பிப்ரவரி 22, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  ரூபாதேவி அவர்கள்

 

ரூபாதேவி0

 

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சென்றவாரம் (பிப்ரவரி 5 முதல் 16 வரை) மேகாலயா மாநிலத்தில் கௌஹாத்தி/ஷில்லாங்கில் நடைபெற்ற “தெற்காசிய போட்டி”களில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA – Federation Internationale de Football Association) கால்பந்தாட்ட நடுவராகச் செயல்பட்ட, தமிழகத்தின் “முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவரான” திருமிகு ரூபாதேவி அவர்கள். அவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான அணுவியல் விஞ்ஞானி திரு. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவின் நன்றிகள் உரித்தாகிறது.

ரூபாதேவி1

திண்டுக்கல்லைச் சேர்ந்த 25 வயதான ரூபாதேவி பள்ளி நாட்களிலேயே கால்பந்தாட்ட விளையாட்டினால் ஈர்க்கப்பட்டவர். இவரது ஆர்வத்தைக் கண்ட பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ் இவருக்கு அளித்த ஊக்கத்தினாலும் பயிற்சியாலும் பள்ளிநாட்களில் திண்டுக்கல் அணியின் சார்பாக மாவட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். பல்கலைக்கழக நாட்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக்கழக அணிக்காகவும், பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளில் பங்கேற்றும் விளையாடி வந்துள்ளார்.

இளைஞர்களுக்கு நடுவர் பயிற்சி அளிக்கும் நோக்கில், 25 வயதுக்குட்பட்டோருக்காக ஆசிய கால்பந்து சம்மேளனம் உருவாக்கிய ‘புராஜெக்ட் ஃப்யூச்சர்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுத் தேறிய இரு பெண்களில் ரூபாதேவியும் ஒருவர். இலங்கை, கத்தார், பஹ்ரைன், மலேசியா, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் நடுவராகப் பணியாற்றி இருப்பதுடன், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேசிய அளவிலான கால்பந்துப் போட்டிகளுக்கும், ஆசிய அளவிலான போட்டிகளுக்கும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

ரூபாதேவி

ரூபாதேவியின் ஈடுபாட்டைக் கவனித்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் சர்வதேச அளவில் நடுவராகப் பணியாற்ற இவரைப் பரிந்துரைத்தது. அதற்கான எழுத்து, உடல் திறன் தேர்வுகளில் வெற்றிபெற்ற இரு பெண்களில் ஒருவரான ரூபாதேவிக்கு சர்வதேச நடுவராகப் பணியாற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனம் வாய்ப்பளித்துள்ளது. இவரது முயற்சிகளுக்குக் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரத்தினால், தென் இந்தியாவின் முதல் சர்வதேச பெண் நடுவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமை ரூபாதேவிக்குக் கிடைத்துள்ளது.

ரூபாதேவி2

இந்திய “தேசிய அளவில்” இதுவரை ஆறு பெண்கள் மட்டுமே கால்பந்தாட்ட நடுவராகத் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் ரூபாதேவியும், இவருக்குப் பிறகு எஸ். வசந்தியும் தேசிய அளவு நடுவராகத் தகுதி பெற்றார்கள். சர்வதேச அளவில் பெண்கள் கால்பந்தாட்ட நடுவராகப் பங்கேற்கும் நிலை இதுவரை மகளிருக்கு இருந்ததில்லை.

ஆண்களின் களமாக இருந்துவரும் கால்பந்தாட்ட நடுவர் பணியில் அதிரடியாக இறங்கி அனைவரையும் தனது முயற்சியால் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ரூபாதேவியின் எதிர்காலக் குறிக்கோள், ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலகக் கால்பந்து போட்டிகளில் நடுவராகப் பங்கேற்க வேண்டும் என்பதே. ரூபாதேவி அந்த உயரங்களை அடைய வல்லமை குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

_______________________________________________________
படங்களும் தகவல்களும் பெற்ற இடங்கள்:
இணையத்திலிருந்தும் கீழ்காணும் தளங்களில் இருந்தும் …
South Asian Games – 2016
http://southasiangames2016.com/
 
தமிழக பெண்ணுக்கு அங்கீகாரம் : சர்வதேச கால்பந்து நடுவராக ரூபாவை தேர்வு செய்த பிஃபா!
http://www.vikatan.com/news/sports/57134-indian-woman-referee-selected-by-fifa.art
 
ஃபிஃபா ரெஃப்ரி ரூபாதேவி!
http://www.vikatan.com/article.php?aid=115146
 
கால்பந்து தமிழச்சி!
http://siragu.com/?p=19756

_______________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.