Author: விப்ரநாராயணன்

  • வழித்துணை

    வழித்துணை

    -கவிஞர் விப்ரநாராயணன் திருமலை 

    அரைகுறை அறிவு அழிவைத் தருமே
    ஆழ்ந்த புலமை நிறைகுட மாமே
    நிறைந்த மனமே நிம்மதி தருமே
    நேர்மை நாணயம் உறவின் உயிரே
    திருமறை கற்றல் தெளிவு தருமே
    தருமம் வாழ்வில் உயர்வைத் தருமே
    பிறருக் குதவுதல் பிறப்பின் பயனே
    பரமன் நாமமே வழித்துணை யாமே

    அலைகள் அரவம் கடலின் அழகு
    ஆனந்த மனமே பிறப்பின் அழகு
    கலைகள் யாவும் இயற்கை யழகு
    கவிதை நயமே காப்பிய அழகு
    உலையில் அரிசி துடிப்ப தழகு
    உதய சூரியன் விசும்பி னழகு
    மலைகள் நதிகள் யாவும் அழகு
    மலையும் நதியும் வழித்துணை யாமே

    பகையை மறத்தல் மனிதனின் பண்பு
    பணிவே கல்வி கற்றலின் பயனே
    மிகைபடப் பேசுதல் நன்மை தாரா
    வரம்பு மீறல் தீமை பயக்கும்
    நகைச்சுவைப் பண்பு உடல்நலம் காக்கும்
    நல்வழி நடத்தல் நம்மை உயர்த்தும்
    தொகையில் ஊறி மகிழ்தல் ஊறே
    தகைசால் நட்பே வழித்துணை யாமே.

    புலன்வழி செல்லல் தீமை தருமே
    பொய்யும் புரட்டும் பூசலைத் தருமே
    நிலவளம் நீர்வளம் நன்மை நல்குமே
    நாடு செழிக்க இவையும் தேவையே
    குளங்கள் ஏரிகள் நிரம்ப வேண்டுமே
    கழனிகள் யாவும் பயிர்க்க வேண்டுமே
    கொலைகள் கொள்ளைகள் ஒழிய வேண்டுமே
    கண்ணன் பாதையே வழித்துணை யாமே

    கதைகள் மூலம் கற்பனை வளருமே
    கவிதைகள் மூலம் ரசனை வளருமே
    மதங்கள் மூலம் நல்வழி தெரியுமே
    மனித மாண்புகள் என்றும் மிளிருமே
    எதையும் எதிர்க்க உறுதி வேண்டுமே
    எங்கும் எதிலும் பணிவு வேண்டுமே
    குதலை மொழியில் மகிழ வேண்டுமே
    குழந்தை மனமே வழித்துணை யாமே

    நாட்டு நலனே நம்மிலக் காகும்
    நன்மைகள் செய்வதே நம்மூச் சாகும்
    ஆடல் பாடல் ஆனந்தம் தருமே
    அவற்றை வளர்த்தல் நம்பணி யாகும்
    ஆட்டு மந்தைபோ லணிசே ராது
    அகத்தில் தெளிவு பெறுதல் வேண்டும்
    நாட்டுப்பற் றின் பொருளை உணர்ந்தால்
    நம்பண் பாடு வழித்துணை யாமே

    ஆன்ம நேய வொருமை வேண்டும்
    அனைவரும் ஒன்றென் றெண்ண வேண்டும்
    மான்விழி மாதரை மதிக்க வேண்டும்
    மனதை யாளக் கற்றல் வேண்டும்
    தேன்சுவை போல்நாம் பேச வேண்டும்
    தேச நலனி லக்கரை வேண்டும்
    நானெனு மகந்தை அழிய வேண்டும்
    நாதன் நாமமே வழித்துணை யாமே

    கல்வியும் கேள்வியும் சிறப்பைத் தருமே
    காத லுணர்வும் கல்வி யாகுமே
    நல்லதை நாடிச் செல்லல் வேண்டும்
    நல்லோ ருறவு நாளும் வேண்டும்
    சொல்லில் பொருளும் தெளிவும் வேண்டும்
    சொல்லால் சுடுவதைத் தவிர்க்க வேண்டும்
    பன்மதம் பல்லின மெல்லாம் ஒன்றே
    பண்பட் டமனமே வழித்துணை யாமே

    கண்ணனும் ஏசுவும் அல்லா வுமொன்றே
    கீதை கூறும் கருத்து மிதுவே
    எண்ணம் சொல்செயல் மூன்றும் ஒன்றாய்
    இணைந்தி யங்கிட முயல வேண்டும்
    வண்ண வண்ண ஆடைக ளணியலாம்
    மனிதப் பண்பதில் மிளிர வேண்டும்
    திண்ணமாய் தன்னல மறவே வேண்டாம்
    தன்னல மின்மையே வழித்துணை யாமே

    கவிதை ரசனை மனநல மளிக்கும்
    காப்பிய போதனை அகவிருள் நீக்கும்
    புவியைப் படைத்த பரம்பொருள் தானே
    பலவுயி ரையும்நம் மையும்படைத் தானே
    நவவித ரசனையை யளித்து நம்மை
    நல்மனி தனாக வாழச் செய்தான்
    எவ்விதக் கவலையு மின்றி வாழ
    எம்பிரான் திருவருள் வழித்துணை யாமே1

    Share
  • தீபாவளி நினைவுகள்

    -விப்ரநாராயணன் 

    தீப  வொளியை  வணங்கிடுவோம்
       தீயவை  அகல  வேண்டிடுவோம்
    பாபம் தொலையப்  பாரதத்தில்
       பலரும்   சேர்ந்து   உழைத்திடுவோம்

    அன்பும்  கருணையும்  சுரந்திடவே
       ஆதவன் அருளை நாடிடுவோம்
    தன்னுள்   பகைமை  ஒழிந்திடவே
       தன்னிலை  யறிய  முனைந்திடுவோம்

    புதிய ஆடைகள்  அணிந்திடுவோம்
        புதியக்  கவிதையாய்  வாழ்ந்திடுவோம்
    விதியை நினைந்து  வருந்தாது
        வீரனாய்  வாழ நினைத்திடுவோம்

    வெடிகள்  கொளுத்தி  மகிழ்ந்திடுவோம்
       வேதனைகள்  வராது  தடுத்திடுவோம்
    படிகள்  தாண்டி  உயர்ந்திடவே
       பணிவாய் வாழக்  கற்றிடுவோம்

    வாழ்வின்  பொருளை  அறிந்திடுவோம்
       வாய்மை கூறத்  துணிந்திடுவோம்
    ஏழ்மை நீங்க  உறுதியுடன்
       எதையும் எதிர்க்க  இணைந்திடுவோம்

    அறத்தின்  வழியில் நடந்திடுவோம்
       ஆணவ மின்றி  உதவிடுவோம்
    புறத்தே தூய்மை  நிலைத்திடவே
       பசுமைப்  புரட்சி  செய்திடுவோம்

    நாட்டில்  ஊழலை  ஒழித்திடுவோம்
       நேர்மையாய் வாழக் கற்பிப்போம்
    வீட்டைச் சரியாய் அமைத்திடவே
        விளக்கமாய் உணர்ந்து செயல்படுவோம்

    ஆடிப்  பாடக்  கூடிடுவோம்
       அனைவரும் இறைவனைத் தொழுதிடுவோம்
    நாடும்  வீடும் நலம்பெறவே
       நாதன் திருவடி பணிந்திடுவோம்

    Share
  • சித்திரை வந்தாள்

    விப்ரநாராயணன் 

    news-yr2_CI
    பிறந்தது புத்தாண்டு
    இறந்தது நம் ஆணவமும் பேராசையும்
    திறந்தது நம் உள்ளக் கதவு
    பறந்தது பகைமை யாவும்

    புயல் வந்தது புலம் பெயர்ந்தனர் மக்கள்
    வயல்கள் மறைந்தன வாழ்வும் அழிந்தது
    அயலார் எல்லாம் அண்மையில் வந்தனர்
    தயக்கமின்றி தன்னுயிர் ஈந்து வாழ்வளித்தனர்

    அரசியலில் மாற்றம் கண்டோம்
    ஆட்சியில் ஏமாற்றம் கண்டோம்
    அறவியலில் வளர்ச்சி கண்டோம்
    ஆசிரமங்கள் வளரக் கண்டோம்
    அறநெறி மறையக் கண்டோம்
    அறிவியல் விண்ணைத் தொட்டது
    அறிவோ மண்ணில் புதைந்தது
    மதங்கள் யாவும் ஒன்றே என்றனர்
    மனிதர்கள் யாவரும் ஒன்றே என்றனர்
    ஆனால் சண்டையும் பூசலும் தினமும்தான்
    எங்கும் தன்னலம் எதிலும் தன்னலம்
    வாங்கும் பொருளிலும் கலப்படம்
    ஆண்டுகள் பல சென்றன
    ஆனந்தம் தேடி அலைகின்றனர் மக்கள்
    ஆண்டவன் வருவேன் என்றான்
    அதர்மத்தை அழிப்பேன் என்றான்
    அதர்மத்தின் நாட்டியம்தான் எங்கும்
    இராமன் வந்தார் கிருஷ்ணர் வந்தார்
    இராமானுஜரும் சங்கரரும் வந்தார்
    இராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் வந்தார்
    காந்தி வந்தார் பாரதி வந்தார்
    காணவில்லை மக்கள் மனதில் அமைதியை
    காணவில்லை சத்தியமும் அன்பும்
    காணவில்லை நாணயமும் நேர்மையும்

    நம்புவோம் கண்ணன் வருவாரென்று
    நம்புவோம் புதுயுகம் பிறக்க வருவாரென்று
    நம்புவோம் நல்லவர்கள் வருவாரென்று
    நம்புவோம் நல்லது செய்வாரென்று

    பாரதநாட்டின் மாண்புகள் அழியாது காக்கவும்
    பாரினில் அமைதியும் அன்பும் வேரூன்றவும்
    பார்த்தனின் அருள்மொழிகள் பரவச் செய்யவும்
    பார்த்தசாரதியை வணங்குவோம் நம்பிக்கையுடன்

    Share
  • ஒளியே வழிகாட்டிடு

    விப்ரநாராயணன்

     

    அகவிருள் விலக்கவே ஆண்டவன் வருவான்

    இகவிருள் விலக்கவே ஆசான் வருவான் இச்

    சகவிருள் விலக்கவே ஆதவன் வருவான்  இச்

    சகத்தினை  நெறிப்படுத்தவே  தீபாவளி வருவாள்

     

    அசுரனை அழித்தான் பீமனும் அன்று நம்

    அசுரத்தனத்தை அழிக்கவே தீபாவளித் திருநாள்

    அச்சத்தை நீக்கவே இத்திருநாள்  நம்மனதின்

    எச்சத்தை கொளுத்தவே தீபாவளித் திருநாள்

     

    மத்தாப்பைக் கொளுத்துவோம் இத்திருநாளில் நம்

    புத்தியையும் தீட்டுவோம் இத்திருநாளில்  நாட்டில்

    எத்திசையிலும் ஒளிவீசும் தீபாவளித் திருநாள்

    சத்தியத்தைக் காக்கவந்த சமத்துவத் திருநாள்

     

    ஆண்டவனின் விருப்பமே இத்தீபாவளித் திருநாள்

    மாண்டவன் விருப்பத்தால் மலர்ந்த திருநா ள் ஊழல்

    தாண்டவத்தை கொளுத்தவந்த அற்புதத் திருநாள்

    தீண்டாமை  நீங்கவே வந்த தீபவொளித் திருநாள்

     

    கூட்டம் கூட்டமாய் கடைக்குச் செல்வர்

    கூட்டத்தில் காணாமல் போகவும் செய்வர்

    பட்டுத்துணியும்  பலவகை இனிப்பும் வாங்குவர்

    கட்டுக் கட்டாய் பட்டாசும் ஆனந்தமாய்  வாங்குவர்

     

    புத்தாடை அணிந்து மத்தாப்பு கொளுத்தி

    தாத்தா பாட்டியுடன் மாமா மாமியுடன்

    சித்தி சித்தப்பா அப்பா அம்மாவுடனும்

    சுத்தி சுத்தி வந்து கொண்டாடும் திருநாள்

     

    ஆனந்தமாய் இருக்கவே வந்த  ஒளித்திருநாள்

    ஆனந்தத்தின் பொருளை உணர்த்தவந்த திருநாள்

    ஆனந்த வாழ்வை நிலைக்கச் செய்யும் திருநாள்

    ஆனந்தமே நோக்கமென்று உணர்த்த வந்த திருநாள்

     

    ஒளியின் வருகை  இருளகல நாம் அறிவோம்

    ஒளிதான் வாழ்வின் விளக்கமெனவும் அறிவோம்

    ஒளிவுமறைவின்றி வாழ்தலே ஒளியின் வருகை

    ஒளியே தீபவொளியே  அழைத்துச்செல் உலகை

    Share
  • அறிவின் அட்டகாசம்

     

    விப்ரநாராயணன்

     

    கவிதை பிறந்தது அவளாலே

    காதல் பிறந்ததும் அவளாலே

    கானகம் சென்றதும் அவளாலே

    கதைகள் தோன்றியதும் அவளாலே

    நான் மனிதனானதும் அவளாலே

    நான் மதமாறியதும் அவளாலே

    மாற்றங்கள் பெற்றதும் அவளாலே

    ஏமாற்றங்கள்  அடைந்ததும் அவளாலே

    செல்வம் கிடைத்தது அவளாலே

    செல்வம் சென்றதும் அவளாலே

    தொழில் கிடைத்ததும் அவளாலே

    தொழில் போனதும் அவளாலே

    உருப்படியானதும்  அவளாலே

    உருப்படியில்லாமல் ஆனதும் அவளாலே

    பதவி உயர்வு கிடைத்ததும் அவளாலே

    பதவி பறிபோனதும் அவளாலே

    அவள்தான் என் அறிவு

    அவளும் அழிந்தாள் அவள் அறிவாலே

     

    Share