-மேகலா இராமமூர்த்தி

திருமதி. ராமலக்ஷ்மி ராஜனின் புகைப்படத்தை இவ்வாரத்திற்கான போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். வல்லமைமிகு பெண்மணிகள் இவ்விருவருக்கும் நன்றி நவில்கின்றது வல்லமை இதழ்.

 

 elephant

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விலங்குகளில் கம்பீர அழகுகொண்டது யானை; தன் நெடிதுயர்ந்த தோற்றத்தால் காண்போரை வியக்கவும் நயக்கவும் வைப்பது!

காடுகளில் புலியினையும், களங்களில் வீரரையும் பொருது கொல்லும் ஆற்றல்மிகு களிற்றியானை, தெருக்களில் வலம்வருகையில், அதன் இயல்புக்கு மாறான வகையில், ஒருவித மிரட்சியோடும், மருட்சியோடும்  நம்மை நோக்குவது வேதனை தருவதாயுள்ளது.

இனி கவிஞர்களின் கவிதைகள் நம் கவனத்திற்கு…

***

”யாரோ கொடுத்த அன்பளிப்பாய்க் காட்டிலிருந்து நாட்டுக்குள் வந்தேன். இங்கே எனக்கு அன்பை அளிக்க எவருமில்லை! பாகனுக்கு உழைப்பதே என் பிழைப்பு; யாரும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் மதிப்பு!” என உள்ளம்குமுறும் களிற்றைக் காண்கின்றேன் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையில்.

யாரோ கோவிலுக்கு
கொடுத்த அன்பளிப்பாம் நான்
காட்டைவிட்டு( பிறந்தவீடுவிட்டு)
நாட்டுக்குள் ( புகுந்தவீடுவந்ததும்) பாகனின்
கட்டுப்பாட்டுக்குள் வந்தாயிற்று
என் பழக்க வழக்கங்கள் யாவும்
கரும்பையும் மூங்கிலும்தின்றவனுக்கு
கடலையும் பொங்கலும் புளியோதரையும்
சர்க்கரை வியாதியை உண்டாக்க
மருத்துவரின் பரிந்துரைப்படி காலை
ஒரு மைல்தூரம் நடைபயிற்சி பாகனுடன்
போகும் வழியெல்லாம் மக்கள் அணுக
சாமிக்கு சாமரம் வீசிய கையால்(தும்பிக்கையால்)
யாசகம் கேட்க வைத்தான் பாகன்
மக்கள் கொடுக்கும் இலவசம்
உணவென்றால் எனக்கு
பணமென்றால் பாகனுக்கு என
புரிந்துணர்வு ஒப்பந்தம் இருவருக்குள்

[…]

வேட்டையாடிய யானையாகி பாகன் கையில்
வித்தை காட்டும் பொருளாகி வாழ்கிறேன்
என்னை விட மனிதனுக்கு சக்தி அதிகம்தான்
தன்னைப்போலவே என்னை மாற்றியுள்ளானே?
வருடம் ஒரு முறைபிறந்த வீடு அனுப்புவார்கள
ஆட்சியாளரின் அறிவுறைப்படி அதிகாரிகள்
அது ஒன்றே எனக்கு ஆறுதல்தரும் விஷயம்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான்
எல்லா சவுக்கியமும்…….என்பதே நியதி

***

”கடவுளாய் முன்னோர் வணங்கிய என்னை, மக்கள்முன் கையேந்தவைத்த மனிதனின் மடமையை, பேராசையை என்னென்பது?” என்றெண்ணி வருந்துகின்றது இரந்துண்ணும் இந்த யானை என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

உருவில் பெரிய யானையதை
ஊர்வலம் பவனி நாயகரை,
தெருவில் இரந்திட விட்டுவிட்டார்
தேவை தமக்குப் பெருக்கிவிட்டார்,
பெருகிடும் மாந்தர் ஆசைக்கே
பெருந்துணை யாக்கிக் களித்திட்டார்,
கருணை உருவாய்க் கண்டமுன்னோர்
கடவுளாய்ப் படைத்ததை மறந்தாரோ…!

***

கோயில்வாசலில் நிற்கும்போது யானைக்குப் பிடிக்காத மதம், கோயிலுள் மனிதரின் குலமும் கோத்திரமும் விசாரிக்கப்படும்போது ஆத்திரத்தில் பிடித்துவிடுகின்றது; காரணம்…அதற்குப் பிடிப்பதில்லை மனிதரின் ’மதம்’ என்பது திரு. மெய்யன் நடராஜின் வாதம்!

கோயிலின் வாசலில் நிற்கின்றபோது
கும்பிட்டு வணங்கிப் போவோர் கண்டும்
பிடிக்காத மதம், யானைக்கு
கோயிலின் தெய்வத்தை
கும்பிட வருவோரிடத்தே
குலம் கோத்திரம் கேட்டுக்
குடைவதைப் பார்த்ததும்
கோபத்தில் பிடித்துவிடுகிறதோ?

*** 

”மதம் ‘பிடித்த’ மனிதரெலாம் மதம்பிடித்தே ஆடிடுவார்; மாற்றுமதங் கொண்டவரை மிதிப்பார்; தவறாய் மதங்கொண்ட யானையென விதிப்பார்” என்று மனிதமனத்தைப் படம்பிடித்துக்காட்டும் யானையைத் தன் கவிதையில் தீட்டியுள்ளார் திரு. இளவல் ஹரிஹரன். 

பேருருவ யிரொன்று
பிச்சைகேட்க வைத்துவிட்ட
பீடிழந்தஂநிலைதந்த மனிதன்….தன்
பேராசைக் கிரையாக்கும் கொடியன்.

காடிழந்த கவலையோடு
வாழ்விடத்தைத் தேடவைத்து
ஊரூராய் ஓடவிட்ட மனிதன்….தன்
ஒருநலமே நோக்கமெனும் கொடியன்.

[…]

மனமகிழும் சர்கஸிலே
மந்திரமாய் எனையாட்டி
மக்களினைக் கவருகின்றான் மனிதன்….என்
மனக்கவலை புரிந்துகொள்ளாக் கொடியன்.

மதம்பிடித்த மனிதரெலாம்
மதம்பிடித்தே ஆடிடுவார்
மாற்றுமதங் கொண்டவரை மிதிப்பார்தவறாய்
மதஙகொண்ட யானையென விதிப்பார்.

ஓரானை பேரானை
ஒன்றானை வணங்குதலால்
ஊரானைக் காப்பதெந்தன் பண்பாம்….நல்ல
பேரானைக் காப்பதுங்கள் அன்பாம்.

சிறியதொரு சங்கிலியில்
சிற்றானை கட்டுண்டு
பெரியதொரு தும்பிக்கை ஆட்டும்அது
பேரன்பில் பிணைந்திருக்கக் காட்டும்.

கைநீட்டிப் பிச்சைகேட்கும்
கவலையான நிலையெனக்குக்
கணப்போதும் தந்திடவும் வேண்டாம்மனிதா
கணநாதன் துணைமறக்க வேண்டாம். 

***

கட்டுப்பாடற்றுக் காட்டில் சுதந்திரமாய்த் திரிந்துவந்த யானையைத் தன் உணவுத் தட்டுப்பாடு தீர்க்கப் பிச்சையெடுக்கவைத்த பாகனின் வன்செயலையும், அதனால் யானைபடும் பாட்டையும் சொல்லோவியங்களாய்த் தீட்டியுள்ளீர்கள் கவிஞர்களே! பாராட்டுக்கள்!

அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துவருவோம்!

