ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்

0

தேசம் முழுவதும் தன்வந்திரி யாகம்

Peedam
இந்தக் கலிகாலத்தில் பல விதமான சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் மக்களுக்கு நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக கவலைதான் காத்திருந்து ஆட்கொள்கிறது. எத்தனைதான் கோயிலுக்குப் போனாலும், நல்லது செய்தாலும் நமக்கு ஏன் இப்படி ஒரு சோதனை என்று வேதனைப்படுபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம்.

புதிது புதிதான நோய்கள், குழந்தைப் பேறு இல்லாமை, தாம்பத்தியத்தில் கருத்து வேற்றுமை, தொழிலில் ஏற்படும் தோல்விகள், சக்திக்கு மீறிய கடன் தொல்லை, அதர்ம கார்யங்களில் ஈடுபடும் மனம் – இப்படித் தனி நபர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் சிரமங்கள்.

இதுதான் இப்படி என்றால், சமூகத்தின் பின்னணியிலும் எத்தனை எத்தனை சங்கடங்கள்! மழை இல்லை, விளைச்சல் இல்லை, மனித நேயம் இல்லை, மது& மாதுவின் சூழ்ச்சி வலை, லாகிரி வஸ்துக்களின் ராஜ்யம், நீயா நானா என்கிற போட்டி, பொறாமை எண்ணங்கள், இப்படி அன்றாடம் எத்தனை துயரங்கள் துரத்தித் துரத்தி மனிதனை வாட்டுகின்றன!
ஏன் இவை எல்லாம்?

001

பூரணமான பக்தி சிந்தனையோடு, நல்ல எண்ணங்களோடு, மனம் நிறைய சந்தோஷத்தோடு ஒரு மனிதரைப் பார்க்க முடியவில்லையே! ஏன் எல்லோருக்குமே துயரம்?

நம் சனாதன தர்மத்தில் ஒரு வசதி உண்டு. எந்த தெய்வத்தைக் குறித்து ஆராதிக்கிறோமோ, அந்த தெய்வத்துக்குத் தேவையான வழிபாடுகளைச் செய்யலாம். எனவே, தங்களின் தேவை என்னவோ அதைப் பொறுத்து, கல்வியா… வேலையா… தொழில் முன்னேற்றமா… திருமணமா… குழந்தைப் பேறா… குபேர சம்பத்தா என்று அததற்குத் தேவையான தேவதையை முன்னிறுத்தி ஹோமம் செய்து வழிபடுகிறோம். ஆத்மார்த்தமான எண்ணத்துடன் செய்கின்ற ஹோமங்களுக்கு உரிய பலன் இருந்து வரத்தான் செய்கிறது.

சரி… மேலே சொன்ன எல்லா பிரச்னைகளுக்கும் அடிப்படை எது?
நோய்… நோய்… நோய்தான்!

ஒருவர் நோயில்லாமல் வாழ்ந்தாலே, அவருக்கு எந்த ஒரு குறையும் இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லி விடலாம். இன்று பலரது வாழ்க்கையும் சிக்கலாக இருப்பதற்கு முக்கியமான காரணம், மன அழுத்தம்.
இந்த மன அழுத்தம் எங்கே கொண்டு போய் விடுகிறது? சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்று நோய், இதய வலி, அல்சர் என்று பட்டியல் நீள்கிறது.

நமக்கு ஏற்படும் சகல விதமான பிணிகளையும் தீர்த்து, நமக்கு இன்னருள் புரிந்து ஆட்கொள்பவர் கலியுக மாமருத்துவரான ஸ்ரீதன்வந்திரி பகவான் என்றால், அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை. ‘நோயில்லாத வாழ்க்கை’யே இன்றைக்கு மாபெரும் சொத்து. ‘நோயற்று வாழட்டும் உலகு’ என்பதே வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் தாரக மந்திரம்.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் சொல்கிறார்: ‘‘நோய்கள் நம்மைத் தீண்டாமல் இருப்பதற்கு, எத்தனையோ கடவுளர்களை வணங்கினாலும், ஸ்ரீதன்வந்திரி பகவானை வணங்குவதற்கு ஈடாகாது. ‘மாமருத்துவர்’ என்று போற்றப்படுபவர் தன்வந்திரி பகவான்.

ஒரு சில வருடங்களுக்கு முன் வரை ‘தன்வந்திரி பகவானா? யார் அவர்? எந்தக் கோயில்லயும் நாங்க பார்த்ததே இல்லியே…’ என்று கூறியவர்கள்தான் அதிகம். ஆனால், காலம் செய்த கோலம் இன்று தன்வந்திரி பகவானைத் தேடி எல்லோரும் படை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில வருடங்களுக்கு முன் வரை ஒரு குடும்பத்தில் ஏதேனும் பிரச்னை என்றாலோ, வியாதி வெக்கை என்றாலோ ‘கணபதி ஹோமம் பண்ணு, சுதர்சன ஹோமம் பண்ணு’ என்றுதான் ஜோதிடர்களும் பண்டிதர்களும் சொல்வார்கள். தற்போதுதான் தன்வந்திரி பகவானின் முக்கியத்துவத்தை உணர்ந்து பலரும் ஸ்ரீதன்வந்திரி பகவான் வழிபாட்டையும், ஸ்ரீதன்வந்திரி பகவான் யாகத்தையும் பரிந்துரைக்கிறார்கள்.

மந்திரங்களுக்கு உள்ள சக்தியும் பலமும் அளவிடற்கரியது என்பதில் தீவிர நம்பிக்கை கொண்ட இந்த பீடத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் கைப்பட எழுதிச் சேர்ப்பித்த தன்வந்திரி பகவானின் பல கோடி மந்திரங்களையே இங்கு ஆதார பீடமாக வைத்து, அதன் மேல் இந்த ஸ்ரீதன்வந்திரியை பிரதிஷ்டை செய்துள்ளார்.

இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தைத் தேடி வந்து ஆனந்தத்துடன் தரிசிக்கிறார்கள். அதோடு இந்த மாபெரும் பீடத்தை ஸ்தாபித்த டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளையும் தரிசித்து அவரது ஆசிகளைப் பெற்றுச் செல்கிறார்கள்.

ஸ்ரீதன்வந்திரி பகவான் தவிர சுமார் 70-க்கும் மேற்பட்ட சந்நிதிகளை, வேறெங்கும் காண முடியாத விசேஷ சந்நிதிகளை இந்த ஆரோக்ய பீடத்தில் தரிசிக்கலாம். தெய்வங்களும் மகான்களும் (ஷீர்டி பாபா, ஸ்ரீரமணர், மகா பெரியவா, குழந்தையானந்தா ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற எண்ணற்ற மகான்களுக்கு இங்கே சந்நிதி உண்டு) நிறைந்த இந்த பீடத்தில் 468 சித்த புருஷர்கள் லிங்க சொரூபத்தில் அருள் பாலித்து வருகின்றனர்.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீதன்வந்திரி பகவான் மூலவரும் உத்ஸவரும் இந்தியா முழுக்க பல்லாயிரக்கணக்கான கி.மீ. தொலைவு பயணித்து அதன் பின் பிரதிஷ்டை ஆனார்கள். இதை மீண்டும் நினைவுபடுத்துவது போல் தற்போது உத்ஸவரான ஸ்ரீதன்வந்திரி பகவான், ஸ்ரீஆரோக்யலக்ஷ்மி தாயார், ஸ்ரீசுதர்சன ஆழ்வார் ஆகிய தெய்வங்கள் பக்தர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஆசி புரிந்து வருகின்றனர். அங்கு செய்யும் யாகங்கள், பூஜைகள், ப்ரார்த்தனைளை அனுபவித்து வருகின்றார்.

