பலவும் ஒன்றும் பராசக்தி
இசைக்கவி ரமணன்
(நவராத்திரி வரப் போகிறது. பராசக்தி முற்றத்தில், முத்தையாவின் முத்துக்களை வைத்துக்கொண்டு பல்லாங்குழி ஆடப் போகிறாள் அபிராமி. அதுவரை பொறுக்குமா இந்தப் பிள்ளை மனம்?!)
வெளியாய்ச் சும்மா கிடக்கின்றாள்
வானாய் நீலம் சூடுகிறாள்
ஒளியாய் இருளில் எழுகின்றாள்
ஒவ்வொரு துளியாய் விழுகின்றாள்
துளியெனும் ஒற்றை ஊசியினால்
துயரக் கடலைக் கடைகின்றாள்
அளித்தல் அன்றி வேறறியா
அன்பே என்றன் பராசக்தி!
அவளாய் இருப்பது அவளழகு
அடயா ரறிவார் அவளியல்பு?
ஆடும் கடலும் அவளேதான்
அசையா மலையும் அவளேதான்
தவத்தின் முனைப்பும் அவளேதான்
தவியாய்த் தவிப்பதும் அவளேதான்
தருணத் திற்கோர் விதம்காட்டித்
தான்மாறா தவளே பராசக்தி!
வீசி அடிக்கும் சவுக்குமவள்
விரியும் சின்ன மலருமவள்
பேசி முடியாப் பெருமையவள்
பிதற்றித் திரியும் பேதையவள்
யோசிக் காத ஞானமவள்
உயிர்நரம் பில்வரும் கானமவள்
நேசிப்பா ரின் நேசத்தில்
நிதம்வளர் பவளே பராசக்தி!
கவிதை அவளது முன்னோடி
சாதல் வரைக்கும் முகம்காட்டா
சாகசம் அதுதான் என்னேடி?
வேதனை அவளது விந்தைமுகம்
வேதம் அவளது மெய்ப்பாடு
போதையின் மடுவில் மிகமெதுவாய்ப்
புலரும் தெளிவே பராசக்தி!
சொல்லில் சுடரும் மகராணி
சொட்டுச் சொட்டாய்த் துளித்துளியாய்
உயிரைப் பருகும் ஒரு தேனீ
புல்லின் மென்மையும் அவள்சக்தி
புயலின் வலிமையும் அவள்சக்தி
போதும் முடியா தெனும்போது
பொருந்திச் சிரிப்பாள் பராசக்தி!
07.09.2014 / ஞாயிறு / 06.20