அன்னையர் தினத்தில் அன்னைக்கு கவிதை
சத்தியமணி
அம்மா!அம்மம்மா !
அன்பின் சின்னமா!!
ஆசைத்தீர ஆசிச் சொல்லும் என்னம்மா!!!
பூவாய்ச் சிந்தம்மா
புன்னகைத்தால் தேனம்மா
பாக்கியத்தில் நானும் உந்தன் சேயம்மா
என்னை ஈன்று எடுத்தாய்
இன்பப் பேரில் அழைத்தாய்
தமிழ்ச் சொல்லிக் கொடுத்தாய்
தரும் பாட்டை ரசித்தாய் ()
தத்தித் தத்தி வருகையில் தாவி எடுத்தாய்
தள்ளாடி நடக்கையில் தாங்கிப் பிடித்தாய்
பசியென அழுகையில் பாலும் கொடுத்தாய்
பள்ளிகூடம் செல்லுமெனைப் பார்த்து ரசித்தாய்
உன்னைப்போல் தெய்வதான் உண்டோசொல்
உன்மடியின் மகிமைக்கு உண்டோ சொல் ()
வேலைக்கெனச் செல்லுகையில் ஆசி அளித்தாய்
வெற்றிகளைக் கண்டவுடன் துள்ளிகுதித்தாய்
ஊரார்முன் எம்பெருமைப் பேசிகளித்தாய்
ஊட்டிவிட்டு மிச்சம்தனை நீயும் கொரித்தாய்
அன்னையுன் பணியினைப் பாராட்டுவேன்
என்னையுன் பணியாளாய்ச் சீராட்டுவேன் ()
இதற்கான மெல்லிசை ராகத்தோடு தாளத்தோடு கேட்க விரும்பின் youtube சொடுக்கவும் (அ) email sathiyamani@yahoo.com உங்கள் விருப்பத்தை அனுப்பவும் – நன்றி