ஓங்கார முகன் ஓவியம் ஹிண்டு கேசவ்….
—————————————————————————-

பிள்ளையார் வெண்பாக்கள்
———————————–
Narthana Vinayaka.

கேசவ் ஓவியம் பார்த்து எழுதியது
——————————————–
‘’ஆத்தாவோ கற்பகம், அப்பன் கபாலீசர்,
மூத்தோனாய் ஆனாய் முருகனுக்கு, -கூத்தாட,
பத்தாக் குறைக்கு பவளக் கொடியாக
மத்தாளும் கண்ணன்மா மன்”….(1)

‘’வானந்த கைலாஸம் வாழும் வினாயகர்,
ஆனந்தம் கொண்டிங்கே ஆடுகிறார், -ஆநந்தன்(ஆக்களை மேய்க்கும் நந்தகோபன்)
-பையனுக்கு முன்பே, பிறந்தநாள் காரணம்:
அய்யனுக்கு பின்பே அரி’’….(2)
’’சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
வக்கிர துண்டனை வாழ்த்து….(3)

’’தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(4)

’’தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
முரசடித்தேன் தந்திக்கு முந்து….(5)
’’ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
ஊன்றிய வேழா உதவு….(6)
’’அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(7)

’’கணபதி ராயா மனிதச காயா
பனிபதி கைலாசப் பையா -தனபதி
மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
கோல வினாயகனே காப்பு….(8)

’’கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
அள்ளித் தருவான் அவன்….(9)
’’அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
ஆனைமுகம் ஆக்கும் அரசு….(10)

’’cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
mouseயிக வாகனா மோதகா -houseனுள்
வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
தாராய் அறிவில் தெளிவு’’….(11)

’’மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
பாஷைகள் போற்றும் ப்ரணவனை –வேஷமாய்
வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
ஏழைகள் ஈசனை ஏத்து….(12)
’’அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
சதிராக யாதுமருள் வான்….(13)

செங்கழுநீர் பிள்ளையார்….
————————————————–
’’கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
சங்கத் தமிழ்மூன்றும் தா….(14)

’’தந்தி உடைய தரையில் அவசரமாய்
முந்தி முருகனுக்கு முன்னால் -தொந்தி
கணபதி தாய்ப்பால் உணவுண்ணும் காட்சி
மனமதில் கொள்ள மகிழ்வு….(15)

மலைக்கோட்டை வினாயகர் திருச்சி….
———————————————————-
’’மெச்சிட பக்தர்கள் மேதினியில் மாலவனை
குச்சுக் குடித்தனம் கொள்ளவைத்த -உச்சி
மலைக்கோட்டை பிள்ளாய் மனமுவப்பீர் நாடகக்
கலைக்கோட்டை காபந்துன் கால்….(16)

மனக்குள வினாயகர் புதுச்சேரி….
———————————————————-
‘’எனக்குள்ளே என்றும் மணத்திடும் வேழ
மனக்குள மாலோன் மருகா -மனத்துள்ளே
தோண்டி அழுக்கெடுப்பாய் வேண்டி விழைந்திடுவேன்
பாண்டி வருகையில் பார்த்து….(17)

’’பந்திக்கு முந்தும் படபடப்பாய் பேர்புகழ்
சந்திக்க ஓடி சலிப்படைவோம் -சிந்திக்க
தொந்தி கணபதியை முந்தி வினாயகனை
எண்திக்கும் ஏவல் எமக்கு….(18)

வியாசன் உரைக்க வினாயகன் பாரதம் எழுதுதல்….
—————————————————————————————-

’’முனிவன் உரைத்த மகாபா ரதத்தை
பணிவும் குறும்பும் பெருகும் -வினய
முகத்துடன் மூஷிக வாகனன் தந்த
நகத்தால் வடித்தல் நயம்….(19)

MOP வைஷ்ணவா காலேஜ் வினாயகர்
———————————————-
’’வயணமாய்க் குந்தி மரமருள்எம் ஓபி
வயிணவக் கல்லூரி வேழா -பயனிவன்
கேட்டதைத் தந்து குளிர்ந்திடச் செய்திடு
வீட்டதன் சோகம் விலக்கு….(20)

