உத்தமன் அலெக்சாண்டர் – முடிவுரை

6

 ராமஸ்வாமி சம்பத்

images alex‘உத்தமன் அலெக்சாண்டர்’ குருந்தொடரை மிக்க விரும்பியும் உன்னிப்பாகவும் படித்ததோடு மட்டும் அல்லாமல் தங்கள் உயர்ந்த கருத்துகளை பகிர்ந்து கொண்ட நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

அலெக்சாண்டரைப் பற்றி பல கருத்துகள் (நல்லதும் கெட்டதும்) புழக்கத்தில் உள்ளன. அவன் ஒரு போர் வெறியன், முரடன், எதிரிகளை கொடுமைக்கு ஆளாக்கியவன், ஓரினச்சேற்கையாளன் என்றெல்லாம் கூறப்பட்டாலும், அவனுடைய சில சற்குணங்களும் அவ்வப்போது வெளிபட்டதாகவும் பதிவுகள் உள்ளன.

அவன் கீழை நாடுகள்மீது தொடுத்த போர்களில் எளிதாக வெற்றி பெற்றதும் பரதகண்டத்தின் எல்லையில்தான் அவன் புருஷோத்தமனின் வீர பராக்ரமத்தைக் கண்டு வியந்ததும் வரலாற்று குறிப்புகளே. மாசிடோனிய வரலாற்று ஆசிரியர்கள் அவன் புருஷோத்தமனை தோற்கடித்ததாகவும், பவுரவ நாட்டு மன்னனின் வீரத்தை மெச்சி அவனைக் கொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்கள். ஆனால் இதனை கிரேக்க வரலாற்று அறிஞர்களும் ரஷ்யாவைச் சேர்ந்த மார்ஷல் ஜுகோவும் ஒப்புக்கொள்ளவில்லை. மார்ஷல் ஜுகோவ் அவர்கள், அலெக்சாண்டர் ஜீலம் நதிக்கரையிலும் நெப்போலியன் வாடர்லூவிலும் மாபெறும் தப்புக் கணக்கு போட்டுவிட்டதாக கருதுகிறார். இந்திய வரலாற்று அறிஞர்களும் ஜீலம் போரில் வென்றது யார் என்பதனை திட்டவட்டமாகக் கூறவில்லை.

அலெக்சாண்டரைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்துள்ள காப்டன் அஜித் வடகயில் (அவர் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றியவர்) என்பவர் அவனது யுத்த தந்திரங்களை புருஷோத்தமன் முறியடித்து வெற்றி பெற்றதாகவும், யவன மன்னனை மன்னித்து பரிசுகள் அளித்து நாட்டுக்குத் திரும்பச் செய்ததாகவும் கூறுகிறார். மாசிடோனிய வீரர்களின் கலகம் ஒரு ஜோடனை என்றும் அபிப்பிராயப்படுகிறார்.

ஜீலம் போர் இருபக்கங்களிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி எவர்க்கும் வெற்றி தோல்வியின்று முடிந்திருக்க வேண்டும் என்பது எளியேனின் ஊகம். எது எப்படியானாலும் ஜீலம் போர்க்குப் பின்னர்தான் அலெக்சாண்டர் ஒரு முற்றிலும் மாறுபட்ட மனிதனாகத் திகழ்ந்தான் என்பது வெள்ளிடை மலை.

அடியேனின் ஆன்மீக ஆசான், திருப்பெருந்திரு ஸமர்த்த ஸத்குரு ஹனுமத் காளி வர பிரஸாத பாபுஜி மஹராஜ் அவர்கள், “அலெக்சாண்டர் பரத கண்டத்திற்கு வந்ததின் நோக்கம் இம்மண்ணின் ஆன்மீகப் பலத்தைப் புரிந்து கொள்ளவே” என்பார். கீழை திக்விஜயத்திற்கு முன் அவன் தன் ஆசானான அரிஸ்டாடில் அவர்களிடம் ஆசி கோரியபோது அவர் அவனுக்கு பரத கண்டத்தினரின் ஆன்மீக பலத்தைப் பற்றி அறிந்து வருமாறு பணித்தார் என்றும் பாபுஜி மஹராஜ் சொல்லுவார். இந்த ஒரு உன்னதமான கருத்தே இந்த குருந்தொடருக்கு அடிப்படை.

அண்மையில் குண்டூர் (ஆந்திரா) அருகில் நடந்த ஒரு சாது சம்மேளனத்தில், ஹைதரபாத்தைச் சேர்ந்த வியாசாஸ்ரம பீட்த்தின் அதிபதியான பரிசுத்தானந்த சுவாமிகள் உரையாற்றும் பொழுது, அலெக்சாண்டரின் அன்னை தன் மகனிடம் பரத கண்டத்திலிருந்து தனக்கு மூன்று பரிசுகளை கொண்டுவருமாறு கேட்டார் என்று குறிப்பிட்டார். “அக்கண்டத்தில் பகவத்கீதை எனும் ஒரு ஒப்பற்ற ஆன்மீக நூல் உள்ளதாம். அது எனக்கு வேண்டும். இரண்டாவதாக அங்கிருந்து ஒரு நல்ல ஆசார்யரை இங்கு அழைத்து வா. மூன்றாவதாக புனிதமான நதி என்று புகழ்பெற்ற கங்கை நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வா” என்று ஆணையிட்டார் என்றும் அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.

ஆக மாவீரன் அலெக்சாண்டர் உத்தமனாக மாறியதற்கு இச்சான்றுகளே போதுமானது..

துரதிருஷ்டவசமாக அலெக்சாண்டர் ஜீலம் போருக்குப் பின் மூன்று ஆண்டுகளே வாழ்ந்து தனது முப்பத்து மூன்றாவது வயதில் (கி.மு. 323) நோய்வாய்ப்பட்டு பாபிலோனில் காலமானான். பிறரை நம்பும் நற்பண்பைப் பயன்படுத்தி அவனது விரோதி ஒருவன் நஞ்சு கலந்த பானத்தைப் பருகச்செய்ததால் அலெக்சாண்டர் நோய்வாய்ப்பட்டான் என்பது ஒரு வரலாற்று குறிப்பு. அவன் இறந்த சில மாதங்களுக்குப்பின் ரொக்ஸானா ஒரு ஆண்மகவை (நான்காம் அலெக்சாண்டரை) ஈன்றெடுத்தாள். அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவனான காசெண்டர் என்பவன் அவளையும் அவள் மகனையும் ஓட ஓட விரட்டியடித்து கொன்று உத்தமன் அலெக்சாண்டரின் வம்சத்தை அடியோடு அழித்ததும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.

எது எப்படியாகிலும் அலெக்சாண்டர் எனும் உத்தமனின் பாரத வருகை அவனைப் பொறுத்தவரை அவன் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பம்தானே?

படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://upload.wikimedia.org/wikipedia/commons/0/05/Alexander_Hamilton_portrait_by_John_Trumbull_1806.jpg&imgrefurl=http://en.wikipedia.org/wiki/Alexander_Hamilton&h=3000&w=2532&sz=2264&tbnid=IQ-qkEXijuxBkM:&tbnh=101&tbnw=85&zoom=1&usg=__q0gvqoYcbsQBIdtDZPSyN1X0rk0=&docid=t_-Kv5gKJWCBKM&sa=X&ei=fyU_Uo-EN8jorQfwioDgBQ&ved=0CDYQ9QEwAw&dur=4835

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “உத்தமன் அலெக்சாண்டர் – முடிவுரை

  1. மிகவும் வேதனை செய்யும் முடிவு.  அலெக்சான்டரை நன்கு அலசி ஆராய்ந்து எழுதி இருப்பதோடு, அவன் அடிப்படையில் நல்லவன் எனச் சொல்லி இருப்பதற்கும் நன்றி.  யாருமே பிறக்கையிலேயே கெட்டவர்களாகப் பிறப்பதில்லையே!  சூழ்நிலை தானே மாற்றுகிறது. நல்லதொரு பகிர்வு. 

  2. தங்கள் குருநாதர் அருளால் எங்களுக்கும் அருமையான, சிந்திக்க வைக்கும் தொடர் கிடைத்தது. வரலாறுடன் ஒட்டியே அருமையாகச் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். நன்றியுடன் வணங்கிக் கொள்கிறேன் ஐயா.

  3. வணக்கம் ஐயா!

    பல வரலாற்றுத் தகவல்களை ஆராய்ந்து மிகவும் நுணுக்கமான தகவல்களை வழங்கி உள்ளீர்கள். இளம் வயதில் அலெக்சாண்டர் மரணமடைந்த செய்தியைவிட, அவனது மரணத்திற்குப் பிறகு அவனது மனைவிக்கும் பச்சிளம் குழந்தைக்கும் ஏற்பட்ட முடிவை அறிந்து மனம் வேதனை கொள்கிறது.

    நன்றி!

