சிவாகமங்களும் திருமுறைகளும் புலப்படுத்தும் வாழ்வியல் (2)
எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS
முன்னாள் கல்வி இயக்குனர் … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )
திருமுறைகள் வாழ்வியலுடன்
திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட இடமே திருக்கோவில்தானே ! திருமுறைகள் பாடப்பட்ட இடமும் திருக்கோவில்கள் தானே ! திருமுறை பாடிய அருளாளர்களை இறைவன் ஆட்கொண்ட இடமும் கோவில் அல்லவா? எனவே கோவிலின் இன்றியமையாமை திருமுறைகளால் தெட்டென வெளிப் படுகிறதல்லவா?
பக்தி இயக்கத்தின் ஊற்றுக் கண்ணே வாழ்வியலோடுதான் இணைகின் றது.அடியார்களை அரவணைத்து நாயன்மார்கள் ஊர்கள் தோறும் சென்று அங்குள்ள கோவில்களைத் துப்பரவு செய்து அங்குள்ள இறைவனைத் துதி பாடிப் பக்தியையும் பக்தி இயக்கத்தையும் வளர்த்தார்கள் அல்லவா?சமூக மயப்படுத்தலில் சம்பந்தப் பெருமானும் , அப்பர் சுவாமிகளும், சுந்தரப் பெருமானும் ஈடுபடாவிட்டால் எங்கள் சமயம் இந்தளவு உயர்ச்சியைப் பெற்றிருக்குமா? எங்களது திருக்கோவில்களும் இன்றுவரை நிலை பெற்றிருக் கத்தான் முடியுமா ? இவை யாவற்றுக்கும் காரணம் சமயத்தையும் கோவிலை யும் வாழ்வியலோடு இணைத்தமை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
” தோடுடைய செவியன் ” என்னும் முதல் வாக்கைச் சம்பந்தப் பெருமான் வாயிலிருந்து வரச் செய்த இடமே சீர்காழியில் அமைந்த தோணியப்பர் கோவில்தானே ! ” பித்தாப் பிறை சூடி ” எனச் சுந்தரரை இறைவன் பாடுமாறு பணித்த இடமும் திருக்கோவில் அல்லவா ? ” கூற்றாயின வாறு விலக்ககலீர்” என அப்பரைப் பாடவைத்த இடமும் திருக்கோவில்தானே ! எனவே திருமுறை கள் கோவிலை மைய மாகக்கொண்டே வந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல கோவிலை சமூக நிறுவனமாக்கி வாழ்வியலோடு இணைத்த வகையிலும் திருமுறைகளின் பங்கு மிகவும் முக்கியமானதென்றே கொள்ளவேண்டும்.
” நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு ” ஒவ்வொரு நாளும் கோவிலுக்குச் சென்றால் நிலை பெறலாம் என்னும் உறுதியை அப்பர் வாழ்வியல் கருத்தாகக் கோவிலுடன் இணைத்துக் காட்டியிருப்பது நோக்கத் தக்கதாகும்.
” மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் ” என்று மக்களுக்கு நம்பிக்கை தருமாறு கூறி – அதற்கு ” கழுமல வளநகர் ” பெருமானை வழிபட வேண்டும்.அவரே என்றும் துணையிருப்பார் என அக்கோவிலையே காட்டி நிற்கிறார் சம்பந்தப் பெருமான்.
இவையெல்லாம் உளவியல் சார்ந்த வாழ்வியலாகக் கோவிலுடன் இணைகிறதல்லவா?
அன்றாடம் வீட்டைப் பெருக்குகின்றோம்.கழுவிச் சுத்தம் செய்கின்றோம். வீட்டில் விளக்கு ஏற்றி மகிழ்கின்றோம். பூக்களை பறிக்கின்றோம்.அவற்றை மாலையாக்கிச் சூடி இன்பம் அடைகின்றோம்.இவையெல்லாம் வாழ்வோடு ஒன்றிவிட்ட சம்பவங்கள். இவற்றையெல்லாம் இறைவன் உறைகின்ற கோவிலை நோக்கித்திருப்பினால் எப்படி இருக்கும் என அப்பர் நினைத்தார். அந்த நினைப்புத்தான் சரியைத் தொண்டாகி திருமுறை வாயிலாக மக்கள் வாழ்வியலுடன் இணைந்து வந்தது.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே
இது வாழ்வியலைக் கோவிலுடன் சேர்த்துவிட்ட மிகச்சிறந்த உத்தி எனலாம்.இந்த உத்தியை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். எவராலும் செய்யக்கூடிய இலகுவான வழிபாட்டு முறையும் நல்லதொரு சரியைத் தொண்டும் எனலாம்.இதற்கு எந்தவிதமான படிப்பபோ, அறிவு நுணுக்கமோ தேவையில்லை.
மனத்தை உடையவன் மனிதன்.அந்த மனிதனுக்கு நண்பனும் எதிரியும் அவனுடைய மனம்தான்.இதனால் மனத்தை ஒருநிலைப் படுத்தினால் வாழ்வு சிறப்படையும் என்பது உளவியலாகும்.இந்த உளவியல் மக்களது வாழ்வியல்
ஆகும்.மன ஒருநிலைப் பாட்டுக்குக் கோவில்கள் முக்கியம் என்பதை திரு முறைகள் வாயிலாக அருளாளர்கள் கூறியிருப்பது நோக்கத்தக்கது.
இசை மனிதனை இசைவிப்பது. அந்த இசையினைக் கோவில்கள் தோறும் அரூளாளர்களான திருமுறை தந்தவர்கள் பரப்பினார்கள். இறைவனை இசைவடிவினனாகக் கண்டார்கள்.இதனால் திருமுறைகளைப் பண்ணோடு கோவில்கள் தோறும் பாடிப்பரவினார்கள்.தாம் பாடியதோடு மட்டுமே நின்று விடாமல் தம்மோடு மக்களையும் இணைத்துக்கொண்டே பாடினார்கள். இசையொடு பாடப் படும்பொழுது மனமானது அந்த இடத்திலேயே லயித்து நின்றுவிடும். இந்த உளவியலைத் திருமுறையாளர்கள் உணர்ந்து கோவிலுடன் இசையை இணைத்து அதனை வாழ்வியல் நெறியாக்கி விட்டனர்.
” ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே “
” இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் – இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் “
” குழல் ஒலி யாழ் ஒலி கூத்தொலி ஏத்தொலி – எங்கும் குழாம் பெருகி ” ” சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் – தமிழோடிசை பாடல் மறந்தறியேன் ” “விழவோடொலி மிகு தகுமாடக சாலை – முழவோடிசை நடமுன் செயு ” “வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர ” – என்றெல்லாம் இசையோடு கோவில் வழிபாட்டை இணைத்து அதற்குள் மக்களையும் உள்வாங்கிய திருமுறைகளின் வாழ்வியல் நோக்கானது வியந்து போற்றத் தக்கதாக இருக்கிறதல்லவா ? வாழ்வியலுடன் ஆகமங்களும் திருமுறைகளும் இணையும் பாங்கு
பக்தி இலக்கியம் என்பது தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழி யிலும் நாம் கண்டுகொள்ளமுடியாது.அந்தப் பக்தி இலக்கியமானது கோவிலையும் , வழிபாட்டையும் , இறைவனது அருட்திறத்தையும் புலப் படுத்தி நிற்பதாகும். இந்தப் பக்தி இலக்கியத்தில் திருமுறைகளின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும்.திருமுறைகளின் பெரும்பங்கு கோவிலை மையப்படுத்தியே வந்திருக்கிறது. திருமுறைகள் யாவுமே கோவிலையும் வழிபாட்டையும், மனித ஒழுக்கத்தையும், வாழும் விதத்தையும், இல்லறத்தின் தன்மையையும், சமூகக் கட்டமைப்பையும், எடுத்துக் காட்டுகின்றன என்பது முக்கிய அம்சமாகும். இவை யாவும் வாழ்வியலின் இன்றியமையாத அங்கங்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதே.
கோவில் என்பது வெறுமனவே வழிபடும் இடமாக மட்டும் விளங்கவில்லை. கோவில்களை ஆறுதல் தரும் இடமாக அடியவர்கள் கண்டார்கள். அப்பர் , சம்பந்தர், சுந்தரர் , மணிவாசகர் யாவரும் – கோவிலை மையமாக வைத்துக் கொண்டே … பல தொண்டுகளைத் தொடக்கி இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் திருமுறைகளின் வாயிலாக நாம் கண்டு கொள்ளுகின்றோம்.
செல்லும் வழியெல்லாம் யாருக்கு என்ன நேரிடினும் அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளை இறையருளாலும், மற்றவர் உதவி பெற்றும் அருளாளர்கள் ஆற்றியிருக்கிறார்கள் என்னும் செய்திகளையெல்லாம் திருமுறைகளின் வாயிலாக அறிகின்றோம்.
கோவில்களும் வழிபாட்டு முறைகளும் சமூகத்தில் வாழும் மக்களின் நலன்களை முன்னிட்டே ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் என்று எடுப்பதும் பொருத்தமானதே.மனிதனைப் பண்படுத்தவும், மனித நேயச் சிந்தனைகளை வளர்க்கவும், பொதுநல உணர்வை நிலைபெறச் செய்யவும், கோவில்களும் வழிபாடும் துணைசெய்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.உண்மையான வழிபாட்டு உணர்வின் முதிர்ச்சி சமூகத்துக்கு உதவுவதே ஆகும்.இதனால் த்தான் கோவில் என்பது வாழ்வியலாகிவிட்டது.
திருமுறைகள் கோவிலை மையமாக வைத்துக்கொண்டே பணிகள் பலவற்றை ஆற்ற வழிப்படுத்தியதைக் காண்கின்றோம்.
” என்கடன் பணி செய்து கிடப்பதே ” என்னும் அப்பரின் வாக்கு திருமுறையின் நிலையைக் காட்டுகிறதல்லவா ?
பசிப்பிணி போக்க உதவியமை, முத்தியில் கூட தான் மட்டுமே பெற்றுக் கொள்ளாமல் மற்றவர்களும் இடமளித்தமை, தனியாகவும் கூட்டாகவும் மக்கள் மத்தியில் துன்பம் நிகழ்ந்த பொழுது உதவி துயர் துடைத்தமை, சமரச நோக்கத்தைக் கடைப்பிடித்து சமநிலையைக் காட்டியமை, ” ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” என்றபடி செயற்பட்டமை இவையெல்லாம் கோவிலை மையமாக வைத்தே ஆற்றப் பட்டிருக்கின்றது என்பதைத் திருமுறைகள் வாயிலாக அறிகின்ற பொழுது திருமுறைகள் என்பது தனியே வெறும் பாடல்களாக இல்லாமல் சிறந்த வாழ்வியல் நெறியாகவும் விளங்கி இருக்கிறது என்பதை மறுதுரைக்க முடியாதல்லவா ?
ஆகமங்களில் கூறப்பட்ட சரியை, கிரியை, யோகம், ஞானம், பற்றி திருமுறைகளும் விளக்கி நிற்கின்றன.ஆகமங்களில் கூறப்பட்ட கோவில் அமைப்புக்களின் பெயர்கள் வித்தியாசப் பட்டாலும் – திருமுறைகளும் கோவில்களைப் பற்றியும் அவற்றின் அமைப்புப் பற்றியும் விளக்கி நிற்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகமங்களும் திருமுறைகளும் சைவத்தின் இரண்டு கண்கள். இரண்டையும் பிரித்து வித்தியாசம் காண்பது பொருத்தமற்றதே.
” ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ” என்னும் மணிவாசகப் பெருமானின் இக்கூற்றே இதற்கு அரண்செய்து நிற்கிறதல்லவா?
ஆகமங்கள் சமஸ்கிருத மொழியில் இருக்கின்றன. திருமுறைகள் தெள்ளிய தமிழில் அமைந்திருக்கின்றன. ஆகமங்களை இறைவனே அருளினார் என்பதே நம்பிக்கை.அதேவேளை திருமுறைகளும் இறைவனது அருள்பெற்ற அடியார்க ளின் வாக்குகளே என்பதும் நோக்கத்தக்கது.எனவே திருமுறைகளும், சைவ ஆகமங்களும் இறைவனது அருளினைத் தாங்கி நிற்பன என்பதில் பெருமை இருக்கிறதல்லவா ?
இறைத்தன்மை பெற்ற சிவாகமங்களும் திருமுறைகளும் கோவிலைப் பற்றிக் கூறிய அனைத்தும் மக்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்ற வகையிலேயே இருக்கின்றன அல்லவா? இவற்றை மனக்கொண்டு பார்க்கும் பொழுது கோவில் என்பது வாழ்விய லோடு இணைந்தே இருக்கிறது என்பது வெள்ளிடைமலையாகி நிற்கிறது
இவற்றை எல்லாம் நோக்குமிடத்து சிவாகமங்களும், திருமுறைகளும் கோவிலையும் அவைசார்ந்த விஷயங்களையும் வாழ்வியலாகவே கருதி இருக்கின்றன என்பது புலனாகின்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~