இழக்கக் கூடாததை இழந்தவர்களாய்!
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
உண்மை என்று நம்பியதற்காக
வெற்றி பெறுவதற்குமுன்
தீர்த்து விடவா
இத்தனைப் பட்டாசுகளையும்
தீர்த்துக் கட்டினாய்?
தீமைகள்
நல வழிப்பட்டதென்று
எமது
தியாக வரலாற்றின்
தீர்வுகள்
இருண்ட சாம்ராஜ்யங்கள்!
நமது
சாவகாசங்கள்
புஸ்வாணங்களும்
பட்டாசுகளுந்தான்!
அதனால்தான்
நமது பட்டுக்களின் மேல்
இச்சை தீர்க்கிறான்
பக்கத்து வீட்டான்!
எட்டிப் பாருங்கள்
எத்தனை யுவதிகள்
இழக்கக் கூடாததை இழந்தவர்களாய்!
பொத்திப் பொத்தி வளர்த்தானே
நம் சகோதரன் – இன்று
புட்டுக் கொண்டு வருவது
வீரத்தின் விரல்கள் மட்டுமல்ல
கதுப்புகளை நனைக்கும் கண்ணீரும்தான்!
கட்டுப் போட்டானே
அச்சம், மடம், நாணம் என்று
கசக்கிப் போட்டானே – கயவன்
இச்சை கொண்ட மிருகம் என்று!
அமைதி காக்க அத்தாட்சிப் பத்திரங்கள் அதற்கு
ஏந்தி வந்தான் துப்பாக்கியந்திரங்கள் -இந்தத்
தப்பான தாத்பரியங்களுக்குத்
தார்மீகத்தில்
தியாகத் தீட்சைகள்!
அமைதி ஒப்பந்தங்கள் – இவை
அரசியல் தீப்பந்தங்ள் – அதில்
நாம் இழந்தது உரிமைகளல்ல
இராஜ தந்திரங்கள்
இராணுவ ரகசியங்கள்!
தட்டி எழுப்பியவனே – எம்மைத்
தட்டி உறங்க வைத்து விட்டுக்
குரல் வளையை அறுத்துக்
குருதி குடிக்கின்றான்!
காந்தியத்தின் தாயகமே
கோர வெறியர்களை – நீயும்
கொள்கைக் கொத்தர்களென்று
கௌரவிக்கின்றாயே?!
ஓ…!
“கொல்” கைக் கொத்தர்கள்
சேர்ந்து துகிலுரியும்
கிருஸ்ண பரமாத்மாக்கள்!