இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (225)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் 2017ஆம் ஆண்டின் முதலாவது மடலுடன் உங்களிடம் மனம் திறக்கிறேன். பல எதிர்பார்ப்புகளுடன் 2017 எனும் புதிய புத்தகம் திறக்கப்படுகிறது. ஒவ்வொன்றாக இப்புத்தகத்தில் 12 அத்தியாயங்கள் எழுதப்படப் போகின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் எத்தனையோ எதிர்பாராத திருப்பங்கள், ஆச்சரியங்கள் என்பன உள்ளடங்கப் போகின்றன. உலகமெங்கும் ஒரே பரபரப்பான நிலையே தென்படுகின்றன. புதிய அரசியல் தலைமைகள், புதிய அரசியல் திருப்பங்கள் எனப் பல எதிர்பாராத நிகழ்வுகள் கிளப்பிய வினாக்களின் விடையை ஆவலோடு பலரும் எதிர்பார்த்த வண்ணமே இருக்கிறார்கள். மனிதர்களின் நியாயமான ஆசைகள் எனும் இலட்சியம் பேராசை எனும் எல்லைக் கோட்டினை நெருங்கி விட்டது போன்றதோர் உணர்வினுள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது ஒன்றையே குறியாகக் கொண்டிருந்தோர் தமது ஆவல் எப்போது பூர்த்தியடையும் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனிலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவது தமது பொருளாதாரச் சூழலை எவ்வகையில் பாதிக்கப் போகிறது என்பதைப் பற்றிச் சிறிதளவேனும் சிந்திப்பவர்களாகத் தென்படவில்லை.  மார்ச் மாதம் முடிவடைவதற்குள் வெளியேறுவதற்கான நெறிமுறையினைச் செயல் படுத்துவேன் என்ற பிரித்தானியப் பிரதமரின் வாக்குறுதியை இறுகப் பற்றிக் கொண்டு அதன் எதிர்பார்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் ஐக்கிய இராச்சியத்தின் ஜரோப்பிய யூனியன் வெளியேற்றத்தை முற்று முழுதாக எதிர்த்துக் கொண்டிருக்கும் பகுதியினரோ ஜரோப்பிய யூனியனின் “சிங்கிள் மார்க்கெட்” எனும் வியாபாரத் தளத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் முற்று முழுதாக விலகக் கூடாது எனும் ஏக்க்கத்தோடு ஓர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பில் விலகுவது எனும் முடிவுக்கு மக்களைத் தள்ளியது கட்டுப்பாடற்ற வெளிநாட்டவரின் குடியேற்றம் எனும் உண்மையின் யதார்த்தத்தை ஏனோ உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. எது எப்படி இருப்பினும் இந்த ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதரம் ஒரு தேக்க நிலையை அடையப் போகிறது எனும் எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் நிலவுகிறதை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

ஐக்கிய அமெரிக்கா என்பது ஒரு தனிப்பெரும் நாடு என்பது எந்த அளவிற்கு உண்மையோ , அந்த அளவிற்கு ஐக்கிய அமெரிக்காவின் மாற்றங்கள் உலக நாடுகள் அனைத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுவும் உண்மையே!அத்தகையதோர் மாற்றமாகத்தான் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி மாற்றமும் அமைந்துள்ளது. அமெரிக்கா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. இன, மத வேறுபாடுகளைக் கடந்து பலகாத தூரம் சென்று விட்டது எனும் எண்ணமே பல நாடுகளில் காணப்பட்டது. ஆனால் சமீபத்திய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் பிரசாரம் மக்களிடையே பல பேத உணர்வுகளை வளர்த்து விட்டது என்பதுவே வருந்தத்தக்க உண்மையாகிறது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தமது பிரசார மேடைகளில் மிகவும் சர்ச்சைக்குரிய கோஷங்களை முன்வைத்தார் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகிறது. அமெரிக்க மக்கள் மனத்தில் இருக்கும் உணர்வுகளையே தான் பிரதிபலித்ததாகவும், தனக்கு எதுவிதமான நிறவேற்றுமைப் பாகுபாடும் கிடையாது என்றும் அவர் கூறினாலும் அவரது கோஷங்களைத் தமது நிறவேற்றுமை மற்றும் இனத்துவேஷ கருத்துக்களுக்குச் சாதகமாக்கப் பல தீவிர வலதுசார அமைப்புகள் முனைந்துள்ளன என்பது உண்மையே. இத்தகைய நிகழ்வுகள் அமெரிக்காவைத் தமது தாயகமாக ஏற்றுக் கொண்டு வாழும் பல ஆசியப் பின்னணி கொண்ட மக்களுக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. இன்றைய அமெரிக்க அரசியல் வெள்ளை இனத்தவருக்கும் மர்றைய இனத்தவருக்கும் இடையிலான அரசியலாகப் பரிமளிக்கக்கூடிய ஒரு சூழல் தென்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயமே. இப்படியான பல விடையில்லா வினாக்களைத் தாங்கிக் கொண்டே 2017க்குள் நுழைகிறோம்.

அடுத்து மற்றைய முன்னணி ஐரோப்பிய நாடுகளான பிரான்சு,ஜேர்மனி, இத்தாலி ஆகியவற்றிலும் அரசியல் நிலைமை ஒரு நிறவேற்றுமைப் பரிணாமத்தினூடாகவே பயணிக்கிறது. பிரான்சு நாட்டில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 2017 என்ன முடிவை நல்கப் போகிறது என்பது மிகவும் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. பிரான்சு நாட்டில் வாழும் வெளிநாட்டவர் தமது நாட்டின் கலாசாரத்தைப் பின்பற்றாமல் தாம் எங்கிருந்து புலம் பெயர்ந்தார்களோ அந்நாடுகளின் கலாசாரத்தைப் பிரான்சு நாட்டு மக்களின் மீது திணிக்க முயல்கிறார்கள் என்றும் அதனைத் தடுப்பதே தமது அரசியல் என்றும் பிரான்சு நாட்டில் மிகவும் வேகமாக முன்னேறி வரும் தலைவரான லீ பென் எனும் இனவாதக் கட்சியின் தலைவர் பிரசாரம் செய்து வருகிறார். விரும்பியோ, விரும்பாமலோ மற்றைய தலைவர்களும் இவரது பிரசாரத்துக்கு ஈடுகொடுத்துத் தாமும் வெளிநாட்டவர் மீதான பிரசாரங்களை முடுக்கி விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஜேர்மனி நாட்டின் த;லைவரான அஞ்ஞெலா மக்கேல் அவர்களுக்கெதிராகப் போட்டியிட பிரபலமான எவரும் இல்லையெனினும் அந்நாட்டில் இடம்பெறும் தீவிரவாதிகளின் தாக்குதல்களினால் அவர்மீது விமர்சனங்கள் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு மில்லியன் அகதிகளை வரவேற்கிறேன் என்று அவர் விடுத்த அழைப்பினாலேயே மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதும் இவர் மீது விழும் குற்றச்சாட்டு. இவைகளுக்கெல்லாம் முடிவாக 2017 எதைக் கொடுக்கப் போகிறது என்பது அனைவரின் மனங்களிலும் ஊசலாடும் கேள்வியாகவே இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் 2016இன் முடிவு பல அரசியல் மாற்றங்களை முடுக்கி விட்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.முன்னாள் முதலமைச்சரான செல்வி ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவு அவரது கட்சிக்கு ஒரு புதிய தலைவரையும் அரசியல் வட்டாரங்களில் சில அதிர்வலைகளையும் கிளப்பி விட்டிருக்கிறது என்றே கூற வேண்டும். 2017ஆம் ஆண்டின் வரவோடு தி.மு.க தனக்கு ஒரு புதிய செயல் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களைத் தெரிவு செய்ததும் ஒருவகையான அரசியல் மாற்றம் என்றே கூற வேண்டும். இந்த மாற்றம் தி.மு.க வின் செயல்பாட்டில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பலவகையான மாற்றங்களையும், அவை கொடுத்த பலவகையான எதிர்பார்ப்புகளையும் தன்னுள் சுமந்த வண்ணம் 2017 பிறந்திருக்கிறது. இவ்வாண்டு இவைகளுக்கெல்லாம் விடையளிக்குமா? இல்லை தொடரும் கேள்விக்குறியாக நாம்2018இனுள் நுழையப் போகிறோமா? என்பதற்குக் காலம்தான் பதிலளிக்க வேண்டும்.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *