அவள் கண்ணாடி
-தனுசு-
என் வீட்டுக்கு
வந்த நாள் முதல்
நீ
சிறைப் பறவையானாலும்….
உன் தேவை
எனக்கு படும்போதெல்லாம்
எந்த மறுப்புமின்றி
என்னை ஏற்றுக்கொள்வதால்
உன்னை
எனக்கு நிரம்ப பிடித்திருக்கிறது
பனியின் குளிர்
மழையின் சாரல்
வியர்வை வாசம்
தெருப்புழுதி
இவைகள் என்னை தாக்கினாலும்
அவைகளுடன் உன்னை நான் நோக்கினாலும்
என் தேவை உணர்ந்து
நீயும்
மறுப்பின்றி
உன் மீது படர
எனக்கு இடம் தருகிறாய்
நான் உறங்கையிலும்
உடுத்துகையிலும்
உடன் இருந்து பார்க்கும் நீ
என்னை அலங்கரித்து அழகு பார்க்கையில்
நீ
அறியாத அந்தரங்கம்
என்னிடம் மிச்சமேதுமில்லை
உன் பள பள உடம்பை பார்க்கும் போதெல்லாம்
புஷ்பாஞ்சலி விதத்தில்
அரங்கேற்றம்
செய்யும் என் சேட்டைகள்…
இரவு
பகல்
வேறுபாடின்றி
தந்தனா ராகம் பாடி
அதை
உன்னில் ரசிக்கவும் செய்கிறது.
நான்
வெய்யிலில் கறுத்து
களைத்து வந்தாலும்
கதவை மூட
மறந்து வந்தாலும்
அசதியில் தூங்கி
கண் விழித்தாலும்
குளித்து விட்டு
புதுசாய் வந்தாலும்
அமைதியாய் இருக்கும் நீ
என்னை நிறுத்தி
மீண்டும் உன்னைப் பார்க்கவைப்பது
உன்னைத்தவிர வேறில்லை
என் முன்னாடி நிற்கும்
கண்ணடியே
என் வீட்டு நிலைக்கண்ணாடியே.