இயற்கையின்படைப்பில் மனிதனை விஞ்சிய தன்னலஉயிர்கள் ஏதுமில்லை. தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்; தான் வளமாய் வாழ்வதற்கு மன்னுயிர்களுக்கெல்லாம் இன்னல் தருவான். இதோ…கம்பீரநடைபயின்று காட்டில் களித்திருந்த களிற்றியானையை இரவலன் ஆக்கினான் இரக்கமற்ற மனிதன். இயற்கையோடு போட்டியிட்டுத் தோல்வியே தழுவிடினும் மாறவில்லை அவன் குணம்; நினைக்கையில் குமுறிடுதே மனம்! என்று யானையின்மீது கழிவிரக்கம்கொண்டு கவிவடித்திருக்கின்றார் ஒரு கவிஞர்!

எங்களை அறியவில்லை!

ஆண்டவன் பணிக்கு வந்த உன்னை
அங்காடித் தெருக்கள்தோறும்
கையேந்த வைத்த
கருணையற்றவர்கள் நாங்கள்

அன்பிற்கு நீ தந்த இசைவினை
அடிமைச் சாசனமென்று எண்ணி
உன்னை அடக்கி விட்டதாய்ப்
போலிப் பெருமிதத்தில் புன்னகைக்கிறோம்

உன் பலம் உனக்குத் தெரியாதென
நிச்சயமாய் நம்பும் நாங்கள்
எங்கள் பலவீனங்களை
என்றுமுணர்ந்ததில்லை
அதனால்தான்
இயற்கையை வென்றுவிட்டோமென்ற
எங்கள் இறுமாப்பு,
கொட்டிய மழையில்
முற்றிலுமாய்க் கரைந்தது

பண்பற்ற எங்கள் செய்கைகளால்
நீ பதற்றமடையும் பொழுதெல்லாம்
மதம் பிடித்துவிட்டதாய் அறிவித்து
மயக்க ஊசிப் போடுகிறோம்
ஆனால் நாங்களோ
மத வெறியுடனேத் திரிகிறோம்
மயக்க ஊசிப்போட மட்டும்
மருத்துவர் எவருமில்லை!

அவ்வப்போது மதமும், வெறியும் கொள்ளும் யானையினும், எப்போதும் மதவெறிகொண்டலையும் மனிதனே அதிக அழிவினை அவனிக்குத் தருகின்றான் எனும் பொருத்தமான கருத்தைச் சொல்லும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவிக்கின்றேன். 

***  

கல்லினுள் இருக்கும் தேரைக்கும் படியளப்பவன் அந்த ஈசன் என்பர் ஆன்றோர். ஆனால் இங்கோ பாகனுக்காக வீதியில் அலைந்துவிட்டுத் தன் விதியை நொந்தபடி வாயிலில் நிற்கும் இந்த வாயில்லா சீவனின் துயர் கண்டும் அவன் கல்லாய் இருப்பதேனோ? என்று அறச்சீற்றம் கொள்ளும் கவிதையொன்று!

பிச்சை எடுக்க வைத்த
மனிதனின் துரோகத்தில்
தவம் கலைந்தது
ஒற்றை யானை

யாகச காட்சிக்கு
மறுத்து விட்ட பசி
வெறும் கோயிலின்
சாட்சியானது

யோசிக்க யோசிக்க
எறும்பானது யானை,
பெரும் சோகம்
கண்களானது..

புகைப்படத்தில்
பதிந்திட்ட
காடுகளின் பெருந்துயர்
அங்குச பொய்மையில்
ஆத்திரம் அடக்கியது

எட்டிப் பார்த்து விட்டு
தலை கவிழ்ந்து கொண்ட
கடவுள் எப்போதும் போல..
அதே கல்லுக்குள் 

கடவுளைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிடும் ஒரு களிற்றினைக் கண்ணுறச்செய்த திரு. கவிஜியின் கவிதையைப் பாராட்டுக்குரியது என்று சுட்டவிரும்புகிறேன்.

பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 48-இன் முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *