நான் அறிந்த சிலம்பு – 71
மலர் சபா
புகார்க் காண்டம் – 07. கானல் வரி
“முகம் இல் வரி”
“காமம் மிக்க கழிபடர் கிளவி”
(46)
நாரையே! நாரையே!
எம் கானலிடத்தே வந்துதான் அடையாதே!
கரையில் அடித்து
அதை உடைக்கின்ற அலைகளையுடைய
கடல் பகுதி சார்ந்த
எம் தலைவனுக்கு
நீ எம் காதல் நோயை
உரைக்கவே இல்லை.
எனவே,
இனி எம் கானலில் வந்துதான் அடையாதே!
கட்டுரை
மாதவி பண்ணுப் பெயர்த்துப் பாடத் தொடங்குதல்
(47)
அங்ஙனம் கோவலன் பாடியது போலவே
பாடல்கள் பாடிமுடித்தனள் மாதவி;
பின்னர் தன் மென்காந்தள் மென்விரல்களால்
கைக்கிளையைச் சுருதியாகக் கொண்டு
இன்னிசையுடைய செவ்வழிப்பாலை என்னும்
இசையதனை எழுப்பி
முறைப்படி பாடினள் மாதவி;
அதற்குப் பின்பு
வேறொரு பண்ணையும் பாடத் தொடங்கினள்.
முகம் இல் வரி
தலைவி மாலைபொழுது கண்டு கூறுதல்
(48)
மாலைப் பொழுதே!
நெய்தல் நில மக்களுக்குரிய
‘விளரி’ எனும் இனிய பாலைப்பண்ணை
யான் யாழ் மீட்டிப் பாடுங்கால்,
இளி நரம்பைத் தடவுவதற்குப் பதிலாக
கைக்கிளை எனும் நரம்பைத் தடவும் வண்ணம்
எனக்குத்தான் மயக்கத்தைத் தந்துவிட்டாயே!
இங்ஙனம் பகைநரம்பு
எனை மீட்டவைக்க வல்ல நீ
என் உயிரை மாய்க்கவும் வல்லாய்!
ஆதலால்,
என் உயிரினைக் கொண்டு சென்று வாழ்வாயாக!
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html<http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html>
படத்துக்கு நன்றி:
http://blondesearch.ru/index.php?key=Raja_Ravi_varma_paintings&page=1