முதியோர்களின் நலன் காக்க வேண்டும்
முதியோர்களின் நலன் காக்க வேண்டும்
பரம்பரை சொத்தில் திருமணமாகாத பெண்களுக்கும் சம உரிமை என்ற தீர்ப்பு வரவேற்கப் படவேண்டியதே. என்னதான் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறினாலும், அவர்களுக்கு சம உரிமை கொடுத்தாலும் சில பெண்கள் இன்னமும் “கட்டுப்பெட்டி”யாகவே இருப்பது கண்டு பெண்ணைப் பெற்றவர்கள் கலங்குவது என்பது உண்மைதான். படித்த பெண்களில் சிலரே இன்னமும் மணமாகி சென்ற பின்னும் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கின்ற போதிலும் இன்னமும் தனது பெற்றோர்களை நம்பியபடி செயல்படுவது கண்டு அந்தந்த பெண்களின் கணவன்மார்கள் அச்சப்படுவதும் அதை வெளிப் படுத்த அந்தக் கணவன்மார்கள் தயங்கியபடி நடைபிணமாக வலம் வருவதும் கண் கூடாக காண்கின்ற உண்மையாகிறது.
அது போல சொத்துக்களில் சம உரிமையினை வேண்டும் பெண்கள் தங்களது பெற்றோர்களைப் பராமரிப்பதில் மட்டும் சம உரிமை கேட்பதில்லை. பெற்றோர்கள் பராமரிப்பு என்று வந்ததும் ஆண்மகன் தான் பொறுப்பு என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்கள் இல்லங்களுக்கு வருவதே இருப்பதில் தேவையானதை கொண்டு செல்வதற்காகவே என்ற உண்மை தெரிந்தும் பெரும்பாலான வயதான அப்பா அம்மாவினால் ஒன்றும் சொல்ல செயல்பட முடிவதில்லை.
என்னதான் கணவன் பென்சன் வாங்கி வந்தாலும், கணவனின் மறைவிற்குப் பின் வரும் பென்சன் தொகையானாலும் சரி அதை நிம்மதியாக செலவு செய்யும் உரிமை இன்றைய கால கட்டத்தில் அப்பா அம்மாக்களுக்கு இல்லை என்பதுதான் இன்றைய சமுதாய உண்மை நிலை. இந்தப் பங்கு போடுவதில் ஆண்களை விட பெண்கள் தான் முன்னணியில் உள்ளார்கள். சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்து விட்டு இன்று வீதிகளில் அனாதைகளாகத் திரியும் பெற்றோர்கள் எவ்வளவு பேர் தெரியுமா..? சொத்துக்கள் பிரிக்கப்படலாம் சம பாகமாக… ஆனால் அந்த சொத்துக்களை பிரித்துக் கொடுத்தவர்களின் நலனையும் பாதுகாக்கும் வண்ணமாக சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டும். இந்த முறையினை சட்டமாக அரசு வெளியிட்டு முதியோர்களின் நலன் காக்க வேண்டும்.
நன்றி.
சித்திரை சிங்கர்,
அம்பத்தூர்.
(சங்கரநாராயணன் பாலசுப்ரமணியன்)