-மேகலா இராமமூர்த்தி

cat and child

பூனையும் குழந்தையும் கொஞ்சிமகிழும் அழகுக்காட்சி நெஞ்சைக் கவர்கின்றது. இந்த அரிய காட்சியை அற்புதமாகப் படம்பிடித்துவந்திருக்கும் திரு. எஸ்.எம்.கே.வுக்கும், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குப் பரிந்துரைத்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி.

உறவுகளையும் நட்பையும் தகுதி அடிப்படையில் தெரிவு செய்யும் பெரியோர் மத்தியில், உயிர்களிடத்தில் பேதமின்றிப் பரிவுகாட்டும் கள்ளமற்ற வெள்ளை மனம் பிள்ளைகளுடையது!

பாலுளம் படைத்த அப்பிஞ்சுகளை நஞ்சாக்கும் திருப்பணியைப் பெற்றோரும் சுற்றமும் செய்யாதிருக்கவேண்டும்!

இனி, கவிஞர்கள் கவிபாடும் நேரம்!

*****

”வீட்டுப் பூனையையும் காட்டுப் புலியையும் பேதம்காட்டாமல் நேசிக்கும் பிள்ளைகளுக்கு உணவோடு வேண்டாத பழக்கங்களையும் சேர்த்து ஊட்டுகின்றானே பாவி மனிதன்!” என உளம் நோகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

வளர்வது…

அஞ்சுவதில்லை
பிஞ்சுக் குழந்தை,
அதற்கு
புலிக் குட்டியும்
பூனைக் குட்டியும் ஒன்றுதான்..

பிள்ளை வளர
உணவு ஊட்டுவதனுடன்,
உதவாத பழக்கங்களையும்
ஊட்டிவிடுகிறானே மனிதன்..

விளைவு-
அச்சமும் பேதங்களும்
பிள்ளையின்
வெள்ளை உள்ளத்தைக்
கொள்ளைகொண்டுவிடுகின்றன,
வளர்வது
பிள்ளையின் உடல்தான்-
உள்ளமல்ல..

மாறுவாயா மனிதா
இனியாவது…!

*****

”தன் சின்னச் சின்ன ஆசைகளைப் பட்டியலிட்டு, கூண்டுக்கிளியாய் அடைபட்டிருக்கும் தனக்கு அந்த ஆசைகள் கைகூடும்வரை, இந்தப் பூசையே (பூனை) துணை” என்றுரைக்கும் குழந்தையைக் காண்கின்றோம் திருமிகு. ஹேமா வினோத்குமாரின் கவிதையில்.

நின்னை பிரியோன்!!

சிறுபிள்ளையென்று செல்கிறாயோ??
விளையாட மறுக்கிறாயோ??
அம்மா வைகிறாள்!!
அப்பா கோபிக்கிறார்!!
தாத்தாவும் தமையனும் தண்டிக்கிறார்கள்!!
புறம் செல்லாமல் அடைபட்டேன்
கூண்டிற்கிளியாய்!!
புறம் சென்றால் கால் பழுக்கும்
பாட்டியின் கடுஞ்சொல். !!
புழுதிமண்ணில் தவழ ஆசை!!
ஏர்மாட்டின் பின்செல்ல ஆசை!!
சேற்றுமண்ணோடு விளையாட ஆசை!!
குஞ்சுக்கோழிகளைக் கொஞ்ச ஆசை!!
இவ்வனைத்தும் நிறைவேற வேண்டும்
என்று நினைவெல்லாம் ஆசை!!
இவ்வனைத்திற்கும் அப்பால்
உன்னைக் கொஞ்சி மகிழ ஆசை!!
மேற்சொன்ன ஆசை எப்போதோ??
கூண்டிற்கிளியாய்!!
ஆசைகளுடன்!!
நீயாவது விலகாதே!!
ஆசை நிறைவேறும் மட்டும்!!
அதுவரை!!

நின்னை பிரியோன்!!

*****

”பயமறியாத இளங்கன்று பேதமறியாது உயிர்களை அரவணைக்கின்றது. அன்பின் வழியதன்றோ உயிர்நிலை!” என்று அன்பின் இன்றியமையாமையை அகிலத்துக்கு உணர்த்துகின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம். 

அரவணைப்பு:

பூந்தளிர் அணைப்பில் ஒரு பூனை இங்கே!
சாந்தமாய் இருக்குது தன் குணம் மறந்தே!
இளங் கன்று பயமறியாது!
பிள்ளைக்கு பேதம் தெரியாது!
அன்பின் பிடியில் அகப்படும் மலையே!
அன்பின் விளைவில் அனைத்தும் நலமே!
அன்னையின் அணைப்பில் பிள்ளை மகிழும்!
பிள்ளையின் அணைப்பில் அகிலம் மகிழும்!
நீரின் அணைப்பில் பயிர்கள் வாழும்!
ஆண்டவன் அணைப்பில் உலகம் வாழும்!
காற்றின் அணைப்பில் சீவன் வாழும்!
அணைப்பில்லா உலகம்!
உயிரில்லா மெய்யாகும்!
மணமில்லா மலராகும்!
இ!சையில்லா பாட்டாகும்!
ஒளியில்லா விளக்காகும்!
மழையில்லா பயிராகும்!
அன்பில்லா தாயாகும்!
அரவணைத்து வாழ்ந்திட்டால்!
உலகம் உன் வசமாகும்!
கணவன், மனைவி அரவணைத்து சென்றிட்டால்!
இல்லறம் இனிதாகும்!
அண்ணன், தம்பி அரவணைத்து வாழ்ந்திட்டால்!
குடும்பம் சிறந்தோங்கும்!
மாமியார், மருமகள் அரவணைத்து இருந்திட்டால்!
சொர்க்கம் வீட்டிலே உருவாகும்
அவனின்றி ஓர் அணுவும் அசையாது!
இது ஆன்றோர் மொழி!
அரவணைப்பின்றி உலகம் மகிழாது!
இதுவே இன்றைய வாழ்வின் வழி!

*****

”சாதியற்ற சமூகத்தைப் படைக்கவும், சமநீதியற்ற சமூகத்தை உடைக்கவும் நாம் இணைந்து பாடுபடுவோம்” என்று புரட்சிசெய்யப் பூனையைத் துணைக்கழைக்கும் பாப்பாவைக் காண்கிறோம் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனின் பாட்டில். 

பாப்பா பாட்டு

என்னிடம் வாருங்கள் பூனையாரே
நாம் அனைவரும் ஒன்றென பாரதி சொன்னாரே

காக்கை குருவி எங்கள் சாதியெனப் பாடினாரே
சாதிகள் இல்லை என்றென்னிடம் கூறினாரே

என்னிடம் வாருங்கள் பூனையாரே
பேதமின்றி வாழ்ந்திடக் கற்றோரே

இணைந்திருவரும் பாடம் புகட்டலாம்
வேற்றுமையும் பாகுபாடும் தவறென உணர்த்தலாம்

என்னிடம் வாருங்கள் பூனையாரே
நானில மனிதருக்கு நல்வழி புகட்டிடுவீரே

எந்நிற மிருப்பினும் யாவும் ஒரே தரமென்று
எந்நிலையிலும் தன்னிலை மாறாமல்
என்றும் எங்கும் கூடி வாழும் பூனையாரே

எம் மனிதருக்கும் அதை உணர்த்திட வாரீரே
மதம் நிறம் மொழியென அவர் பாடும்
வேற்றுமை கீதங்கேட்டு பாரதத்தாய் வருந்துவதைப் பாரீரே..

என்னிடம் வாருங்கள் பூனையாரே
மனிதரிடம், சாதிகள் இல்லையென உணர்த்துவீரே
பாகுபாடு கூடாதென தெளிய வைப்பீரே

என்னிடம் வாருங்கள் பூனையாரே
நாம் அனைவரும் ஒன்றென பாரதி சொன்னாரே!!

*****

ஆசையுடன் மழலையர் விளையாட ஏற்றது மீசை வைத்த பூனைக்குட்டி; பாரதியின் ஏட்டில், மருதகாசியின் பாட்டில் துள்ளி இடம்பிடித்தது இந்தப் பூனைக்குட்டி; பாய்ந்து இரையைப் பிடிக்கவும் செய்யும்; சாய்ந்து மழலை மடியில் உறவாடவும் செய்யும்” என்று இனிய பூனைக்கதையொன்றைத் தன் கவிதையில் சொல்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

குழந்தையும் பூனையும்..!

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றென..
……………கவியரசின் மனதிலன்று தத்துவமே பிறந்தது.!
மழலை பேசும்அழும் விழும்எழும்.!…வீட்டில்..
……………பழகும் பிராணியோடு பயமின்றி விளையாடும்.!
அழுக்காக்கிக் கொள்ளும் உடம்பையும் சட்டையும்..
……………அழுக்கதன் மனதிலொரு போது மில்லையாம்.!
பழுத்த பெரியோர்களைப் பழமைபேசச் சொல்லி.!
……………குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும்.!.
ஆசையுடன் வளர்ப்பதற்கும் பழகு தற்கும்..
……………ஐந்தறிவு ஜீவிகளும் பலவுண்டு நம்மிடையே.!
மீசைவச்ச பூனைக்குட்டியும் அதிலே ஒன்றாம்..
……………மியாமியா வெனக்கத்தும்! நம்காலடியில் சுற்றும்.!
தோசைபோல ஒட்டிக் கொள்ளும் நம்மடியில்..
……………தொட்டு வருடினால் மனதுக்கு இதமளிக்கும்.!
ஆசைநாயகிக்கு அருமைப் பரிசாக அப்பூனையை..
……………அயல்நாட்டில் வழங்கும் வழக்கமும் உண்டாம்.!..

வானூர்திபோல சிறிதுதூரம் வேகமாக ஓடியே..
……………வகையாய் இரையை வாயால் பிடிக்கும்.!
தானும் புலிக்குச் சற்றும் சளைத்தவனில்லை..
……………எனச்சீறிப் பாய்ந்துதன் பல்லைக் காட்டும்.!
ஊனுண்ணும் பாலூட்டி,!..சஷ்டியின் வாகனமது!..
……………உபத்திரவம் மனிதர்க் கென்றும் செய்யாது.!மீனுணவை விரும்பி உண்ணும் மிச்சமதை..
……………தானீன்ற குட்டிக்குப் பகிர்ந்து கொடுக்கும்.!..

காட்டில் உலவும் புலியுமிதற்கொரு உறவாகும்..……………கனிவுடன் பழகும் ஆபத்தில்லா அழகுப்பூனை.!
வீட்டில் நமக்குப் பொழுதுபோகும் தன்னிடம்..
……………மாட்டிய எலியைக் கவ்வித்தூக்கியே பந்தாடும்.!
பாட்டில் பாரதியு மிதற்கொரு இடமளித்தான்..
……………பூனையின் பலநிறம் சொல்லும் தத்துவத்தாலே.!
ஏட்டில் எழுதிய மியாவ்மியாவ்ப் பாடலின்றும்..……………என்றும் ஒலிக்கிறது மருதகாசியின் நினைவாக.!

*****

”காலை நேரப் பரபரப்பில் தாய்க்கும் தந்தைக்கும் குழந்தையிடம் பாசம் காட்ட நேரம் வாய்க்கவில்லை; அன்புக்கு ஏங்கும் குழந்தை பூனையைக் கொஞ்சி நெஞ்சம் ஆறுகின்றது” என்கிறார் மரு. எஸ். பார்த்தசாரதி. 

காலத்தை வெல்ல வேண்டுமே !
கால்களில் காகமும் குருவியும் —
காலையில் கிழக்கு நோக்கி
பணிக்குப்பறக்கும் தந்தை –
வேகுமோ அரிசியும் பருப்பும்
வேகத்தில் நடக்கிறது சமையல் –
அவகாசம் கொடுக்காத அவசரம் –
வேலைக்கு நேரமாகிறதே –
மேற்கே பறக்கும் தாய் –
ஓ ! குட்டிப்பூனையே !
அந்தக்குழந்தை
அன்பு காட்ட ,
பாசம் பொழிய ,
உன்னைத்தவிர யாரிருக்கார்
இந்த பொருள் சார் உலகில் ?

*****
பூனையும் குழந்தையும் பரிவோடு இணைந்திருக்கும் காட்சியை, அதில் தெரியும் அன்பின் மாட்சியை அழகுறப் பதிவுசெய்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து…

குழந்தை மனம்

பூனையின் பட்டுடல் தொட்டப்
பூங்கரம் கொண்டு மொட்டு
விரிந்திடும் மலரைப் போன்று
வியந்திடுமன்றோ குழந்தை மனம்! – அதை
பட்டம் பதவி பணமென்ற
பகட்டுக ளனைத்தும் சேர்ந்தாலும்
எட்டிப் பிடிக்க இயன்றிடுமா
எந்திர வாழ்க்கை மனிதனுக்கு?

வண்ணத்துப்பூச்சி பறப்பதைக் கண்டும் – வானில்
விண்மீன் இருப்பதைக் கொண்டும்
மிதக்கும் வட்ட நிலவினைப்போல
முகம் மகிழ்ச்சியடையும் மழலைக்கு! 
அரும்பாடு பட்டு உழைத்து
அங்கம் நோக ஈட்டியவெல்லாம்
தங்கமனம் கொண்ட குழந்தையின் 
தகுதிக் கென்றும் ஈடாமோ?

இருப்பதைக்கொண்டு மகிழும் இதயம்
இன்முகத்தோடு இருந்திடும் என்றும்
சற்றும் தளரா சுறுசுறுப்பு – வெறுப்பைச்
சடுதியில் மறந்திடும் குழந்தைமனம்!
தரங்கெட்ட குறுகிய நோக்கம்
தகுதியற்ற கோணல் புத்தி
செல்லும் குறுக்கு வழிகளெல்லாம் – மனிதா 
செம்மை வாழ்வைக் கொடுத்திடுமா?

குழந்தைமை ஒரு வரம்! ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இறையடியாரைப் போல் குழந்தையின் உலகில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் பேதமில்லை! ”எத்துணைப் பொருட்செல்வத்தை வாரிவாரிக் குவித்தாலும் மழலையின் பொன்மனத்துக்கு அவை ஈடாகுமா?” என்று கவிஞர் கேட்கும் கேள்வி நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

பூனையைத் தொட்டு மகிழும் பூந்தளிரின் மகிமையைச் சொல்லோவியமாய்த் தீட்டியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பினைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 139இன் முடிவுகள்

  1. இவ்வாரம் பாராட்டு பெற்றவரை

    அகமகிழ்ந்து..

    ஆசையுடன் வாழ்த்துகிறேன்..

    ஆ.செ அவர்களை..

    வல்லமைக்கு வல்லமை சேர்க்கும் வண்ணம் கவிஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தட்டும்..

  2. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கட்கு,
    முன்னுரையில் பரிசுகள் கிடையாது. பாராட்டு மட்டும்தான் என்றீர்கள்.
    தங்களின் பாராட்டே பெரிய பரிசுதான்.
    இது எனது முதல் முயற்சி.
    சிறந்த கவிதையாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.
    அயல் மொழிகள் கலவாமல் எழுத விழைகின்றேன்.
    பாராட்டோடு நில்லாமல் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.
    அனைவருடைய கவிதைகளையும் படித்தேன்.
    அனைத்தும் நன்று.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    எனது கவிதையைப் படித்து பாராட்டிய உங்களுக்கும்
    படித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

     வாழ்க வளமுடன்.

     – ஆ. செந்தில் குமார்.

  3. திரு. பெருவை பார்த்தசாரதி ஐயா அவர்கட்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *