செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(422)

வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

-திருக்குறள் – 439 (குற்றங்கடிதல்)

புதுக் கவிதையில்…

அனைத்திலும் மேன்மையுற்றே
அரசன் உயர்நிலை பெறுங்காலத்தும்
அவன்
தன்னைத்தான் உயர்வாகத்
தற்செருக்கால் எண்ணக்கூடாது,
நாட்டிற்கும் தனக்கும்
நன்மைதராச் செயல்கள் செய்ய
நினைவில்கூட விரும்பக்கூடாது…!

குறும்பாவில்…

தன்நிலை உயர்ந்த போதிலும்
எக்காலத்தும் அரசன் தற்செருக்கில் இருக்கக்கூடாது,
நன்மைதராச் செயல்செய்ய விரும்பலாகாது…!

மரபுக் கவிதையில்…

நாட்டைக் காக்கும் அரசனவன்
நானே எல்லாம் என்றேதான்
வாட்ட மில்லா உயர்வினிலும்
வஞ்சச் செருக்கால் எண்ணவேண்டாம்,
நாட்டு நன்மை யுடனேதான்
நன்றாய்த் தனக்கும் நன்மைதராக்
கேட்டை மட்டும் தருஞ்செயலைக்
கேடாய் எண்ணிச் செய்யாதே…!

லிமரைக்கூ…

தானுயர்வெனத் தற்செருக்கு பண்ணாதே
தன்நிலை உயர்ந்தபோதும், நாட்டுக்கும் நன்மை
தராச்செயலை விரும்பிச்செய்ய எண்ணாதே…!

கிராமிய பாணியில்…

வேண்டாம் வேண்டாம்
தானுங்கிற தற்பெரும,
வேண்டவே வேண்டாம்
நாட்டுக்குக் கேடுசெய்ய நெனைப்பே..

தன்னோட நெலயில
ஒசந்த நேரத்திலயும்
ஒருநாளும் வேண்டாம் ராசாவுக்கு
தானுங்கிற கெறுவம்,
நாட்டுக்கும் தனக்கும்
நன்மதராத செயலெதயும் செய்ய
நெனைக்கக்கூட வேண்டாமே..

அதால
வேண்டாம் வேண்டாம்
தானுங்கிற தற்பெரும,
வேண்டவே வேண்டாம்
நாட்டுக்குக் கேடுசெய்ய நெனைப்பே…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.