சச்சிதானந்தம்

 

கொதிகலன் போலுலகைக் கதிரவன் காயவைக்க,

மதிமுகம் சுமந்தோடிக் குளிர்ந் திருந்த,

நதிகளின் ஊற்றுக்கண் குருடாகிக் காய்ந்திருக்க,

விதியென நொந்துசெத்து மனிதனும் வீழுகின்றான்!

 

வனங்கொண்ட வளங்களை தினந்தினம் அழிக்க,

பணங்கொண்ட மமதையில் பசுமையைப் பழிக்க,

சினங்கொண்ட மரங்களின் சாபத்தால் இப்போது,

குணங்குன்றி ஆறுகள் நீரின்றி வறண்டன!

 

மலர்களை, மீன்களைச் சுமந்த நதிகள்,

மணல்வெளிப் பாதையாய் அனல்கக்கி நிற்க,

மதகணைக் கதவெங்கும் தேனீக்கள் கூடுகட்ட,

மலைத்தேனால் நிறைந்திருக்கும் எம்மாற்று வளங்காணீர்!

 

ஆற்றங்கரை அரசமரம் நீரின்றிச் சாக,

அங்குவாழும் பிள்ளையாரும் நாவறண்டு வாட,

அழகுகங்கை சூடியவன் சடைவறண்ட கோலத்தால்,

அகிலமெங்கும் தாகத்தில் தவித்துறைந்து நிற்கிறதே!

 

மாதம் ஒரு செடி நடுவோம்,

மேகஞ் சூல் கொள்ள வைப்போம்,

மாரித் துளி பூக்க வைத்து,

மண்ணு லகைக்  காத்திடு வோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.