மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்…!

1

-றியாஸ்முஹமட், கத்தார்

கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்!                lady.jpg

நடுச் சாமம் நாய்க் குரைக்க
நடு நெஞ்சில் நெருப்பு வைக்க
நீயில்லா வீடு பார்த்து,
தெரு நாய்களும் குரைக்குது மச்சான்
என்னைக் குறுகுறுவென பார்க்குது மச்சான்!

ஆராரோ ஆரிரரோ..,
பக்கத்து வீட்டுத் தாலாட்டு
காது கேட்டு, வாட்டுது மச்சான்
என்னை வாட்டுது மச்சான்!

எண்ணைக் கிணத்துல நீங்க
உங்க எண்ணத்தில நாங்க
ராப்பகலா  தூங்காம நானிங்கு ஏங்க
என்னத்த வாழ்ந்தோம் மச்சான்

எண்ணங்களுடன்தானே வாழ்கிறோம் மச்சான்!

மாரியில குளிராகி
கோடையில வெயிலாகி
உருமாறித் தடுமாறி
பனியாகிக் காற்றாகி
சருகானேன் மச்சான்! 
ஒரு நேந்துவிட்ட கோழிபோல
ஆனேனே மச்சான்….

கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்கு போகாத மச்சான்!

நீங்க கழற்றிப் போன சட்டை பார்த்து கண் கலங்குது மச்சான்
நீங்க வைச்ச மரமும்  வளர்ந்து நிற்குது மச்சான்
நம்ம குழந்தையும் இப்ப எழுந்து நிற்குது மச்சான்
உங்களைக் கேட்டுத்தானே அடம்பிடித்து அழுகுது மச்சான்!

ஏழு கண்டம் உன்னைத் தாண்டவைத்தான்
ஏக்கத்தோடு என்னை வாழவைத்தான்
பால் நிலவு போல என்னைத் தேயவைத்தான்
பாலைவனப் புழுதியா உன்னைப் பறக்க வைத்தான்!

நம் காதலைச் சேர்த்து வைத்த அந்த இறைவன்
வாழ்தலை ஏன் பிரித்து வைச்சான்..?

இருந்தும் இல்லையென்பது துன்பம் மச்சான்
உன்னோடு வாழ்வதே இன்பம் மச்சான்
பித்துப் பித்து பிடிக்கிறதே மச்சான்
பிச்செறிந்து வாயேன் மச்சான்!

ஏரோப்பிளேன் வாழ்க்கை
வேணாம் மச்சான்
ஏறி வாங்க வாழ்வோம் மச்சான்!

கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்க விட்டு வாயேன் மச்சான்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.