இந்த யாகங்களின்போது பிரபல ஆன்மிக எழுத்தாளரும் உபன்யாசகருமான ‘ஜீ தமிழ் டி.வி. தெய்வத்தின் குரல் புகழ்’ திரு. பி. சுவாமிநாதன் அவர்கள், யாகத்தின் அவசியம் குறித்தும் பக்தியும் முக்கியத்துவம் குறித்தும் எளிமையான முறையில் சொற்பொழிவாற்றி வருகிறார். ‘நோயின்றி இந்த உலகம் வாழ வேண்டும்’ என்பதற்காக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தன்வந்திரி ஹோமங்களை இதே யக்ஞ பூமியில் செய்து ‘யக்ஞ புருஷராக’ சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஸ்ரீதன்வந்திரி யாகம் நடைபெறும் இடங்களில் பலதரப்பட்ட பக்தர்களும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொள்கிறார்கள். உடல் ஊனமுற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள், மூப்பு நோயினால் பீடிக்கப்பட்டவர்கள், உயிர்க்கொல்லி, ஆட்கொல்லி என்று கூறப்படும் சர்க்கரை வியாதி, புற்றுநோய் உள்ளவர்களும், மன அழுத்தம் உள்ளவர்களும், விபத்தினால் பீடிக்கப்பட்டவர்களும், திருமணம் ஆகாத ஆண், பெண்கள், தொழில் மற்றும் உத்தியோகம் அமையாதவர்கள், வியாபாரம் சரி இல்லாதவர்கள், வழக்கு நிலுவையில் உள்ளவர்களும் மற்றும் மாணவ மாணவிகலும் இதில் பங்கு பெற்று பலன் அடைந்து வருவது கண்கூடு.

யாகம் (ஹோமம்) ஓர் அறிமுகம்

இன்றைக்குப் பலருக்கும் யாகம், வேள்வி, யக்ஞம், ஹோமம் – போன்ற சொற் பிரயோகங்களில் குழப்பம் வருகிறது. அதாவது, இந்த வார்த்தைகள் எல்லாமே ஒன்றுதானா, அல்லது வேறு வேறு பொருளில் பயன்படுத்தப்படுகின்றனவா என்று!

யாகம், வேள்வி, யக்ஞம் – இவை எல்லாமே ஒரே பொருளைத் தருபவைதான். யாகத்தை அனுஷ்டிக்கும் முறை ஹோமம் எனப்படுகிறது.

‘புகை, ஜோதி, நீர்த்துளி, காற்று – இவற்றின் சேர்க்கையே மேகம். இந்த நான்கின் சேர்க்கை இருந்தாலே போதும். மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும். ஆனால், இந்த நான்கும் சேர வேண்டும் என்றால், அதற்கு வேள்வி செய்யப்பட்ட வேண்டும்’ என்பார் கவி காளிதாசர். சிலப்பதிகாரம் பாடிய இளங்கோ அடிகளும், ‘சாதாரணமாக உலவிடும் மேகங்களை சூல் கொண்ட மேகங்களாக மாற்றும் சக்தி யாகசாலைக்கு உண்டு’ என்கிறார்.

ஆக, யாகம் என்று பொதுவாகச் சொல்கிறோம். யக்ஞத்திலே – அதாவது யாகத்திலே அநேக விதமான திரவியங்களை மந்திரபூர்வமாக அக்னியிலே போடுவதற்கு ஹோமம் என்று பெயர் (புனித மந்திரங்களை உச்சரித்தவாறு பொருட்களை அக்னியில் இறைவனுக்குப் படைப்பதற்குப் பெயர் ஹோமம் என்று வேதம் கூறுகிறது).

ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார்.

ஹோமங்களில் இருந்துதான் வேதங்கள் தோன்றின என்றும், வேதங்களில் இருந்துதான் ஹோமங்கள் தோன்றின என்றும் இரு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. இங்கே தாய் ஸ்தானம் எதற்கு என்பது முக்கியமில்லை. இவற்றால் நாம் அடையும் பலன்கள்தான் முக்கியம். ஹோமங்களும் சரி… வேதங்களும் சரி… இரண்டுமே அபாரமான தெய்வீக ஆற்றல் வாய்ந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆதியும் அந்தமும் இல்லாத அழிக்க முடியாத அபாரமான சக்திகள் இவை இரண்டும்!

வழிபாட்டு முறைகளில் ஹோமங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்ய வேண்டுமானால், அதற்குரிய ஹோமத்தை நாம் செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அனுக்ரஹத்தைப் பெற முடியும். கோவைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால், கோவை செல்லும் ரயிலில்தான் ஏறி அமர வேண்டும். மதுரை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தால், கோவைக்குப் போக முடியாது. அது போல நாம் எந்த தெய்வத்தை நினைத்து – என்ன பிரார்த்தனையை வைக்கிறோமோ, அதைக் கட்டாயம் அந்த தெய்வம் நிறைவேற்றித் தந்து விடும். என்ன ஒன்று… நம் பிரார்த்தனையில் ஆத்மார்த்தம் இருக்க வேண்டும். சஞ்சலங்கள் இருக்கக் கூடாது.

தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

தன்வந்திரி பீடம் ஓர் அறிமுகம்

வாலாஜா ஸ்ரீதன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹோமங்கள் நடந்துள்ளன. யக்ஞ பூமி அது. சைவம், வைணவம் – என ஷண்மதத்திற்குரிய அனைத்து தெய்வ சந்நிதிகளும், நூற்றுக்கணக்கான சித்தர் பெருமக்களும், எண்ணற்ற மகான்களும் பரிபூரணமாக பிரதிஷ்டை ஆகி இருக்கும் பீடம் அது. எனவே, உங்களது சக்திக்கு உட்பட்டு இது போன்ற சாந்நித்தியமான பீடங்களில் ஹோமம் செய்தாலும் அல்லது அந்தப் புனித நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் அது அளவற்ற பலன்களைத் தரும். சகல வளங்களையும் அருளும்.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பிரதிஷ்டை ஆகி இருக்கிற ஸ்ரீதன்வந்திரி பகவான், இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சுமார் இரண்டு லட்சம் கி.மீ. தொலைவு பயணம் செய்து அதன் பின்தான் கருவறையில் குடி கொண்டுள்ளார். யாத்திரையின்போது ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் உட்பட எண்ணற்ற அருளாளர்களும் உடன் பயணித்துச் சென்றனர். 665 நாட்கள் பயணம் செய்து, 500-க்கும் மேற்பட்ட புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசித்து, 2000-த்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் – நகரங்களில் பயணித்து, 200-க்கும் மேற்பட்ட மடாதிபதிகளின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு, 100-க்கும் மேற்பட்ட புனித நதிகளில் நீராடி, 67 வைணவ திவ்ய தேசங்களை தரிசித்து, 200-க்கும் மேற்பட்ட சித்தர் சமாதிகளுக்குச் சென்று இந்த யாத்திரை வாலாஜாபேட்டை திரும்பியது. கோடிக்கணக்கான மந்திரங்கள் பக்தர்கள் மூலமாகவே ஜபிக்கப்பட்டு 15.12.2004 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றது. திருப்பணி ஆரம்பிக்கப்பட்ட சுமார் 120 நாட்களில் கும்பாபிஷேகம் நடந்தேறி இறைவனின் மாபெரும் சக்தியை உலகுக்கு உணர்த்தியது இந்த பீடம்.

வேலூருக்கு அருகே வாலாஜாவில் (வாலாஜா – சோளிங்கர் சாலையில்) கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞங்கள்தான் மிகச் சிறப்பு. உலக மக்களின் நலனுக்காக இங்கு சதா சர்வ காலமும் மந்திரங்கள் ஜபிக்கப்பட்டு பல அபூர்வ யாகங்கள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீ தன்வந்திரி பிரதிஷ்டை செய்யப் பெற்ற 15.12.2004-லிருந்து இன்றுவரை பல்லாயிரக்கணக்கான யாகங்கள் உலக நலன் கருதி நடந்தேறியுள்ளன. மந்திர ஒலிசக்தி குவிந்திருக்கிற இடங்களில் திருவருள் பிரகாசிக்கும் என்பர். அதற்கேற்ற மாதிரி இங்கு வந்து பிரார்த்திக்கும் பல பக்தர்களின் பிணிகளும் பனி போல் அகன்று சுகம் பெற்று வருகின்றனர் என்பது நிதர்சனம்.

உலக மக்களின் ஆரோக்கியம் கருதி நிர்மாணிக்கப்பட்ட இப்பீடம், பல்லாயிரக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்து பலருடைய வேண்டுதல்களை நிறைவேற்றியும் அரிய பல அற்புதங்களை நிகழ்த்தியும் உள்ளது. இறையருளால், உலக மக்களுக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொன், பொருள், நிலம், மனை, வீடு, கல்வி, புத்திர பாக்கியம் மற்றும் திருமணம் ஆகிய சகல சம்பத்துக்களையும் நல்கும் குருமகான்கள் உள்ளிட்ட எண்ணற்ற பரிவார மூர்த்தங்களுக்கு தனிச் சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. மானுட சக்திக்கு மாறுபட்ட ஒரு தெய்வீக சக்தியும் இறையருளும் பெற்ற ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் நம்பிக்கை மற்றும் முயற்சியே இந்த உயர்வுக்குக் காரணமாகி உள்ளது.

ஸ்வாமிகளும் & தன்வந்திரி பீடமும் வாழும் மனிதனுக்கு வழிகாட்ட ஒரு மகான் (குரு) நிச்சயமாக வேண்டும். நாம் குழந்தையாக இருக்கும் போது தாய், தந்தையர் நமக்கு குருவாக திகழ்கின்றனர். பள்ளி செல்லும் போது ஆசிரியர் குருவாக திகழ்கிறார். வேலைக்கு செல்லும் போது முதலாளி குருவாக திகழ்கிறார்.

ஆனால் வாழ்க்கையில் சறுக்கி விடாமல் சகலமும் பெற்று நோயின்றி வளமுடன் வாழ வேண்டுமானால் நமக்கு ஒரு மகான் (குரு) நிச்சயம் தேவை. அப்படிப்பட்ட ஒரு சிறந்த மகான்தான் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இவர் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, அரசு மருத்துவ மனையில் தந்தை சீனிவாசனுக்கும் தாயார் கோமளவல்லி என்பவருக்கும் மகனாக பிறந்தவர்தான் ஸ்வாமிகள்.

பள்ளிப்பருவம் முதல் திருமணம் முடிந்த காலங்கள் மட்டும் ஸ்வாமிகள் பட்ட கஷ்டங்களை சொல்லி மாளாது. ஸ்வாமிகளின் 35வது வயதில் பலவிதமான இன்னல்களின் நடுவே வளர்த்து ஆளாக்கிய அன்னை கோமளவல்லி மிகவும் கொடிய வியாதியான புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இந்த புவியை விட்டு வைகுண்ட பதவி அடைந்தார். இந்த சம்பவம் ஸ்வாமிகளை மிகவும் பாதித்தது.

ஆனாலும் அந்த அன்னை தனது மரணப் போராட்டத்தின்போதும் கூட தனது மகனிடம் கூறினார், நான் பட்ட இந்த துன்பம் இனி யாருக்கும் வரக் கூடாது, இது போன்ற நோய் எதிரிக்குக் கூட வரக்கூடாது, இதற்காக நீ ஏதாவது செய்தாக வேண்டும் என்று சத்திய வாக்கை பெற்றுக் கொண்டார்.

ஸ்வாமிகளும் அன்னைக்கு கொடுத்த வாக்கை எப்படி காப்பாற்றுவது என்று யோசித்த வேளையில், அவரது மனதில் தோன்றியதே இந்த தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

இன்று மக்கள் அதிக வேதனைக்குள்ளான ஒன்று அவர்களுக்கு ஏற்படும் நோய்களும் மன அழுததங்களும்தான். அப்படியானால் அந்த நோய்களை எப்படி தீர்ப்பது என்று யோசிக்கலானார். அப்போதுதான் அவரது உள்ளத்தில் தன்வந்திரி பகவான் உதித்தார்.

உடனடியாக சற்றும் தாமதிக்காமல் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்து அங்கு ஸ்ரீ தன்வந்திரி பகவானை மூலவராக ப்ரதிஷ்டை செய்து இதர 71 பரிவார தெய்வங்களையும், லிங்க வடிவிலான 468 சித்தர்களையும் ப்ரதிஷ்டை செய்து தேக நலம், தேச நலம் என்ற முறையில் சேவை செய்து வருகிறார்.

இன்று உலக அளவில் பல்வேறு மக்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து தங்களது இன்னல்கள் நீங்க ப்ராத்தனைகளும், யாகங்களும் செய்து வளமுடன் வாழ்ந்து வருகின்றனர் என்றால் அது முரளிதர ஸ்வாமிகளின் கடின உழைப்பும், பக்தர்களின் அன்பும், பெற்றோரின் ஆசியே எனலாம்.

யாகங்களும் & தன்வந்திரி பீடமும்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், தன்வந்திரி பீடம், தன்வந்திரி யக்ஞ பீடம் என்றாலே அங்கு ஹோமங்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஸ்வாமிகள், பீடத்திற்கு வரும் பக்தர்களின் குறைகள் என்னவென்று அன்போடு கேட்கப்பட்டு அவரவர் குறைகளுக்கேற்ப தனக்கு கிடைக்கும் ஆக்ஞைப்படி ஹோமங்களையும், யாகங்களையும் நடத்தி வைக்கிறார்.
அந்த வகையில் பீடத்தில் 200க்கும் மேற்பட்ட சண்டி யாகம், சூலினிதுர்கா ஹோமம், ஒரு லட்சம் மோதகங்கள் கொண்டு வாஞ்சா கல்பலதா கணபதி யாகம், 74 குண்டங்களில் 74 பைரவர் ஹோமம், 6000 கிலோ சிகப்பு மிளகாய் வற்றல் கொண்டு மஹா ப்ரத்யங்கிரா தேவி யாகம், 10,000 மாதுளை பழங்கள் கொண்டு மஹா காளி யாகம், 365 நாட்கள் 365 விதமான ஹோமங்கள், 51 சக்தி பீட ஹோமம், 15,000 வாழைப்பழங்கள் கொண்டு மஹா ஆஞ்சநேய ஹோமம் போன்ற எண்ணற்ற ஹோமங்களை நடத்தித் தந்த ஸ்வாமிகள் தினந்தோறும் உலக மக்களின் ஆரோக்யத்திற்காக தன்வந்திரி ஹோமத்துடன் சகல தேவதா காயத்ரி ஹோமங்களையும் செய்து வருகிறார்.

இந்த ஹோமங்கள் மட்டுமல்லாமல் சிறப்பு ஹோமங்களான, திருமணமாகாத ஆண்களுக்காக பிரதி மாதம் 3வது ஞாயிறு கந்தர்வராஜ யாகம், பெண்களுக்காக பிரதி மாதம் கடைசி ஞாயிறு சுயம்வரம்கலா பார்வதி ஹோமம், குழந்தைபேறு இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க பிரதி மாதம் 3வது சனிக்கிழமையில் சந்தான கோபால யாகம், பிரதி தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் ஹோமமும், பிரதி வளர்பிறை பஞ்சமியிலும்,
வாஸ்து நாட்களிலும் வாஸ்து சாந்தி ஹோமம் மற்றும் பிரதி பௌர்ணமி, அமாவாசையில் சிறப்பு ஹோமங்களையும் நடத்தி வருகிறார் நமது ஸ்வாமிகள்.

மேற்கண்ட ஹோமங்களுக்கும், சிறப்பு யாகங்களுக்கும், அவரவர் தேவைக்கேற்ற ஹோமங்களுக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து ஸ்வாமிகளின் ஆலோசனைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று யாகத்தில் கலந்து கொண்டு பயன் பெற்று மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் மாபெரும் யக்ஞ பூமியாக தன்வந்திரி பீடம் சிறப்புடன் திகழ்ந்து வருகிறது என்றால் அது பக்தர்களின் ப்ரார்த்தனையும், ஒத்துழைப்பும், அபார நம்பிக்கை என்றால் அது மிகையாகாது. ஆரோக்ய பீடம் வாருங்கள் அருள் பல பெற்றுச் செல்லுங்கள் என்கிறார் நமது ஸ்வாமிகள்.

ஸ்வாமிகள் மனதில் உதித்த தெய்வங்கள்

நமது ஸ்வாமிகளின் தினசரி ஆத்மார்த்த பூஜைக்காகவும், பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், உலக மக்கள் நோயின்றி நலமுடன் வாழவும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கீழ்கண்ட விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து யாங்கள் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார். அவை கீழே பார்க்கலாம்.

தன்வந்திரி பீடம் நுழைந்தவுடன் நறுமனம் கலந்த மூலிகை காற்று நம்மை மகிழ்ச்சி பெற செய்கிறது. அத்துடன் ஹோமத்தில் சேர்க்கப்படும் மூலிகைகளின் நறுமணப் புகையானது நமது சுவாசத்தை இனிமையாக்கி நோய்களை தீர்க்கிறது.

வாஸ்து பகவான் : உள்ளே நுழைந்தவுடன் நாம் முதலில் தரிசிப்பது லட்சுமி கணபதியுடன் கூடிய வாஸ்து பகவானைத்தான். வாஸ்து பகவானுக்கு தனி பீடம் உலகில் முதன் முறையாக வாஸ்து முறை படி அமைத்திருப்பது தன்வந்திரி பீடத்தின் தனிச்சிறப்பாகும். இங்கு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமியிலும் வாஸ்து ஹோமங்கள் நடைபெறுகிறது. இதில் வைத்து பூஜிக்கப்பட்ட வாஸ்து யந்திரங்கள், மச்ச யந்திரங்கள், செங்கல், மணல் பிரசாதங்கள் தேவைப்படுவோர்க்கு குறைந்த காணிக்கையில் வழங்கப்படுகிறது.

பாரத மாதா : உலகில் வேறெங்கும் காணாத வகையில் பாரத மாதாவிற்கு விக்ரஹம் அமைத்துள்ளார் ஸ்வாமிகள். முக்கிய தினங்களில் பாரத மாதாவிற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தேச நலமே தேக நலம் என்கிறார் நமது ஸ்வாமிகள்.

தச புஜ காளியும் 51 சக்தி பீடமும் : உலகில் உள்ள 51 சக்தி பீடங்களையும் ஒன்றினைக்கும் வகையில் 60 அடி நீளத்தில் திரிசூலம் அமைத்து அதன் உள்ளே 51 சக்தி பீட யாக குண்டங்களை அமைத்து அட்சர சக்தி தேவிகளை வழிபடும் விதத்தில் 51 சக்தி பீடத்துடன் மகா பீடத்தையும் இணைத்து சக்தி பீட யாகத்தை நடத்தியுள்ளார் நமது ஸ்வாமிகள். அந்த சூலத்தின் அருகே தசபுஜ காளியையும், மகா யாக குண்டத்தையும் நிறுவி மாபெரும் யாகங்களை நடத்தி வருகிறார் ஸ்வாமிகள்.

தைலக்காப்பில் & தன்வந்திரி விநாயகர் : அடுத்து ஸ்ரீ தன்வந்திரி விநாயகர், வேறெங்கும் காணமுடியாத வகையில் ஒரே கல்லில் பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானையும், வினை தீர்க்கும் விநாயகரையும் ப்ரதிஷ்டை செய்துள்ள விக்ரஹத்திற்கு பக்தர்கள் உடல் பிணி, உளப்பிணி நீங்க தைலாபிஷேகத்துடன் ப்ராத்தித்து செல்வது சிறப்பு.

Mahisahasoormarthini
மகிசாசுர மர்த்தினி : 8அடி உயரமுடன் 16 திருக்கரங்களுடன் மகிஷனை வதம் செய்யும் கோலத்துடன், புன்னகை ஏந்திய முகத்துடன் மிகவும் அழகாக காட்சியளிப்பது மகிசாசுர மர்த்தினி அம்மன். மாங்கல்ய பாக்யத்திற்காகவும், திருமண ப்ராப்தத்திற்காகவும் இவளுக்கு மஞ்சள் குங்கும அபிஷேம் செய்து எலுமிச்சை, திருமாங்கல்ய சரடு போன்ற பிரசாதங்கள் பெற்று பலனடைந்தவர்கள் ஏராளம் எனலாம்.

ரோகம் தீர்த்து யோகம் அளிக்கும் யாக சாலையில் 6 அடி ப்ரத்யங்கிரா தேவி : அம்பாளை தரிசித்து விட்டு சற்று முன்னோக்கி சென்றால் நாம் தரிசிப்பது ப்ரத்யங்கிரா தேவி. இந்த தேவிக்கு பிடித்தமானது மிளகாய் வற்றல், வேப்பெண்ணெய், வேப்ப இலை, இனிப்பு வகைகள், பூசணிக்காய், மஞ்சள், குங்குமம், அரளிப்பூ மற்றும் விசேஷ திரவியங்கள் ஆகும் என்பார்கள். இங்கு தினசரி வருகை புரியும் பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே அணையா யாக குண்டத்தில் மேற்கண்ட திரவியங்களுடன் ப்ரார்த்தனை செய்து சமர்பித்து பலனடைந்து செல்கின்றனர்.

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி : மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. வேண்டும் வரத்தை வேண்டியவுடன் தருபவள். ஆர்ய வைசியர் குடும்பங்களின் குலதெய்வமாக போற்றப்படும் தேவிக்கு உலகில் முதன் முதலாக தன்வந்திரி பீடத்தில் ஒரு சன்னதி அமைக்கப் பட்டுள்ளது என்பது சிறப்பாகும். இங்கு ஏராளமான வைசியர் மற்றும் இதர குடும்பத்தினர்கள் அப்தபூர்த்தி, சஷ்டியப்தபூர்த்தி, விஜயரத சாந்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேக சாந்தி போன்ற சாந்தி வைபவங்களை நடத்தி செல்கின்றனர்.

பலிபீடம் : பலி பீடம் என்பது நம்மை முழுமையாக பகவானிடம் சரணடையச் செய்வதாகும். அந்த வகையில் நம்முடைய தேவையற்ற தோஷங்களையும் எதிர்மறையான எண்ணங்களையும் பலி பீடத்தின் முன் சமர்ப்பித்து செல்ல வேண்டும்.

கஷ்டம் தீர்க்கும் அஷ்டநாகக் கருடன் : தன்வந்திரி பகவானுக்கு நேர் எதிரில் அமைந்திருப்பதுதான் இந்த அஷ்டநாகக் கருடன். வாகன விபத்துக்கள், பஞ்ச பட்சி தோஷங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள் மற்றும் இதர தோஷங்கள் இவரை வணங்குவதால் நீங்கும்.

கார்த்த வீர்யார்ஜுணர் : அடுத்ததாக நாம் வணங்குவது கார்த்த வீர்யார்ஜுணர், இழந்த செல்வங்களை மீட்டுத்தரும் வல்லமைப் பொருந்தியவர். இவருக்கு தனி சன்னதி இங்கு மட்டுமே. இவர் ஆத்ரேய கோத்திரக் காரர், தத்தாத்ரேயரின் சீடர், 16 திருக்கரங்களுடன், 4வித ரூபத்துடன் பச்சைக்கல்லில் அமைத்துள்ளார் நமது ஸ்வாமிகள்.

மகாவீரர் : வட மாநிலங்களில் பல மகத்துவங்களை புரிந்தவர் மகாவீரர். மனம் அமைதி பெற மகாவீரரை வணங்குவது சிறப்பு. சமன மதத்தவரும், ஜெயினர் மதத்தவரும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து ஆனந்தத்துடன் வழிபட்டு செல்கின்றனர். இவரும் ஒரு வகையில் விஷ்ணுவின் அம்சமாகும்.

சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் : சங்கடங்களை தீர்ப்பவர் சக்கரத்தாழ்வார். சத்ரு பயத்தை போக்கி சந்தோஷம் அருள்பவர்.

பால ரங்கநாதர் : அடுத்து வலப்பக்கத்தில் அமைந்திருப்பது பால ரங்கநாதர் ஆவார். குழந்தை முகத்துடன் ரங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். குழந்தை வேண்டுவோர் மற்றும் இதர தேவைகள் பூர்த்தியடையவும் இவரை வழிபடலாம்.

பதவி தரும் பட்டாபிஷேக ராமர் : ரங்கநாதருக்கு அடுத்து பட்டாபிஷேக ராமர், இனிய இல்லறம், சகோதர பாசம், வாழ்வில் நேர்மை முதலிய பற்பல நற்சிந்தனைகள் வளரவும், உயர் பதவி பெற வேண்டுவோர் பட்டாபிஷேக ராமரை வழிபடுவது சிறப்பு. இந்த விக்ரகம் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆரோக்ய லட்சுமி : தன்வந்திரி பகவானின் துணைவிதான் ஆரோக்ய லட்சுமி. மருத்துவக் கடவுளான தன்வந்திரியை போன்றே இவரும் மருத்துவக் கடவுளாவார். பெண்களின் மனநோய்களை தீர்த்து நமக்கெல்லாம் தாயாக விளங்கும் தாய். இவளுக்கு பூஜித்த குங்குமப் பிரசாதம் பல அதிசயங்களை நிகழ்த்தும் அற்புத பிரசாதம் என்கிறார்கள் பயனடைந்த பக்தர்கள்.

கெஜலட்சுமி : ஆரோக்ய லட்சுமி சன்னதியின் வாயிற்படி மேல்பகுதியில் கெஜலட்சுமி விக்ரகம் அமைந்துள்ளது. கெஜலட்சுமி இருக்கும் இடத்தில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம்.
ஸ்ரீ சத்திய நாராயணன் : சத்தியம் காக்கும் சத்திய நாராயணன் என்பர். இவர் பக்தர்ககள் வேண்டிய வரங்களை வாரி வழங்குவதில் வள்ளல் ஆவார். அதே சமயத்தில் வேண்டியபடி நேர்த்திகடனை செய்யா விட்டால் சோதனை செய்வதிலும் வள்ளல் ஆவார். இந்த விக்ரகத்தில் கருடன் மற்றும் ஆஞ்சநேயர் சூரிய வழிபாட்டுடன் பூஜை செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மர் : உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஆமையின் மேல் தாயார் லட்சுமியை மடியில் ஏந்தியவாறு பக்தர்களுக்கு திருக்காட்சித் தருகிறார் தன்வந்திரி பீடத்தில். பக்தர்களின் கோபங்களை தீர்த்து ருண, ரோகங்களுக்கு விடுதலை அளிக்கிறார்.

வாக்கு அளிக்கும் வாணி சரஸ்வதி : அடுத்ததாக அன்னை சரஸ்வதி தேவி, கல்லாமையை இல்லாமை ஆக்குபவளும், கஷ்டங்களை போக்குபவளுமான கல்வி வளம் தரும் தேவியான வாணியை வணங்கி கல்வியில் மேன்மை பெறுவோம்.

