-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

தமிழரது தலைநிமிர
தைப்பொங்கல் உதவிடட்டும்
தமிழேறி அரசாள
தைப்பொங்கல் விளங்கிடட்டும்!

வீடிழந்து நாடிழந்து
வேதனையில் நிற்பார்க்கு
விடிவெள்ளி தோன்றுதற்கும்
இப்பொங்கல் உதவிடட்டும்!

படுகொலைகள் தனைநினைந்து
பரிதவிக்கும் உள்ளமெலாம்
அதைமறந்து இனிவாழ
அமைந்திடட்டும் இப்பொங்கல்!

இனிமேலும் இத்துயர்போல்
எவர்க்குமே வாராமல்
இறைவாநீ காத்திடென
எல்லோரும் பொங்கிநிற்போம்!

மங்கலங்கள் பலநிகழ
வழிவகுக்க வேண்டுமென்று
பொங்கிடுவோம் பொங்கலினைப்
புத்துணர்வு பிறப்பதற்காய்!

சங்கெடுத்து ஊதிடுவோம்
சங்கடங்கள் ஓடிடட்டும்
பொங்கல்பொங்கி வருவதுபோல்
புதுவாழ்வு பிறந்திடட்டும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.