’’காரைக்குடி சென்றபோது பிள்ளையார் பட்டி
வினாயகர் தரிசனம்….
————————————————————-
’’கொள்ளை அழகனாய் பிள்ளைப் பெருமாளாய்
வெள்ளைப் பணியார வேழத்தை -பிள்ளையார்
பட்டிவாழ் வெல்லத்தை செட்டிமார் செல்லத்தை
மட்டிலா மகோதரனை மேவு….(21)

’’வெற்பைப் பிளந்து வெளிவந்(து) அடியார்க்கு
கற்பகமாய்க் கொட்டும் கணபதியே -நிர்பய
நெஞ்சில் நினைவற்ற நிம்மதியைத் தந்தருள்வீர்
அஞ்சு கரத்தால் எனக்கு….(22)

வினாய சதுர்த்தியன்று எழுதியது….
———————————————
‘’பந்தியிடும் பார்வதி பாலுக்காய் தம்பியை
முந்திட ஒற்றை மருப்புடைய -தொந்தி
சரியத் தவழும் சதுர்த்தித் தலைவா
விரியத் திறப்பாய் விழி….(23)

’’சலித்தது வாழ்வு சதுர்த்தி இறைவா
வலுத்தது நெஞ்சில் விரக்தி -அளித்திடு
ஆன்ம உணவுணர்வை ஆறா பசிதீர
வான்மழை போல்பெய் விருந்து….(24)

’’கணபதி ராயா மனித சகாயா
பனிபதி வாசரின் பையா -கனிதனை
வென்றன்று பெற்றோர் வலம்வந்தோய் என்னுச்சி
சிண்டென்றும் உன்தாள் சரண்….(25)

’’எருக்கம் அணிந்து எலிமீ(து) அமர்ந்து
இருக்கும் இடத்தில் இருந்து -ஒருகொம்பன்
வேண்டியதை நல்கிடும் வேற்றுமை பாராமல்
ஆண்டிமுதல் ஆண்டான் அருள்….(26)

’’மாம்பலத்தில் கடல் குளியலுக்கு தயாராக
உள்ள கணபதியைப் பார்த்து….
——————————————————
’’எருக்கம் அணிந்து எலிமீ(து) அமர்ந்து
இருக்கும் இடத்தில் இருந்து -ஒருகொம்பன்
வேண்டியதை நல்கிவிட்டு வாரிதியில் மூழ்கிடும்
பாண்டிபஜார் பிள்ளையார் பார்….(27)

’’அப்பன் கனியருந்தி தொப்பையும் தொந்தியுமாய்
சப்பை எலியேறி, சங்கடத்தைச் -செப்பிட,
அக்கணமே வந்தருள்வான் விக்கினம் நீங்கிட
பக்கவிளை(வு) இல்லா பலன்’’….(28)
புது டிராமா ‘’கூகிள் கடோத்கஜனுக்காக’’ வேண்டி எழுதியது….
————————————————————————————————————-
’’அப்பனன்று செப்பிடாது முப்புரம் சென்றபோது
சப்பர சக்கிரத்தை சோதித்த -அப்பனே
கூகிள் கடோத்கஜன் கம்ப்யூட்டர் டவுன்லோடாய்
ஏகஅஞ்சல் லாங்வேஜ் எழுத்து….(29)

’’சதுர்த்தி முடிந்தது சங்கடம் தீர்க்க
உதித்த கணேசா உடனே -குதித்திட
தங்கை மகன்காண தாய்மாமன் காத்திருக்கான்
வங்கக் கடலோரம் வா….(30)

’’நான்ற வயிறாட, நாசிக் கரமாட
மூன்று விழியாட மூஞ்சூரில் -தோன்றி
நடமாடும் நீல நிறத்து கணேசா
கடலாடப் போனதேன் கூறு….(31)

’’சீதப் பதங்களும் மோதகம் ஏந்துகையும்
போதெருக்கம் மாலை புரள்மார்பும் -காதசைப்பும்
ஆழ நினைந்து அழுது அழைத்திட
வேழம் துணைக்கு வரும்….(32)

பலஸ்ருதி….
———————–
’’பதினாறைப் பெற்று பெருவாழ்வு வாழ
பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து’’….(33)….

பதினாறு பேர்களைப் பெற்ற-ஷோடஸ கணபதி பதினாறு பெயருடையவர்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பிள்ளையார் வெண்பாக்கள்

  1. கம் கம் கம கம என்று வெண்பாக்களுக்குள்  பக்தியும் விகடமும் பரிமளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.