இதயம் திறந்த அனுபவங்கள் – 5

0

வெ. சுப்ரமணியன்

நோயாளி ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) உள்ளவராகவோ அல்லது இல்லாதவராகவோ இருக்கலாம். நோயாளிக்கு ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) இருந்து அவரது சிகிச்சைக்காக முன்பணம் காப்பீட்டு நிறுவனத்தால் அனுமதித்து வழங்கப்பட்டிருப்பின் மீதமுள்ள தொகைக்கான கேட்பு (claim) மருத்துவமனையால் அனுப்பி வைக்கப்படும். காப்பீட்டு நிறுவனம் முன்பணத்தைக் கழித்துக் கொண்டு அனுமதிக்கக் கூடிய மீதமுள்ள தொகையை மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தி விடும்.  காப்பீட்டு நிறுவனம் செலுத்திய தொகைக்கும் அதிகமாக நோயாளி  ஏதாவது தொகை செலுத்த வேண்டியிருப்பின் அதைச் செலுத்தியதும் மருத்துவமனையை விட்டு வீட்டிற்குச் செல்ல அனுமதிப்பார்கள். ஆரோக்கியக் காப்பீடு இல்லாத நோயாளி அவர் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டபோது செலுத்திய முன்பணம் போக மீதமுள்ள தொகையைச் செலுத்துதல் வேண்டும்.

நோயாளி வீட்டிற்குச் செல்லும் முன் அவரிடம் அவருக்குச் செய்யப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளின் முடிவுகளும் மற்றும் சுருக்கமான வெளியேற்றக் குறிப்பு (Discharge summary). ஆகியவை அடங்கிய கோப்பு (file) ஒப்படைக்கப்படும்.

இக் கோப்பு மிக முக்கியமானது. இதில்தான் நோயாளியின் மருத்துவ வரலாறு, செய்யப்பட்ட அறுவைச்சிகிச்சை குறித்த மருத்துவக் குறிப்புகள்,  நோயாளிக்கு அடுத்த மருத்துவ ஆலோசனை நாள் (next consultation date) வரை கொடுக்கப்பட வேண்டிய மருந்துகளின் விபரம் அடுத்த முறை ஆலோசனைக்கு வருமுன் நோயாளி செய்து கொண்டு வர வேண்டிய பரிசோதனைகள் ஆகிய அனைத்தும் குறிக்கப்பட்டு இருக்கும். இந்தக் கோப்பு வருங்காலங்களில் மருத்துவரை ஆலோசனைக்காகநோயாளி சந்திக்கச் செல்லும் போதெல்லாம் கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மேலும் அதில் அடுத்த மருத்துவ ஆலோசனைக்கு முன் வீட்டில் இருக்கும் போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவமனையைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற கீழ்க்காணும் பட்டியலும் (list) இருக்கும்.

அ) 101. 5° F  அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல் (fever of 101. 5° F  and above)

ஆ) புதியதாக வலி ஏற்பட்டாலோ அல்லது பழைய வலி அதிகரித்திருப்பதாக உணரப்பட்டால் ( newly developed pain or worsening of old pain)

இ) கீறல் தளங்கள்  சிவத்தல், வீக்கம் அல்லது அவற்றிலிருந்து இரத்தப்போக்கு அல்லது திரவம் வடிதல் (reddening and swelling of incision area or bleeding or liquid dicharge)

ஈ) உணர்வு நிலையில் மாற்றம் (altered level of consciousness)

உ) சுவாசிப்பதில் சிக்கல் (difficulty in breathing)

ஊ) விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (fast or irregular heartbeat)

எ) கால்களில் வீக்கம் ( swelling of legs)

ஏ) கைகளிலும் கால்களிலும் உணர்வின்மை (numbness in hands and feet)

ஒ) தொடர்ந்து குமட்டல் அல்லது வாந்தி (nausea or vomitting)

ஓ) இவை தவிர வேறு குறிப்பிடத்தக்க கவலையளிக்கும் அறிகுறிகள் ( Any other symptoms of concern)

வீட்டிற்கு வந்த பின் தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த மூன்று நாட்களுக்குப் பின் மார்பு எக்ஸ்ரே படமும் (Chest X – ray image), முழு இரத்த அணுக்கள் சோதனையும் (Complete Blood Count – CBC) மேற்கொண்டு அதன் முடவுகளுடன்  இதய மருத்துவரையும் அறுவைச் சிகிச்சை நிபுணரையும் சந்திக்கும்படி என்னுடைய வெளியேற்றக் குறிப்பில் (Discharge Summary) தரப்பட்டிருந்தது.

அடுத்து இரத்தச் சர்க்கரை அளவு சோதனைகளான உணவு உட்கொள்ளாநிலையில் (fasting blood sugar), உணவு உட்கொண்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின் (Post Prandial Blood sugar) ஆகியவற்றின் முடிவுகளுடன் நீரிழிவு நோய் நிபுணரிடம் ஆலோசனை பெறும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்பின் மூன்று மாதங்களுக்குப் பின்னர் மருத்துவ ஆலோசனை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல் வாரம் ஆறு பத்து நிமிடங்களாகப் பிரித்துக் கொண்டும், இரண்டாம் வாரத்தில் நான்கு பதினைந்து நிமிடங்களாகவும், மூன்றாம் வாரத்தில் மூன்று இருபது நிமிடங்களாகவும், நான்காவது வாரத்தில் இரண்டு முப்பது நிமிடங்களாகவும் பிரித்துக் கொண்டு நடக்கலாம். ஐந்தாவது வாரத்திலிருந்து தொடர்ந்து ஒரு மணி நேரம் நடக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் அதிகம் உடல் சோர்வு ஏற்படும்படி அதிக நேரம் தொடர்ந்து நடப்பதோ அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் இயங்காமல் இருப்பதோ கூடாது.

அடிக்கடி இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை அளவுகளைப் பரிசோதித்து அறிந்து கொண்டு அவற்றைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது இருமுறையாவது இயன்முறை மருத்துவர் சொல்லிக் கொடுத்த உடற்பயிற்சிகளையோ (physical exercises) அல்லது அரைமணி நேரம் யோகாவோ (yoga) கண்டிப்பாக செய்தல் வேண்டும்.

அடுத்ததாக மருத்துவமனையின் சார்பாக கொடுக்கப்படும் உணவுத் திட்ட அட்டவணையில் (Diet chart)  உட்கொள்ள வேண்டிய காய்கறிகள், பழங்கள், தானியங்கள் குறித்த விவரங்கள் இருக்கும். அதன் அடிப்படையில் அன்றாடம் உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும்.

அறுவை சிகிச்சையின் போது தையலிடப்பட்ட பகுதிகளைச் சுத்தமாகவும், உலர்ந்ததும் இருக்குமாறு வைத்திருப்பது முக்கியம்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை பரிந்துரைத்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவர் சொல்லும் வரையில் எந்த வகையான வாகனங்களையும் இயக்கக் கூடாது.

கொரோனா காரணமாக இதய நோயாளிகள் இன்றைய கால கட்டத்தில் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். தேவையின்றி வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அப்படித் தவிர்க்க இயலாமல் வெளியே செல்ல வேண்டியிருப்பின் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுதல் மற்றும் அதிகக் கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கைகளைக் கண்டிப்பாகக் மேற்கொள்ள வேண்டும்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின் மேற் சொன்ன ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தால் இதயப் பிரச்சினைகள் எதுவும் அணுக அதிக வாய்ப்பிருக்காது.

முற்றும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *