தமிழில் அது ஒரு இனிய கலை
கவிஞர் காவிரி மைந்தன்
தமிழில் அது ஒரு இனிய கலை – சங்கே முழங்கு – கண்ணதாசன் – எம்.எஸ்.வி
காதல் பாடல்கள் இடம்பெறாத திரைப்படங்களே இல்லை என்று சொல்லிவிடலாம்! மனித ஜாதியின் மகத்துவம் காதலிலே புதைந்து கிடக்கிறது என்பதும் காதலைப் பற்றி எழுதத் தொடங்கும்போதுதானே கவிஞனே பிறப்பெடுக்கிறான் என்பதும் உண்மைதானே!
இதமான சங்கதிகளை பதமாக சொல்லிடவே
நிதந்தோறும் நீ வேண்டுமே!!
இளமாலைத் தென்றலுடன் சுகராகம்தினம்பாட
மகராணி உனை நாடுவேன்!!
கனவோடு பலநாட்கள் கழிந்தாலும் கவலையில்லை
கவிதைக்கு உணவாகிறேன்!!
நனவோடு நாம்வாழும் நாட்கள்தான் வரவேண்டும்
நங்கையிடம் நான் கேட்கிறேன்!!
அன்போடு நடைபோடும் அவளுக்குத் தெரியாதா
என்பாடு என்ன என்பது?
கண்ணோடு கண்வைத்து காதலைச் சொல்லுவது
கன்னிக்குத் தெரியாததா?
உன்னோடு உறவாடும் உள்ளத்தின் நிலைபற்றி
உனக்கிங்கு நான் சொல்வதா?
பழகத்தான் துடிக்கின்ற பாசத்தின் தவிப்பென்ன
பாவை நீ அறியாததா?
பண்ணோடு இசைபோல பாவை உனைப்பற்றி
பருவத்தில் பல ராகங்கள்!
என்னோடு இணைந்தபடி என்தோளில் சாய்ந்தபடி
என்றைக்கு வரும் கீதங்கள்?
கண்ணதாசன் கவிதைகளிலும் திரைப்பாடல்களிலும் மூழ்கிய நமக்கே இப்படி எழுத வருகிறதென்றால்.. கவியரசு கண்ணதாசன் எழுதிய மற்றுமொரு காதல் பாடலிது.. இசை அமைத்திருக்கிறார்.. தென்னகத்து நெளஷத்.. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்பாடலைக் கேட்பதற்கும் தனிமை வேண்டும்! இருகுயில்கள் பாடியது போல் டி.எம்.எஸ்.. பி.சுசீலா இணைந்து தந்திருக்கும் இந்த அமுதத்தை அள்ளிப் பருகுங்கள்.. இனிய செவிகளால்.. அகமெல்லாம் நிறைந்துவிடும் ஆனந்தத்தால்!
தமிழில் அது ஒரு இனிய கலை..
சங்கே முழங்கு – கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்
டி.எம்.செளந்திரராஜன் – பி.சுசீலா – ப.நீலகண்டன் – எம்.ஜி.ஆர் – லட்சுமி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை
அழகில்நீ ஒரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்பக் கனவுகளை.. தமிழில்
பூந்தோட்டம் பொன்மேடை மணிமண்டபம்
ஒரு பெண்ணாக உருவானதோ.. ( 2 )
பூமீது விளையாடும் பொன் வண்டுகள் – உன்
கண்ணாக உருவானதோ.. (2)
அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள்
எனக்காக கல்யாண ஒளி காட்டுதோ.. (2) தமிழில்
பாராத பார்வைக்கு பரிசல்லவோ – உந்தன்
மார்போடு நான் வந்தது (2)
பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ
நல்ல நாள் பார்த்து நான் வந்தது (2) தமிழில்
நெய்வாசக் குழல்மீது கைபோட்டு விளையாடும்
கலையுந்தன் கலையல்லவோ (2)
நீராடும் சுகமொன்றும் போராடும் சுவையொன்றும்
நீ தந்த விலையல்லவோ (2) தமிழில்