திருச்சி புலவர் இராமமூர்த்தி

நாளும் பெரும் காதல் நயப்பு உறும் வேட்கை யாலே,
கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;
மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார்; மூர்த்தியார்தாம்.

வரலாறு

செல்வத்தாலும் பல்துறைத் தொழில்களாலும் சிறந்த, மாட மாளிகைகள் நிறைந்த  பழம்புகழ் மேவியது பாண்டிநாடு.மங்கையர் பண்பாடும் வாய்களில் இன்சொல் நிறையும்; கடலில் முத்துக்கள் நிறையும். அங்கே மலையச்  சந்தனம்  கமழும்  தென்றல் வீசும்; தெய்வத்தமிழ்த்  துதிகள் காற்றில்  தவழும்;  தாமரை மேல் வாழும் திருமகள் பாடும் யாழ்போன்ற மொழியும் இன்னிசை பாடும் வண்டும்  நிறைந்த நகரம்  மதுராபுரி யாகும்.

அம்மூதூரில் நூல்கள்  பாயும் இடம்  சங்கமாகும்;  எருமைகள்  சொரியும் பால் பாயும்  குளங்களில் தாமரைத் தேனும் , மீன்களும் பாயும்;  அங்கே  சங்குகள் கரையேறும்;  அங்கே மங்கையர் மார்பிலும், முகத்  தாமரையிலும் முத்துக்கள் வரிசை காட்டும்;  மூவுலகங்களிலும் சிறந்த அந்நகரில்  நூல்களின் பொருள் தரும் திரு ஆலவாயில், பிறவியறுக்கும் தமிழ்ச் சங்கம் இருந்தது.  வணிகர் மரபு  செய்த தவத்தால், பற்றுக்களை நீக்கி ஓரடியார்வாழ்ந்தார். அவரைச் சேக்கிழார்  பாடுகிறார்,

பாடல்

நாளும் பெரும் காதல் நயப்பு உறும் வேட்கை யாலே,
கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;
மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார்; மூர்த்தியார்தாம்.

அதன் பொருள்:   நாடோறும் பெரிய காதல் கூர்ந்து பொருந்த வரும் ஆசைபெருகி வேட்கையாகி விளைந்ததனாலே சுற்றமும் துணையும் முதலாகிய கெடுதலில்லாத பதங்கள் எல்லாம் ஆளும் பெருமானாகிய சிவனது திருவடித் தாமரைகளேயல்லாது வேறில்லாதவர்; மூண்டு பெருகும் அன்பு என்றதனையே தமது உருவமாகக்கொண்டவர்; அவர்தாம்   மூர்த்தியார் என்ற பெயர் பூண்டவர்.

விளக்கம்

பெருங்காதல் நயப்பு உறும் வேட்கை   என்ற தொடர் காட்டும் பொருள்.   விடாத விருப்பின் மிகுதி பெருங்காதலாக உருப்பட்டது; அது முறுகவே, நயப்பு என்னும் ஆசையாகியது; அது மேலிட வேட்கையாக விளைந்தது என்க. மனத்துள் அன்பு பெருகிப் படிப்படியாக வளர்ந்து கூர்தரும் வகையினை இத்தொடரில் கூறினார்.

கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்

கேள் – உயிர்ச்சார்பு. துணை – உயிர்ச்சார்பும் பொருட்சார்பும். கேடில் பதங்கள் – பதமுத்திப்போகங்கள். ஏனையவற்றை நோக்க இவை காலத்தால் நீடித்தனவாதலின் கேடில் என்றுபசரித்தார். இப்பொருளைச் சிங்கமுகாசுரன் எடுத்துச் சூரபதுமனுக்கு இனிது விளக்குகின்ற திறம் கந்தபுராணத்தினுட் கூறப்பட்டது காண்க.

“அழிவில் மெய்வரம் பெற்றனம் என்றனையதற்கு,
மொழி தரும்பொருள் கேண்மதி முச்சகந் தன்னுட்,
கெழிய மன்னுயிர் போற்சில வைகலிற்கெடாது,
கழிபெ ரும்பக லிருந்திடும் பான்மையேகண்டாய்

என்பது அப்பாடல்.

இறைவன் தாளில் பெறும் அபரமுத்திப் பெரும் போகம் ஒன்றேஎன்றும் அழியாததாகும் என்பது உண்மை நூல்களின் துணிபு.

அல்லது இல்லார் என்ற தொடரில்  உறுதிப் பொருள் தர எதிர்மறை முகத்தாற் கூறினார்.  “ஈச னேநீ யல்ல தில்லை யிங்கும் அங்கும்  என்பதும்” என்ற திருவாசகம் காண்க.

கேளும் துணையும் என்றவற்றால் ஆன்மாக்கள் இம்மையில் தமக்குப் பற்றுக் கோடாக எண்ணிக்கொள்வனவும், கேடில் பதங்கள் என்றதனால் மறுமையிற் பற்றுக் கோடாகக் கொள்வனவும் குறிக்கப்பட்டன. இம்மைத்துணை முதல் மறுமைப்பயன் வரையுள்ள எல்லாம் என்பது.

துணை – “துணையென்று நான்றொழப் பட்டவொண் சுடரை”  என்ற நம்பிகள் தேவாரங்காண்க.

ஆளும் பெருமான்  என்பது,  “அம்மையி னும்   துணை  அஞ்செ ழுத்துமே” என்று ஆளுடையபிள்ளையார் அருளியபடி உயிர்களுக்குப் பந்தமும் வீடும் தந்து ஆட்கொள்ளும் சிவபெருமான் என்பதாம்.

“இம்மை வானவர்\ செல்வம் விளைத்திடும்;
அம்மை யேற்பிற வித்துயிர் நீத்திடும்;
எம்மையாளும் இடைமரு தன்கழல்,
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே”

என்ற அப்பர்சுவாமிகள் தேவாரமுஞ் சிந்திக்க.

மூளும் பெருகு அன்பு என்னும் மூர்த்தியார்  என்ற தொடர், அன்பு மூண்டு பெருகிய அதுவே உருவாகி நின்ற என்பது. மூர்த்தி – உடல் – திருமேனி (வடிவம் என்பர்). மூர்த்திக்குள் இருந்து அதனை இயக்குபவர் மூர்த்திமான். ஆசனம் – மூர்த்தி- மூர்த்திமான் என்ற ஆகம பூசை முறையும் காண்க. மூர்த்தம் என்பதும் இது. மூர்த்தியார் மூர்த்தியை உடையவர்.

மூர்த்தியார் தாம் மூர்த்தியார்- என்க. மூர்த்தியார் பின்வந்தது பெயர். இவ்வாறு அடுக்கி மொழிந்து சிறப்பிப்பது ஆசிரியரது மரபு!

இப்பாடலில் இறையன்பையே  தம் உருவமாகக்  கொண்ட மூர்த்தியாரின் சிவத்தசாந்தின்சிறப்புகூறப்படுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *