ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார்

0

osama bin laden

நியூயார்க் இரட்டைக் கோபுரங்களை விமானத்தினால் மோதித் தகர்த்து, அமெரிக்காவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு வயது 54.

அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான அவர், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தார். இந்தத் தகவல், அமெரிக்கப் படைகளுக்குக் கிடைத்தது. உடனே அந்த இடத்தை முற்றுகையிட்டு, அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். 40 நிமிடங்களில் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார். அவரைப் பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது. இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார். இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.

ஒசாமா, சவூதி அரேபியாவில் 1957 மார்ச்சு 10ஆம் தேதி பிறந்தவர். இவர் செல்வந்தக் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் ஏனைய இசுலாமிய போராளிகளுடன் சேர்ந்து 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி, இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளை வாபஸ் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் இராணுவத்தினரையும் கொலை செய்யுமாறு முஸ்லிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்.

ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன எனினும் சில தகவல்களின்படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என் கூறப்படுகிறது. அவர் மொத்தம் 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா இவரது 10ஆவது மனைவி அமிதியா அல் அட்டாஸ் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்த்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா, அவரின் தந்தைக்கு 7ஆவது மகனாவார்.

பின் லேடன் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா, உற்சாக அலையில் மிதக்கிறது. அதே நேரம் பாகிஸ்தானிய மக்கள், தங்கள் மத்தியில் இவ்வளவு காலமும் ஒசாமா பின் லேடன் இருந்ததை அறிந்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்துள்ளனர்.

அமெரிக்க அரசியலில் ஒபாமாவின் கை ஓங்குவதற்கும் அடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கும் ஒசாமாவின் முடிவு, காரணமாய் அமையக்கூடும். அதே நேரம் அல்கொய்தாவின் அடுத்த கட்டத் தலைவர்கள், இதற்குப் பழிவாங்கக் காத்திருப்பார்கள் என்பதையும் அவர் மறந்துவிடக் கூடாது.

========================================
படத்திற்கு நன்றி – http://www.4tamilmedia.com | வாழ்க்கைக் குறிப்பு – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *