மக்கள் கேட்கும் கேள்வி (8)
பவள சங்கரி
தலையங்கம்
பெருமதிப்பிற்குரிய, திரு ராகுல் காந்தி, திரு நரேந்திர மோடி, திரு அரவிந்த் கேஜரிவால் அவர்களே,
ஆளும் கட்சியின் உதவித் தலைவரும், கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பவரான தாங்கள் பல ஆண்டுகளாக அமேதி தொகுதியின் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியாக இருந்து வருகிறீர்கள். தேர்தல் நெருங்கி வருகின்ற இந்நாள் வரை உங்கள் தொகுதிக்காகவோ அல்லது இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவோ தாங்கள் செய்துள்ள சாதனைகள் என்று ஏதாவது இதுவரை வெளியிட்டிருக்கிறீர்களா? பாராளுமன்றத்தில் அதைப்பற்றி ஏதாவது பேசியிருக்கிறீர்களா? அடுத்த ஐந்தாண்டிற்கு உங்களுடைய கட்சி ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்கும்போது இதையெல்லாம் நாங்கள் செய்யப் போகிறோம் என்று இதுவரை நீங்கள் எதையும் கூறவில்லையே?
குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளருமாகிய திரு மோடி அவர்களே, தங்களுடைய ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்களின்படி குஜராத் மாநிலம் பதினாறாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமுதாய வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவைகளைக் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இது. உங்களுடைய் இத்தனைஆண்டுகால ஆட்சியில் உங்களுடைய மாநிலத்தை 16 வது இடத்தில் வைத்துள்ள தாங்கள் நம் இந்தியாவை எப்படி முதல் இடத்திற்குக் கொண்டுவரப் போகிறீர்கள்? தேர்தல் அறிக்கைகளே ஒரு சடங்காக மாறிவிட்ட இன்றைய நிலையில் நாட்டினுடைய வளர்ச்சிக்காகத் தாங்கள் அளிக்கக்கூடிய ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் என்று தெளிவாகத் தங்களால் ஏதும் அறிவிக்கப்படவில்லையே? இதற்கு என்ன காரணம்?
முன்னாள் தில்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமாகியத் தாங்கள் பல வகையில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டிருந்தாலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை 48 நாட்களில் உதறித் தள்ளியது சரியா? தங்களுக்கு பாரதப் பிரதமர் ஆகும் வாய்ப்பை மக்கள் அளித்தால் இதையும் தாங்கள் பாதியிலேயே விட்டுச் செல்ல மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் ? ஒரு சிறந்த நிர்வாகியாக, பிரச்சனைகளை எதிர்கொண்டு நிலைத்து நின்று ஆட்சி செய்யாமல் நீங்கள் பதவியை விட்டு விலகியது சரியா?
பாரதப் பிரதமர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தல் களத்தில் பணியாற்றும் தங்கள் மூவரிடமும் மக்கள் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்.
தங்கள் செயல்பாடுகள் மற்றும் தங்கள் நலத் திட்டங்களை முன்வைத்து அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளர்கள் தொலைத் தொடர்பு ஊடகங்கள் மூலமாக நேரடி விவாதம் நடத்துவது போன்று ஏன் நம் நாட்டிலும் நடத்தக்கூடாது? இது போன்ற விவாதங்களை தாங்கள் நேரடியாக நடத்துவதன் மூலமாக மக்கள் சிறந்த நிர்வாகிகளை நம் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக அது அமையக்கூடும் அல்லவா? நாங்கள் இதை எதிர்பார்க்கலாமா?
வாக்களிப்போம்!
ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!
விலை போகாமல் வாக்களிப்போம்!!!