குறளின் கதிர்களாய்…(2)
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்…!
-திருக்குறள்-475(வலியறிதல்)
படத்துக்கு நன்றி
புதுக்கவிதையில்…
மலரினும் மெல்லிதென்று
மயிலிறகைச் சேர்த்து
வண்டியில்
மனம்போல ஏற்றிவைத்தால்,
முறிந்துவிடும் அச்சாணி..
மிஞ்சாது எதுவும்
அளவை
மீறினால் எதிலும்…!
குறும்பாவாய்…
குடைசாய்க்கும் வண்டியை, பாரம்
கூடினால் மயிலிறகும்..
கதையிதுதான் வாழ்க்கை…!
மரபுக் கவிதையில்…
வண்டியில் ஏற்றும் பாரமது
வலிமை யில்லா மென்பொருளாம்
கொண்டல் கண்டால் ஆடிநிற்கும்
கோல மயிலின் இறகெனிலும்,
உண்டே யதற்கும் அளவதுவும்,
உயர்ந்தால் வண்டி உடைந்திடுமே,
கண்டிடு வாழ்வில் கதையிதுவே
கொண்டிடு அளவதைக் கருத்தினிலே…!
புதுப்பாவில்…
மெல்லிய பொருள்தான்
மயிலிறகு,
மிதமிஞ்சி ஏற்றினால் வண்டியில்,
அதுவும் உடைந்து
மிஞ்சுவதில்லை எதுவுமே..
நல்லதுக்கு
எதிர்மறைப் பலன்தான்
எதுவும் அளவுக்கு மிஞ்சினாலே…!
கிராமிய பாணியில்…
ஏலேலோ ஐலசா
ஏத்து பாரம் ஐலசா..
அளவாப் பாரம் ஐலசா
அளந்து ஏத்து ஐலசா..
மயிலுப் பீலி ஆனாலும்
மிஞ்சா வண்டி ஒடையுமே..
மனுசங் கதயும் இதுதானே
மனசில கொள்ளு இதத்தானே..
ஏலேலோ ஐலசா
ஏத்து பாரம் ஐலசா…!