இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-12

0

மீனாட்சி பாலகணேஷ்

தேவாதிபர்சூழ் தென்னளகைத்திரு!

தென்னளகை நகர்! எங்குள்ளது இது? இதுவே தென்தஞ்சாவூர் எனப்படும் லால்குடி. இதன் அழகான தமிழ்ப்பெயர் திருத்தவத்துறை என்பதாகும். இங்கு உறைபவள் பெருந்திருப்பிராட்டி அன்னை. வடமொழியில் ஸ்ரீமதி எனக்கூறுவர். உமையவளின் இன்னொரு வடிவமே இவள். அண்ணல் சிவபிரான் இங்கு சப்தரிஷீசுவரர் என அறியப்படுவார். இத்தலத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், ஆங்கீரஸர், மரீசி ஆகிய ஏழு ரிஷிகள் தவம் செய்ததால் ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனப்பெயர்.

நமது தமிழ்த்தாத்தா உ. வே. சா.வின் ஆசிரியரான திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியுள்ள சந்தநயமும் தமிழ்நயமும் நிறைந்த பல பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று இத்திருத்தவத்துறையில் உறையும் பெருந்திருப்பிராட்டியார் மீதான பிள்ளைத்தமிழ்.

*****

ஏழெட்டு மாதங்கள் நிரம்பிய அழகிய பெண்குழந்தை; குறுநகை அரும்பித்தவழும் சிவந்த கனிவாய்; பச்சைமரகத மேனி; பரிவுடன் துலங்கும் இரு கருவிழிகள்; இளம் பிஞ்சுமகள்; பார்க்கும் தாய்க்குப் பெருமிதத்தில் நெஞ்சு விம்முகிறது. பக்கத்தில் தாதியரும் செவிலியும் நின்று, “கைவீசம்மா கைவீசு,” எனவும், “முத்தம் கொடடி கண்ணே,” எனவும் வேண்டுகின்றனர். “மாத்தேன் போ,” எனப் பொய்யாக மறுத்து, தன் சிவந்த கைகளைக் கொட்டி மகிழ்கிறாள் இந்தப் பச்சிளம்குழவி. பின் தனது குமுதவாயின் தேன்போலும் எச்சில் ஒழுக, அழுத்தமாக ஒரு முத்தத்தினை அன்னையின் கன்னத்தில் பதிக்கிறாள். பார்ப்போர் உள்ளமெலாம் பரவசத்திலாழ்ந்து அவளை, அக்குழந்தையைப் பராசக்தியின், பார்வதியின் வடிவமாகவே கண்டு களிக்கின்றனர். சிந்தையெலாம் களிகூர, தமது கற்பனைகளைத் திரட்டிக் காட்சிகளை மனக்கண்ணில் எழுப்புகின்றனர்.

குழந்தையை அன்னை பராசக்தி எனத் தெளிந்து, அன்னையைக் குழந்தையாக்கி, அக்குழந்தையைக் குமரியாய், நீலகண்டனின் இல்லக்கிழத்தியாய், அகிலமெலாம் ஈன்ற பேரருள் வடிவாய்க் கண்டு களிகூரும் புலவர் வாக்கினில் சொற்சித்திரமாக வரையப்பட்ட ஒரு அற்புதக்காட்சி இது!


சிவபெருமான்- எல்லா உலகுகளுக்கும் அவற்றிலுள்ள உயிர்களுக்கும் தலைவன்; அவனுடைமை அனைத்துமே வெண்மை நிறங்கொண்டது. வெண்மை நிறம் தெளிவு, மனவுறுதி ஆகிய தன்மைகளை விளக்குவது. ஈசன் வெள்ளிப்பனி படர்ந்த சிகரங்களைக் கொண்ட இமயத்தில் உறைபவன்; வெள்ளை நிறங்கொண்ட எருது அவனுடைய வாகனமாம்; இரண்டாயிரம் வெள்ளைக் கொம்புகளையுடைய வெள்ளைக்களிறு அவனுடையது; அதற்கு அயிராவணம் எனப்பெயர். இது இந்திரனுடைய அயிராவதத்தினின்றும் வேறுபட்டது. வெண்மையான பிறைச்சந்திரன் அவன் சடையில் ஒளிர்கிறான்; வெண்மையான ஒரு காளையைச் சின்னமாகக்கொண்ட வெண்மையான கொடியையுடையவன். வெண்மையான முத்துக்களை வாரியிறைக்கும் வெண்புனலான கங்கை அவன் சடையிலிருந்து பொங்குகின்றது; வெண்ணீற்றினை உடலெங்கும் பூசியவன்; வெண்சங்கினாலான இருகுழைகளைக் காதிலணிந்தவன். அதற்குப் பொருத்தமான வெள்ளிய சங்குமணி இவற்றாலான வடங்களைக் கழுத்திலணிந்தவன். வெள்ளைவெளேரென்ற தும்பைமலர்களாலான மாலையினை அணிந்துள்ளான். வண்டுகளின் ஆரவாரத்தினால் அதிலிருந்து மிகுதியாகத் தேன் துளிகள் திவலைகளாகப் பரந்தெழுகின்றன. இவ்வாறெல்லாம் பெருமைவாய்ந்த பிரான் ஒருசெயல் செய்கிறான்; அதுவே பெருந்திரு எனும் இம்மகளின் செவ்விதழ்களில் வெள்ளிய ஒரு புன்னகையை அரும்புவிக்கிறது.

என்ன செய்தான் பிரான்? அவளுடைய அழிவற்ற செல்வம் நிலைபெற்ற தூய அடிகளில் தனது முடிவணங்கிப் பணிந்தானாம்- உமைக்கும் சிவனுக்கும் சிறுபிணக்கு- அதன் தொடர்பாக சிறு ஊடல்- ஊடலைத் தணிவிக்க ஐயன் அவளுடைய தாமரைத்திருவடிகளில் தன் சிரம்பதித்து வணங்கி நிற்கிறான் என்கிறார் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்.
இதன்காரணமாகவே அவளுடைய செவ்விதழ்களிலும் வெற்றிப்பெருமிதம் பொங்கும் வெள்ளிய இளமுறுவல் தவழ்கின்றதாம். அந்தக்காட்சியைக் கற்பனையில் கண்டு, “முறுவல்கொண்ட செவ்விதழ்களால் எமக்கு ஒரு முத்தம் தா கண்ணே! தேவரும் மூவரும் சூழ்ந்து நின்றுபணியும் தென்னளகை எனப்படும் தென்தஞ்சையின் திருவே- பெருந்திருவே (ஸ்ரீமதித்தாயே) எமக்கு ஒரு முத்தம்தா குழந்தாய்!” என வேண்டுகின்றனராம்.

இப்பாடலில் ‘வெண்மை’ எனும் சொல்லாட்சியைக் கண்டு பிள்ளையவர்களின் கவித்திறத்தினை உணர்ந்து வியக்கலாம். அன்னையின் இதழ்களில் அரும்பும் நகையும்- முறுவலும்- ஐயனுடைய வெண்மைப் பொருட்களுக்கேற்ற வெண்ணகை என்பது பாராட்டத்தக்கது. வெள்ளைப்புன்னகை என்பது மனதில் களங்கமற்றதும் இதயத்தின் ஆழத்திலிருந்து வருவதுமாகும். இத்தகைய சொற்சிலம்பம் செய்யும் புலவோர்களை வித்தாரகவி என்பது வழக்கு. பிள்ளையவர்களின் தமிழ்ப்புலமையை நாம் உணர்ந்து ரசித்து மகிழ இந்நூல் வாய்ப்பளிக்கின்றது.

வெள்ளிப் பொருப்பும் வெள்விடையும்
வெள்ளை யிரண்டா யிரமருப்பு
வெள்ளைக் களிறும் வெண்பிறையும்
வெள்ளே றுயர்த்த வெண்கொடியுந்
தள்ளித் தரளங் கொழித்துமறி
தருவெண் புனலும் வெண்ணீறுஞ்
சங்கிற் புரிந்த வெண்குழையுந்
தகுவெண் மனவு மணிவடமுந்
துள்ளிச் சுவைத்தே னுவட்டெடுக்குந்
தும்பைப் புதுவெண் மலர்த்தொடையுந்
தொலையா வுடைமை யாப்படைந்த
தூயவடிகண் முடிவணங்கத்
தெள்ளிச் சிறுவெண் ணகையரும்புஞ்
செவ்வாய் முத்தந் தருகவே
தேவா திபர்சூழ் தென்னளகைத்
திருவே முத்தந்தருகவே.

(திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்-
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

*****

இக்குழந்தை, பெருந்திருப்பிராட்டி, அன்னையாக இருந்து தன்குழந்தையாகிய முருகனின் வாய்முத்தத்தினை நித்தம் பெற்று மகிழ்கிறாள்.

இப்பாடல் முருகனின் வீரத்தினையும் மங்கையர் மயங்கும் அவனது பேரழகினையும் புயவலிமையையும் போற்றுகிறது.

9a948df7-85ee-4b38-a628-7bd5c52537e7
மாயவித்தை செய்யும் (இந்த்ரஜாலம் உருட்டி வரும்) அசுரர்களின் சேனை சமுத்திரமெனப் பொங்கிவருகின்றது. குமரப்பெருமானின் படையின் ஒன்பதின்மரான நவவீரர்கள் கூர்வேலினைக் கையிலெடுத்துச் சினம்பொங்க எழுச்சிபெற்று அந்தச் சேனாசமுத்திரத்தினுள் நுழைந்து வெட்டிச்சிதைத்த உடல்களின் மாமிசம் நாறுகின்றது (ஊன் நாறு). வானளாவ இந்த நாற்றம் பரவிடும்படி பச்சை மாமிசத்தினைச் சுவைத்து, அதன் கொழுப்பெனும் நெய்யொழுகக் குடலையுருவி ஈரலை வாயிலிட்டுக் குருதியைக் குடிக்குமாறு கொடியவில்லினை வளைத்துப் பல கணைகளை விடுத்து, அவர்களை இவ்வாறு வதைத்து, அமரர் எனப்படும் தேவர்கள் வாழும் நகரினைப் புதுப்பித்து நிற்கிறது குமரனின் வீரச்சேனை.

இப்படிப்பட்ட வீரத்தைக் கொண்ட படையினைச் செலுத்தும் குமரனின் புயவலிமையைக் கண்டு மயங்காதவர்கள் யார்? அதுவும் அவன் அழகன்; இளைஞன். வீரனான அவனைக் காதலுடனும் வியப்புடனும் கண்கள் விரிய நோக்குகின்றனர் அரமங்கையர். அவர்கள் வாசமிக்கதும் தேன்சொரிவதுமான மலர்களைத் தம்கூந்தலில் சூடியுள்ளனர் (தேன்நாறு கூந்தல் அரமங்கையர்கள்). அவன் வளைத்த வில்லிற்கு ஈடாகத் தம் புருவமாகிய வில்லினை வளைத்துக் கண்அம்புகளை அவனுடைய திரண்ட புயத்தை நோக்கி எய்கின்றனர் (ஒளிர் கண் அம்பு திரள் புயத்தெய்ய). அந்த வீரத்திருமகன், செவ்வேள் எனப்படும் முருகப்பெருமான் கலாபமயில் மீதேறி வருகின்றவன். அவன் குழந்தையாக அன்னைமடியில் தவழ்ந்தபோது பால்மணம் (பால் நாறு) வீசும் அவனுடைய திருவாயின் முத்தத்தினை நீ பெற்றனையல்லவா? அந்த உனது செம்பவளவாயின் முத்தத்தினை நீ எமக்களித்தருளுவாயாக. தாமரைமலரில் உறையும் பிரமதேவன் போற்றும் மங்கலமான மகளே உனது பவளவாயின் முத்தத்தினை அருளுவாயாக.

இவ்வாறு மகனைப்போற்றி, அன்னையைக் களிப்படையச் செய்து அவளது வாய்முத்தத்தினை யாசித்து நிற்கின்றனர் மற்ற தாதியரும் செவிலித்தாயும்! மிக வித்தியாசமான கற்பனை. வன்சிலை வளைத்துக் கணைகளைப் பகைவர் மேல்விடுவதுபோல் விற்புருவம் வளைத்துக் கண்ணாகிய கணைகளை முருகனின் தோள்மீது மங்கையர் விடுவதாகச் சொற்சிலம்பம் செய்து பாடி வைத்துள்ள நயம் சிந்தைக்கு விருந்தாகும்.

ஊனாறு நுதிவைப் படைக்கைநவ
வீரரொ டுருத்தெழுந் திந்த்ரஞால
முருட்டிவரு சூர்முதற் சேனா
சமுத்திரத் துழைநுழைந் துடல்பிளந்து,
வானாறு பைந்தடி சுவைத்துநெய்
யொழுகீருள் வாய்ப்பெய்து குருதிமாந்த
வன்சிலை குனித்தடுங் கணைபல
பணித்தமரர் வாழுநக ரம்புதுக்கித்
தேனாறு கூந்தலர மங்கையர்கள்
புருவமென் சிலைகுனித் தொளிர்கணம்பு
திரள்புயத் தெய்யக் கலாபமயின்
மீதுவரு செவ்வே ளெனுங்குழவிதன்,
பானாறு மழலைவாய் முத்தங்கொ
ணினதுசெம் பவளவாய் முத்தமருளே
பங்கயத் திறைபரசு மங்கலர்க்
கொருபுதல்வி பவளவாய் முத்தமருளே.
(உருத்தெழுந்த- சினமுறத் தோன்றிய; உழை- இடம்; ஈருள்- ஈரல்;)
(திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்-
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இன்னும்பல பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். இன்னும் வரும் அத்தியாயங்களில் அவற்றின் சில பாடல்களின் நயத்தைக் கண்டு மகிழலாம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.