அமைதி இழந்த பொழுது!
-ரோஷான் ஏ.ஜிப்ரி
நடைமுறையிலுள்ள எல்லாம்
முறைமைகளாக மாறிப்
பெரும் பயத்தைத் தோற்றுவிக்கின்றன!
வாழ்வு பற்றிய கனவில்
இழப்பைத் தவிர
எதையும் யோசிக்க முடியாதபடி
ஆதிக்கத்தைக் கூர்மையாக்கி
வைத்திருக்கிறது காலம்!
மொழிகளாலும்,சாதி பேதங்களாலும்
ஆஸ்தி, அந்தஸ்து என்று
மனிதத்தைக் கூறுபோடும்
நடைமுறைச் சிக்கல்கள்!
பணத்தால் மட்டுமே
ஓரளவேனும்
வாழ்வைத் தக்கவைக்கலாம்
என்றாகிப்போனதோர்
பொதி செய்யப்பட்ட ஜீவிதம்!
செம்மையாக்கப்படாத
இந் நாழிகைகளில் சாத்தியமற்ற
ஆசைகளோடு மனசு
இறுகி இருக்கிறது பாறையென!
அச்சுறுத்தலுக்குள்ளான இக்கணங்களில்
இழக்கவென்று
உயிர் தவிர
ஒன்றும் இல்லா நிலையிலும்
இயல்பான விடயங்கள் கூடப்
பாரிய அழுத்தம் தந்து
பயம் காட்டுகின்றன!
எதற்கும்
முன்நின்று முகம் காட்டி
எதிர்க்கத் திராணியற்ற இயலாமைக்
குறிப்பாக…
நிறைவேறாது என அறிந்தும்
நீ என்மேல்
வலிந்து திணித்துவிட்டுப்போன
காதலும்தான்!