பந்தோடு பந்தாக….
க.பாலசுப்பிரமணியன்
கைப்பந்தாய் கால்பந்தாய் வண்ணமலர் கலைப்பந்தாய்
வான்வெளியில் கோள்கள் எண்ணின்றி இருக்கையிலே
கருப்பந்தில் எனைவைத்து வாழ்வொன்றில் விளையாட
பூப்பந்தில் அழைத்ததேனோ யானறியேன் பூரணனே !
புலன்தேடும் தேடலிலே வாழ்வெல்லாம் இரையாக்கிப்
பார்முழுதும் பகலிரவாய் அலைந்தாலும் பயனேது
ஊர்தேடிப் பேர்தேடி உறவுபலவும் தேடித்தேடி
புகழ்தேடிப் பாதையிலே மாய்வதேனோ மாயவனே !
கன்றாகிக் காளையாகிக் காமத்தில் வேடுவனாகிக்
காலத்தின் தூதுவனாகிக் கருமத்தின் சுமையாகிக்
கற்பனையின் இரையாகிக் களைப்பின்றி விளையாடிக்
கடைநிலையில் மூப்பினிலே முதிர்வதே னோ மூத்தவனே !
விதிவிரட்ட ஒருபக்கம் மதிதடுக்க மறுபக்கம்
சதிராடும் வாழ்வினிலே கதிதேடும் உயிரே
விழிபிதுங்கி மதிமயங்கித் தன்னைத் தேடும்
தேடலின் முடிவென்ன யானறியேன் வேதவனே !
பருவங்கள் மாறிடவே பதறுகின்ற நெஞ்சமே
உருவங்கள் மாறிடினும் உண்மைகள் உணராது
தருணங்கள் வீணாக்கித் தேடிட்ட திரவியத்தை
நிலையென்று நினைத்தே தவிப்பதேனோ பராபரமே !
கூவிட்ட சேவலுக்கோ கதிரவனே சொந்தமில்லை
குயில்பாட்டு இனித்தாலும் குயிலுக்குச் சொந்தமில்லை
நறுமணத்தைச் சுமந்தாலும் காற்றுக்குச் சொந்தமில்லை
நானென்று அழைப்பதையே நாமறக்குமோ நாரணனே !
ஆன்மாவின் பந்து பண் அருமை