துன்பம் நேர்கையில்.. யாழெடுத்து …

— கவிஞர் காவிரிமைந்தன்.
thunbamnergaiyil
இன்பத்தைப் பற்றி எழுதிக்குவித்தாலும் படிப்பவர்கள் நிறைய பேர்!  துன்பத்தைப் பற்றி  எவரெழுதிவைத்தாலும் – அதில் துடிப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமாகும்! சந்தோஷம் – மகிழ்ச்சி – பங்கேற்க பலர் வருவார்? துயரம் – சிரமம் – எவரிங்கே உடன் நிற்பார்?

என்றாலும் அத்தகு துயரங்களின்போது உடன்நிற்கும் உறவைத்தான் மனித மனம் நேசிக்கும்!  அன்பை மட்டுமே  சுவாசிக்கும்! ‘பதைக்கும்  நெஞ்சினை அணைக்கும் யாவரும்  அண்ணன்  தம்பிகள் தானடா’ என்பாரே  கண்ணதாசன்!  பளிச்சிடும் உண்மையன்றோ?

bharathidasanஇதோ இந்தப் பாடல் காயப்பட்ட மனத்திற்கு மருந்து தடவுதல்போல்  மயிலிறகாய்  வருடி விடுகிறது பாருங்கள்!    கவிதை, தமிழ், இனம், உணர்வு  என்று பொங்கிப்  பெருகிய  பாவேந்தர் பாரதிதாசனாரின் பாட்டு வரிகளிவை..  ஓர்  இரவு   திரைப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது!

சாதாரண வார்த்தைகளால் அளவிட முடியாத ஏதோஒரு உச்சத்தை இந்தக் கூட்டணி  நேர்த்தியாக நெய்தெடுத்திருக்கிறது.  எத்தனை மன அழுத்தத்தில் மூழ்கியிருந்தபோதும்  எந்த சோகம் நெஞ்சில் விழுந்தபோதும்..  அட இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள் சுகம்தெரியும்!  வலி குறையும்!

அடர்த்தி மிகுந்த சொற்காளல் ஆட்சிநடத்தும்பாவேந்தரை -போற்றுவதும்  புகழுவதும் எதற்காக? தமிழுக்கு அடையாளம் தந்தமைக்காக!  அழகியல், உணர்வியல், உறவியல் இவற்றின் கலவையாய்நெஞ்சத்தில் நேரடியாய் வந்துவிழும்  சுகராகமிது! சோகம் நீக்க வந்த மாமருந்து என்பதைவிட வேறென்னசொல்லமுடியும்?  உங்கள் இதயச் சாளரங்களில்இனிமை சேர்க்கும் இந்தப் பாட்டு .. வாழ்க்கை முழுமைக்கும் அரிய பொக்கிஷமாகவே எனக்குத்தோன்றுகிறது!

http://www.youtube.com/watch?v=kLV7EQJULdY

காணொளி: http://www.youtube.com/watch?v=kLV7EQJULdY

பாடல்: துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
திரைப்படம்:பெயர் ஓர் இரவு(1951)
கதை: அறிஞர் அண்ணா
இயக்குனர்:  ப. நீலகண்டன்
நடிகர்கள்: நாகேஸ்வரராவ், லலிதா
இசை:தண்டபானி தேசிகர் & ஆர் சுதர்சன்
பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
இராகம்:தேஷ்
தாளம்:ஆதி

***********************
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

எப்படி எப்படி? மாட்டாயா?
ஊம்ம்கூம் …எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?
– ஓஹோ! – எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம் …

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? – கண்ணே அல்லல்

ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம்
கண்ணே …கண்ணே, சரிதானா கண்ணே?

கண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்
இல்லை.. இல்லை, பாடு.. கண்ணே சரிதானான்னு கேட்டேன்

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வின் உணர்வு சேர்க்க – எம்
வாழ்வின் உணர்வு சேர்க்க – நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது – யாம்
அறிகிலாத போது – தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா?

நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

…..

புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் – தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் – நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா?
(துன்பம்)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *