சாதனைச் சிறுமி வர்ஷா
(நறுக்.. துணுக் – 5)
சாந்தி மாரியப்பன்
ஊக்குவிக்கப்படும் குழந்தைகள் நிச்சயம் சாதிப்பார்கள் என்பதற்கு டெல்லியின் நொய்டாவைச் சேர்ந்த வர்ஷா குப்தா ஒரு நல்ல உதாரணம். ‘உலகிற்கு இந்தியாவின் கொடை’ என்ற தலைப்பில் தேடுபொறியான கூகிளின் இந்தியப் பிரிவிற்கான லோகோவை வடிவமைப்பதற்காக முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்காகக் கூகிள் நிறுவனம் ஒரு போட்டி நடத்தியது.
சுமார் 1,55,000 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் தானும் கலந்து கொண்டு ஜெயித்திருக்கிறார் மூன்றாம் வகுப்பு படிக்கும் இந்த ஏழே வயதான குட்டிப்பெண். பரிசாக ஒரு மடிக்கணினியும், ஒரு வருடத்திற்கான இணைய இணைப்பும், அவர் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் தொழில் நுட்ப வசதிகளும் கிடைத்திருக்கிறது. அவருக்கும் குழந்தைகள் தினமான இன்றைய தினத்திற்கும், சிறப்புச் சேர்க்கும் விதமாக அவர் வடிவமைத்த லோகோதான் இன்றைக்கு கூகிளின் முகப்பை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
வர்ஷாவின் வரைதல்கள் அவளை ஆயிரத்தில் ஒருத்தியாக அல்ல
லட்சத்தில் ஒருத்தியாக உயர்த்திவிட்டது.குழந்தைகளின் திறனை
அறிந்து ஊக்கப்படுத்தினால் அவர்கள் உயர்வார்கள் என்பது உண்மை.
ஆனால், பெற்றோர்கள் தங்கள் எண்ணங்களை குழந்தைகளிடம்
திணிப்பதால் தான் பிரச்சினைகள் உருவாகின்றன. தாங்களும்
குழந்தைகளாய் இருந்து தான் பெரியவர்களாய் ஆகியிருக்கிறோம்
என்ற எண்ணம் இல்லை. குழந்தையிடம் உள்ள குழந்தைத்தனத்தை
எடுத்து விட்டு என்ன சாதனையை எதிர் பார்க்கமுடியும்?
இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.