-மேகலா இராமமூர்த்தி

கருவண்டு விழிகளோடும், களைசொட்டும் முகத்தோடும், விளக்கொளியில் கல்விகற்கும் கவின்மழலையே! இன்று நீ கற்கும் கல்வி நாளை உன்வாழ்வில் நிச்சயம் விளக்கேற்றி வைக்கும்! வெள்ளத்தால் போகாத, வெந்தணலால் வேகாத விழுச்செல்வமாம் கல்வி, இறுதிவரை உன்னைக் காக்கும்! உன் இடுக்கண் போக்கும்!

child and a light

திரு. வாசகன் பாலசூரியனின் கண்கவர் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளிஓவியருக்கும், தேர்வாளருக்கும் எம் நன்றிகள்!

இனி, கவிதைகளில் நம் கவனத்தைச் செலுத்துவோம்!

***

கடந்தகாலம் நோக்கிய சிந்தனைப் பயணத்தில் வானவில் தெரியவில்லை; வறுமைதான் தெரிந்தது இந்தக் குழந்தைக்கு. ”வறுமைகண்டு கலங்காதே கண்மணி! இளமையில் கல்! வளமையைக் காண்பாய்!” என்று மழலைக்கு நன்மொழி நவில்கின்றார் திருமிகு. ஹிஷாலி.

கருப்பு வெள்ளை
புத்தகத்தில்
மெழுகுவர்த்தி வெளிச்சம்
எண்ணம் மாறி
வண்ணம் களையாத
அதே நிறக் கண்கள் 

மௌனங்கள் மட்டும்
கடந்த காலத்தை நோக்கி
பயணிக்கிறது 

அங்கும்
வானவில்லுக்கு பதிலாக
வறுமைதான் தெரிந்தது 

திரும்பி வந்தேன்
திருப்பு முனையில் முடிந்தது
இளமையில் கல் !

***

”குறைந்த தீபஒளியில் பாடம்பயிலும் குழந்தையின் எதிர்காலம், நிறைந்த அறிவொளியால் வளம்பெறட்டும்!” என வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

இருட்டு வயலில்
வெளிச்ச விதை விழுந்து
முளைத்து
வெளிவருகிறது ஒளியாக..

அந்தக்
குறைந்த வெளிச்சத்தில்
குழந்தை படிக்கிறது,
வறுமை இருளகல
கல்வி ஒளிபெருக..
ஒளி பெறட்டும்,
வாழ்க்கை
வளம் பெறட்டும்!

*** 

மழலையின் மலர்ச்சியான எதிர்காலத்திற்கு நல்வழியையும் நல்வாழ்த்துக்களையும் நல்கியிருக்கின்றார்கள் நம் கவிஞர் பெருமக்கள். 

அடுத்து, இந்த வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துகொள்வோமா?

’கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வறுமைப்பிணிக்கு அருமருந்து கல்வியெனும் விழுப்பொருளே ஆகும். 

”ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து” எனத் தலைமுறைகள் தாண்டிநிற்கும் கல்வியின் தகைமையைப் போற்றுவார் வள்ளுவப் பெருந்தகை.

தீச்சுடரை புறத்தேவைத்து, அறிவுக்கனலை அகத்துள்ளே மூட்டிக்கொண்டிருக்கும் இச்சிறுமியின் அடர்ந்த சிந்தனைகள் அங்கே படர்ந்திருக்கும் இரவைக் கலைக்கின்றன என்கின்றது ஒரு நயமான கவிதை…

இயற்கையின்முன் 
கைகட்ட வேண்டி இருந்தாலும்

இருளை விசாரிக்கின்றன 
ஒளியுமிழும் விழிகள்
ஏற்றுக் கொண்ட சவாலுக்குச் 
சாட்சியமான மெழுகுவர்த்திச் சுடரைச் 
சற்றே 
ஆவேசப்படுத்திக் காட்டுகிறது 
மாற்றத்திற்குத் தயாராகும் 
சிறுமியின் 
வெப்பப் பெருமூச்சு
இப்போது அடர்த்தியான 
இரவைக் கலைக்கின்றன 
அதனினும் அடர்த்தியான 
அவளது சிந்தனைகள்

***

சிறுமியின் சிந்தனைச்செறிவைச் சிறப்பாய்ச் சித்தரித்திருக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திரு. எஸ். வி. வேணுகோபாலனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

***

மின்சாரம் இல்லாவிட்டால் என்ன? கிடைத்திடும் சிறியஒளியில் தன் அறிவுச்சாரம் பெருக்கிடுவாள் இந்தத் திருநிறைசெல்வி என்கிறது மற்றொரு கவிதை…

திருநிறைப்பாள் அறிவொளியால்….
மின்சாரம் இல்லாவிடில் என்ன…?
தன் சாரம் பெருக்குவாள்
மின்னும் அறிவுச் சரமாவாள்..
சின்ன ஒளியில் பெருநிலவாக.
திருநீறு திருக்காப்பாக அறிவின்
திருக்கண் விழ அவதானமாக
திருட்டியம் பெருக்கும் செல்வி
திரு நிறைப்பாள் அறிவொளியால்.

(திருக்கண் – அறிவுப் பார்வை;  திருட்டியம் – ஞானம், அறிவு)

திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.