ஆச்சரியத்தில் அசத்திய சலூன்காரர்

0

எம்.எஸ். லெட்சுமணன்
காரைக்குடி

ஒரு நாளைக்கு  எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறேன்? எவ்வளவு மணி நேரம் ஓய்வில் இருக்கின்றேன்? கணக்கிட்டு தன்னை சரிப்படுத்தி கொள்ளும் பணியாளரின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்திய அனுபவம்.

காரைக்குடி – ஒரு வேலைக்கும், அடுத்த வேலைக்கும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம்? ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஓய்வாக இருக்கிறோம் என கணக்கிட்டு வேலைபார்க்கும் சலூன்காரர் சிதம்பரம் என்னை ஆச்சரியத்தில்அசத்தினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  அருகே உள்ள ஸ்ரீராம் நகரில் சலூன் கடையில் வேலை பார்ப்பவர் சிதம்பரம். சமீபகாலமாக அந்த கடைக்கு வாடிக்கையாளராக சென்று வருகின்றேன். இந்த முறை செல்லும் பொழுது வரும் வாடிக்கையாளர்கள் நோட்டில் எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் என்பதை எழுதினார். பணம் தானே எழுதுகிறார் என்று நான் நினைத்தேன்.

பிறகு கேட்டேன் நீங்கள் தானே கடை நடத்துகிறீர்கள்? பின்பு ஏன் பணத்தை நோட்டு போட்டு எழுதுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு சிதம்பரம் சொன்ன பதில்தான் என்னை ஆச்சரியத்தில் அசத்தியது:

“நான் சம்பளத்திற்கு தான் இந்த கடையில் வேலை பார்க்கிறேன்.  எனது முதலாளி இரண்டு கடைகள் வைத்துள்ளார். ஆனால் என்னை இந்த கடையில் என்னை தொழிலாளி போல் நடத்தாமல், சக நண்பராக நடத்தும் அவருக்கு நேர்மையாக நடக்க வேண்டும் என்கிற நோக்கில் எத்தனை நபர்கள் வந்தாலும் அந்தக் கணக்கை நோட்டில் குறித்து விடுவேன். அது போக ஒரு வேலை முடிந்து அடுத்த வேலை ஆரம்பித்து அந்த வேலை முடிவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையும் நானே நோட்டில் குறித்து கொள்வேன். என்னுடைய கை சரியான வேகத்தில் செயல்படுகிறதா அல்லது ஒருவேலை பார்த்தவுடன் மெதுவாக ஆகிவிடுகிறது என்பது போன்று நானே அறிந்து கொள்வேன். சில நபர்கள் வரும் பொழுது மிக எளிதாக பாதி முடியை கட் செய்தால் போதும் என்று கூறிவிட்டு சென்று விடுவார்கள். அது போக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நான் வாங்கும் சம்பளத்திற்கு ஓய்வாக இருக்கிறேன்?  எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறேன் என்கிற தகவலையும் நோட்டில் குறிப்பதன் மூலம் நான் அறிந்து கொள்வேன். எனது முதலாளியும் என்னை முழுவதுமாக நம்பி இந்த கடையை ஒப்படைத்திருக்கிறார். 14 வயது முதல் சவரத் தொழில் ஈடுபட்டு வருகின்றேன். இப்பொழுது எனக்கு வயது 34. எனது அனுபவத்தில் எனது பணியை நானே நேசிக்கின்றேன். என்று கூறி என்னை வியப்பில் ஆழ்த்தினார்.”

நண்பர்களே எத்தனையோ இடங்களுக்கு நாம் செல்கின்றோம். நம்முடைய பணி எவ்வளவு நேரம் வேலை பார்த்தோம் என்பதை  சலூன் கடையில் பணியாற்றுபவர் குறித்தது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், புதிய அனுபவத்தையும் ஏற்படுத்தியது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்கிற நோக்கில் தான் இந்த தகவலை இங்கே குறிப்பிடுகின்றேன். தனது முதலாளிக்கு நேர்மையானவராகவும், தனது மனசாட்சிக்கு நேர்மையானவராகவும் செயல்பட வேண்டும் என்கிற நோக்கில் செயல்படும் சிதம்பரத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

அன்னாருக்கு வாழ்த்து தெரிவிக்க மொபைல் எண்: 99412 24289

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *