மாற்றமடைந்த இராமாயணம்

1

விசாலம்

ramayana
வால்மீகி ராமாயணத்தின் கதை, பல கவிகளின் கைகளிலே போய், சில சம்பவங்கள் வேறாகி, அங்கு மாற்றமும் வந்துவிடுகிறது. கம்பரின் இராமாயணத்திலும் ஸ்ரீ துளசிதாசரின் ‘ஸ்ரீராம்சந்த்ர மானஸ்’லும் சில இடங்கள் மாறி வருகின்றன.

கவி நயத்திற்காகவும் ஒருவரின் சரித்திரத்தை மேல்படுத்திக் காட்டவும் இதுபோல் எழுதியிருக்கலாம். ஆனால் சமீபத்தில் நான் கேள்விப்பட்ட  இராமாயணக் கதை, மிகவும் வித்தியாசமாக இருந்தது. பல மாற்றங்களுடன் எழுதியிருக்கும் அந்த இராமாயணத்தைப் பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது.

இதைப் போல் இராமயணத்தை மாறுபட்டு எழுதியவர் ‘பம்பாகவி’. இவர் இதை எழுதிய போது 39 வயதுதான். 942ஆம் வருடம் இந்தக் காவியத்தை எழுதினார். இவர் ராஷ்டரகூட மன்னர் ‘அரிகேசரின்’ அரண்மணையில் அரச கவியாக இருந்தவர். இவரின் பெற்றோர்கள் முதலில் பிராமணப் பிரிவில் இருந்து, பின் ஜைன மதத்தைத் தழுவியவர்கள்.

இவர்களின் மகனும் ஜைன மதத்தைத் தழுவி, தன் வாழ்நாள் கடைசி வரையிலும் தொண்டு செய்துவந்தார். பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பெரிய கவிஞர். மகாஞானி. அவரது புத்தகம் ‘ரிஷபா’, 24 தீர்த்தங்கரர்களைப் பற்றிக் கூறுவது. இவர் வாழ்ந்த சமயத்தில் ரன்னா, பொன்னா என்ற மிகச் சிறந்த கவிஞர் இருவர், கன்னட புத்தகங்கள் பலவும் எழுதியிருக்கின்றனர். ஆகையால் இவர்களுடன் பம்பா அவர்களையும் சேர்த்து ‘ரத்னத்ரயா’ என்று பாசமாக மக்கள் அழைத்தனர்.

இவர் ஆதிபுராணா என்று மஹாபாரதத்தையும் இராமாயணத்தையும் எழுதியிருக்கிறார். ‘பம்பாபாரதா’ என்பது, மஹாபாரதத்தின் சுருக்கம் எனச் சொல்லலாம். சில இடங்களில் அவரது மன்னர் அரிகேசரனை வில்வீரன் அர்ச்சுனனுடன் ஒப்பிட்டுள்ளார். நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் இவருக்கு அதிக அளவில் இருந்ததால் பல சிறந்த படைப்புகளைத் தந்துள்ளார்.

இனி அவர் எழுதிய இராமாயணதிற்கு வருவோம்.

jain ramayanaஇந்த ராமாயணத்தின் பெயர் ‘ஸ்ரீராமசந்த்ர சரித புராணா’.

இந்த இராமாயணத்தில் தசரதருக்கு நாலு மனைவிகள். அபராஜிதா என்ற மனைவிக்குப் பிறந்த மகன் பெயர் பத்மா. பின்னர் ராமரானவர். சுபத்ரா என்ற மனைவிகுப் பிறந்தவர் நாராயணா. இவர்தான் இலட்சுமணர். கைகேயிக்குப் பரதர். சுப்பிரபா என்ற மனைவிக்குப் பிறந்தவர் சத்ருக்னர். இதே போல் ஸ்ரீராமருக்கும் நான்கு மனைவியைச் சித்தரிக்கிறார் இந்தக் கவி. அவர்கள்…. மைதலி, பிரபாவதி, ரத்னிபா, ஸ்ரீதமா.

இவரது இராமாயணத்தில் ஸ்ரீராமர், இராவணனைக் கொல்லவில்லை. ஆனால் இலட்சுமணனே இராவணைக் கொல்கிறார். ராமர் யுத்தம் முடிந்த பின்  ராஜ்யத்தைச் சகோதருக்குத் தந்துவிட்டு, ஜைன சன்யாசியாக மாறிவிடுகிறார். பின் அவர் ஸ்வர்க்கமும் போகிறார். ஆனால் இராவணனைக் கொன்ற பாவத்தினால் இலட்சுமணன் நரகம் போகிறான். அவனுடன் இராவணனும் நரகம் போகிறான். இருவரும் மறுபிறப்பில் நற்காரியங்களைச் செய்து முக்தி அல்லது மோக்ஷம் அடைவார்கள் என்று ராமர் கூறுகிறார். இராவணன் வருங்கால தீர்த்தங்கரர் ஆவார் என்றும் கூறுகிறார்.

சீதையின் கதையிலும் சீதை யுத்தம் முடிந்த பின், ஜைன சன்யாசினியாக ஆகிவிடுவதால் ராமர் அவளை விட்டு விட்டு, சுவர்க்கம் போகிறார்

தசரதர் செய்த புத்ரகாமேஷ்டி யாகம் இங்கு வருவதில்லை. இங்கு விசுவாமித்ரரும் வருவதில்லை. ஆனால் நாரதர் வருகிறார். சீதையைக் கண்டு ஆசை கொள்கிறார். ஆனால் சீதை இவரை விரும்பாததால் பல கஷ்டங்கள். ஒடுகிறார்.

சுயம்வர மேடையில் ராமர் உடைப்பது ஜனகருடைய வில். ஜனகரிடம் இரண்டு வில்கள் இருந்தன. ஒன்று வஜ்ராவர்த்தம், மற்றொன்று ஸாராவர்த்தம். அதில் ஒன்றை உடைத்து, சீதையை மணந்துகொள்கிறார். இலட்சுமணனும் மற்றொன்றை உடைத்து, சந்திரதுவஜன் என்பவரின் இரு மகள்களை மணந்துகொள்கிறான்.

வால்மீகி இராமாயணத்தில் பரதனை மிக உயர்வாகச் சித்திரித்துள்ளார். ஆனால் இவரோ, பரதனைப் பொறாமையால் வேகும் சகோதரனாகச் சித்தரிக்கிறார். இங்கு வரும் கைகேயியோ, ராமரைக் காட்டுக்குப் போகச் சொல்லவில்லை. ஆனால் பரதனுக்குப் பட்டம் மட்டும் கேட்கிறாள்.

கானகத்தில் மாரீசன் வருவது, இந்த இராமயணத்தில் இல்லை. ஆனால் ஜடாயு, சீதையைக் காவல் காத்து நின்றாராம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீராமர் ஏகபத்தினி விரதம் கொண்டதாக இல்லாமல், சுக்ரீவனுடைய மகளை மணந்ததாகச் சொல்கிறார் இவர்.

பிரம்மசாரியான ஸ்ரீராம பக்தரான அனுமார், இங்கு அனங்கபுஷ்பை என்றவளை மணம் செய்துகொண்டிருக்கிறார். இவள் இராவணனின் தங்கை சந்திரநகியின் மகள். அதாவது சூர்ப்பனகையின் மகள். இந்தக் கல்யாண வைபவத்தில் சீதனமாக இராவணன் அனுமனுக்கு கர்ணகுண்டல்புரம் என்ற இடத்தை அளித்தானாம். மாருதி இந்த இடத்திற்கு அரசன். ஆனால் இராவணன், சீதையை அபகரித்து வர, இந்த அதர்மச் செயலால் அனுமன், இராவணனுக்கு எதிரியாகி, ராமனுக்கு உதவி புரிய அவருடன் சேர்ந்துகொள்கிறார்.

ஜைனமதத்தில் இருந்த பம்பா ஹோமத்தையும் யாகத்தையும் தவிர்த்திருக்கிறார். இதனால் அசுவமேத யாகம் இதில் வரவில்லை என நினைக்கிறேன். இந்தப் புத்தகம் வாங்கிப் படிக்க நினைக்கிறேன். ஆனால் கன்னடத்தில் இது இருக்கிறதே!

இதைப் பற்றி எனக்குச் சொன்னவர் கன்னட நண்பர் ஒருவர். ரயில் பிரயாணத்தில் சந்தித்தவர். ரயில் பிரயாணத்தின்போது, இராமாயணத்தைப் பற்றி  நாங்கள் பேச, அவர் இந்த மாறுபட்ட இராமாயணத்தைச் சொன்னார். மிகவும் வித்தியாசமாக இருந்தது.

================================================

படங்களுக்கு நன்றி – http://www.travelpod.com, http://www.vedamsbooks.in

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "மாற்றமடைந்த இராமாயணம்"

  1. ஹ்ம்ம் இது போன்று பல திரிபுகள் உள்ளன . ஒரு பதிப்பில் ராவணின் மகளாக சீதை சித்தரிக்கப்பட்டு இருப்பார். இதைத் தாங்கள் விரிவாக அலச வேண்டும். முடியுமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.