  4. அன்புடையீர்:
    எளியேனின் ‘உத்தமன் அலெக்சாண்டர்’ குருந்தொடர்மீது தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
    கீதா அம்மா சொன்னதுபோல் அலெக்சாண்டர் அற்ப ஆயுளில் இறந்தது வேதனை தரும் முடிவே. அதுவும் அவன் உத்தமனாக மாறி மூன்று ஆண்டுகளே வாழ்ந்தது விதியின் சதியே. கலி பிரபாவமோ என்னவோ! இன்னும் ஒரு பத்தாண்டுகள் வாழ்ந்திருந்தால் ஐரோப்பாவின் வரலாறே திசை திரும்பியிருக்கலாம். Ifs and buts of history என்று ஆன்றோர் சொல்வர். சிறு வயதிலிருந்தே ஒரு போர் வெறிக்கு அடிமையாக இருந்தவனை உத்தமனாக்கிய பெருமை நம் பரத கண்டத்திற்கே உரித்தாகும்.
    அன்பிற்குரிய சின்னப் பெண் கவிநயாவிற்கு ஒரு தகவல். அடியேன் ஆசான் இக்கதைக்கான வித்தினை என் மனத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே நாட்டியிருந்தார். அதனை அசை போட்டு அசைபோட்டு இப்போதுதான் விளைந்து, அறுவடையாகி, விருந்தாக உங்களுக்குப் படைக்கப்பட்டிருக்கிறது. அவ்விருந்தினை உண்டவர் மகிழ்ச்சியடைந்தால், படைத்தவனுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்படுமல்லவா! அம்மகிழ்ச்சியில்தான் அடியேன் திளைத்துக் கொண்டிருக்கிறேன்.
    திரு சச்சிதானந்தம் அவர்களே! பாலகனான நான்காம் அலெக்சாண்டர் காசெண்டரால் கொல்லப்பட்டது மனத்திற்கு வேதனைதான். ஆனால் ரொக்ஸானா குறித்து வருத்தப்பட தேவையில்லை. பட்டமகிஷி ஆனதும் அவள் தனக்குப் பிறக்கப்போகும் சிசுவே அலெக்சாண்டருக்கு வாரிசு ஆகவேண்டும் என்ற தீவிரமான ஆசையால் தனது மூத்த சக இல்லத்திகளையும் அவர்கள் குழந்தைகளையும் சதி செய்து கொன்றுவிட்டாள். ஊழ்வினை உருத்திவந்து ஊட்டிவிட்டது.
    மற்றபடி உங்கள் அன்பு உள்ளங்களுக்கும், அடியேனை ஆரம்பத்திலிருந்தே உற்சாகமூட்டி வரும் ‘வலலமை’ ஆசிரியர் திருமதி. பவள சங்கரியாருக்கும், என் friend, philosopher and guide திருவாளர் திவாகர் அவர்களுக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
    வணக்கத்துடன்,
    ஸம்பத்

  5. அலக்ஸாண்டரைப் பற்றிய சரித்திரம் நம்மவருக்கு, பொதுவாக, அதிகம் தெரியவில்லை என்றே சொல்லலாம். மாவீரன், உலகத்தையே ஒரு குடையில் ஆளவேண்டி பல நாடுகளை வென்றவன், பாரதத்தையே வெல்ல முனைந்தவன் என்ற அளவுக்கே சரித்திர புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அவனைப் பற்றிய முழு விவரங்களையும் பல கோணங்களில், பல ஆராய்ச்சிகள் மூலமாக திரட்டி அவனைப் பற்றிய ‘பாஸிடிவ்’ விஷயங்களை அதிகம் வெளிப்படுத்தி பாரதத்தின் பெருமையையும் உணர்த்தி, தேசத்தின் உயிர்நாடியாக எப்போதும் திகழும் ஆன்மீகத்தை நிரப்பி, ஒரு அருமையான கதையாக பரிசளித்திருக்கிறீர்கள். சம்பத் சார்! உங்கள் கமெண்டில் உள்ள அந்தக் கடைசிவரிகள் அப்படியே ’ரிவர்ஸ் செய்ய வேண்டியது’என்பதை நிறையபேர் அறிந்திருந்தாலும் மறுபடியும் ஒருமுறை நான் சொல்வது நீங்கள்தான் ஆதியிலிருந்தே என்னுடைய ஆத்மீய வழித்துணை. அதில் எத்தனையோ பெருமை எனக்கு உண்டு. 

  6. அன்புள்ள திவாகர்:
    வணக்கம். தங்கள் மின் மடலுக்கு மிக்க நன்றி.
    ‘உத்தமன் அலெக்சாண்டர்’ தலை சிறந்த வரலாற்று நவீனங்களைப் படைக்கும் தங்களைப் போன்ற எழுத்தாளர்களைக் கவர்ந்திருப்பது எளியேன் செய்த பாக்கியமே. You may recall when I told you about the story in conception some months ago, you only gave me the encouragement to go ahead with the project. அத்தகைய தூண்டுதல் (ஆசி என்று சொல்லலாமா?) எனக்குக் கிடைத்த வரப்பிரஸாதம்.
    எனது கடைசி வரிகளைப் பற்றி ஒரு வார்த்தை. நான் ஒன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லையே. நீங்கள் என் friend என்பது உலகறிந்த விஷயமல்லவா!
    நீங்கள் என் guide என்பதிலும் ஒருவிதமான exaggerationம் இருக்க முடியாது. என்னால் தமிழில் எழுதமுடியும் என்பதனை உணர்த்தி என்னை தமிழில் எழுத வைத்த பெருமையு தங்களைச் சார்ந்ததே அல்லவா.
    Philosopher என்பதை ஒருவேளை நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். அடியேனின் கருத்துப்படி ஒவ்வொரு மானுடனும் ஒருவகையில் philosopher ஆகத்தான் திகிழ்கிறார். வாராவாரம் ஒரு ‘வல்லமையாள்ர்’ அவர்களைத் தேர்ந்து எடுப்பதில் உங்கள் அருமையான philosophy வெளிப்படுகிறதே. ஆகவே தங்களை philosopherஆகக் கூறியிருப்பது முற்றிலும் பொருத்தமே!
    என்னை ‘ஆத்மீய வழித்துணை’ எனக் கூறியிருப்பது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.
    அன்புடன்
    ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *