நடை பயில்வாய் மகளே !
காயத்ரி பூபதி
சிந்தை முழுக்க நிறைந்தவள்
சின்னஞ் சிறு குழந்தை யவள்
சிறு நுதல் பேரொளியாய்
குவி இதழ் குறு நகையாய்
பூப் போன்ற புன்னகையால்
அன்றலர்ந்த மலர் போல
வான் முகம் சிவக்க
இசைந்தாடும் சலங்கை ஒலிக்க
அசைந்தாடும் தென்ற லென
குறுநடையே கலை யென
நடை பயிலும் சிலையழகே
என் மகளே! என் மகளே!
குவளை செவ்வாய் முத்தழகே!
புவி சிறக்க நடைபயில்வாய்
மகளே நடை பயில்வாய்!
தத்தி தத்தி தடுமாறினாலும்
தடம் மாறாமல் நடை பயில்வாய்!
தடுமாறி விழுந்தாலும் திரும்ப
எழும் திடம் மறவாமல் நடை பயில்வாய்!
தடம் நிறைந்த இடர் நீக்க
உன் திறம் உணர்ந்து
கலங்காமல் நடை பயில்வாய்!
புவி போற்ற நடை பயில்வாய்!
நடை பயில்வாய் மகளே! நடை பயில்வாய் !