நாட்டுப்புறப் பாடல்!

2

-சரஸ்வதி ராசேந்திரன்

பெண்:   ஏரிக்கரை        ஓரத்திலே
ஏத்தம்        இறைக்கையிலே
என்மனசைப்    பறிகொடுத்தேன் மாமா
உன்மனசில்     எனக்கிடம் தரலாமா?

ஆண்:    கண்டாங்கி      சேலைகட்டிக்
கை  நிறையக்    கொசுவம் வைச்சுக்
கஞ்சிக்கலையம் சுமந்துவரும் கண்ணம்மா என்
நெஞ்சுக்குள்ளே   நீ இருக்கே தெரியுமா?

பெண்:   வக்கணையாச்    சோறாக்கி
வட்டிலிலே      போட்டுவைச்சேன்
சட்டமாத்   தின்னுபோட்டு நீ
வெட்டிக்கதை    பேசாம
விரசா வந்து     பரிசம் போடு  மாமா உன்
சரசமெல்லாம்    தாலிக்கப்புறமா!

ஆண்:  நாளும்  நல்லா  உழைச்சு  நான்
நாலு காசு     சேர்த்துச்
சொந்தக்காலில்     நின்னு
வந்து உன்னை    முறையா கேட்பேன்   தாலி
தந்தபின்னே      உன்னைத்தொடுவேன்!

பெண்:  வாழ்ந்தால் உன்   கூட வாழணும்
உன்கையாலே   பூமாலைவாங்கோணும்
அதுதானே    என்   ஆசை மாமா!

ஆண்:   எனக்கது நீ     சொல்லித் தெரியணுமா?
உனக்காகத் தானே நான் இருக்கேன் கண்ணம்மா!

இருவரும்:   நல்ல நாளும்     கனியட்டும்
நாடு நல்லாச்      செழிக்கட்டும்
பெத்தவங்க      ஆசியோடும்
மத்தவங்க     வாழ்த்தோடும்
மணவறையில்   அமர்ந்திடுவோம் நாமே
வானம் பூமிபோல நிறைஞ்சிருப்போம்
வாழ்வு தாழ்விலே   இணைஞ்சிருப்போமே!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நாட்டுப்புறப் பாடல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *