அன்றைய நினைவில்…….
தனுசு–
என் ஊரில்
ஆறு இருந்தது
யார் ஆண்டாலும் கவலையின்றி
நிரம்பி வழிந்தது.
என் ஊரில்
குளம் இருந்தது
மழை பெய்தாலும் பொய்த்தாலும்
பாழாகாமல் பெருமை காத்தது.
என் ஊரில்
வாய்க்கால் இருந்தது
எக்காலத்திலும் தப்பாமல்
தெளிந்த நீரில் சலசத்தது.
இந்த இருந்தது எல்லாம்
இன்று
இல்லை.
அதனால்
ஊர் ஜனம் கஷ்டப்படவுமில்லை.
அவை
கல் குவாரியும்
மணல் குவாரியுமாக மாறி
பணம்
மும்மாரி பொழிவதால்
அந்த
நீர் ஆதாரம் தேடி
அன்று வந்த ஆடும் மாடும்
இன்று
விலை பேசி
வேறிடம் போனது பாதுகாப்பாய்.
அந்த நீரில் குத்தாட்டம் போட்ட
விளையாட்டுப் பிள்ளைகள்
புது திடல் பெற்றதால்
நீர் தடம் மறந்து போனார்கள்.
ஆனால்
அன்று அதில்
மீன் கொத்தி வாழ்ந்த
கொக்கும் நாரையும் மட்டும்
அந்த நீரை தேடித் தேடி சுற்றி வருகிறது
அன்றைய நினைவில்!
படத்துக்கு நன்றி: http://www.birding.in/birds/Gruiformes/Gruidae/siberian_crane.htm