பெருவை பார்த்தசாரதி

 

‘எப்படியோ?..ஒரு வழியா என்னோட பையன் கணேஷ் லவ் மேரேஜ் பண்ணிகிட்டு அஞ்சு வருஷம் ஆவுது’………….உன்னோட பொண்ணத்தான் அவனுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு எனக்கு ஆசை, ஆனா, ‘காதல்’, ‘லவ்’ அது இதுன்னு போயிட்டதால, என்னால ஒண்ணும் செய்யமுடியல!….  எங்களோட பேச்சக் கேக்காம அவன் நினச்சத சாதிச்சுக்கிட்டான்….நண்பன் சுரேஷிடம் சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் ஸ்ரீராம்…

அப்பா சொல்றத பையன் கேக்காததும், பையன சொல்றத அப்பா உதாசீனப் படுத்தறதும் சகஜம்தானேப்பா?…..சரி, சரி, இப்ப பழசெல்லாம் கிளறாத, உன் மருமகளுக்கு வருஷக் கணக்கா உடம்பு சரியில்லன்னு சொல்லிகிட்டு இருக்கியே?…… ஓ வைராக்கியத்த விட்டுட்டு, ஒரு தடவ  போய் பாத்துட்டு வந்தா என்ன குறஞ்சா போய்டுவே?”…சுரேஷ் உரிமையோடு நண்பனைக் கேட்கிறான்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல சுரேஷ், அவன் விரும்பியபடி லவ் மேரேஜ் பண்ணி, என்ன சுகத்த கண்டானோ தெரியல, அவன் தலயெழுத்து ஆஸ்பத்திரிக்கும், வீட்டுக்கும் அலஞ்சுகிட்டுருக்கான். விளையாட்ட அஞ்சு வருஷம் ஓடி போயிட்டுது, இது வரைக்கும் குழந்த பத்தி பேச்சே இல்ல, என்ன சிக்கலோ தெரியல….கடவுளுக்குதான் வெளிச்சம். அம்மனுக்கு காப்பு கட்டி இன்னியோட 7 நாள் ஆவுது, இன்னும் 3 நாள் போகட்டும் பட்டணம் போய் பார்த்துட்டு, கொஞ்ச நாள் அவனோட இருந்துட்டு வரலாம்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.  பெத்த பாசம் யார விட்டு வச்சுது சொல்லு, சுரேஷ்!……….

 ஸ்ரீராம் தன்னோட மனைவியோடு பையன் வீட்டுக்கு வந்து ஒருவாரமாகிறது

அப்பா…….இன்னிக்கு நான் ஆபீஸ் போய்ட்டு அப்படியே டாக்டர பாத்திட்டு வரணும், ராத்திரி 11 மணிக்கு மேலாகும், நீங்க சாப்பிட்டு தூங்குங்கப்பா…..

ஏங்க போன வாரம் கொடுத்த என்னோட பிளட் ரிப்போர்ட் வந்திருச்சா, டாக்டர் என்ன சொன்னாரு…கமலா

தெரியல கமலா?…., ஒவ்வொரு டெஸ்டா எடுக்கச்சொல்றாரு…இப்ப எனக்கும்  சில டெஸ்ட்  எழுதிக் கொடுத்திருக்காரு.

அன்று அலுவலகம் முடிந்து டாக்டரைப் பார்த்துவிட்டு, மனதிற்குள் ஏதோ ஒரு போராட்டத்தோடு வீட்டினுள் நுழைந்த கணேஷிடம்,

ஏண்டா டாக்டரப் பாத்தியா, ஒரு வாரமா நான் வந்ததிலேர்ந்து அலஞ்சிகிட்டு இருக்கியே, என்ன சொல்றாரு டாக்டர், அவளுக்கு என்ன வியாதியாம்?..படபடப்போடு வினவுகிறாள் அம்மா…

சும்மா தொண தொணன்னு ஏதாவது கேக்காதம்மா, சாப்டுட்டு போய் டிவி பாரு. எங்களுக்கு என்ன ஆனா, உங்க ரண்டு பேருக்கும் என்ன அவ்வள கவல, உனக்கும் அப்பாவுக்கும் வேற வேலயே கிடையாது. தின்னுட்டு போய் பேசாம படுத்துக்கங்க.  உள்ளுக்குள் எரிச்சலோடு வெடிக்கிறான் கணேஷ்.

ஏண்டா அம்மாவ இப்படி கரிச்சுக் கொட்டற, உன்ன பத்துமாசம் சுமந்து பெத்தவ, அவளுக்கும் ஓம்மேல கரிசனமும், அக்கறயும் இருக்கு?…உனக்கு ஒண்ணுன்னா அவளுக்கும் பங்கு உண்டுடா!…

அய்யோ, ஆபீஸல பிரச்னன்னு, வீட்டுக்கு வந்தா, நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து வார்த்தையால என்ன கொல்லறீங்க?.. உங்க பேச்ச கேட்காம, லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு எங்க இரண்டு பேரையும் வார்த்தையாலயே அப்பப்ப கொட்டுறீங்க……………நான் விரும்பின பெண்ணை கல்யாணஞ் செஞ்சுகிட்டதுல தப்பு கிடையாதுப்பா?…அதே மாதிரி உங்க ப்ரண்டு சுரேஷோட பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதும் தப்பில்ல?..இரண்டையுமே நீங்க எப்படி எடுத்துக்கறீங்க என்பதப் பொருத்துதான் அமையும்.

அப்டி என்னதான் நா சொல்லிட்டேன், ஒரே அடியா எர வானத்துல ஏறி கத்துற. எங்க ரெண்டு பேரையுமே நீ மதிக்கல, நீ நெனச்சதயே சாதிச்சுட்டே, என்னோட உயிருக்குயிரான நண்பன் சுரேஷோட பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா, நாங்க ரெண்டு பேருமே பழக்கப்பட்ட குடும்பத்தோட அனுசரிச்சு, கொஞ்ச காலம் சந்தோஷமா இருந்திட்டு போய்ச்சேர்ந்திருப்போம்…அப்பா ஆவேசப்படுகிறார்.

எது நடக்குமோ, அதான் நடக்கும்!….கணேஷ் முணு முணுக்கிறான்.

அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கிற வாக்குவாதம் சரியில்லை என்பது தெரிந்ததும் “ஏங்க உள்ள வாங்க, வந்ததும் வராதுமா என்னங்க அப்பாவோட வாக்கு வாதம், ஏதோ பழசெல்லாம் மறந்திட்டு கொஞ்ச காலம் நம்மளோட இருக்கணும்னு வந்தவங்கள அவமதிக்காதீங்க” அவங்க அனுபவத்தில முதிர்ந்தவங்க……கணவனனச் சமாதானப் படுத்த நினைக்கிறாள் கமலா.

பாத்தீங்களா?…..பாத்தீங்களா?, அவளுக்கு என்ன திமிறுன்னு, நமக்கு சோத்துக்கு வழியில்ல கடைசி காலத்துல இவகிட்ட வந்து ஒட்டிக்கிட்டதா ஜாடபேசுறா…இதுக்கு மேல இங்க குந்த வழியில்ல, இன்னிக்கே நம்ம கிராமத்துக்கே போயிடலாம்…அடுத்து கணேஷின் அம்மா படபடக்கிறாள்.

ஏண்டா?…..மழ, தண்ணி இல்லாம வயக்காடல்லாம் காஞ்சு போச்சுன்னுதான், இங்க கொஞ்ச நாள் இருக்கணும்னு வந்தோம், இங்க நிலைமை தலைகீழா இருக்கு, ஒரு நிமிஷம் கூட நிம்மதியில்லையே!…அப்படி என்ன பாவம் பண்ணிணோம், நாங்க உன்ன பெத்து, வளர்த்து, படிக்க வைச்சு ஆளாக்குனதுக்கு?…அப்பா அழாத குறையாகப் புலம்புகிறார்.

கணேசும், கமலாவும் தங்களுடைய ரூமுக்குள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொள்கிறார்கள்.

கமலா நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காத, எங்க அம்மாவும் அப்பாவும் கிராமத்துலேயே வளர்ந்தவங்க, ரொம்ப சென்சிட்டிவ் டைப், சட்டுனு எடுத்த எடுப்பில வார்த்தயக் கொட்டிடுவாங்க, அப்பாவோட ப்ரண்டு சுரேஷோட பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல, இன்னிக்கும் அந்த வருத்தம் அவருக்குள்ள இருந்துகிட்டு ஆட்டிவைக்கிது. வேலைக்குப் போகாம, வீட்டிக்குள்ள சொல்ற வேலய செய்துகிட்டு கிடக்கிற மருமக வல்லியேன்னு எங்கம்மாவுக்கு ஆதங்கம். இதெல்லாம் தான் அவங்கள உன்ன அடிக்கடி வார்த்தையால கொட்டச் சொல்லுது. நீ ஒண்ணும் இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காத கமலா!….

இதெல்லாம் ஓண்ணுமில்லீங்க, இது கிடக்கட்டுங்க, இன்னிக்கு கிளினிக்குப் போனீங்கள ரிப்போர்ட்ட கலெக்ட் பண்ணி டாக்டர்கிட்ட காமிச்சீங்களா? என்ன சொன்னாரு?….கமலா வினவுகிறாள்.

ஆமா, ஆமா, காமிச்சேன், அவரு இன்னும் சில டெஸ்ட்டுக்கு எழுதிக் கொடுத்திருக்காரு,  உனக்கு எழுதிக் கொடுத்தது போதாதுன்னு, இப்ப புதுசு புதுசா எனக்கும் டெஸ்ட் எழுதிக் கொடுத்திருக்காரு. சில சமயம் கமிஷணுக்கு ஆசப்பட்டு, எல்லா டெஸ்ட்டும் எடுக்கச் சொல்றாரோன்னு தோணுது. நாளக்கி அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்காரு. நீயும் வரயா,

இல்லங்க, நாளைக்கு உங்க நாத்தனாரும் இங்க வறாங்களாம், ரண்டு நாள் தங்குவாங்களாம். முதல் முறையா நம்ம வீட்டுக்கு வர அவங்களுக்கு ஒரு புடவயாவது எடுத்துக் கொடுக்கணுமில்லையா, நான் திநகர் போய் எல்லோருக்கும் நல்லதா எதாவது வாங்கிட்டு வர்ரேன். பணம் இருந்தா ஆபீஸ் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் கொடுத்துட்டு போங்க!…

கமலா நீ ஒரு புத்திகெட்டவ, எங்க அம்மா, அப்பா எல்லோரும் வாய்க்கு வந்தபடி ஒன்ன கடுமையாத் தூத்துராங்க, நீ என்னடான்னா, அவங்கள, உழுந்து உழுந்து அவங்கள உபசரிக்கற.  போதாதுக்கு என் அக்கா வேற வந்து உனக்கு என்ன வெடி வக்கப் போறாங்களோ?….. கடவுளுக்குதான் வெளிச்சம்.

ஆரம்பத்திலே அப்படிதாங்க இருக்கும், பழகப் பழக எல்லாம் சரியாயிடுங்க. உங்களுக்கு பிபி ஏறிடிச்சு, நீங்க ஆபீஸ் கிளம்புங்க, இன்று வெள்ளிக்கிழமை, புத்துக் கோயிலுக்கு போய் பால் தெளிச்சிட்டு வந்திடுறேன். அந்த அம்மனாவது நமது வயிற்றில் பால் வார்க்கட்டும் என்று சொல்லிவிட்டு நம்பிக்கையோட கிளம்புகிறாள் கமலா.

கமலா போன பிறகு, “அம்மா……நேத்திக்கு கோவில்ல அப்பாவோட பிரண்ட் சுரேஷ் அவர் மகளப் பார்த்தேன். அதான் நம்ம கணேஷுக்கு பாத்தோமே, அவளப் பத்திதா சொல்றேன், அவ இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலயாம். எனக்கு ஒரு ஐடியா தோணுது, இப்ப நம்ம கணேஷுக்கு குழந்தயில்லாம அவஸ்த்தப்படரத நினச்சுப் பாக்கறப்ப, எப்படியாவது அவளயே இவனுக்குக் மறுபடி பேசி இரண்டாந் தாரமா கட்டி வச்சா என்னன்னு தோணுதும்மா?.. நீ அப்பாகிட்டப் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வா?….. நாத்தனாருக்கு வந்த வேலை ஆகிவிட்டது. நான் இப்ப ஊருக்குக் கிளம்புறேம்மா!..சீக்கிரம் உங்க முடிவச் சொல்லுங்க.

கமலா புத்துக்குப் பால் தெளித்துவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது, அம்மாவும் நாத்தனாரும் பேசிக்கொண்டிருப்பது லேசாக காதில் விழுகிறது. அதைக்கேட்டு இடிந்து போன கமலா, அப்படியே அங்கேயே திண்ணையில் உட்கார்ந்துவிடுகிறாள்.

கனேஷுக்கு அலுவலத்தில் வேல முடியவில்லை, சீக்கிரம் அங்கிருந்து கிளம்பி டாக்டரிடம் போகலாம் என்று முடிவெடுக்கிறான். போவதற்கு முன்பு, அவன் மனம் பலவாறு குழம்புகிறது, கமலாவுக்கு சும்மா அடிக்கடி ஜுரம் வருதுன்னுதானே போனோம், உண்மையா அவளுக்கு என்ன பிரச்சினை, சொல்லமுடியாதபடி அப்படி என்னதான் நோய், டாக்டர், அவ மலடி அது இதுன்னு ஏதாவது சொல்லிவிடுவாறோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு, டாக்டரின் ரூமுக்குள் நுழைந்து, என்ன டாக்டர் என்னோட மனைவியின் ரிப்போர்ட் பாத்தீங்களா.

வாங்க கணேஷ், நான் இப்ப அவசரமா, ஒரு கிரிட்டிகல் ஆபரேஷனுக்காக கிளம்பிக் கொண்டிருக்கிறேன்….இந்த மெடிகல் ரிப்போர்ட்ல எல்லாம் எழுதியிருக்கிறேன். படிச்சுப் பாத்திட்டு, இன்னொரு நாளைக்கு நீங்க இரண்டு பேரும் வாங்க.

அந்த ரிப்போர்ட கையில் வாங்கிய கணேஷ், அத படிச்சுப்பார்த்துட்டு, மிகுந்த குழப்பத்தோடு, வீட்டிற்கு வந்ததும், யாருடனும் பேசாமல் உள்ளே சென்று கதவைத் தாளிட்டுக் கொள்கிறான்.

அவன் மனைவி காப்பியுடம் உள்ளே நுழைகிறாள். என்னங்க உங்கக்காவுக்கு வாங்கியிருக்கிற பொடவயப் பாருங்க. நல்லா இருக்கா. அப்படியே அம்மாவுக்கும் ஒண்ணு, அப்பாவுக்கு எட்டு முழம் வேஷ்டி துண்டு சேர்த்து வாங்கியாந்துட்டேன். அவன் முகம் ரொம்ப வாடியிருப்பதைப் பார்த்துவிட்டு, ஆபிஸ்ல ஏதாச்சும் பிரச்சினையா, வரும்போது உங்கப்பாவுக்காக, ஒரு அரை கவுளி கும்பகோண வெத்தல வாங்கி வரச்சொன்னேனே வாங்கிட்டீங்களா?….

‘வெத்தல’ அது இதுன்னு சொல்லி வந்ததும் வராததும் வெறுப்பேத்தாத கமலா?…,அதெல்லாம் வாங்க நேரமில்ல, டாக்டர்கிட்டே போய்ட்டு, அப்படியே நேரா இங்கதான் வரேன்.

சரி சரி, அது போகட்டும், டாக்டர் என்ன சொன்னார்?….கமலா பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறாள்.

கமலா, நான் சொல்லப் போறத கவனமா கேளு, மனச சிதற விடாம, பொருமையா கேப்பியா?……

என்னங்க பெரிசா பொடி வச்சு பேசுரீங்க, எதுவா இருந்தாலும் சுத்தி வளச்சு சொல்லாம நேரடியாச் சொல்லுங்க. உங்க அப்பா, 10 மணியான சுருண்டு படுத்துக்குவாரு, அவருக்கு சாதம் போடணும்.

நம்ம இரண்டு பேரையும் அறவே வெறுக்கற அம்மா, அப்பா, அக்கா எல்லோரையும் நீ ஒரேயடியாத் தாங்கற, ஆனா அவங்க அதெயெல்லாம் புரிஞ்சுக்காம, உன்ன அப்பப்ப கரிச்சுக் கொட்டறாங்க.

அதெல்லாம் கிடக்கட்டும், இப்ப விஷயத்த சொல்லுங்கங்க…..கமலா கேட்கிறாள்.

இடிபோல பட்டுன்னு ஏதாவது சொல்லப் போய், ஏடாகூடமா ஏதாவது ஆயிடக்கூடாதுன்னு நினைச்ச கணேஷ், மெதுவாக…இதமாக…..’கமலா, இரண்டு வருஷம் முன்னாடி, நம்ம ஜாதகத்த பாத்துட்டு ஒரு ஜோசியர் சொன்னாருல்ல, டாக்டரும் அதையே தான்’…………பேச்ச இழுக்கிறான் கணேஷ்.

என்னங்க இழுக்கறீங்க, டாக்டர் உடனே சொல்லாம ஒரு வாரம் காலங்கடத்துனதுக்கு, இப்பதான் அர்த்தம் விளங்குதுங்க. நான் மலடின்னு டாக்டர் சொல்லப்போறார்ன்னு, நீங்க சொல்ல வந்தத இழுக்கும் போதே, எனக்கு சூசகமா எனக்குத் தெரிஞ்சுப் போச்சு, இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க.  நான் ஒரு மலடின்னு மட்டும் பேரு வாங்க மாட்டேங்க, ஒருவன் எவ்வளவு வசதியோட வாழ்ந்தாலும், குறை இல்லாத மனிதன் என்பவன் யாரும் இவ்வுலகில் கிடையாது. குறை இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டு, இருக்கறத வச்சுக்கிட்டு சந்தோஷமா “எனக்கு ஒரு குறையுமில்லை” என்று எவன் வாழ்கிறோனோ அவன் தான் உண்மையான மனிதப்பிறவி…?… இப்ப நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன், இரண்டு மாசத்துக்கு முன்னாடி, உங்களோட பிரண்டு ஒருத்தர் குடும்பத்தோட ஆக்சிடெண்ட்ல இறந்தப்ப, அவரோட குழந்தய எங்கோ ஒரு ஆஸ்ரமத்துல சேத்துட்டதா சொன்னீங்களே, அதுதாங்க இப்ப நம்மோட குழந்தயா ஆகப்போவுது. நாளக்கு நாம இரண்டு பேருமே அங்க போயி குழந்தய எடுத்துட்டு வந்துருவோம். குழந்தையில்லை என்ற குறை இனி நமக்குக் கிடையாது!………..கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு, ஒரு பெரிய சொற்பொழிவே தங்கு தடையில்லாமல் நிகழ்த்துகிறாள் கமலா. சிறிது நேரம் கழித்து மீண்டும் பெருமூச்சு விட்டு, மறுபடி தொடங்குகிறாள்…..இத பாருங்க, நீங்க இந்த விஷயத்துல முடிவெடுக்கலேன்னா, நா ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டேன்!……

என்ன, என்ன சொல்லு கமலா, அவசர கதியில் அவசரப் படுகிறான் கணேஷ்!….

உங்க அம்மா, அப்பா, நாத்தனார் இவர்கள் மூணு பேரும் எடுத்த முடிவை நான் மனதார ஆதரிக்கிறேன், உங்களுக்குச் சம்மதமா?…

என்னன்னு சொல்லாமலாயே புதிர் போடாதா, நீட்டி வளச்சுப் பேசாம, சட்டுனு சொல்லு, கமலா

அவசரப் படாதீங்க, இது இரண்டு பேரோட வாழ்க்கைப் பிரச்சின, இந்த விஷயத்துல இருவருக்கும் பூரண ஒத்துழைப்போடுதான் இத செயல்படுத்தமுடியும்.

இதையெல்லாம் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்த கணேஷ் ஆறுதல் அடையவில்லை மாறாக, மீண்டும் அவன் உள்மனம் பதை பதைக்கிறது. சரி சொல்லு நான் நிதானமா கேட்கிறேன்.

உங்களய கணவனா அடையுனுமின்னு, இன்னும் கன்னியாவே இருக்கிற உங்க அப்பாவோட நண்பன் சுரேஷ் பொண்ண உங்களுக்கு இரண்டாம் தாரமா கட்டி வைக்கிறதுக்கு உங்க அம்மா, அப்பா, அக்கா மூணு பேரும் முடிவு பண்ணிருக்காங்க.  எது எப்படியோ உங்களுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்பதால், நானும் இதுக்கு மனப்பூர்வமா சம்மதம் தெரிவிக்க முடிவுக்கு வந்து விட்டேன்.

இதைக் கேட்டவுடன், இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறான் கணேஷ், அவன் மனதுகுள்ளே பல கேள்விக்கணைகள் துளைத்துக் கொண்டிருக்கின்றன.  அய்யோ கடவுளே என் மனைவியைப் பற்றி நான் எவ்வளவு தவறான எண்ணங்களுடன் டாக்டரிடம் சென்றேன்.  அவர் எழுதிக் கொடுத்த மெடிகல் ரிப்போர்ட், அவன் எதிரில் வந்து பூச்சாண்டி காட்டுகிறது.

ஏங்க, நா எவ்வளவு சீரியஸான விஷயத்தைச் சொல்லிகிட்டிருக்கேன், நீங்க என்னடான்னா, எதைப் பத்தியோ யோசிச்சுகிட்டு இருக்கீங்க, இது வாழ்க்கப் பிரச்சினங்க. ஜோக்கா எடுத்துக் காதீங்க, ஒரு முடிவுக்கு வாங்க.

கணேஷ்….மறுபடி மெளனமாகிறான்.

என்னங்க நா திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கேன், நீங்க எதையுமே காதுகொடுத்துக் கேக்காம, எங்கோயோ மனசப் பரிகொடுத்துட்டு யோசிக்கிறீங்க!….

மீண்டும் யோசனையில் மூழ்குகிறான்…..மனதுக்குள் மீண்டும் மத்தாப்பு.

‘கமலா சொல்வது போல, என் நிலைமையை எப்படி மற்றவரிடம் சொல்ல முடியும்?… கமலாவைப் போல ஒரு புதுமைபெண்ணை நான் மனைவியாகப் அடைந்தது கடவுள் கொடுத்த வரமல்லவோ?……குறை என்னிடம்தான் இருக்கிறது என்பதை முழுவதுமாகத் தெரிந்து கொள்வதற்கு முன், அதை மனைவியின் பக்கம் திருப்பி விட நினைப்பது எவ்வளவு பெரிய மடத்தனம்?. கள்ளம் கபடமற்ற கமலாவை எனக்குக் கொடுத்த கடவுளே!……’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமல்லவா!….கமலா சொன்னது போல் ‘எனக்கு ஒரு குறையுமில்லை’….என நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும்போதே குடுகுடுப்பைக்காரன் மாதிரி டமடமவென்று அந்த மெடிக்கல் ரிப்போர்ட் மீண்டும் மணி அடிக்கிறது.

“கணேஷ், உங்களுக்கு கருவை  உற்பத்திசெய்கிற உயிரணுக்களில் உயிரணு இம்மியளவும் இல்லை’ மருத்துவத்தால் இந்தக் குறையை நிவர்த்தி செய்யமுடியாதெனினும், மனம் தளராமல் முயன்று பார்ப்போம்!.. அடுத்த வாரம் என்னை சந்தியுங்கள்”.

இதை அப்படியே கமலாவிடம் சொல்லி விடலாமா?……..யோசித்தவன் சட்டைப்பையிலிருக்கும் மெடிக்கல் ரிப்போர்ட்டைத் தொட்டுப் பார்த்து கொள்கிறான்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on ““குறையொன்றுமில்லை”!…..

  1. குறையென்பதும் நிறையென்பதும், வாழ்க்கை நம் முன் வைக்கும் சவால்களை நாம் எதிர்கொள்ளும் விதத்தில் தான் என்பதை தெளிவுபடுத்தும் கதை. மனித எண்ணங்களின் வேறுபாட்டால் ஏற்படும் உறவுச் சிக்கல்களை அற்புதமாகச் சொல்கிறது . மிக்க நன்றி.

  2. உங்கள் நடையில் முன்னேற்றம் தெரிகிறது

    , வழக்கமாக பல காலமாக எழுதப்பட்ட கதைதான் இருந்தாலும் அதை நீங்கள் சொல்லி இருக்கும் விதம் மனதைக் கவர்கிறது

    அன்புடன்தமிழ்த்தேனீ

  3. எத்தனைதான் ஆணுக்கு நிகராக (அல்லது அதைவிட அதிகமாகப்) பெண் படித்தாலும், பணிசெய்து சம்பாதித்தாலும் குழந்தையின்மை என்ற பிரச்சனை வரும்போது அனைவரும் சந்தேகிப்பதும், குறை சொல்வதும் பெண்ணைத்தான். இதில் அந்தப் பெண்ணின் கணவனும் அடக்கம். இந்தப் பார்வை மாற இன்னும் எத்தனை காலம் ஆகுமோ? சமுதாயத்தில் நாம் சந்திக்கும் ஓர் முக்கியப் பிரச்சனையை மையமாக வைத்துக் கதை எழுதி அந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அந்தப் பெண்ணின் கணவன் தன் மனைவியின் அருமையை உணர்வதாக முடித்துள்ளது நன்று. கதாசிரியர் ‘நல்வழிகாட்டி’ பார்த்தசாரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

    -மேகலா

  4. வல்லமையில் இடம்பெறும் படைப்புகளுக்குத் தவறாமல் ஒவ்வொரு முறையும், தங்கள் மேலான கருத்துக்களை அள்ளி வழங்கி, எழுத்துக் கலையை ஊக்குவிக்கும் அரும்பணியை ஆற்றுகின்ற மதிப்பிற்குறிய எழுத்தாளர், நடிகர், கவிஞர் தமிழ்த்தேனீ, எழுத்தாளர் மேகலா ராமமூர்த்தி மற்றும் எழுத்தாளர் பார்வதி ராமச்சந்திரன் இவர்கள் மூவருக்கும், என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.