திருவையாறு பஞ்சநதீஸ்வரர் சந்நிதியில் நாட்டிய விழா.
கோபாலன் வெங்கட்ராமன்
திருவையாறு பஞ்சநதி க்ஷேத்திரம் எனப் புகழ் பெற்ற ஊர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்திலும், அவர்களுக்குப் பிறகு தஞ்சையில் 180 ஆண்டுகள் அரசுபுரிந்த மராத்திய மன்னர்கள் காலத்திலும், இங்கு பல பண்டிதர்களும், இசை, நாட்டியக் கலைஞர்களும் வசித்து வந்திருக்கின்றனர். இவ்வூருக்குப் புகழ் சேர்க்கும் சிலரில் தியாகராஜ சுவாமிகளின் குரு ஷொண்டி வெங்கடரமணையாவும் ஒருவர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இவ்வூருக்கு விஜயம் செய்த தேவார மூவரில் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் இவ்வூரின் இயற்கை அழகோடு இங்கு எதிரொலித்த இசையைப் பற்றியும், காந்தாரத்தில் இசையமைத்து காரிகையர் தேம்தாம் என்று நடனமாடிய அழகினையும் வர்ணித்திருக்கின்றனர்.
அப்படிப்பட்ட புண்ணியத் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகி ஆலயத்தில் கடந்த 2003இல் சிறு அளவில் தொடங்கப்பட்ட நாட்டியாஞ்சலி வளர்ந்து இவ்வாண்டு அதன் 13ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மிகச் சிறப்பாக கடந்த பிப்ரவரி 16 முதல் 18 வரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த நாட்டியாஞ்சலி பெரும்பாலும் பழைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்துக் கோயில்களில்தான் சிறப்பாக நடந்து வருகிறது. இங்குள்ள வழுவூரும், பந்தநல்லூரும், தஞ்சையும் பரதநாட்டியம் செழித்து வளர காரணமாக இருந்திருக்கிறார்கள். தஞ்சை நால்வர்கள் தொடங்கி, ருக்மணி அம்மாள் போன்ற இசை நடனக் கலைஞர்கள் இவற்றுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
திருவையாற்றில் தொடர்ந்து 2003 முதல் நடந்து வரும் நாட்டியாஞ்சலி ஆண்டுக்கு ஆண்டு அதிக அளவில் நாட்டியக் கலைஞர்களை இங்கு வந்து பங்குபெற ஆவலைத் தூண்டியிருக்கிறது. இந்த ஆலயத்திலிருந்துதான் தஞ்சை பெரிய கோயிலுக்கு ராஜராஜசோழன் முதன் முதலாக நாற்பதுக்கும் மேற்பட்ட ஆடல் அரசிகளை மாற்றல் செய்து அவர்களுக்குத் தங்க வீடுகளும் கட்டிக் கொடுத்ததாகக் கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன.
அத்தகைய ஆலயத்தில் திருவோலக்க மண்டபத்தில் 1946 வரை ‘சதிர்’ எனும் இறைவனுக்கு ஆடலரசிகள் பரதம் ஆடி வழிபட்ட சான்றுகள் இருக்கின்றன. இப்போதும் அதே மண்டபத்தில் “ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி” நடைபெற்று வருகிறது. இதில் இந்த ஆண்டில் மட்டும் 48 குழுக்கள் கலந்து கொண்டன. இவற்றில் சுமார் 480க்கும் மேற்பட்ட நடனமணிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கெல்லாம் சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இவ்வாண்டு கலந்து கொண்டு சில நாட்டியக் குழுக்களைப் பற்றி பார்க்கலாம். வேறு மாநிலங்கலிலிருந்தும் பல குழுக்கள் வந்து கலந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மும்பையிலிருந்து மும்பை நிருத்ய கலா நிகேதன் எனும் அமைப்பிலிருந்து குரு திருமதி மயூரி காரத் தனது மாணவிகளுடனும், மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரில் பாரிஜாத் சுந்தரவன பூங்காவிலிருந்து திருமதி லதா ராஜேஷ் என்பவர் தன் மாணவிகளுடனும் மும்பை காட்கோபர் பகுதியிலிருந்து செளந்தர்யா நாட்டிய கலாலயாவிலிருந்து திருமதி பத்மினி ராதாகிருஷ்ணன் தலைமையில் மாணவிகள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றனர்.
அடுத்து ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத் நகரத்திலிருந்து பாரம்பரிய மிக்க கலைக் குடும்பத்தின் வாரிசான பரத நாட்டியாலயாவின் குரு திருமதி சித்ரா நாராயண் தலைமையில் அவரது மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்திலிருந்து அபிக்ஞா கவின்கலை பள்ளியின் திருமதி சுவேதா தலைமையில் அவரது மாணவிகளும், பெங்களூர் கலாக்ஷேத்ரா திருமதி அம்பிலி தேவியின் மாணவியர் பரத நாட்டியமும், டெல்லியில் பிரபல நடன ஆசிரியர் கோவிந்தராஜன் அவர்களின் மாணவியும், பரதக் கலைஞர்களில் சிறந்தவருமான திருமதி உமா B.ரமேஷ் திருஞானசம்பந்த மூர்த்தியின் வரலாற்றை நாட்டிய நாடகமாகவும், வழுவூர் ராமையா பிள்ளையின் கொள்ளுப் பேத்தியும், பிரபல பின்னணி இசைப்பாடகர் மாணிக்க விநாயகத்தின் பேத்தியுமான சீர்காழி பி.வரலட்சுமி என்கிற சிவரஞ்சனியின் நடனமும், திருவண்ணாமலையிலிருந்து கலாரத்னா நாட்டியாலயாவின் கலைச்செல்வி கங்காதரன் மாணவியரும், திண்டுக்கல் நாதலயா நாட்டியப் பள்ளியிலிருந்து திருமதி சுஜாதா ரமேஷ் தலைமையில் அவரது மாணவியரும், சிதம்பரம் தகதிமிதா குழுவினர் குரு அகிலன் தலைமையிலும், காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீ பைரவ விக்யான் நாட்டியாலயாவின் நளினி குழுவினரும், கரூர் எம்.சுகந்தப்பிரியாவின் ஆடவல்லான் நாட்டியக் குழுவினரும் வந்து நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
சென்னை மாநகரத்திலிருந்து பெரும்பாலான நடனக் கலைஞர்கள் வந்து கலந்து கொண்டார்கள். அவர்கள் சென்னை பரத நாட்டியாலயாவின் திருமதி லதா ரவியின் குழுவினர், மணலி மோகன அபிநய நாட்டியப் பள்ளி ம.ஹேமலதாவின் மாணவியரும், மாம்பலம் சாய் நிருத்யாலயாவின் ஷோபனா சுரேஷ் மாணவியரும், சென்னை நந்தனம் செல்வி மாதுர்யாவும், செங்கல்பட்டு சரஸ்வதி நாட்டியாலயாவின் சசிகலாவும், மீஞ்சூர் தில்லைக்கூத்தன் நாட்டியப் பள்ளி. சென்னை பிராட்வே தொல்லிசை நாட்டியக் கூடம், சென்னை வேளச்சேரி நூபுர்லயா நாட்டிய அகாதமியின் லலிதா கணபதியின் மாணவியரும், மடிப்பாக்கம் திருமதி மிருணாளினி குழுவினரும், கலாக்ஷேத்ரா மாணவியர் ஸ்வாதி லக்ஷ்மண், அனிதா எட்வர்ட் ஆகியோரும், முகப்பேர் அபிநயவர்ஷினி நாட்டியாலயாவின் இரா.காசிராமனின் மாணவியரும், அரும்பாக்கம் நிருத்ய நிருத்யாலயா மற்றும் கடலூர் அபிநயா நாட்டியாலயாவின் முனைவர் சுமதியின் மாணவியரும் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினர்.
கலைகளுக்குப் பெயர் போன கும்பகோணத்திலிருந்து ஸ்ரீமதி நாட்டியாலயாவின் ஸ்ரீதரி, தேவிபிரசாத் சங்கீத வித்யாலயாவின் ஜென்சி லாரன்ஸ் குழுவினரும், சிவசக்தி நடனப் பள்ளியின் கவிதா விஜயகுமார் குழுவினர், அபிநயாஸ் விஜயமாலதி மாணவியரும் சிறப்பாக நடனமாடி சிறப்பித்தார்கள்.
தஞ்சையிலிருந்து பத்மஸ்ரீ நாட்டியாலயாவின் வடிவுதேவி குழுவினரும், ஸ்ரீசக்தி நாட்டியக் கலாலயம் அருணா சுப்ரமணியம் அவர்களின் மாணவி பி.அபிநயாவும், ஓம் சிவாலயா நடனப் பள்ளியின் பரமேஸ்வரி மாணவியரும், தஞ்சை ஜெயா நாட்டியப் பள்ளியின் ஜெயா குழுவினரும், ஆராதனா நாட்டியக் குழுவின் சு.சுலட்சணா மாணவியரும் பட்டுக்கோட்டை பரத கலார்ப்பணா குழுவின் ரமேஷ் கண்ணன் குழுவினரும் ஆடி விழாவைச் சிறப்பித்தனர்.
16ஆம் தேதி தொடக்க விழாவுக்கு சிட்டி யூனியன் வங்கித் தலைவர் திரு எஸ்.பாலசுப்ரமணியம் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவைத் துவங்கி வைத்தார். அப்போது திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு எம்.ரத்தினவேலு எம்.எல்.ஏ.வும் பேரூராட்சி மன்ற தலைவர் திரு செந்தில்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் போது தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கு.பரசுராமன் அவர்கள் கலந்து கொண்டு, திருவையாறு ஆலயத்தின் ராஜகோபுரத்துக்கு ஒளிவிளக்கு அமைத்துக் கொடுப்பதாக அறிவித்து விழாவைச் சிறப்பித்தார்.
நிறைவு நாளன்று விழாவுக்கு ஒத்துழைப்பு நல்கிய ஆலய நிர்வாகத்தார், விழாவுக்கு நன்கொடை கொடுத்து ஆதரவு தந்த நன்கொடையாளர்கள். தொண்டர்களாக இருந்து சிறப்பாகப் பணிபுரிந்த திருவையாறு அரசர் கல்லூரி சமூகப் பணித்துறை பேரா.மணிக்குமரி மற்றும் அவரது மாணவிகளுக்கும் நன்றி தெரிவித்து விழா நிறைவு பெற்றது.