எடுத்து, வெற்றிடக் குழாய்களின் வழியே அழுக்கையும் வண்டலையும் சுத்தம் செய்கிறது. இது குறித்த வெங்கடாச்சலம் என்பவர் லிங்க்டு இன் தளத்தில் பதிவேற்றியது.

     

    மாணவர்களாகச் சேர்ந்து சமுதாயத்தில் ஒரு முன்னேற்றப் பாதைக்கு வித்திட்டிருப்பதை வல்லமை மின்னிதழ் மிகவும் பாராட்டுகிறது. அந்தக் குழுவுக்கு “வல்லமையாளர்” என்ற விருதை அளித்து இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறது.

    Share
  • வல்லமையாளர் 305 – கோமதி மாரிமுத்து

    விவேக்பாரதி

    வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் எத்தனையோ தடைகளைத் தாண்டி, சுமைகளை ஏந்தி நாம் ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம். வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லாமல் பாதியிலே நாம் பந்தயத்திலிருந்து விலகியும் விடுகிறோம். ஆனால் உள்ளம் முழுவதிலும் சாதிக்கும் திண்ணத்துடன் ஓடும் வீரர்கள் பந்தயங்கள் எத்தனை வந்தாலும் வென்றுவிடுகிறார்கள். அப்படிப்பட்டவொரு வீரரே வீராங்கனை கோமதி மாரிமுத்து.

    போதிய அளவு மைதான வசதியோ, பேருந்து வசதியோ கூட இல்லாத முடிகண்டம் என்னும் ஊரிலிருந்து தனது ஒவ்வொரு பயிற்சியையும் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மேற்கொண்டு ஓட்டம் பயில ஓடி ஓடி உழைத்த கோமதி மாரிமுத்து அவர்கள் கத்தார் நாட்டில் நிகழ்ந்த 23 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் கலந்துகொண்டு இந்திய நாட்டின் சார்பாக தங்கம் வென்றுள்ளார்.

    காலை 3 மணி முதல் தன் நாளின் ஓட்டத்தைத் தொடங்கி, பள்ளி அதன்பின் கல்லூரி என்று தன் இளமைப் பருவம் முழுக்கவும் தன்னை ஓட்டப் பந்தயத்திற்காகவே தயார் செய்த கோமதி அவர்களுக்கு அவரது தந்தை மாரிமுத்து அவர்கள் பின்னால் உந்து சக்தியாக செயல்பட்டு இவரது இன்றைய வெற்றியைக் காண பெரிதும் ஆசைப்பட்டார் என்று சொன்னால் அது மிகையன்று. தன் மகள் வென்றதையே பத்திரிகையாளர்கள் தம் இல்லம் சூழ்ந்ததை வைத்துத் தெரிந்து கொண்ட தாய் “எங்க பாப்பா எப்டியோ ஓடி ஜெயிச்சிட்டா” என்று உருக்கமாக பேட்டியும் அளித்துள்ளார்.

    விளையாட்டுப் பிரிவில் தேர்ச்சிபெற்று, பெங்களூருவில் வருமான வரித்துறையில்  பணியாற்றிக் கொண்டிருக்கும் கோமதி மாரிமுத்து, தனது மாபெரும் துணையான தம் தந்தையை இழந்த இரண்டாவது ஆண்டில் அவரது கனவை நனவாக்கியுள்ளார். 800 மீட்டர் தடகளப் போட்டியில் அதன் தூரத்தை 2 நிமிடம் 70 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

    தமிழகத்தில், திருச்சி மாவட்டம் முடிகண்டம் பகுதியிலிருந்து இந்தியா சார்பாக போட்டியிட்டு வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துத் தந்திருக்கும் வீராங்கனை கோமதி மாரிமுத்து அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் “வல்லமையாளர்” என்னும் விருதினைப் பெருமையோடு அளித்து இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென்று வாழ்த்துகிறது.

    Share
  • இந்த வார வல்லமையாளர் (292)

     

    அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
    ஆலயம் பதினாயிரம் வைத்தல்
    இன்னருங்கனிச் சோலைகள் செய்தல்
    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
    பின்னருள்ள தருமங்கள் யாவும்
    பெயர் விளங்க ஒளிர நிறுத்தல்
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

    இது பாரதியார் வாசகம். இதனைக் கணந்தோறும் நிரூபனம் ஆக்கிக் கொண்டிருக்கும் ஓர் உன்னதமான அமைப்பு, சேவாலயா. தேச பக்தி நிறைந்த மாணவர்களை மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகாகவி பாரதியாரின் வாக்குப் படியும் வாழ்க்கைப் படியும் வளர்க்கும் அரும்பணியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக நடத்தி வருகிறது சேவாலயா. கசுவாய் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் தங்களது கல்வி வளாகத்துக்கு உள்ளேயே இயற்கை விவசாயம், முதியோர் இல்லம், உயர்நிலைக் கல்வி வரையில் பள்ளிகள், தொழில்வழிக் கல்விச்சாலைகள், மருத்துவமனை, கோசாலை என்று எண்ணற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அங்கிருக்கும் மக்களுக்குச் சிறந்த வாழ்வாதாரத்தை அமைத்து வருகிறார், இந்த நிறுவனத்தை முன்னின்று மிகுந்த அக்கறையோடும் திட்டங்களோடும் உழைத்து முன்னேற்றும் திரு முரளிதரன்அவர்கள்.

    பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகளைக் கொண்டும், பல உற்சாகம் மிக்க ஆர்வலர் பட்டாளத்தைக் கொண்டும் சத்தமே போடாமல் ஒரு சத்தான உலகைப் படைக்கக் கடமையெனக் கருதி வித்திட்டுக் கொண்டிருக்கும் சேவாலயா நிறுவனம், சென்றவாரம் உண்மையிலேயே உலகம் பசுமையுடன் வாழ நாம் அனைவரும் செய்ய வேண்டிய கடமையான மரக்கன்று நடுதலைச் செய்திருக்கிறது. வருடத்திற்கு 30,000 மரக்கன்றுகள் நடுவதாகத் திட்டமிட்டுக் கிட்டத்தட்ட 1200 மரக்கன்றுகளுக்கு மேல் நட்டிருக்கின்றனர் அவரது பள்ளி மாணவர்கள். சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை இவர்களால் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன் புகைப்படங்கள் கீழே,

     

     

     

    நமது நாடு, நமது மண் என்ற மரியாதை உணர்வைப் பிஞ்சிலேயே கருவாக்கும் திரு சேவாலயா முரளி அவர்களின் அரும்பணி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. அவர்களது இந்த உன்னதமான இயற்கை வழிபாட்டை மெச்சி வல்லமை மின்னிதழின் சார்பாக வல்லமையாளர் என்னும் விருதினை அறிவித்து மகிழ்ச்சியடைகிறோம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர் (291)

    எந்தவொரு பெரும் முயற்சிக்கும் அதனைச் செயலாக்க இயன்ற தோள்கள் தேவை. தோள்கள் இல்லாமல் மூளை என்ன சிந்தித்தாலும் அது வெறும் கனவுகளாகவும் சிந்தனைகளாகவும் மட்டுமே நின்றுவிடும். ஒரு குழு, ஓர் அமைப்பு, ஒரு கழகம் என்று எடுத்துக் கொண்டால் அந்தக் குழுக்களின் தீர்மானங்களை வெற்றிகரமாக நிறைவேற்றச் செயல் வீரர்கள் தேவை. அப்படிப்பட்ட ஒரு செயல் வீரர் திரு. விட்டல் நாராயணன் அவர்கள்.

    சென்ற வாரம் வானவில் பண்பாட்டு மையம் நடத்திய “வீர சுதந்திரம்” என்ற தலைப்பிலான மாபெரும் கலைக்காட்சி தமிழக அரசின் உதவியுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. பெரும் பொருட்செலவும், பல உழைப்பாளிகளின் மனம் மற்றும் உடல் உழைப்பால் உருவாகி, வானளாவிய பாரத மாதா திருவுருவத்துடன் நின்றது கலைக்காட்சி. உள்ளே பல நவீனத்துவம் வாய்ந்த கண்காட்சி அமைப்புகள். ஒளிவில்லைக் காட்சிகள்(Slide show), ஒளி ஒலிக் காட்சிகள் (Sound and Light), பரிமாணக் காட்சிகள் (Infographics) மேலும் பாரதி திரையரங்கம் என்று கண் காணும் காட்சிகள் மூலம் கற்றுத்தரும் நிறைய சிறப்பம்சங்கள் அங்கே திகழ்ந்திருந்தன. பல திசைகளில் இருந்து தமிழக மக்கள் அந்தக் கண்காட்சியைப் பார்த்து ரசித்தனர்.

    அத்தகு கலைக்காட்சியின் மொத்த செயல் திட்ட வடிவத்தையும் பல ஆலோசனைக் குழுக்களோடு நடைமுறைப் படுத்தியவர் விட்டல் நாராயணன் அவர்கள். தேச பக்தராகவும், பாரதி பக்தராகவும், தமிழ்க் காதலராகவும் விளங்கி வரும் திரு விட்டல் நாராயணன், வடிவமைப்பு இயக்குநர் (Creative director), திரைக்கதாசிரியர் (Script writer) என்று பன்முகத் திறமைகளைக் கொண்டவர். வானவில் பண்பாட்டு மையம் நடத்தி வருகின்ற பாரதி திருவிழாவின் செயல் வீரர்.

    மக்கள் கண்டு களிக்க அற்புதமாக கலைக்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த வானவில் பண்பாட்டு மையத்தையும், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையையும் வல்லமை சார்பில் மனமாரப் பாராட்டுகிறேன்! “வீர சுதந்திரம்” கலைக்காட்சியோடு சேர்த்து முழு பாரதி திருவிழா ஏற்பாடுகளையும் செவ்வணே செய்த திரு விட்டல் நாராயணன் அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் சார்பில், வல்லமையாளர் விருது வழங்குவதில் பேருவகை கொள்கிறோம்.

    தோளென நின்று தொலைந்த கதையனைத்தும்
    நாளிரண்டில் ஊர்காண நல்லதொரு காட்சிதனை
    வெல்லும் விதம்வைத்த விட்டல்நா ராயணன்
    வல்லமை யாளரென வாழ்த்து!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?cat=955

    Share
  • இந்த வார வல்லமையாளர் (290)

    -விவேக்பாரதி

     


    வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத பல தனிச்சிறப்புகளை நம் தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் ஒன்று நமது யாப்பிலக்கண அமைப்பு. மக்கள் பேசும் இயல்பான ஒலிகளுக்கும் சொற்களுக்கும் உள்ளே இருக்கின்ற இசையைக் கணக்கிட்டு அறிந்து, செவிகளுக்கு இனிமை பயக்கும் செய்யுள்கள் இயற்றி, அதற்கொரு இலக்கணம் வகுத்தது நம் தமிழ் முன்னோர்களின் சிறப்பான திறன். பொதுவாகவே உயிரைக் கிள்ளி ஒருகணத்தில் நம்மை ஆட்டுவிக்கின்ற சக்தி கவிதைகளுக்கு உண்டு. இன்றைய காலத்தில், வசன நடைக்கவிதைகளும், உரை வீச்சுக் கவிதைகளும், ஐக்கூ, சென்றியு போன்ற வேற்று மொழிக் கவிதை வடிவங்களும் பரிமளித்துக் கொண்டிருக்கும் நவீன காலமாக விளங்குகிறது நமது தமிழ்க் கவிதைச் சமூகம். இத்தகைய நிலையில், அதுவும் நவீனக் கவிதைகள் மிகுந்து குவிந்து கிடக்கும் நம் இணைய வெளிகளில் நமது பாரம்பரிய மரபு செய்யுள் எழுதும் கலையை, அதற்கான இலக்கணங்களைச் சொல்லிக் கொடுத்து, பல தரமான கவிஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது ஒரு முகநூல் குழு.

    மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் யாப்பியல் சிந்தனைகளை மீட்டுருவாக்கவும், யாப்புக் கவிதைகளின் இலக்கணங்களைப் பாடமாக்கிப் பயிற்றுவிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு முகநூல் குழு, “பைந்தமிழ்ச் சோலை.” நல்ல கவிதை ஊற்றத்துடன் முகநூலில் எழுதிக் கொண்டிருந்த கவிஞர்களை, யாப்புக் கவிதைகள் கற்றுக் கொண்டு எழுத ஆர்வமாக இருந்த பாவலர்களை இனம் கண்டுகொண்டு அவர்களுக்கு இலக்கணங்களை எளிமையான பாடங்களாக வழங்கி, வருட நிறைவில் “பாவலர் பட்டத் தேர்வு” வைத்து, வெவ்வேறு நிலைகளில் தேர்ச்சிபெறும் கவிஞர்களுக்கு அவர்களது மதிப்பெண்களுக்கு ஏற்றாற்போல் பட்டம் வழங்கியும் வருகிறது இந்த முகநூல் குழு. இவை அனைத்துமே ஒரு தனிமனிதர் எடுத்துவரும் பெரும் முயற்சி என்றால் அது வியப்பு. ஆம், இந்த முகநூல் குழுவை நிறுவி, ஐயங்களைக் களைந்து, பாடங்கள் மூலம் பயிற்றுவித்து, பட்டம் வழங்கித் தாயுள்ளத்தைப் போல இன்பம் கொள்ளும் அந்தத் தனிமனிதர் மரபுமாமணி பாவலர் மா வரதராசன் அவர்கள்.

    தமிழ் இலக்கியங்களில் மீதும் மரபு இலக்கணத்தின் மீதும் தீராத பற்றுடையவராய்த் தனது இளம் வயதுமுதல் கவிதை புனையும் ஆற்றலுடன் விளங்கிய மா வரதராசன் அவர்கள், முகநூலில் நுழைந்த ஒரு வருடத்தில் அதிலே நிரம்பிக் கிடக்கின்ற வசன நடை உரைவீச்சுக் கவிதைகளைக் கண்டு, மரபு இலக்கணத்திற்கும் மறுவாழ்வு கொடுக்கும் எண்ணம் கொண்டதாகச் சொல்லியே அந்தக் குழுவைத் தொடங்கியிருக்கிறார். பலரது ஏச்சுக்கும், வசைகளுக்கும் ஆளாகிப் பின்னாளில் இன்றும் முகநூலில் நிறைய யாப்பியல் அறிந்த பாவலர்களை உருவாக்கி வருகிறார் என்பதிலிருந்தே தமிழன்னை மீது அவர் கொண்டிருக்கும் தீராத பக்தியும் காதலும் புலனாகிறது.

    பைந்தமிழ்ச் சோலை என்ற மின்தளம் உருவாக்கி, பல பாவினங்களுக்கு எளிமையான வடிவில் இலக்கணங்களை அளித்து, இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கும்படி அரிய பணி செய்திருக்கும் மா வரதராசன் அவர்கள், இந்தத் திங்கள் முதல் முழுக்க முழுக்க தமிழ் மாதங்களின் பெயரிலேயே வெளியாகும் “தமிழ்க்குதிர்” என்கிற மாதாந்திர மின்னிதழையும் உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார் என்பது பாராட்டத் தக்கது.

    அவருக்கே இந்த வார “வல்லமையாளர்” விருதை வல்லமை மின்னிதழ் சார்பில் அறிவிப்பதில் அவரது மாணவனாகப் பயின்ற யான் மிகவும் பேருவகை எய்துகிறேன்.

    சொல்லரும் தமிழர் யாப்பின்
       சுவையினை இணையம் கற்க,  
    வெல்லமாந் தமிழத் தாயும்
       வெல்லவே உழைப்பை நல்கிப்
    பல்கலைக் குழுவைச் செய்த
       பாவலர் வரத ராசன்
    வல்லமை யாளர் என்று  
       வழங்குதல் பொருத்த மாமே!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?cat=955

     

     

    Share