கிரேசி மோகன்
—————————————-

வெகுவாக நம்பிய விஷ்ணுவின் ஆழி
புகவாகு இல்லாத பாறை -நிகர்மார்பில்
மோதியதால் உண்டான ஜோதியதால் ஆரமாய்
க்ராதகன் கொண்டான் கழுத்து….(OR)
பாதகன் கொண்டான் புனைந்து….(108)

அயிரா வதமஞ்சும் அவ்வரக்கன் ஆனை
எயிறால், இமையாதோன் என்றும் -உயிராய்
வலம்வரும் புஷ்கரா வர்த்தக மஞ்சில்
ஜலம்தெறிக்க முட்டும் சிதைத்து….(109)

கர்மத் தளையகற்றி கர்பப் பிணியறுக்க
தர்மம் தவதானம் தோன்றலாய் -மர்ம
பலமுடைய தாரகன் பாதகம் தீர
தளபதியை தேவர்க்குத் தா….(110)

பற்றிச் சிறையில் பகைவனால் பூட்டிய
வெற்றித் திருமகளை விண்ணரசன் -பெற்றிடவோர்
ஆணைப் படைத்திடுவீர் சேனைத் தலைவராய்
வானை வலுப்படுத்து வீர்….(111)

முனிவனது பேச்சு முடிந்தது கண்டு
கனிவுடன் மேலே கமலன் -தணிவுடன்
கூறியது மேகத்தின் கர்ஜனைக்குப் பின்வரும்
மாரியதை வெல்லும் மகிழ்வு….(112)

நேருதல் நிச்சயம் நீங்கள் நினைப்பதென
ஆறுதல் சொன்னோன் அதுநிகழ -மாறுதலாய்
சேனைத் தலைவன் ஜனிக்கப் படைப்பது
தானல்ல என்றான் தாழ்ந்து….(OR)
நானல்ல என்றான் நகைத்து….(113)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "’’குமார சம்பவம்’’….!"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.