சேக்கிழார் பாடல் நயம் – 120 (அப்பொழுது)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
வரலாறு
கருவூர்ப் பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் எங்கும் இறைவழிபாட்டுக்கு உரிய நிகழ்வுகள் நடந்தன! அவ்வூர்ச் சிவனடியார் விறன்மிண்டர் என்பவராவார். அவர் தம் பெயருக்கேற்ற விறலும் மிண்டும் கொண்டவர். இறைவன்பால் அன்பு கொண்ட அவர் இறைவழிபாடு செய்யும் அடியார்களுக்கு ஆவன செய்வதற்கு உரிய பரசும் மனமும், இறைவழிபாட்டுக்கு இடையூறு செய்வாரைத் தண்டிப்பதற்கு உரிய ஆயுதமாகிய பரசு என்ற மழுவா யுதத்தையும் ஏந்தினார்! சிவகாமியாண்டார் என்னும் அடியவர் ஒருவர், இறைவன்பால் பேரன்பு கொண்டு, அதிகாலையில்எழுந்து இறைவனுக்குச் சாத்துவதற்குரிய மலர்களையும், மாலைகளையும் நிறைத்த பூக்குடலையையம் ஏந்திக்கொண்டு எச்சில் தெறிக்காதவாறு வாயை மூடிக்கொண்டு, முதுமை காரணமாக ஊன்றுகோல் ஒன்றையும் கொண்டு திருக்கோயிலை நோக்கி நடந்து வந்தார். அப்போது அநபாயச் சோழனின்மரபில் வளர்ந்த பட்டத்து யானையாகிய ஆண்களிறு திருவிழா வுக்குரிய நவமிக்கு முதல்நாளில் அமராவதி ஆற்றில் நீராடி, மிகுந்த பெருமிதத்தால் மதநீர் ஒழுக ஓடத் தொடங்கியது! அனைவரும் விலகிஓட, யானைப்பாகர்கள் அங்குசம் முதலிய கோலேந்தி அதனை அடக்க முற்பட்டனர்; பெரிய மலை அசைந்து வருவது போல விரைந்து வந்த யானை ஓர்ஓரமாக ஒதுங்கி நின்ற சிவகாமியாண்டார் ஏந்தி வந்தபூக்குடலையைப் பறித்துக்கொண்டு ஓடியது!
யானைமேல் அமர்ந்த பாகர்கள் அந்தயானையை ஊழிக்காற்றைப் போல் விரைந்து செலுத்தினார்கள்; மார்பில் பூணூல் அணிந்த சிவனடியார் பதறி வெகுண்டார். மதங்கொண்ட யானையைப் பின் தொடர்ந்துதம் கையில் ஏந்திய தடியால் அடிக்க வந்தார்.
பாடல்
அப்பொழுது அணையவொட்டாது அடல்களிறு அகன்று போக
மெய்ப்பெரும் தொண்டர் மூப்பால் விரைந்துபின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால் தரையடித்து எழுந்து நின்று
செப்பரும் துயரம் நீடிச் செயிர்த்துமுன் ‘’சிவதா’’ என்றார்!
பொருள்
அப்பொழுது வலிய அவ்வியானை அவர் தன்னை அணுகவொட்டாதபடி நீங்கிப்போயினதாக, உண்மைத் தன்மையுடைய பெருந்தொண்டர் மூப்பினாலே விரைவாய்த் தொடர்ந்து அதன்பின்னே செல்ல மாட்டாதவராகி, அதனை விட்டார்; கீழே விழுந்து, கையினால் தரையில் அடித்து, மோதிப், பின் எழுந்து நின்று, சொல்லற்கரிய துன்பத்தால் நீடிக்கோபித்து முன்னே “சிவதா” என்பாரானார்.
விளக்கம்
தப்பினார் என்றசொல்,அந்தநேரத்தில் யானையை நெருங்காது குறி தவறி விழுந்தார் என்றும், அடித்திருப்பாராயின், யானையால் தீங்குறுவார்; ஆதலின் அதனினின்றும் தப்பினர் என்றும்பொருள்படும்.
விழுந்து என்றசொல் , துயரத்தால் தாமே நிலத்தில் வீழ்ந்து . வேகத்திற் குறிவைத்து வந்த அது தப்பியதாதலின் அவ்வேகந் தப்பியதாற் கீழேவிழுந்து என்றும். தப்பி என்றதனை கால்தவறி வீழ்ந்து என்றும் உரைப்பார்.
கையால் தரையடித்தல் – மிக்க துயரத்தால் நிகழ்வதோர் செயல். துயரமிகுதிப் பாட்டினாலே விழுந்து தரையடித்தலாகிய முதற் செயல் நிகழ்ந்த பின்னர் நிகழும் ஓலமாகிய மெய்ப்பாடு. எழுந்து நிற்றலும் முறைகூறி ஓலிடுதலும் பின் நிகழ்வன.
செப்பருந்துயரம் நீடி – என்றதொடர் சொல்ல முடியாத துயரத்தான் மிக்கவராய். தாம் நித்தமும் நியதியாகச் செய்து வந்த இறைவன் திருப்பணி இன்று இவ்வாறு முட்டுப்பட்டமையால் பெருந்துயரமடைந்து.
செயிர்த்து என்றசொல் , திருப்பணி முட்டுமாறு செய்தலின் அதுசெய்த யானைமேல் சினம் மிக்கது. பெருந்துயரத்தின் பின்னிகழும் உள்ளநிலை.
சிவதா என்பார் – என்றதொடர், இறைவனை நினைத்து ஓலமிடும் ஓலச்சொல். இது போல, அவிதா என்பனவும், அப்பிராமண்ணியம் என்பதும் ஆபத்துக் காலங்களில் முறையிடும் ஓலச் சொற்கள். இவ்வாறன்றி இதற்கு எப்போதும் இவர் தம்மிச்சை இன்றிச் ‘’சிவதா , சிவதா!’’ என்றுரைப்பது வழக்கம் போலும்
இப்பாடலில் அடியார் துயரமும், சிவபக்திச் செயலும், வாய்விட்டுக் கதறி ஏங்குவதும் மனமுருகும் வண்ணம் அமைந்துள்ளன!