ராகு கேது : ஒரே கல்லில் தலை ராகுவாகவும், உடம்பு கேதுவாகவும் உலகில் எங்கும் இல்லாதவாரு அமைக்கப் பட்டுள்ளது. ராகு கேதுவிற்கு பிரதி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளா காட்சியாகும். இந்த பிரசாதத்தை உட்கொண்டால் உணவு குழலில் ஏற்படும் நோய்கள் நீங்கும் என்கிறார் நமது ஸ்வாமிகள்.

நோய் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவான் : தன்வந்திரி பீடத்தில் பிரதான தெய்வமாக வீற்றிருப்பவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான். இவர் பாற்கடலில் அமிர்த கலசம் ஏந்தி தன்வந்திரியாக தோன்றியவர் தேவர்களின் பிணிகளை நீக்குபவர். இவரே உலகின் ஆதி வைத்தியராக போற்றப்படுகிறார். தன்வந்திரி பகவான் சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 50 கோடி மந்திரங்களுடன் உலகம் முழுவதும் சுமார் 2லட்சம் கீலோ மீட்டர் பயணம் செய்து பக்தர்களுக்கு ஆசீர்வதித்து, திவ்ய தேசங்களுக்கும், விசேஷ ஸ்தலங்களுக்கும் எழுந்தருளிய பின் தன்வந்திரி பீடத்தில் ப்ரதிஷ்டை செய்துள்ளார் நமது ஸ்வாமிகள். மந்திர பீடமாகவும், ஔஷதகிரியாகவும் உள்ள தன்வந்திரி பகவானை பக்தர்கள் வாழ்வில் ஒரு முறையாவது வந்து சேவித்து பலன்பெற வேண்டும் என்கிறார்கள் பீடத்திற்கு வருகை புரியும் பக்தர்கள்.

பணம் தரும் சொர்ணாகர்ஷண பைரவர் : அடுத்ததாக சொர்ணாகர்ஷண பைரவர். கணவன், மனைவி ஒற்றுமையை ஏற்படுத்தி, வழக்கு வியாஜ்யங்களில் வெற்றிபெறச் செய்து, தொழில், வியாபாரம் சிறக்க வைத்து மற்றும் வெளிநாடு செல்ல ஏற்படும் தடைகளை நீக்கி சகல ஐஸ்வர்யங்களையும் தருபவர்.

ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர் : பச்சை நிற மரகதக் கல்லால் ஆன சிவலிங்கம் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அருகில் மரகதீஸ்வரி விக்ரகம் அமைந்துள்ளது. கர்ம பிணிகளையும், ஊழ்வினைகளையும் நீக்கும் உத்தமர் இவர்.

DSC_1290
கவலைகள் போக்கிடும் காலச்சக்கரம் : இதுவரை எங்கும் அமைந்திராத வகையில் ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் கூடிய விருட்சங்களை உள்ளடக்கி இந்த காலச்சக்கரம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சக்கரத்தை வணங்கும் போது ராசி, நட்சத்திரம் மற்றும் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும், பூமி தோஷங்களும் நீங்கும். விருட்ச வழிபாடே விசேஷம் என்கிறார் நமது ஸ்வாமிகள்.

அஷ்டபைரவருடன் கால பைரவர் : வெளிநாடுகள் செல்லும் யோகத்தை தருபவர் இவரே. தன்வந்திரி பீடத்தில் மஹா பைரவருடன் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபாலபைரவர், பிஷ்ண பைரவர், சம்ஹார பைரவர் என ஒரே கல்லில் அஷ்ட பைரவர்களும் அமைந்துள்ளனர். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பைரவர் ஹோமத்துடன் கூஷ்மாண்ட தீபம் ஏற்றப் படுகிறது. பிளாக்மெயில், பில்லி, சூன்யம், செய்வினை உத்யோக தடை போன்ற பல்வேறு தடைகளை நீக்குபவர் இவர் என்கிறார் ஸ்வாமிகள்.

மனித நேய மணிகண்டன் : ஐயப்பனுக்கென்று தனி சன்னதி அமைத்து அவருக்கே உரிய பூஜை வழிபாடுகள் செய்து வருகின்றனர். பீடத்திற்கு வருகை புரியும் அனைவரும் மனித நேயத்துடன் மணிகண்டனை தரிசித்து மகிழ்ச்சியடைகின்றனர். இந்த சன்னதி மூன்றே நாட்களில் அமைக்கப்பட்டதாகும்.

நவக்கிரக மண்டலம் : ஒன்பது நவக்கிரகங்களுக்கு உரிய நிறங்களில் ஒன்பது விதமான கட்டங்கள் அமைத்து, அதற்கே உரிய தானியங்கள், புஷ்பங்கள் என்ற முறையில் ஸ்வாமிகள் பூஜித்து வருகிறார்.

நாளும் நன்மை தரும் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபத்தில் : தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மையத்திற்கு செல்லும் பாதையில் நாம் தரிசிப்பது சிவலிங்க ரூபத்தில் அமைந்திருக்கும் 468 சித்தர்கள் ஆகும். இங்கு இவர்களை ப்ரதிஷ்டை செய்வதற்கு முன்பாக ஸ்வாமிகள், சுமார் 300 க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று பூஜித்து, அங்கிருந்து மண் (ம்ருதி) கொண்டு வந்து சிவலிங்கத்தின் கீழ் வைத்து 15 நாட்கள் அதிருத்ர மகா யாகம் செய்து சித்தர்களை ப்ரதிஷ்டை செய்துள்ளார். பௌர்ணமி மற்றும் ப்ரதோஷ காலங்களில் இவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யும் காட்சி திருக் கயிலாயக் காட்சியாகும்.

அன்னம் அளிக்கும் அன்ன பூரணி : அடுத்ததாக அன்ன பூரணி, நமக்கு குறைவில்லாமல் அன்னம் வழங்குவதில் சிறந்தவள் அன்ன பூரணி. இங்கு அன்னதானத்திற்கு அரிசி மற்றும் பருப்பு வகைகள் வாங்கி சமர்ப்பிப்பது சிறப்பு. இவளை வணங்குவதால் அன்ன தோஷங்கள் நீங்கி ஆரோக்யத்துடன் உணவு குறைபாடின்றி வாழலாம்.

கார்த்திகை குமரன் : கார்த்திகை பெண்களுடன் தாமரை பீடத்தில் சித்தர்களுக்கு ஞானகுருவாக கார்த்திகை குமரன் அமைந்திருப்பதைக் காண கண்கோடி வேண்டும். சத்ரு சம்ஹார ஹோமம் செய்து கார்த்திகை குமரனுக்கு விபூதி அபிஷேகம் செய்தால் செய்வினை கோளாருகள், தோல் வியாதிகள், சத்ரு உபாதைகள் நீங்கும்.

காயத்ரி தேவி : அடுத்து நாம் காண்பது காயத்ரி தேவி. காயத்ரி மந்திரங்களை நாம் உச்சரிக்கும் போது அனைத்து இன்னல்களும் நீக்கும் அகிலாண்டேஸ்வரி இவளே.

DSC_0390

மாமேரு : காயத்ரி தேவியுடன் மாமேருவும் அமையப் பெற்றுள்ளது. இந்த மாமேருவுக்கும் தினசரி குங்கும அபிஷேகம் நடைபெற்று வருகிறது. நவாவர்ண பூஜைகளும், ஸ்ரீ வித்யா ஹோமங்களும் இங்கே நடைபெற்று வருகிறது.
தவப்பயன் தரும் தத்தாத்ரேயர் : அடுத்ததாக தரிசிப்பது தத்தாத்ரேயர், இவர் இயற்கையிடம் இருந்து பாடங்களை கற்று பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கி வந்தவர். இயற்கையை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தவர். சிவன், ப்ரம்மா, விஷ்ணு என மூன்று தெய்வங்களையும் ஒருங்கிணைத்து தத்தாத்ரேயராக போற்றப்படுகிறார். அத்ரி, அனுசுயா தேவிக்கு பிறந்த மாபெரும் தவப் புதல்வன் ஆவார்.

லட்சுமி ஹயக்ரீவர் : கல்வி கடவுள் என்றால் அநேகம் பேருக்கு சரஸ்வதியைதான் தெரியும், ஆனால் அந்த சரஸ்வதிக்கே கல்வி போதித்தவர் ஹயக்ரீவர் ஆவார். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவர் லட்சுமி தேவியுடன் வெளிர் பச்சை நிறத்தில் விக்ரஹம் அமைக்கப்பட்டு, ஏலக்காய் மாலை அணிந்து எழுது பொருட்களுடன் வீற்றிருக்கிறார். இங்கு மாணவ, மாணவிகளின் கல்வி திறன் மேம்பட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன.
வேதாந்த தேசிகர் : இவர் ஹயக்ரீவரின் மறு அவதாரமாகவும், வைணவத்தின் குருவாகவும் திகழ்கிறார். இவரை வணங்கினால் அனைத்தும் பெறலாம்.

நவ கன்னியர் : பீடத்தில் நவகன்னியர் வழிபாடும் முக்கியமான ஒன்றாகும். இந்த நவகன்னியர் அருகில் அத்தி மரமும் அமையப் பெற்றுள்ளது. குழந்தை இல்லாதவர்கள் தொட்டிலையும், திருமணமாகாதவர்கள் மஞ்சள் கயிற்றையும் இந்த மரத்தில் கட்டி ப்ரார்த்தனை செய்து சாபங்களை போக்கி மாங்கல்ய பாக்யம் பெறுகின்றனர். சுயம்புவாக உள்ள இந்த அத்தி மரத்தை பக்தர்கள் திரிசூலமாகவும், சக்தி தேவியாகவும் நவ கன்னியராகவும் வழிபட்டு வருகின்றனர்.

அத்ரி பாதம் : நவ கன்னியர் அருகில் அத்ரி பாதமும் அமைக்கப் பட்டுள்ளது. ஸ்வாமிகள் பொதிகை மலையில் உள்ள அகஸ்தியர், அத்ரி பாதத்திற்கு சென்று வழிபட்டு அங்கிருந்து தெய்வீக பொருட்களை கொண்டு வந்து அத்ரி பாதம் அமைத்துள்ளார். அத்ரிபாதம் சென்று தரிசிக்க இயலாதவர்கள் தன்வந்திரி பீடம் வந்து 468 சித்தர்களையும் இதர மகான்களையும் தரிசித்தால் அத்ரி பாதம் சென்று தரிசித்த பலனை உணரலாம் என்கிறார் நமது ஸ்வாமிகள்.

தொணி : சீரடி பாபா இங்கு சூரிய பாபாவாகவும், தங்க பாபாவாகவும் கிழக்கு மேற்காக ப்ரதிஷ்டை செய்துள்ளார்கள். பாபாவை தரிசிக்கும் பக்தர்களுக்கு ஏற்படும் தொல்லைகள், உபாதைகள் மற்றும் இதர தோஷங்கள் நீங்க சீரடி பாபா எதிரில் தொணி அமைத்து 24 மணி நேரமும் அணையாமல் பிரகாசித்து கொண்டிருக்கிறது.

சூட்சுமத்துடன் சூர்ய பாபா, தங்கமான தங்க பாபா : வெள்ளை நிற பளிங்கு கல்லில் சூர்ய பாபாவாகவும், தங்க நிறத்தில் தங்க பாபாவாகவும் இங்கு அமைந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். வேண்டும் அனைத்தும் தரும் ஒரு மாபெரும் மகானே சீரடி. இவரை ஒருமுறை தரிசித்தால் தலைமுறை காப்பார்.

தட்சிணா மூர்த்தி : மும்மலங்களை நீக்கும் விதத்திலும், அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும் விதத்திலும், குருவே அனைத்திற்கும் என்பதை உணரும் வகையிலும் இங்கு மேதா தட்சிணா மூர்த்தியாக அமைந்துள்ளார். என்னை வழிபட்டால் தோல்வி என்பதே இல்லை என்கிறார் இவர்.

வள்ளலார் : அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என்ற கொள்கையுடையவர். அனைவரிடமும் கருணை, இரக்கம், அன்பு எனும் முறையில் வாழ்ந்தவர். தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அருளையும் அதோடு சேர்த்து பசிப்பிணியை போக்குவதில் வள்ளல். இவருக்கு நிகர் இவரே. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்ற தாரக மந்திரத்திற்கு சொந்தக்காரர். தன்வந்திரி பீடத்தில் மட்டுமே கருங்கல்லில் இவருடைய சிலை வடிவைமைக்கப் பட்டுள்ளது என்பது சிறப்பாகும். அன்னதானம் இங்கு ப்ரதானமாக நடைபெற்று வருகிறது.
மகா பெரியவர் : அடுத்ததாக மகா பெரியவர், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறு வயதாயிருக்கும் போதே என்னைப் பார்க்க நீ வரவேண்டாம், உன்னைப் பார்க்க அனைவரும் வருவர் என்று ஆசீர்வதித்த நடமாடும் தெய்வமாவார்.

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் : தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர போன்ற மாநிலங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட ம்ருத்திகா ப்ருந்தா வனங்களுக்கு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் விக்ரஹத்தை கரிக்கோலம் கொண்டு சென்று அங்கிருந்து ம்ருதி எடுத்து வந்து இந்த விக்ரஹத்தின் கீழ் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தினங்களில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு சிறப்பு யாகங்களும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றது. காமதேனுவுடன் கூடிய ராகவேந்திரரை இங்கு மட்டுமே காண முடியும்.

மகா அவதார் பாபா : இன்றும் நம்மோடு சூட்சும முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான் மகா அவதார் பாபா. தன்வந்திரி பீடத்தில் இவருக்கு ப்ரத்யோகமான முறையில் குகை வடிவில் கருவறை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்தில் வைத்து அவரது குடும்பத்தினர் பூஜை செய்தபின் இவர் இங்கே ப்ரதிஷ்டை ஆகியுள்ளார்.

அருள் தரும் அகத்தியர் : இவரை குள்ளமுனி என்றும், குரு முனி என்றும் அழைப்பர். கயிலையில் நடைபெற்ற பார்வதி, சிவன் திருமணத்தை பொதிகை மலையில் இருந்து கொண்டே தரிசித்தவர். தன்வந்திரி பீடத்தில் மிகவும் விசேஷமான முறையில் ஒரு கையில் கமண்டலமும், மற்றொரு கையில் ஜப மாலையும், ஓலைச்சுவடி மற்றும் நமச்சிவாய மந்திரம் கொண்டு நாகக்குடையுடன் காட்சி தருகிறார். இது வேறெங்கும் காணமுடியாத திருக்காட்சியாகும்.

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஸ்ரீ விவேகானந்தரின் 150வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் வீரத் துறவியை உலகிற்கு காண்பித்த ஸ்ரீ இராமகிருஷ்ணருக்கு தன்வந்திரி பீடத்தில் நன்றி தெரிவிக்கும் விதத்தில் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிப்பட்டால் மன நோய்கள் நீங்கி மன மகிழ்ச்சி பெறலாம். இவர் காளி தேவியின் ஆசிபெற்றவர் ஆவார்.

வீர ப்ரம்மங்காரு : கலியுகத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ உள்ள அனைத்து செயல்களையும், அற்புதங்களையும், காலக்ஞானம் எனும் நூலில் எழுதி வைத்து நம்மை காப்பாற்றியவர். ஸ்வாமிகள் வீர ப்ரம்மங்காரின் இன்றைய வாரிசுதாரர்களிடம் ஆசி பெற்று இந்த விக்ரஹத்தை தன்வந்திரி பீடத்தில் தென் மேற்கு மூலையில் ப்ரதிஷ்டை செய்துள்ளார்.

அன்னதானக் கூடம் : இங்கு தினமும் 100 பேருக்கும், விசேஷ காலங்களில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும் அன்னதானம் அன்ன யாகமாக நடந்து வருகிறது. பீடத்திற்கு வருகைதரும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நோய் தீர்க்கும் பிரசாதமாக பெற்றுச் செல்கின்றனர்.

சஞ்சலம் தீர்க்கும் சஞ்சீவி ராயர் : மிகவும் பிரம்மாண்டமான உயரத்தில், நின்ற கோலத்தில், திறந்த வெளியில் காட்சி தருகிறார். மேலும் இவர் அருகே 9 படிகள் அமைத்து 9 படிகளிலும் 9 விதமான அனுமனை ப்ரதிஷ்டை செய்து அனுமன் ஜெயந்தி, மூலா நட்சத்திரம் நாட்களில் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.

சிக்கல் தீர்க்கும் செந்தூர ஆஞ்சநேயர் : குழந்தையானந்த சுவாமிகளின் நேர் எதிரில் அமர்ந்திருப்பவர் செந்தூர ஆஞ்சநேயர். இவருக்கு சாற்றிய செந்தூரமே சிக்கலை தீர்க்கும் பிரசாதம் ஆகும்.

புத்தர், குருநானக், ரமணர் : குழந்தையானந்த சுவாமிகளின் சன்னதி அருகில் இந்த விக்ரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஜெயந்திக நாட்களில் சிறப்பு வழிபாடுகளுடன் யாகங்களும் நடைபெறும். மகான்களை வழிபட்டால் மன சஞ்சலங்கள் தீரும்.

குழந்தையானந்த சுவாமிகள் : இவரை மீனாட்சி மைந்தன் என்றும், திரிலிங்கேஸ்வரர் என்றும் கூறுவர். இவருடைய சமாதிகளுக்கெல்லாம் ஸ்வாமிகள் விஜயம் செய்து ஆசி பெற்று, இவருக்கு இங்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஒரே நாளில் 4 இடத்தில் சூட்சும முறையில் சமாதி ஆனவர். இவர் சித்த புருஷர் என்பதால் இவருடன் விநாயகர் மற்றும் முருகனும் எழுந்தருளியுள்ளனர்.

ஷேமங்கள் பல தரும் சேஷாத்திரி ஸ்வாமிகள் : பலவகை அற்புதங்கள் நிகழ்த்திய மாபெரும் சித்த புருஷர். இவரை வழிபட்டால் பல ஷேமங்களை பெறலாம். இவர் குழந்தையானந்த ஸ்வாமிகளின் பரம சீடர். தன்வந்திரி பீடத்தில் இவரை சூரிய சந்திரனாக பாவித்து, சூரிய சந்திர பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
மூலிகை வனம் : விக்ரக வழிபாடுகளை விட விருட்ச வழிபாடு மிகவும் சிறப்பு என்ற முறையில் பலவகையான மூலிகை மரங்கள், பூ செடிகள், பழ செடிகள் அமைத்து மூலிகை வனமாக மரங்களையும், செடிகளையும் பூஜித்து வருகிறார் நமது ஸ்வாமிகள். மேற்கண்ட வனத்தில் கிடைக்கும் சமித்துக்களை பீடத்தில் நடைபெறும் ஹோமங்களில் சேர்த்து ஹோமம் மற்றும் மூலிகையின் அவசியத்தையும் பக்தர்களுக்கு எடுத்துரைக்கிறார் ஸ்வாமிகள். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.

முனீஸ்வரர் : ஒவ்வொருவருக்கும் ஒரு தெய்வம் எவ்வளவு முக்கியமோ அத்தகைய முக்கியமானது குல தெய்வம். எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் முனீஸ்வரனை வழிபடுவது இன்னும் சிறப்பு ஆகும். முனீஸ்வரன் அனைத்து விதமான குலதெய்வ தோஷங்களையும், சாபங்களையும், நீக்கி குலம் தழைக்கச் செய்பவர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் குல தெய்வம் முனீஸ்வரன் என்பதால் குல தெய்வ அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பீடத்தில் முனீஸ்வரனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பால் முனீஸ்வரனாக இங்கு பாவித்து பிரதி ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணியளவில் முனீஸ்வர படையல், பூஜை நடைபெற்று வருகிறது.
கோசாலை : காமதேனு என்று அழைக்கப்படும் மாபெரும் தெய்வீக பிரானியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி பீடத்தில் கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பசுக்களை தானங்களாக கொடுத்து வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் பசுக்களை கவனமுடனும், ஆரோக்யத்துடனும் வளர்க்கப்பட்டு பசு வதையை தடுத்து வருகிறார் ஸ்வாமிகள்.

கோ பூஜை : தன்வந்திரி பீடத்தில் தினந்தோறும் காலை மட்டுமன்றி நண்பகல் 1.00 மணியளவில் அபிஜித் நட்சத்திர வேளையில் அனைத்து விதமான சாபங்கள் நீங்க கோ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *